Wednesday 28 February 2024

அட பாவிகளா!

 

குழந்தைகள் துன்புறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதை மறுப்பதற்கில்லை.  தண்டனைகள் கடுமையாக இல்லை  என்பதைத் தவிர  வேறு காரணங்கள் என்னவாக இருக்கும்?

கார்களில் குழந்தை மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.  குழந்தைகளைக் கார்களில் தூங்க வைத்துவிட்டு,   காரை பூட்டிவிட்டுப் போவது,   திரும்பிவந்து  பார்த்தால்  உயிரற்ற உடல்.  இது போன்ற சம்பவங்கள்  தொடர்ந்தாற் போல நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முன்பு இது போன்ற சம்பவங்களைக் கேள்விப்பட்டது கூட இல்லை.

பெற்றோர்கள் முன்பெல்லாம் குழந்தைகளைக் காரில் விட்டுவிட்டுப் போவதில்லை.  அப்படி ஒரு பழக்கத்தை அவர்கள்   ஏற்படுத்திக் கொண்டதில்லை. இப்போது பெற்றோர்கள் சாதாரணமாக இதனைச் செய்கின்றனர்.  என்ன புரிதலோடு இதனைச் செய்கின்றனர்  என்பதை நம்மாலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

கார்களில் நிறைய குழந்தை மரண சம்பவங்கள் நடைபெறுகின்றன.  கைக்குழந்தைகள்,  வளர்ந்த குழந்தைகள் இப்படி எத்தனையோ குழந்தைகள். உள்ளே பூட்டிக் கொண்டு திறக்க முடிவதில்லை. இது போன்ற துர்சம்பவங்கள் அடிக்கடி நடப்பது  பெற்றோர்களின்  அக்கறைமின்மையைத் தான் காட்டுகின்றன.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் குழந்தைகளைத் தூங்க வைக்க குடிக்கும் பாலில் போதை மருந்துகள் அல்லது மதுபானங்களைக் கலப்பது.  இது புதிதல்ல என்றாலும்   குழந்தைகள் இப்படிப் பலவாறு  சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 

சமீபகாலங்களில் இது போன்ற, இன்னும் அதைவிட,  சித்திரவதைகள்  நடந்து கொண்டிருக்கின்றன.  அப்பன் போதைக்கு அடிமையாக இருந்தால்  அவனது குழந்தைகள் படாதபாடு படுகின்றனர். சொல்லொன்னாத்   துயரங்களை அனுபவிக்கின்றனர்.  பல சம்பவங்கள் சம்பவிக்கின்றன.

இதையெல்லாம் பார்க்கும் போது என்னவென்று சொல்லுவது?  போதைப்பொருள், மது போன்றவைகளுக்கு அடிமையானவர்களைத் திருத்த வழியே இல்லையா?  தண்டனைகள் இவர்களைக் காப்பாற்றுமா?

கடவுள் தான் இவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

No comments:

Post a Comment