Thursday 27 June 2024

முயற்சிதன் கூலி தரும்!

மனித குலம் அனைத்துமே வெற்றியை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது!

யாருக்கும் வெற்றியைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. ஆனால் அந்த வெற்றிப் பயணம் என்னவோ 99 விழுக்காடு  தோல்வியில் தான் முடிகிறது!  வெற்றி தான் வேண்டும் என்பவன் ஏன் தோல்வியில் நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறான்? காரணம் அவனிடம்  வெற்றி  வேண்டும் என்று நினைப்பதோடு சரி  வேறு எந்த முயற்சியும்  அவனிடம் இல்லை!  முதல் முயற்சிலேயே மாளிகை கட்டிவிடலாம் என்று நினைக்கிறான்!

வெற்றி வேண்டும் என்றால் அதற்கான வழிகள் உண்டு.  எல்லாவற்றுக்கும் வழிகள் உண்டு.  அந்த வழிகளை வெற்றிகராமாக அடைய வேண்டுமென்றால்  அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

வெற்றிக்கு முதல்படியானாலும் சரி அல்லது கடைசிப்படியானாலும் சரி  எந்த முயற்சியும் எடுக்காமல் வெற்றி பெற முடியாது.  முயற்சி இல்லையென்றால் வெற்றி இல்லை. 

நம்மிடையே உள்ள மிகத் தீய குணம் என்னவென்றால்  முதல் முயற்சியில் தோல்வி என்றால் அதுவே நமது கடைசி முயற்சியாக மாறிவிடுகிறது! அது தான் கடைசிவரை நம்மைத் தோல்வியாளனாக  வைத்திருக்கிறது.  அந்தத் தோல்வியைவிட்டு நாம் மாறுவதில்லை! நாம் மாறத் தயாராக இல்லை!  

வெற்றி பெற முயற்சி! முயற்சி! முயற்சி!   கடைசி வரை முயற்சி.  காரியம் கூடும் வரை முயற்சி.  முடிந்தவரை.........இல்லை! இல்லை! இல்லை!  முடியும்வரை முயற்சி!   முடிந்தவரை என்றால் இடையிலேயே நிறுத்தப்படும்.  அதில் எந்த வெற்றியும் இல்லை.  முடியும்வரை, அந்த வெற்றி கைகூடும் வரை  முயற்சி நீடிக்க வேண்டும்.   முயற்சி என்று நிறுத்தப்படுகிறதோ  அத்தோடு  வெற்றிக்கான பாதையும் அடைக்கப்படும்.

பல முயற்சிகளுக்குப் பின்னர் தான்  வெற்றிக்கான கதவுகள் திறக்கின்றன.  முயற்சிகளை முடுக்கிவிடுவது நமது கையில்.  அதனை முடக்கிவிடுவதும் நமது கையில் தான்.  நமது  முயற்சியும், தொடர் உழைப்பும்,  மன உறுதியும்  தான் வெற்றிக்கான  வழிகள்.  அந்த முயற்சியும், உழைப்பும்  வீண் போக வழியில்லை.    வேறு வகையில் எதுவும் எப்படியும் நடக்கலாம்  ஆனால் முயற்சியோ அதற்கான கூலியைக்  கொடுத்தே தீரும்.  அந்தக் கூலி தான் வெற்றி.

வள்ளுவர் வாக்கு  பொய்க்குமோ?

No comments:

Post a Comment