Saturday 24 June 2023

சரியில்ல! மெத்த சரியில்ல!

 

                       அம்பாங் தமிழ்ப் பள்ளியில் சுராவ் (SURAU) கட்ட அனுமதி!

இப்படி ஒரு செய்தியைக் கேட்கும் போது "இப்படியும் நடக்குமா?" என்று நம்மை நாமே பார்த்து கேள்விக் கேட்க  வேண்டியுள்ளது!

பொதுவாகப் பார்க்கும் போது கல்வி அமைச்சு மட்டும் அல்ல ஜாக்கிமும் சேர்ந்தே இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும்.

சுராவ் கட்டுவதற்கு அனுமதி கொடுத்த தலைமையாசிரியர்  நிச்சயமாக ஒரு தமிழராக இருக்க நியாயமில்லை. தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொண்டும், தமிழர்களின் உரிமைகளை அனுபவித்துக் கொண்டும் இருக்கும்  கூட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.  

ஒரு சுராவ் கட்ட வேண்டுமென்றால்  அது தலைமையாசிரியர் "தலையை ஆட்டுவது மட்டும் அல்ல" , பள்ளி வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் - இப்படி அனைவரின் ஒப்புதல் தேவை.  

இந்த விஷயத்தில் கல்வி அமைச்சு  எல்லை மீறுகிறது என்று தான் சொல்ல வேண்டும். எத்தனை சீனப்பள்ளிகளில் சுராவ்கள் கட்டப்பட்டிருக்கின்றன?  தமிழ்ப்பள்ளிகளில் படிப்பவர்கள் இந்து மாணவர்களே அதிகம் என்று தெரிந்தும்  ஏன் இந்த குழப்பத்தை கல்வி அமைச்சு ஏற்படுத்துகிறது.   இதற்காக அக்கறை எடுக்கும் நேரத்தில் கல்வியில் அக்கறை செலுத்தினால் அதனால் மாணவர்களுக்கு நல்லது அல்லவா?

சென்ற ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில்  90,000 மாணவர்கள் கணக்கு பாடத்தில்  தோல்வி அடைந்திருக்கின்றனர்.  52,000 மாணவர்கள் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்திருக்கின்றனர். கல்வி அமைச்சு இது போன்ற சுராவ் கட்டுகின்ற வெட்டி வேலையை விட்டுவிட்டு  மாணவர்கள் கணக்கு, ஆங்கிலம் போன்ற பாடங்களில்  வெற்றி பெற வழி வகைகளைச் செய்ய வேண்டும்.

பார்க்கப் போனால் இது ஒன்றும்  கல்வி அமைச்சின் கீழ் வருகின்ற வேலை அல்ல.  அதுவும் குறிப்பாக, சீன, தமிழ்ப்பள்ளிகளில் இது தேவையற்ற வேலை. கல்வி அமைச்சு கல்வி சம்பந்தமான வேலையில் ஈடுபடுவதே நல்லது.

நமது சந்தேகம் எல்லாம் இப்போது ஆட்சியில் இருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தை இந்தியர்கள் எதிர்க்க வேண்டும் என்று திட்டம் தீட்டி நடைபெறுகின்ற ஒரு சதித்திட்டம் என்றே தோன்றுகிறது. காரணம் இந்தியர்கள் வாக்கு என்று வரும்போது  நிச்சயமாக நடப்பு அரசாங்கத்தை அவர்கள் ஆதரிக்கின்றனர். எண்பது விழுக்காட்டினர் வாக்குகள் நடப்பு அரசாங்கத்திற்கு  வரும் என்று நிச்சயமாக சொல்லலாம்.

நிச்சயமாக இது ஒரு சதித்திட்டம்.  இந்தியர்களின் ஆதரவு ஒற்றுமை அரசாங்கத்திற்குப் போகக் கூடாது  என்று அரசியல் விளையாடுகிறது கல்வி அமைச்சு. இது போன்ற பிற்போக்கான திட்டங்களை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு கல்வியில் கவனம் செலுத்துவதே  நல்லது என்பதே  நமது ஆலோசனை.

No comments:

Post a Comment