Sunday 11 August 2024

சண்டைக்கோழியாக இருக்காதீர்கள்!

வம்பு சண்டைகளா? வாய்ச் சண்டைகளா?  அதனை வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள்.  வீதிக்குக் கொண்டுவந்து நம்மைப் பார்த்து சிரிக்கும் நிலையை உருவாக்காதீர்கள்.  

இதில் கொடுமை என்னவென்றால் வீட்டில் பிள்ளைகளையும் நம்மை மாதிரியே வளர்க்கிறோம்   சில குழந்தைகள்  பொது இடங்களில் பண்ணுகின்ற அட்டகாசங்களைப் பார்த்தாலே போதும் நமது யோக்கியதைத்  தெரிந்துவிடும்.  அதுவும் இன்றைய இளம் பெற்றோர்களின்  வளர்ப்பு முறையைப் பார்க்கும் போது  என்ன தான் சொல்லுவது?   வீட்டில் பெரியவர்கள்  தேவையில்லை.   அதனால் Google தான் இவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய சூழல்!

சண்டை என்பதை  முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது.  ஆனால் வீட்டுக்கு வெளியே என்றால் அது நமது இனம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  நாலு பேர் நம்மைப் பார்த்து சிரிக்கும்படியாக நடந்து கொள்ளக்கூடாது.

சில சமயங்களில் படித்தவர்கள் போலத் தெரிகிறார்கள்.  ஆனால் அப்படியெல்லாம் யாரையும் மதிப்பிட முடியாது.  கொஞ்சம் கூட பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியே இல்லாமல்  நடந்து கொள்கிறார்கள். 

சரி இப்படியெல்லாம் செய்கிறோமே  அதன் விளைவுகள் என்ன என்று யோசித்ததுண்டா?  நாம் மலேசியர்கள் என்பது பெருமை தான்.  ஆனால் நம்மால் வாடகைக்கு  ஒரு  வீட்டை எடுக்க முடிகிறதா?  இந்தியன் என்றால் வேண்டாம் என்கிறார்களே! அது என்ன பெருமையா?

பெண்மணி ஒருவர் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்.  தனியார் கல்லூரிகளில் இந்திய மாணவர்களே வேண்டாம் என்கிறார்களாம்.  பார்த்தீர்களா,  நாம் பிள்ளைகளை வளர்க்கும் இலட்சணம்?  போகிற போக்கைப் பார்த்தால்  ம.இ.கா.வின்  ஏம்ஸ்ட் கல்லூரி  தான் இவர்களுக்கு அடைக்கலம் தர வேண்டும் போல் தோன்றுகிறது!

நாம் கேட்டுக்கொள்வதெல்லாம் பொது இடங்களில் நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள் என்பது தான்.  பெரியவர்களைப் பார்த்துத்தான்  குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களை எப்படி நாம் குற்றம் சொல்ல முடியும்?

சண்டை வேண்டாம். சமாதானமாகவே இருங்கள்.

No comments:

Post a Comment