Thursday 29 June 2023

கைவிரித்தனர் முகவர்கள்!

 


யாரைக் குற்றம் சாட்டுவது?  பல இலட்சங்களைச் செலவு செய்து இங்கு வந்த வேலை செய்ய நாட்டிற்குள் வந்துவிட்டனர்.  

வந்த பின்னர் உள்ளே வந்தவர்கள் தேவைக்கு மேல் அதிகமாகிவிட்டனர். இப்போது அவர்களுக்கு வேலை இல்லை என்று முகவர்கள் கைவிரித்துவிட்டனர்!  இப்போது இங்கு வந்த அந்நியநாட்டவர்கள் என்ன செய்வர்?

என்னைக் கேட்டால் இது அரசாங்கத்தின் குற்றம் என்று அடித்துச் சொல்வேன்.  அரசாங்கத்திற்குத் தான் உள்ளூர் நிலவரம் தெரிந்திருக்க வேண்டும். மனிதவளத் தேவை என்பது அரசாங்கத்தின் பொறுப்பு. அதனை முகவர்கள் மேல் பழி  சொல்லி தப்பிக்க முயலக்கூடாது.

அந்த நிறுவனங்கள் கறுப்புப்பட்டியல் இடப்படும் என்பதெல்லாம் ஏமாற்று வேலை.  அதனால் யாருக்கு என்ன இலாபம்? சம்பந்தப்பட்டவர்கள் வேறு ஒரு பெயரில் வேறு ஒரு நிறுவனத்தை தொடங்கிவிடுவார்கள்! அவர்களுக்குத் தெரியாத வழிகளா! இந்த கறுப்புப்பட்டியல் என்கிற பேச்சே வரக்கூடாது. அவர்களுக்குச் சிறை தண்டனை என்பது தான் சரியான வழி. 

ஒன்றை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.  நாம் அந்நியநாட்டவர்கள் என்று சாதாரணமாகச் சொல்லி விடுகிறோம். ஆனால் தங்களது சொத்துகளை விற்று, கடன் வாங்கி பல இலட்சங்களைச் செலவு செய்து அவர்கள் இந்நாட்டுக்கு வருகிறார்கள். வேலை கிடைக்கும் என்கிற உத்தரவாதம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுத் தான் அவர்கள் வருகிறார்கள். கடைசியில் கைவிரித்தால்?  அந்த முகவர்களையே அவர்கள் இழந்த பொருளாதார இழப்பை ஈடுகட்ட ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஒன்றுமே இல்லாமல் அவர்களை அனுப்பி வைத்தால்?

எப்படிப் பார்த்தாலும் அரசாங்கம் தான் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  அல்லது குறைந்தபட்சம் அவர்களை வேறு வேலைகளில் ஈடுபடுத்த வேண்டும்.  இன்று இந்திய உணவகங்கள் 'ஆள்கள் தேவை' என்பதாக மகஜருக்கு மேல் மகஜர்களை  மனிதவள அமைச்சுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை அந்த வாய்ப்பைக் கொடுக்கலாம்.

அந்த அந்நியநாட்டவர்களைத் தற்காலிமாக ஏதோ ஒரு வழியில் காப்பாற்றுலாம். ஏதோ ஏழைபாழைகள்  இந்நாட்டிற்கு வேலை தேடி வருகிறார்கள். அவர்கள் தங்களது தாய்நாட்டிலிருந்து  பலவற்றை இழந்து தான் இங்கு வருகிறார்கள்.  இவர்களைச் சும்மா அனுப்புவது எந்த வகையிலும் நியாயமில்லை.

கடந்த பல வருடங்களாக இவர்களை நாம்,  தேவையோ தேவை இல்லையோ,  இந்நாட்டிற்குள் அனுமதித்து விட்டோம். முகவர்கள் மகிழ்ச்சியடைவதற்காக  எல்லாவற்றையும் செய்தோம்.   இப்போது அந்த அந்நியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்  அல்லது முகவர்களை உள்ளே தள்ள வேண்டும்!

கறுப்புப்பட்டியல் என்று சொல்லி மக்களை ஏமாற்ற வேண்டாம்! அந்த கருங்காலிகளுக்குத் தண்டனைக் கொடுத்து நஷ்டஈட்டையும் கொடுக்கும்படி செய்ய வேண்டும்!

No comments:

Post a Comment