எனது பள்ளி நாட்களில் நான் நினைவில் வைத்துக்கொள்வது போல எந்த ஓர் ஆசிரியரும் அமையவ்வில்லை. அதற்குக் காரணம் வாய்த்த ஆசிரியர்கள் எல்லாம் பெரும்பாலும் சீனர்கள் என்பதாகக் கூட இருக்கலாம். ஆங்கிலம் பேச முடியவில்லையே என்கிற காரணமாகவும் நானே ஒதுங்கி இருக்கலாம். ஆங்கிலம் எப்படி நம்மை ஒதுக்கி விடுகிறது பார்த்தீர்களா?
இடைப்பட்ட காலத்தில் அதாவது எனது நான்காம் பாரத்தில் ,அந்த எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது. வந்தார் ஓர் ஆங்கில ஆசிரியர். இளைஞர். ஒரு பஞ்சாபி. அவர் பேசுகின்ற ஆங்கிலத்தை அத்தனை எளிதில் புரிந்த கொள்ள முடியாது. கடுமையான (Bombaastic) வார்த்தைகளப் பயன்படுத்துவார்.. ஒவ்வொன்றுக்கும் ஆங்கில ஆக்ஸ்போர்டு அகராதியைப் புரட்ட வேண்டியிருந்தது!
அடிக்கடி கட்டுரைகள் எழுத வைப்பார். எனக்கும் ஓர் ஆசை வந்துவிட்டது. அவரைப் போல கடுமையான, எளிதில் புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தும் பழக்கம் வந்துவிட்டது. அதனை எனது கட்டுரைகளில் காண்பித்தேன். அதற்கென்று புத்தகங்களைத் தேடினேன். நூலகத்தில் Wuthering Heights என்னும் புத்தகம் கைகொடுத்தது. ஒன்றுமே புரியவில்லை! ஆனாலும் வாசித்து முடித்தேன். எனது கட்டுரைகளில் புதிய புதிய வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். ஆசிரியருக்கு என் எழுத்துக்கள் அவரைக் கவர்ந்துவிட்டன. வகுப்பில் என்னுடைய கட்டுரையை வாசித்துக்காட்டி என்னைப் பெருமைப் படுத்தினார். அப்போதிருந்தே என்னை நானே மாற்றிக் கொண்டேன். எனது பள்ளிவாழ்க்கையில் நான் மறக்க முடியாத ஓர் ஆசிரியர் என்றால் ரஞ்சிட் சிங் எனகிற அந்த சீக்கிய ஆசிரியர் தான். அதன் பின் என் பாதையே மாறிவிட்டது. பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டேன். கொஞ்சம் பயம் தெளிந்தது.
அறிவோம்: ஆங்கிலம் தெரிந்தால் உலகையே வலம் வரலாம் என்பது உண்மை அல்ல. ஆப்பிரிக்க நாடுகளில் பல பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்தவை. அங்கெல்லாம் ஆட்சிமொழியாக பிரஞ்சு மொழி தான் பயன்பாட்டில் உள்ளது. குறைந்தபட்சம் இந்த இரண்டு மொழிகள் தெரிந்தால் உலகை வலம்வர பிரச்சனை இருக்காது.
No comments:
Post a Comment