Wednesday 5 June 2024

ஏன் இந்த திடீர் முடிவு?

 

ஏன் இந்த திடீர் மாற்றம் என்பது நமக்குப் புரியவில்லை!

இருபது ஆண்டு காலம் சரியாக நடந்து வந்த கணினி வகுப்பு  திடீரென்று நிறுத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

பள்ளி நேரத்தின் போதே கணினி வகுப்புகள்  நடத்தும் போது  மாணவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.  ஆசிரியர்களுக்கோ, மாணவர்களுக்கோ  யாருக்கும் எந்த இடையூறும் இல்லை.  அப்படித்தான் இதுநாள் வரை நடந்து கொண்டு வந்திருக்கிறது.

இப்படி ஒரு மாற்றத்திற்கான  காரணம் என்ன என்பது நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை.  சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்து மொழிப் பள்ளிகளிலும் இது தான் நடைமுறையா?  அல்லது இந்தப் பள்ளிக்கு மட்டும் இப்படி ஒரு நிலையா?

எப்படி இருந்தாலும் அரசியல் தலையீடு இல்லாமல் சில காரியங்கள் தீர்க்க முடிவதில்லை.  சிலாங்கூர் மாநில  ஆட்சிக்குழு  உறுப்பினர் ஓய்பி கணபதிராவ்  அவர்களை இந்நேரம் பெற்றோர் ஆசிரியர் குழுத் தலைவர்கள்  சந்திப்பு நடத்தியிருப்பர்.   ஒருசில காரியங்களை அரசியல்வாதிகளால்  தான் செயல்படுத்த முடியும்.

நாம் சொல்லுவதெல்லாம் இத்தனை ஆண்டுகாலம்  சிறப்பாக நடந்த கணினி வகுப்பின் மூலம்  ஏதாவது இடையூறுகள் நடந்திருக்கின்றனவா என்பது தான்.  பள்ளியின் கல்வியில் ஏதேனும் தடைகள்  இருந்திருக்கின்றனவா?  மாணவர்களின் கல்வியில் குறைபாடுகள் நேர்ந்திருக்கின்றனவா?  இவைகள் தான் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை.

நமக்குத் தெரிந்தவரை  இந்தப் பள்ளி மாணவர்கள்  பல போட்டிகளில் கலந்து கொண்டு  பல பரிசுகளை வாங்கிக் குவித்திருக்கின்றனர். பல வெற்றிகள் அடைந்திருக்கின்றனர்.  அவர்களின் பள்ளிப் பாடங்களில் அல்லது பரிட்சைகளில், தேர்வுகளில் பின் தங்கியிருந்தால்  அதற்கு நாம் அவர்களைத் தண்டிக்கலாம்.  ஆனால் எந்தக் குறையில்லாமல் பள்ளிக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருக்கின்றனர்.  அப்படியிருந்தும் கலவி அமைச்சு அவர்களைத் தண்டித்திருப்பது  மிகவும் வருத்தத்திற்கு  உரிய செயல்.

நல்லது எது நடந்தாலும் அதை நாசம் செய்ய சில நாசக்காரர்கள் காத்துக் கிடக்கின்றனர்.  பிரதமர் அன்வார் அரசாங்கத்தில் நல்லது நடக்கும் என நம்புவோம்.

No comments:

Post a Comment