Friday 16 August 2024

எதிர்காலம் முக்கியம்!

கல்வி கற்றவர்க்கே முதன்மை இடம்.  பிச்சை புகினும் கற்கை நன்றே  என்று  யாரும் சும்மா சொல்லிவிட்டுப் போகவில்லை. எல்லாம் அனுபவ மொழிகள். நீ பிச்சை எடுப்பவனாக இருந்தாலும் உன் பிள்ளையைப் படிக்க வை என்பதும் அதன் பொருள்.  உன் நிலைமை உன் பிள்ளைக்கு வரவேண்டாம் என்று தானே பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்? அதனை ஏன் நீ மறுக்கிறாய்?

இந்தியர்களில்,  தமிழர்கள் தான் பிள்ளைகளின் கல்வியில் அலட்சியம் காட்டுபவர்களாக இருக்கிறோம்.  கல்வியை வைத்தே தங்களை உயர்த்திக் கொண்டவர்கள் நமது சக மலையாளிகள், பஞ்சாபியர்.  இவர்களே நமக்குப் பாடமாக இருக்கின்றனர்.   பஞ்சாபிய சமூகத்தில் தாழ்ந்த  நிலையில்  யாரையேனும் நாம் பார்த்திருக்கிறோமா?  அனைவருமே பட்டம், பதவிகளில் உயர்ந்துதான் நிற்கின்றனர். கல்வி மட்டும் தான் இந்த அளவுக்கு அவர்களை உயர்த்திருக்கிறது.  ஏன் நமக்கு மட்டும் கல்வி உதவாதா?

இந்த நவீன காலத்தில் மாணவர்கள் வெளியூர் போய் படிப்பது என்பது ஒன்றும்  அதிசயமல்ல. வெளியூர் என்றால் ஏதோ ஆயிரக்கணக்கான மைல் தொலைவு என்று  அதிர்ச்சியடைய வேண்டிய அவசியமில்லை. எல்லாமே நாம் தொலைப்பேசியில்  தொடர்பில் உள்ள இடங்கள் தான்.  ஏன் நேரடியாகவே  பேசுகின்ற அளவுக்கு தொழில்நுட்பம்  வளர்ந்திருக்கிறது.  தொலைவு என்பது இப்போதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல.

பெற்றோர்களே! தூரம் என்று சொல்லி பிள்ளைகளின் கல்வியில் கை வைக்காதீர்கள். வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்க அனுமதிக்காதீர்கள்.  கல்வி கற்றால் 10,000 - 20,000 வெள்ளி என்று சம்பளம் வாங்குவான்.  படிக்கவில்லை என்றால் ஆயுள் பூராவும் 1,000 - 2,000 வெள்ளி என்று தான் சம்பளம் வாங்க முடியும்.  உங்களைப் போலவே இன்னொரு வறுமையான குடும்பத்தை உருவாக்கிவிட்டுப் போகாதீர்கள்.

ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள். பிள்ளைகள் ஓரிராண்டுகள  உயர்கல்வி  படித்தால் போதும்  அடுத்த நாற்பது ஆண்டுகள் அவன் செழிப்பான வாழ்க்கை வாழ முடியும்.  இப்போது உங்களின் சுயநலத்தால்  அவனுக்கு அந்தக் கல்வியை மறுத்தால் அவனது வாழ்க்கை படுபாதாளத்திற்குப் போகும். குற்றங்களைத் தான் பெருக வைக்கும்.

பிள்ளைகளின் எதிர்காலம் முக்கியம்/ அதற்குப் பட்டப்படிப்பு முக்கியம். எத்தனை மைல் தூரமாக இருந்தாலும் அவர்கள் படிப்பு  முக்கியம்.

No comments:

Post a Comment