Tuesday 26 November 2019

ஜாகிர் நாயக் ஒரு மலேசியப் பிரஜை!

பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் ஒரு மலேசியப் பிரஜை என்பதை நாம் மறந்துவிடுகிறோம். 

நமது நாட்டின் சட்டம் என்ன சொல்லுகிறது என்பதை மறந்து விடுங்கள்.  சட்டத்தை நமது அரசாங்கம் என்றுமே மதித்ததில்லை. அப்படி மதித்திருந்தால் இங்கு பிறந்த எண்ணற்ற இந்தியர்களில் பலர் நாடாற்றவர்களாக இருக்க முடியுமா?

இப்போது புதிதாக நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் ஜாகிர் நாயல் மலேசிய குடியுரிமை பெற்றவர். இந்த நாட்டின் பிரஜை ஒருவருக்கு அரசியல் ரீதியாக என்னன்ன தகுதிகள் உள்ளனவோ அந்த தகுதிகள் அனைத்தையும் அவரும் பெற்றிருக்கிறார்!  இது ஒன்றே போதும அவரின் செல்வாக்கு எந்த அளவுக்குக் கொடி கட்டிப் பறக்கிறது என்று தெரிந்த கொள்ள! 

அடுத்த பொது தேர்தலில் அவருடைய  செல்வாக்கை பயன்படுத்திக் கொள்ள அம்னோ-பாஸ் இரண்டு கட்சிகளும் போட்டிப் போடும் என நம்பலாம்.  அந்த அளவுக்கு நாளுக்கு நாள் அவரின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது!  

அவர் இந்த நாட்டு பிரஜை. இனி யாரும் அவரை "உங்கள் நாட்டுக்குப் போங்கள்!" என்று சொல்ல முடியாது.   அப்படிச் சொன்னாலும் அது எடுபடாது என்பது நமக்குத் தெரியும்.

அவரின் சமீப கால நடவடிக்கைகளைப் பார்க்கும் போது தேர்தலில் கூட அவர் போட்டி இடக் கூடிய  வாய்ப்புக்கள் பிரகாசமாக உண்டு!

உள் நாட்டைச் சார்ந்தவர்கள் மீது வழக்குப் போடும் உரிமையை அவர் பெற்றிருக்கிறார். போட்டுக் கொண்டும் இருக்கிறார்!

ஜாகிர் நாயக்கை இங்குள்ள தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்பதால் அவர்களின் வாயை அடக்க விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்று சொல்லி சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு துன்புறுத்த்ல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். விடுதலைப் புலிகள் என்பதாக எந்த ஒரு இயக்கமும் இப்போது இல்லை.  ஆனால் இங்குள்ள நமது சட்டம் இல்லாத ஒன்றை வைத்துக் கொண்டு பயங்கரவாதிகள் என்பதாக சொல்லி கைது செய்திருக்கிறார்கள்!  இது பற்றி நாம் கேட்டால் "இது எங்களுடைய சட்டம்! மற்ற நாடுகளோடு ஒப்பிடாதீர்கள்!" என்கிறார்கள். 

அந்த அளவுக்கு ஜாகிர் நாயக்கின் செல்வாக்கு நாட்டில் உயர்ந்து நிற்கிறது! கொடி கட்டிப் பறக்கிறது! இப்போது நாட்டில் சமயங்களைப் பற்றி பேசுவதற்கு ஜாகிர் நாயக் மட்டுமே உரிமை பெற்றிருக்கிறார்!

ஜாகிர் நாயக் நம்மைப் போலவே அனைத்து உரிமைகளையும் பெற்றிருக்கிறார். அவருக்காக சட்டம் வளைந்து கொடுத்து எத்தனையோ ஆண்டுகளாகி விட்டன.

ஆமாம், அவர் ஒரு மலேசியப் பிரஜை!

Sunday 24 November 2019

நமக்கு நாமே எதிரியா...?

நமக்கு நாமே எதிரியா?  மீண்டும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய  ஒரு கேள்வி. 

ஒரு காலத்தில் நமக்கு நாமே எதிரிகளாக செயல்பட்டோம். அதனை தண்ணீர் விட்டு வளர்த்தவர்கள் அரசியல்வாதிகள்! அப்போது நாம் படிக்காத அறிவிலிகளாக இருந்தோம். அதனால் அரசியல்வாதிகள் நம்மை அடிமைகளாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். 

ஆனால் இப்போது நமக்கு என்ன கேடு? படித்தவர்களாக இருக்கிறோம். படித்தவன் கேடு கெட்டவனாக இருக்க முடியாது! வாய்ப்பில்லை!

தமிழ்ப்பள்ளிகளுக்காக - தமிழ்ப்பள்ளிகளின் நலனுக்காக - தமிழ் மாணவர்களின் நலனுக்காக - எத்தனையோ பேர் களத்தில் இறங்கி  வேலை செய்கின்றனர்.   பொருள் உதவி, இலவச கல்வி வகுப்புக்கள், உடல் உழைப்பு - இப்படி அவர்களால் இயன்றதைச் செய்கின்றனர். அவர்களை நாம் பாராட்ட வேண்டும்.  பாராட்ட மனமில்லை என்றால் சும்மா இருந்தால் போதும்.  படித்தவனாக இருந்தால் அவனுக்கு அந்த மனம் வேண்டும். அது தான் அவன் படித்தவன் என்பதற்கான அடையாளம்.

சமீபத்தில் படித்த ஒரு செய்தி. கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைப் பற்றியான ஒரு செய்தி. ஓம்ஸ். ப. தியாகராஜன் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிறையவே பல வழிகளில் உதவி செய்தவர், உதவி செய்தும் வருகிறவர். தமிழ் சார்ந்த அமைப்புக்களுக்கும் உதவி செய்து வருபவர். தமிழர் சார்ந்த நலனுக்கும் உதவி செய்து வருபவர். சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கு ஓம்ஸ் ப.தியாகராஜன் பெரிய அளவில் உதவியாக இருந்திருக்கிறார். அவர் சேவையை மதித்து சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் "ஓம்ஸ் ப.தியாகராஜன் அறிவகம்" என்பதாக ஒரு கட்டிடத்திற்கு அவரின் பெயரைச் சூட்டி இருக்கிறார்கள். தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இன்னொரு நாளிதழ் அது பற்றியான செய்தி வெளியிடும் போது "ஓம்ஸ் ப.தியாகராஜன்" பெயரை முற்றிலுமாக அழித்துவிட்டு செயதியை வெளியிட்டிருக்கிறார்கள்! 

இது ஒரு தவறான நடைமுறை. தமிழர்களுக்குள்ளேயே தமிழர்கள் அடித்துக் கொள்ளட்டும் என்கிற நடைமுறை. திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவதற்கும் இதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. தமிழ் இனத்தை அழிக்கத் துடிக்கும் திராவிடர்களின் திருவிளையாட்டு என்று சொல்லலாம்!

ஓம்ஸ் ப.தியாகராஜன் மட்டும் அல்ல இன்னும் இந்த சமுதாய நலனுக்காக பலர் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். பொருள் உதவி, உழைப்பு இன்னும் பல வழிகளில். அவர்களை நாம் மனதார பாராட்டுவோம். நம்மால் முடியாவிட்டாலும் செய்கிறவர்களைப் பாராட்டுவோம்.  

நமக்கு நாமே  துரோகிகளாக மாற வேண்டாம். இந்த சமுதாயத்திற்குத் துரோகம் செய்பவர்களை துரத்தியடிப்போம்!

Saturday 23 November 2019

வேதாளம் மீண்டும்....?

இதென்னடா வம்பு என்று நினைக்க வேண்டியிருக்கிறது!

நாட்டின் நிதியமைச்சர் சொல்லுகிறார்:  "இந்தியர்களே! மித்ரா நிதியகத்தில் இன்னும் மூன்று கோடி வேள்ளி பயன்படுத்தப்படாமல்  சும்மா வீணே கிடக்கிறது!   உங்களுக்கு இருப்பது இன்னும் நாற்பது நாள்கள் தாம்.  அதற்குள் நீங்கள் விண்ணப்பம் செய்யுங்கள். அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  பிறகு அரசாங்கத்தைக் குறை சொல்லாதீர்கள்" என்பது தான் அவர் கொடுத்த செய்தி.

 தேசிய வர்த்தக சம்மேளனம், மலேசிய இந்திய தொழியியல் சங்கங்களின் சம்மேளனம்  கொடுத்த தீபாவளி விருந்தின் போது நிதியமைச்சர், லிம் குவான் எங் இதனை அறிவித்திருக்கிறார். 

அவர் அறிவித்த அந்த இடம், அந்த நேரம் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவை.  இன்று  இந்திய வர்த்தகர்கள், தங்களது தொழிலை வளர்க்க,  மேம்படுத்த பல இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர்.  அந்த முட்டுக்கட்டைகளில் முதன்மையானது நிதி நெருக்கடி தான். 

அதனால் தான் வர்த்தக சமூகத்திற்கு அரசாங்க உதவி தேவை என்பதற்காக இந்த மித்ரா உருவாக்கப்பட்டது. முந்தைய அரசாங்கத்திலும் செடிக் என்னும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு அந்த நிதியும் வர்த்தகர்களுக்குப் போய்ச் சேரவில்லை! அரசியல்வாதிகள் கபளீகரம் செய்து விட்டதாக செய்திகள் கூறின. 

இந்த முறை நிதியமைச்சரே மித்ரா அமைப்பில் இன்னும் மூன்றுகோடி வெள்ளி பயன்படுத்தாமல் இருப்பதாகக் கூறியிருப்பது  மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் இன்னொரு பக்கம் மித்ரா அமைப்பின் தலைவரான அமைச்சர் வேதமூர்த்தியின் அறிக்கை வேறு மாதிரியாக இருக்கிறது!

ஆம், பொன் வேதமூர்த்தி அவர்கள் மித்ரா அமைப்பில் இனி எந்த நிதியும் இல்லை என்பதாக கை விரித்து விட்டார்! இந்த ஆண்டு இந்தியர்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட பத்து கோடி வெள்ளியும் செலவிடப்பட்டு விட்டதாக அறிக்கை விட்டிருக்கிறார்!

இந்த நேர்த்தில் நம்மிடமும் ஒரு கேள்வி உண்டு.  ஒருவர் இருக்கிறது என்கிறார்! ஒருவர் இல்லை என்கிறார்! இருக்கிறது என்று சொல்லுபவர் இந்தியரிடையே நல்ல பேர் வாங்கச் சொல்லுகிறாரா, தெரியவில்லை! இல்லை என்கிறவர் அரசாங்கத்திடம் நல்ல பேர் வாங்கச் சொல்லுகிறாரா, தெரியவில்லை! மூன்று கோடி வெள்ளியை அரசாங்கத்திடம் ஒப்படைத்து நல்ல பேர் வாங்குபவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்!  ஏற்கனவே பாரிசான் ஆட்சியிலும் இது நடந்திருக்கிறதே!  நிதிக்கு யாரும் விண்ணப்பம் செய்யவில்லை என்று கூறி அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டதாகவும் அங்கிருந்து அது மாயமாய் மறைந்து விட்ட செய்திகள் எல்லாம் நாம்மிடம் உண்டே! 

பொறுத்திருப்போம்! இது பற்றி இன்னும் செய்திகள் வரத்தானே செய்யும்! அது வரை காத்திருப்போம்!

Friday 22 November 2019

இன்னும் மீதம் மூன்று கோடி உள்ளது...!

இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக மித்ரா மூலம் ஒதுக்கப்பட்ட பத்து கோடி வெள்ளி மானியத்தில் இன்னும் மீதம் மூன்று கோடி வெள்ளி பயன்படுத்தாமல் இருப்பதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தீபாவளி உபசரிப்பு ஒன்றில் அறிவித்திருக்கிறார்.

அந்த நிதியினை பயன்படுத்தாவிட்டால் அது மீண்டும்  அரசாங்கத்திடமே ஒப்படைக்கப்படும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

கடந்த பாரிசான் ஆட்சியிலும் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் அது மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு அப்புறம் அது காணாமல் போனதாக செய்திகள் வந்தன! 

இப்போதும் அதே செய்தி மித்ரா அமைப்பிலும் வருவது கண்டு நமக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. 

இதில் முக்கியமாக நமக்கு வேண்டியதெல்லாம் மித்ரா அமைப்பின் மூலம் வர்ததகர்கள் எந்த அளவுக்குப் பயன் பெறுகிறார்கள் என்பது தான்.  நிச்சயமாக பெரிய வர்த்தகர்கள் பெரிய அளவில் பயன் பெறுகிறார்கள் என நம்பலாம். ஆனால் சிறிய வர்த்தகர்கள்,  அப்போதும் சரி இப்போதும் சரி,  பயன் பெறுவது என்பது பொதுவாக இல்லை என்று சொல்லலாம்.  ஆனால் மித்ராவின் முக்கிய நோக்கம் சிறிய வர்த்தகர்களும்அதிகமாக பயன் பெற வேண்டும் என்பது தான்.  ஆனாலும்  சிறிய வர்த்தகர்களுக்கு எந்த அளவு மித்ராவின் செய்திகள் போய்ச் சேருகின்றன என்பது தான் நம் முன்னே உள்ள பிரச்சனை.

மித்ரா, அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையேற்ற பிறகு, அது பற்றிய செய்திகள் எதுவும் பத்திரிக்கைகளில் காண முடிவதில்லை. அது ஏன் என்று இன்றளவும் எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை ஆங்கிலப் பத்திரிக்கைகளில் மட்டுமே செய்திகள் கொடுக்கப்படுகின்றனவா?  மித்ரா என்கிற ஓர் அமைப்பு, பிர்தமர் துறையின் கீழ் இயங்குகிறது. என்கிற செய்தியைக் கூட பத்திரிக்கைகளில் பார்க்க முடிவதில்லை.

இப்போது நாம் நிதியமைச்சர் லிம் குவான் எங் கொடுத்த செய்தியைப் பார்ப்போம்.  இப்போது இன்னும் மூன்று கோடி வெள்ளி பயன்படுத்தப்படாமல் மித்ராவில் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அப்படிப் பயன்படுத்தாமல் போனால் அந்த பணம் மீண்டும் திருப்பி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்பதாக அவர் நமக்கு அவர் ஞாபகப்படுத்துகிறார். 

இப்படி ஒரு செய்தியை அமைச்சர் பொன்,வெதமூர்த்தி கூட நமக்குக் கொடுக்கவில்லை என்பது நமக்கு வருத்தமான செய்தி தான்.

ஆனாலும் பெருமக்களே மீதம் அந்த மூன்று கோடி வெள்ளி மானியத்தைப் பயனபடுத்திக் கொள்ள இன்னும் ஒரு மாதமே இருக்கின்றது என்பதை உங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். மானியத்துக்காக விண்ணப்பம் செய்ய விரும்புவோர் நேரடியாக அமைச்சர் வேதமூர்த்தியின் அலுவலகத்திற்கு மனு செய்ய  இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ளுகிறேன்.

தவறுகள் அமைச்சர்கள் செய்யலாம். ஆனால் நாம் செய்யக் கூடாது!

அவர்களும் நமது பிள்ளைகள் தாம்..!

UPSR தேர்வில் நமது தமிழ்ப்பள்ளி மாணவர்களின்  தேர்ச்சி விகிதம் நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்பது உண்மையே. குறை சொல்ல ஒன்றுமில்லை.

ஆனால் நாம் தொடர்ச்சியாக 8ஏ, 7ஏ, 6ஏ   பெற்ற மாணவர்களைப் பற்றி பெருமை பட்டுக் கொண்டிருக்கிறோம். அதில் தவறில்லை. வெற்றியின் மூலம் பெறப்படுகின்ற மகிழ்ச்சியை நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளுகிறோம். அதனை நாம் தவிர்க்க முடியாது.

இன்னொரு பக்கம் குறைவான மதிப்பெண்கள் எடுத்தவர்கள் அல்லது முழுமையாக தோல்வி அடைந்தவர்கள் - இவர்களையும் நாம் மறந்துவிட முடியாது.  தோல்விக்குப் பலவித காரணங்கள்.  வாழ்கின்ற சூழல், ஏழ்மை, கல்வியின் மேல் ஒருவித வெறுப்பு என்று பல காரணங்கள். 

எப்படியும் இவர்கள் இன்னும் மூன்றாண்டுகள் தொடர்ந்த படிக்க வேண்டிய சூழல் உண்டு. சிலருக்கு நான்காண்டுகள் ஆகலாம். ஆனால் அவர்கள் மீண்டும் தங்களது  SRP  தேர்வை எழுத வேண்டி வரும். அதனால் UPSR - ல் ஏற்பட்ட தோல்விவை அவர்கள் இங்கு சரி செய்து கொள்ளலாம். 

எத்தனையோ மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன்.  UPSR - ல் தோல்வி அடைந்தாலும் அடுத்த வருகின்ற SRP - யில் வெற்றி பெற்ற மாணவர்கள் பலர் உண்டு.  முதல் ஆறு ஆண்டுகள் கல்வியில் கவனக் குறைவாக இருந்தவர்கள் அடுத்த மூன்றாண்டுகளில் அதனை சரி செய்து விடலாம்.

அதனால் இப்போது தோல்வி அடைந்த மாணவர்களை ஒரேடியாக மட்டம் தட்டாதீர்கள்.  அவர்கள் அனைத்தையும் இழந்துவிட்டவர்கள் போல திட்டித் தீர்க்காதீர்கள்.  அவர்களுக்கும் நல்லதொரு எதிர்காலம் உண்டு. ஒவ்வொரு மாணவனும் மூன்று தேர்வுகளைத் தாண்டினால் தான் கல்லூரி, தொழிற்கல்வி, பலகலைக்கழகம் என்று அடுத்தடுத்து செல்ல முடியும். 

அதனால் அவர்கள் எதனையும் இப்போது இழந்து விடவில்லை. அடுத்த வரும் தேர்வுகளில் அவர்கள் மாறலாம். நல்லபடியாக தேர்வுகள் எழுதலாம். கெட்டிக்கார மாணவர்களாக வெற்றி பவனி வரலாம். தேவை எல்லாம் பெற்றோரின் அரவணைப்பு. அவர்களுக்கான டியூஷன் வகுப்புக்கள். அவ்வளவு தான்!

இன்றைய தோல்வி நாளைய வெற்றியாக அமைய வாழ்த்துகள்!

Thursday 21 November 2019

எதுவும் அவர்களுக்கு மண்டையில் ஏறாது..!

தமிழ்ப்பள்ளிகளின் யூ.பி.எஸ்.ஆர். தேர்ச்சி நிலை 78.51% என அறியும் போது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 

இப்படி ஒரு தேர்ச்சியை அடைவதற்கு ஆசிரியப் பெருமக்கள். பெற்றோர் ஆசிரியர் சங்கம், பொது இயக்கங்கள் - இப்படி பலருடைய முயற்சிகள் பெரும் வெற்றியை அளித்திருக்கின்றன. பெற்றோர்களுடைய ஒத்துழைப்பையும் நாம் குறைத்து மதிப்பிடவிட முடியாது. பெற்றோர்களின் ஆர்வம், அவர்களுடைய தூண்டுதல், பிள்ளைகளின் குறிக்கோள்களை உருவாக்குவதில்  பெற்றோருடைய பங்கு என்பது மிகவும் முக்கியம் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். 

இந்த நேரத்தில் பெற்றோர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது வரையில் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் கொஞ்சம் பாதுகாப்பாக இருந்தார்கள்.  இந்திய ஆசிரியகளால் அவர்கள் வழி நடத்தப்பட்டார்கள். நல்ல வழிகளை அவர்கள் காட்டினார்கள்.  உங்கள் வீட்டுப் பிள்ளைகளும் நல்லபடியாக வளர்ந்தார்கள். அதுவும் பெற்றோர்களுக்குக் கீழ்படிந்தவர்களாக இருந்தார்கள்.

இனி நடக்கப் போவது மாணவர்களுக்குக் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.  எல்லாப் பாடங்களிலும் ஏ வாங்கியவர்களையும் எல்லாப் பாடங்களிலும் இ வாங்கியவர்களையும் ஒரே வகுப்பில் போட்டு அடைத்து வைப்பார்கள்!  தேசியப்பள்ளிகளில் உள்ளவர்களுக்கு எந்த வகுப்பில் யாரைப் போடுவது என்கிற வித்தியாசமெல்லாம் அறியாத மரமண்டைகள் அதிகம்! அப்படிச் செய்வதற்குக் காரணங்கள் உண்டு. 

தமிழ்ப்பள்ளியில் நல்ல முறையில் தேர்ச்சி அடைந்தவன் - இப்படி செய்வதன் மூலம் - நாளடைவில் மண்டாக மாறி விடுவான்! அதைத்தான் தேசிய பள்ளிகள் விரும்புகின்றன!   சாதனைகள் செய்யத் தெரியாவிட்டாலும் சாத்தான் வேலைகள் செய்ய அவர்களில் அதிகம்!

இது ஒரு எச்சரிக்கை தான். பெற்றோர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். படிக்கிறவனையும், படிக்காதவனையும் ஒரே வகுப்பில் போட்டால் ஒருவனும் உருப்பட மாட்டான்! அதனால் கவனமாக இருங்கள்.  தெரிந்தவர்களை அணுகி நடவடிக்கை எடுங்கள். 

என்ன செய்வது? பொறாமை என்பது எப்படி இருக்கும் என்பதை நீங்களே கண்டு கொள்ளுவீர்கள். தக்கவர்களை அணுகி நடவடிக்கை எடுங்கள். தாய் மொழிப் பள்ளிகள் வேண்டாம் என்று நினைப்பவனின் மன நிலை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுவீர்கள்.

நமக்குப் பிள்ளைகளின் எதிர்காலம் முக்கியம்.  அதனால் கவனமாக இருங்கள்.  விட்டுக் கொடுக்காதீர்கள்.  உங்களால் முடியவில்லை என்றால் சரியான ஆள்கள் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண முயலுங்கள். 

நல்லது நடக்கும். நல்லவர்களும் இருக்கிறார்கள்! 
 

Wednesday 20 November 2019

அமைச்சரவை மாற்றமா...?

அமைச்சரவையில்  விரைவில் மாற்றம் ஏற்படும் என்பதாக பிரதமர் டாக்டர் மகாதிர் அறிவித்திருக்கிறார்.  

அவருடைய பெர்சாத்து கட்சியிலிருந்து,  ஒரு வேளை,  அவர்  ஒரு சிலரை அமைச்சரவைக்குக் கொண்டு வரலாம். இருப்பவர்களை ஒரு சிலரை வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்.  அல்லது  மாற்றம் என்பதை விட அமைச்சரவை விரிவாக்கம் செய்யலாம்.

ஆனாலும் மக்களால் பெரிதாக எதிர்பார்க்கப்படும்  பிரதமர் மாற்றம் ஏற்படுமா என்பதற்கான அறிகுறி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. 

நடந்து முடிந்த நாடாளுமன்ற இடைத் தேர்தலில்  நம்பிக்கைக் கூட்டணிக்கு ஏற்பட்ட தோல்வி என்பது  சாதாரண தோல்வி அல்ல.  யாரும் எதிர்பார்க்காத பயங்கர தோல்வி!

அதற்கு மூல காரணம் டாக்டர் மகாதிர் தான் என்பது நமது  மக்களின் கணிப்பு.  ஆனாலும் டாக்டர் மகாதிர் அதனை ஏற்றுக் கொள்ளுவார் என்று எதிர்பார்க்க முடியாது.  வழக்கம் போல மற்றவர் மீது பழிபோடுவார் என்பது நாம் அறிந்தது தான்.

இந்த அமைச்சரவை மாற்றத்தினால் டாக்டர் மகாதிர் என்ன எதிர்பார்க்கிறார்?  தான் இனி நீண்ட நாள் பதவியில் இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறாரா? அப்படி சொல்லவும் முடியாது. அவர் அதனை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்! தானே விலக வேண்டும் என்கிற முடிவை அவரே எடுத்தால் ஒழிய  அவரை யாரும் பதவி விலகுங்கள் என்று சொல்ல முடியாது. 

ஆனாலும் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் அவருக்கு ஒரு சிறிய நெருடல்களையாவது ஏற்படுத்தியிருக்கும் என நம்பலாம்.  அதன் தொடர்பில் தான் பெர்சாத்து கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் சமீபத்திய சந்திப்பு என்று சொல்லலாம்.  பெர்சத்துவில் உள்ளவர்கள் நிச்சயமாக டாக்டர் மகாதிர் பதவி விலகுவதை விரும்பாதவர்கள்.  அவர் பதவியில் தொடர வேண்டும் என்பதையே அவர்கள் வலியுறுத்தியிருப்பார்கள் என நம்பலாம். தனது கட்சியினரின் ஆதரவையே அவர் விரும்புகிறாரே தவிர பக்காத்தான் கூட்டணியின் ஆதரவு அவருக்குத் தேவை இல்லை!

அதனால் தான் அவர் பக்காத்தான் கூட்டணி தலவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்பவில்லை. .  இவர்களுடன் நடத்தினால் மோதல்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும்.  அதனை அவர் விரும்பமாட்டார்.

இந்த அமைச்சரவை மாற்றத்தினால் அவர் என்ன செய்ய விரும்புகிறார்? தனது பதவியை மேலும் உறுதிப்படுத்துவதாக இருக்கலாம். அல்லது தனது கட்சியினரின் பங்கேற்பை இன்னும் அதிகப்படுத்தலாம். தனது கட்சியே அதிகாரத்தில் இருப்பதை விரும்பலாம்.

எல்லாம் ஓர் அனுமானம் தான்! இது அரசியல்.  குறிப்பிட்டு சொல்ல வழியில்லை!

Sunday 17 November 2019

காலிட் சமாட் என்ன கூற வருகிறார்?

கூட்டரசு பிரதேசஅமைச்சர் காலிட் அப்துல் சமாட், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பக்காத்தானின் தோல்வி பற்றி என்ன கூற வருகிறார்?

தோல்விக்கு பிரதமர் டாக்டர் மகாதிர் மட்டும் காரணம் என்று சொல்லுவது தவறு. அனைத்துத் தரப்பினரும் அந்த தோல்விக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்கிறார்.

நம்பிக்கை கூட்டணி அந்த தோல்விக்குப் பொறுப்பேற்கலாம். அது தான் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் என்றால் அப்படியே செய்து விட்டுப் போங்கள். அது தான் பிரதமர் மகாதிருக்கு மகிழ்ச்சியளிக்கும் என்றால்  அதனையும் செய்துவிட்டுப் போங்கள்.

ஆனால் இன்னொரு பக்கமும் உண்டு. இந்த தோல்விக்கு டாக்டர் மகாதிர் தான் காரணம் என்று பொது மக்கள் நினைத்தால் அப்போது என்ன சொல்லுவீர்கள்? 

என்னைப் போன்ற சராசரிகள் எல்லாம் இந்த இடைத் தேர்தல் தோல்விக்கு டாக்டர் மகாதிர் தான் காரணம் என்றால் என்ன சொல்லப் போகிறீர்கள்?  இதில் ரகசியம் ஒன்றுமில்லை.  டாக்டர் மகாதிர் தான் காரணம் !

ஒரு செயல்படாத அரசாங்கத்தை இப்போது வழி நடத்துபவர் யார்? அதற்குக் காரணம் நம்பிக்கை கூட்டணியா? தலைமை பீடத்தில் இருந்து கொண்டு வலுக்கட்டாயமாக அரசாங்கத்தை வலுவிழக்கச் செய்து கொண்டிருப்பவர் யார்?

செயல்படாத ஓர் அரசாங்கத்தை மக்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்? ஒரு சில விஷயங்களில் நாடு சரியான பாதையில் போகிறது என்பது உண்மை தான்.  ஆனால் பொது மக்களுக்கு அதனால் என்ன பயன்? 

சராசரி மக்களின் தேவை என்ன?  விலைவாசிகள் குறைய வேண்டும்.  இது வரை குறையவில்லை!  பெட் ரோல் விலை குறைந்தால் விலைவாசிகள் குறையும் என்றார்கள்.  அப்படியெல்லாம் குறைவதாகத் தெரியவில்லை.  வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்கிறார்கள். இருந்த வேலையும் போய் இப்போது நடு ரோட்டில் நிற்க வேண்டிய நிலை.  இலஞ்சம் ஒழிந்தது என்றார்கள். இப்போது அது மீண்டும் தலைத் தூக்குகிறது என்கிறார்கள்! 

அதாவது குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் முன்னாள் பிரதமர் நஜிப்பின்'பொற்காலம்'  மீண்டும் தொடருமோ என்கிற ஐயம் மக்களுக்கு ஏற்பட்டு விட்டது!

உடனடியாக நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அது நடப்பதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம் பிரதமர் மகாதிர் தான் என்பது மக்களின் முடிவு.

காலிட் சமாட் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிரதமர் டாக்டர் மகாதிர் தான் காரணம்!

பாரிசான் மீண்டும்....!

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றி நம்மைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது என்பது உண்மை.

மக்களின்,  முன்னாள் பிரதமர் நஜிப் மீதான கோபம் தணிகிறதா,  என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது! அல்லது ஆளுங்கட்சியான பக்காத்தான் ஹரப்பான் மேல் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்துகிறதா என்பதையும் யோசிக்க வைக்கிறது.

                               Datuk Seri Dr.Wee Jeck Seng won Taanjung Piai by-election

என்ன தான்  ம.சீ.ச. வை மக்கள் வெறுத்து ஒதுக்கினாலும் அது மீண்டும், இந்த வெற்றியின் மூலம், புதிய நம்பிக்கையை அக்கட்சிக்கு  ஏற்படுத்தியிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். 

இப்போது ஆளுங்கட்சியான பக்காத்தானின் கூட்டணிக்கு என்ன தான் பிரச்சனை? 

அம்னோவும் பாஸ் கட்சியும் இந்த வெற்றியின்  மூலம் வருங்காலப் பொதுத் தெர்தல்களில் ஒரு புதிய யுக்தியைக் கையாளுவார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.  ஆம் இனம், சமயம் என்பது அவர்களது பலம். அதுவும் குறிப்பாக இஸ்லாம்  தான் அவர்களது  ஆயுதம்!

ஆனால் இவைகளையெல்லாம் முறியடிக்கக் கூடிய பலம் பக்காத்தானிடம் இருக்கிறது. இப்போதுள்ள மலாய் இளைஞர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் சமயம் என்னும் வலையில் விழ மாட்டார்கள். 

இப்போதைய பிரச்சனையெல்லாம் பக்காத்தான் ஹராப்பான் முழுமையாக இயங்க முடியவில்லை என்பது தான் குற்றச்சாட்டு.  பக்காத்தான் கட்சி சென்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் செயல்படுத்த முடியவில்லை!  

பக்காத்தான் செயல்பட முடியாமல் முட்டுக்கட்டையாக இருப்பவர் பிரதமர்,  டாக்டர் மகாதிர்.  முன்னாலும் போக முடியவில்லை பின்னாலும் வர முடியவில்லை.  எந்த நகர்வும் இல்லை என்பதால் அரசாங்கம் செயல்பட முடியவில்லை.

டாக்டர் மகாதிருக்கு ஒரே பிரச்சனை முன்னள் பிரதமர் நஜிப். அவரின் கோபம் நஜிப் மீது மட்டும் தான். அவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். அது தான் அவரது இலட்சியம்.  மற்றபடி அம்னோ ஆட்சியில் இருப்பதையே அவர் விரும்புகிறார்.  மலாய் கட்சி தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.  பல்லின கட்சியான பி.கே.ஆர். வருவதை அவர் விரும்பவில்லை.

பக்காத்தான் இன்றைய நிலையில் செயல்பட முடியவில்லை என்பது தான் உண்மை.  டாக்டர் மகாதிர் செயல்பட விடவில்லை.  தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட முடியவில்லை.

மக்களுக்கு ஆளுங்கட்சியில் மேல் நம்பிக்கை சரிந்து வருகிறது.  விலைவாசிகள் குறையவில்லை. இலஞ்சம் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து விட்டன  என்பதாக செய்திகள் கூறுகின்றன!

நாட்டை நல்ல நிலைக்குக் கொண்டு வர அன்வார் இப்ராகிம் பிரதமராக வர வேண்டும்.  நாடு நல்ல நிலைமைக்குப் போகும் நிலை ஏற்பட்டால் தான் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வரும்.

இப்போது அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை. அதனால் மீண்டும் பாரிசான் வரலாம் என்று தான் சொல்ல வேண்டி வருகிறது! பார்ப்போம்!
   

Friday 15 November 2019

தியான் சுவா வாய் திறக்க வேண்டும்...!


பத்து நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் தியான் சுவாக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நடப்பு உறுப்பினர் பிரபாகாரனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது நமக்குத் தெரியும்.

தியான் சுவா இனி பொது தேர்தல்களில் போட்டியிடலாம் என்பதாக நீதிமன்றம் அறிவித்து விட்டது. அதனால் தியான் சுவாவுக்கு தேர்தலில் போட்டியிட எந்தத் தடையுமில்லை.



தியான் சுவாவைப் பற்றி நமக்குத் தெரியும். அவர் தகுதியைப் பற்றி நமக்குத் தெரியும். அவர் ஒரு போராளி என்பது நமக்குத் தெரியும்.  பிரச்சனைகள் என்றால் முதல் குரல் அவருடையதாகத்தான் இருக்கும்.

ஆனால் இந்த பிரபாகரன் பிரச்சனையில் அவர் அமைதியாக இருப்பதை நம்மால் வரவேற்க முடியவில்லை.  ஒரு வேளை அது தலைமைத்துவம் தீர்மானிக்க வேண்டிய ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.

ஒரு சிலர் அதனை போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதியோடு ஒப்பிடுகிறார்கள். அது சரியல்ல. அங்கு வருங்கால பிரதமர் என்னும் உரிமையோடு அன்வார் இவ்ராஹிம் போட்டியிட்டார். அங்கு ஏற்கனவே நடப்பில் இருந்தவர் ஓர் இந்தியர். அத்தொகுதியும் காலங்காலமாக இந்தியர்களின் தொகுதியாக இருந்தது. ஆனால் அது வருங்கால பிரதமரின் தொகுதியாக இருந்ததால் நாம் ஏற்றுக் கொண்டோம்.

ஆனால் பத்து நாடாளுமன்ற தொகுதி என்பது வேறு. அது சீனர்களின் தொகுதி. அங்கு ஓர் இந்தியர் வெற்றி பெற வேண்டுமென்றால் முழுமையான சீனர்களின் ஆதரவு வேண்டும். பிரபாகரன் வெற்றி பெற்றதே ஓர் விபத்து. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பினால் தியான் சுவா அங்கு போட்டியிட முடியவில்லை. அதனால் சுயேச்சையாக போட்டியிட்ட பிரபாகரனை தியான் சுவா ஆதரித்தார்; பி.கே.அர். கட்சியும் அவரை ஆதரித்தது.  பிரபாகரன் வெற்றி பெற்றார்! இவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் அவர் வைப்புத்தொகையையும் இழந்திருப்பார்!  இதெல்லாம் நாம் அறிந்தது தான்.

பிரபகாரனைப் பற்றி நாம் பெரிதாக ஒன்று சொல்ல வரவில்லை. அவர் இந்த தவணையை முடிக்கட்டும் என்று தான் சொல்ல வருகிறோம்.  அவருடைய தொகுதியில் அவரின் நடவடிக்கைகள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதை நாம் அறியோம். அரசு சாரா அமைப்புக்களுக்கு ஏதேனும் நோக்கங்கள் இருக்கலாம். உண்மையைச் சொன்னால் இந்த அமைப்புக்கள் பாரிசான் கட்சியின் ஆதரவு அமைப்புக்கள். 

இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதனை விடுத்து பிரபாகரனை பயமுறுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அவரின் காரில் முட்டைகளை வீசி அடிப்பது என்பதெல்லாம் கோழைகளின் செயல். 

தியான்,   நீங்கள்  வாய்  திறக்க வேண்டும்!

இது தான் மடத்தனம்...!


"இந்திய வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் தங்கள் தொழிலில் வல்லுநர்களாகவும், சிறந்த கட்டடக்  கலைஞர்களாகவும் இருக்கின்றனர். நல்ல தொழில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் திகழ்கின்றனர்.  அதே சமயத்தில் தங்களது தொழில் வளர்ச்சி பெறுவதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. சட்டப்படி அவர்கள் தொழிலை  அரசாங்கத்தில் (எஸ்.எஸ்.எம்) பதிவு பெற்றவர்களாக இல்லை. வங்கியில் வரவு செலவு கணக்கு இல்லை. வருமான வரி ஆவணங்கள் இல்லை!" 

ஆமாம் இத்தனை இல்லைகளை வைத்துக் கொண்டு தான் வீடமைப்பாளர்கள் தங்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய வில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். பெரிய குத்தகையாளர்களுக்கே அனைத்தும் கிடைக்கின்றன என்றால் அவர்களிடம் தேவையான ஆவணங்கள் இருக்கின்றன. கடன் கிடைப்பதற்கான  முன்னுரிமை அவர்களுக்குத் தான் தரப்படும்.  இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அத்தனை இல்லைகளை பட்டியலிடுபவர் வேறு யாருமில்லை. பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன். அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.  அவர் அரசாங்கத்தில் உள்ளவர்.   அரசாங்கம் இந்திய வீடமைப்பாளர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறார்கள்.  ஆனால் அவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை என்பது தான் அவர்கள் மீது அவர் வைக்கும் குற்றச்சாட்டு.

நாம் இப்போது தெரிந்து கொண்டது பேரா மாநில நிலவரம் மட்டுமே.  அப்படி என்றால் மற்ற மாநிலங்களின் நிலவரம் எப்படி? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா! மற்ற மாநிலங்களின் நிலவரமும் அப்படித் தானே இருக்க வேண்டும்!  

என்னைச் சுற்றிலுள்ள ஒரு சிலரை கூர்ந்து பார்க்கிறேன். ஒரு   வீடமைப்பாளர் - இத்தனைக்கும் தொழிலுக்குப் புதியவர் - அவரிடம் குறை சொல்ல ஒன்றுமில்லை. இன்னும் ஒரு சில நண்பர்கள். பல ஆண்டுகளாக தொழிலில் கொட்டை போட்டவர்கள்.  அரசாங்கம் எங்களுக்கு எந்த காலத்திலும் உதவுவதில்லை என்று பேசுபவர்கள். ஆனால் எந்த ஒரு ஆவணமும் இல்லாதவர்கள்! ஏன் இல்லை என்று கேட்டால் "அதுக்கு வருமான வரி, அது இதுன்னு பணம் கட்டணும்! எதற்கு இதெல்லாம்!"  என்று பதிலளிப்பவர்கள்!

ஒன்று மட்டும் நாம் சொல்லலாம்.  வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள். பெரிய அளவில் பேர் போட வேண்டும் என்று நினைப்பவர்கள். எந்த சவால்களையும்  ஏற்கத் தயார் என்று எண்ணுபவர்கள் - இவர்கள் தான் முறைப்படி எதனையும் செய்யத் தயாராக இருப்பார்கள்.

மற்றவர்கள் எல்லாம் ஏதோ அன்றாடக் காய்ச்சிகளின் பிழைப்பை பிழைப்பவர்கள்! வந்தால் வரவு அவ்வளவு தான்! 

சிவநேசன் சொல்லுவது சரி தான். நமது தவறுகளை ஏற்றுக் கொள்ளுவோம்!

Thursday 14 November 2019

இது கூட நல்லாயிருக்கு..!


சமயங்களில் சில செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன! சில சமயங்களில்  சில முட்டாள் தனங்கள் எப்படி புத்திசாலித் தனங்களாக மாறுகின்றன என்பதெல்லாம் நமக்கு வியப்பு ஏற்படுத்துகின்றன!

பதிலடிக்குப் பதிலடி என்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணம். நீதி நியாயம் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை.

1எம்டிபி ஊழல் பெருச்சாளி, கோடிஸ்வரர் ஜோலோ இந்தியாவில் இருக்கிறார் என்கிற செய்தியைப் படித்த போது அப்படித்தான் நினைக்கத் தோன்றியது. "கேட்க நல்லாயிருக்கே!"  என்பது தான் எனது எண்ணமாக இருந்தது!

ஜோலொ மலேசிய நாட்டின் தேடப்படும் ஓர் ஊழல் குற்றவாளி.   அவரை இன்னும் மலேசியாவினால் நாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை. அவரை இங்கு அனுப்பி வைக்க எந்த நாடும் தயாராக இல்லை.

அவரை ஏன் இங்கு கொண்டுவர முடியவில்லை என்பதற்குப் பல காரணங்கள் உண்டு.  கடைசியாக அவரைப் பற்றி பேசிய நமது பிரதமர், டாக்டர் மகாதிர்,  ஜோலோ,  தஞ்சம் அடைந்திருக்கும் நாடு ஒரு வலிமையான நாடு என்றும்  அந்த நாட்டோடு சண்டைபோட்டு  நம்மால் வெற்றி பெற முடியாது என்றும் கூறியிருந்தார். அது எந்த நாடு என்று அவர் குறிப்பிடவில்லை!  நம்மைப் பொறுத்தவரை அது ஏதோ ஒரு சீன நாடாகத்தான் இருக்கும்  என்பது தான் நமது அனுமானம். அவ்வளவு தான்!

அதே சமயத்தில் இங்கே ஜாகிர் நாயக் என்னும் இஸ்லாமிய அறிஞர் தஞ்சம் புகுந்திருக்கிறார்.  இவர் இந்தியாவால் தேடப்படும் ஒரு குற்றவாளி.  இவரும் ஊழல் பெருச்சாளி என்பது தான் அவர்களின் குற்றச்சாட்டு. பணச்சலவை, பண பரிமாற்றம்,  பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் என்பது இவரின் பொழுது போக்கு! இவரை எந்த ஓர் இஸ்லாமிய நாடும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத நிலையில் இவர் இந்த நாட்டை விட்டு அவரால் வெளியேற முடியவில்லை.  சோறு கண்ட இடம் சொர்க்கம் என்கிற நிலையில் தான் இவர் இருக்கிறார்!

கோடீஸ்வரர் ஜோலோவை ஏதோ ஒரு நாடு மலேசியாவிடம் ஒப்படைக்க தயாராக இல்லை. காராணம் ஜோலோ தான் பிறந்த நாடான மலேசியாவில் தனக்கு நீதி கிடைக்காது என்கிறார்!

இதையே தான் ஜாகிர் நாயக்கும் சொல்லுகிறார். தான் பிறந்த நாடான இந்தியாவில் தனக்கு நீதி கிடைக்காது என்கிறார்!

நமது மலேசிய ;பிரதமர், டாக்டர் மகாதிர் வேறு மாதிரி சொல்லுகிறார்! கோடிசுவரர் ஜோலோவுக்கு மலேசியாவில் நீதி கிடைக்கும் ஆனால் இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு இந்தியாவில் நீதி கிடைக்காது என்கிறார்! இப்போது நமது பிரதமர் இன்னொரு நாட்டிற்கும் பிரதமரோ என்று நமக்கும்  நினைக்கத் தோன்றுகிறது!

நமது வேலை இந்த காமெடிகளையெல்லாம் பார்த்து இரசிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்!

Wednesday 13 November 2019

ஏன் இந்த அவசரம்...?

பத்து நாடாளுமன்ற தொகுதியின்   நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்  பி.பிரபாகரன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது!

பதினான்கு அரசு சாரா அமைப்புக்கள் இந்த கோரிக்கையை எழுப்பியிருக்கின்றன.  அத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  தியான் சுவா மீண்டும் அத்தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் சொல்லுவதில் ஏதும் தவறுகள் இருப்பதாக நாம் சொல்ல முடியாது.   அப்படி நாம் சொல்லவும் இல்லை.

ஆனாலும் ஏன் இந்த அரசு சாரா அமைப்புக்கள் இந்த அளவுக்கு அவசரம் காட்டுகின்றன?

தியான் சுவாவையும் பிரபாகரனையும் நாம் ஒப்பிட முடியாது. தியான் சுவா மிகவும் அனுபவப்பட்டவர். கல்வி தகுதியிலும் மிகுந்த உயர்ந்த நிலையில் இருப்பவர். அவருடைய அரசியல் பாணி என்பது வேறு. 

பிரபாகரன் நிலை வேறு.  அவர் இன்னும் ஒரு சட்டத்துறை மாணவரே. அவருடைய நேரம். திடீரென நாடாளுமன்ற உறுப்பினரானார்! அவர் தனது கல்வியை முடித்து அரசியலுக்கு வந்திருந்தால் அவருக்கும் பல தகுதிகள் வந்திருக்கும். அதில் சந்தேகமில்லை.

நாம் கேட்கிற கேள்விகள் எல்லாம் இந்த அமைப்புக்கள் ஏன் இந்த அளவுக்கு அவசரம் காட்டுகின்றன என்பது தான். அவருடைய பதவி காலம் முடியும் வரை அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவிட்டு போகட்டுமே.  இப்போது அவரை ராஜினாமா செய்யுங்கள் என்றால் அங்கு மீண்டும் இடைத் தேர்தல் வரும்.  அதற்கான செலவுகள் பல இலட்சங்களைத் தாண்டும்.  நாட்டில் பணம் என்ன கொட்டிக் கிடக்கின்றதா? 

அரசு சாரா அமைப்புக்களுக்குப் பணம் வேண்டும்; மானியங்கள் வேண்டும். ஒரு வேளை அவர்கள் எதிர்பார்த்த அளவு பிரபாகரனிடமிருந்து கிடைக்கவில்லையோ!  அதற்குத்தான் இந்த அவசரமோ1

எது எப்படி இருந்தாலும் நாம் சொல்ல வருவதெல்லாம் இது தான். தேர்தல் ஆணையம் இது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. சொல்லாது! தியான் சுவா இது பற்றி ஒன்றும் சொல்லவில்லை.  அவர் சொல்லமாட்டார். காரணம்  அதனை அவர் விரும்பமாட்டார்.  பிரபாகரனின் பதவி காலம் முடியும் வரை நான் காத்திருப்பேன் என்பார். அவர் உண்மையான ஒரு மக்கள் தொண்டன்.

இந்த நேரத்தில் யாரும் பிரபாகரனை ராஜினாமா செய்யுங்கள் என்று சொல்ல மாட்டார்கள்.  இப்போது அவரின் ராஜினாமா தேவை இல்லாதது. அவரும் இப்போது பி.கே.ஆர். உறுப்பினர். அவர் பி.கே.ஆரைத்தான் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கிறார். தேர்தல் காலத்தில் டாக்டர் மகாதிரே அவருக்காக பிரச்சாரம் செய்திருக்கிறார். அது சாதாரண விஷயம் அல்ல.

ஆனால் அவர் தற்காலிகம் என்பது நமக்குத் தெரியும். அவருக்கும் தெரியும்.

உங்களுடைய சுயநலனுக்காக அவசரம் காட்ட வேண்டாம் என்பதே நமது  வேண்டுகோள்.

இருந்துவிட்டுப் போகட்டுமே!

Monday 11 November 2019

மருத்துவம் படிக்க வற்புறுத்தவேண்டாம்...!

நமது வீட்டுப் பிள்ளைகள் மருத்துவம் படிக்க விரும்பினால் அவர்களை நாம் உற்சாகப்படுத்தி அவர்கள் மருத்துவராக வர நம்மால் செய்ய முடிந்த உதவிகளைச் செய்து அவர்களை மருத்துவராக ஆக்குவது நமது கடமை.

ஆனால் விரும்பாத பிள்ளைகளை வற்புறுத்தி மருத்துவம் படிக்க வைக்காதீர்கள்.  அதனால் அவர்களுக்குக் கேடுதல் தான் விளையுமே தவிர நல்லது எதுவும் நடக்கப்போவதில்லை. 

விரும்பி மருத்துவம் படிப்பவர்களின் பயணம்  விண்வெளிக்கும் அவர்களை இட்டுச் செல்லும்    வற்புறுத்திப் படிப்பவர்களின் பயணம் வெறுப்பிலேயே பயணம் செய்யும்.

இப்போது நம் நாட்டில் ஏகப்பட்ட டாகடர்கள் உருவாக்கப்படுகின்றனர். உள் நாட்டில் மருத்துவக் கல்லூரிகளுக்கு பஞ்சமில்லை.  சுமார் 33 மருத்துவக் கல்லூரிகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அங்கிருந்து சுமார் 3,000 மருத்துவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகின்றனராம். அவர்களின் தரத்தைப் பற்றி நாமே தம்பட்டம் அடிக்துக்கொள்ளக் கூடாது. நீங்களே மருத்துவமனைக்குப் போனால் தெரிந்துவிடும். தரத்தைப் பற்றி அரசாங்கமே கவலை கொள்ளவில்லை! நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

இது போக வேளி நாடுகளுக்குப் போய் மருத்துவம் படித்துவிட்டு வருபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 3,000 பேர்.  ஆக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6,000 மருத்துவர்கள் நமது மருத்துவமனைகளை வலம் வருகிறார்களாம்!  தரமான கல்வியும், தரமற்ற கல்வியும் ஒன்று சேர்கின்றன!

இந்த சூழலில் இன்னும் நாங்கள் மருத்துவம்  தான் படிக்க வைப்போம் என்று பெற்றோர்கள் பிடிவாதம் பிடிப்பதை நிறுத்தவேண்டும்.  நமக்குத்  தெரிந்ததெல்லாம்  மருத்துவம் அல்லது  சட்டப்படிப்பு.  இதைவிட்டால் வேறு படிப்பில்லை என்று யாரோ ஒரு புண்ணியவான் சொல்லப் போக அதையே உடும்புப் பிடியாய் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.

இன்றைய நிலை வேறு. அந்தக் காலம் போல குறிப்பிட்ட சில படிப்புக்களைத் தான் படிக்க வேண்டும் என்கிற நிலை இப்போது இல்லை.  இன்றைய மாணவர்களும் அதனை விரும்புவதில்லை. 

ஒவ்வொரு துறைக்கும் தனியே படிப்பு உண்டு.  ஒரு சினிமா நடிகனாக ஆகக் கூட   படிப்பு உண்டு. பட்டம் பெறலாம்.  அது சினிமாத் துறை. விளையாட்டுத் துறைக்கும் படிப்பு உண்டு. பட்டம் பெறலாம்.    அது விளையாட்டுத் துறை.     இப்படி கல்வி பறந்து விரிந்து செல்கிறது.   கணக்கியல் துறை என்பது ஒரு முக்கியமான துறை. அதிலும் பல துணைப்பிரிவுகள். 

இப்படி பல துறைகள் இருக்க  ஒன்றை மட்டும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதை   நாம் கைவிட வேண்டும்.

காலத்துக்கு ஏற்ற மாற்றத்தை நமது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விட பிள்ளைகள் எந்த கல்வியைப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதற்கான வாய்ப்புக்களை அவர்களுக்கு ஏற்படுத்துக் கொடுக்க வேண்டும்.        

"மருத்துவம் மட்டுமே!" என்று மாணவன் விரும்பினால் அவன் படிக்கட்டும்.  விரும்புவதை படிக்கட்டும். விரும்பாததை வீசி எறியட்டும்!                                        

Thursday 7 November 2019

யார் இந்த கே.ஆர். வேணுகோபால் சர்மா?

                                                                                      கே. ஆர்.வேணுகோபால் சர்மா 

 இப்போது உலகம் அனைத்திலும் உள்ள தமிழர்களின் பேராசான் என்று போற்றப்படுகின்ற  திருவள்ளுவரை பற்றியான செய்திகள் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகின்றன!

இப்போது நாம் அங்குப் போகப் போவதில்லை.  திருவள்ளுவரின் திரு உருவத்தை வரைந்த  ஓவியப் பெருந்தகை கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களைப் பற்றி  கொஞ்சம் பார்ப்போம். 

ஓவியர் சர்மா 17.12.1908 -ம் ஆண்டு சேலத்தில் பிறந்தவர் என்பதாகக் கூறப்பட்டாலும் அவர் இறந்த தேதியை  யாரும் குறிப்பிடவில்லை. அது தேவை இல்லை என்று நினைத்திருக்கலாம்.  காரணம் திருவள்ளுவர் ஓவியம் இருக்கும் வரை  தமிழ் கூறும் நல்லுலகம் அவரது பெயரையும் ஞாபகத்தில்  வைத்திருக்கும் என்று நம்பலாம். அதனால் அவருக்கு இறப்பு என்பது இலை.

திருவள்ளுவர் ஓவியத்தை  வரைய  தனது  தந்தை திருக்குறளை 40 ஆண்டுகள் ஆய்வு செய்த  பின்னர் வரைந்ததாக அவரது மகன் விநாயக் ஸ்ரீராம் குறிப்பிடுகிறார்.  அவருடைய ஆய்வு, உழைப்பு என்பது வீண் போகவில்லை. உலகெங்களிலும்  இன்று திருவள்ளுவரின் திரு ஓவியம் தமிழர்கள் வீட்டை அலங்கரிக்கின்றன. திருவள்ளுவரின் அடையாளம் என்பது இந்த ஒரு ஓவியத்தை தவிர வேறு எதுவும் தமிழ் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர்கள் காமராஜர், பக்தவத்சலம்,  அண்ணாத்துரை, கருணாநிதி  தமிழறிஞர்கள் மு. வரதராசனார், கி.ஆ.பெ. விசுவநாதம்,  கிருபானந்த வாரியார்,  ஜீவா, பாரதிதாசன்  போன்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களின் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார் வேணுகோபால் சர்மா. அனைத்து அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு  தமிழக அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை அதிகாரப்பூர்வமாக திருவள்ளுவர் படமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அவர் கைப்பட வரைந்த அந்த திருவள்ளுவர் ஓவியம் இன்னும் தன்னிடம் இருப்பதாகக் கூறுகிறார் அவரது மகன். 

தனது தந்தை தான் வரைந்த திருவள்ளுவர் படத்திற்கு பணமோ, பொருளோ எதனையும் அவர் பெற்றுக் கொள்ளவில்லை. பொருளாதார உதவிகள் கொடுக்கப்பட்டும் அதனை அவர் மறுத்துவிட்டாராம்,

அவர் வாழ் நாளில் வரைந்தவை மிகச் சில படங்கள் தான். அவர் வரைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்,  காயிதே மில்லத் இன்னும்  சட்டசபையை அலங்கரிக்கின்றன.  மேலும் தமிழ்த்தாய்,  தியாகய்யர், புவனேஸ்வரி, காமாட்சி, மீனாட்சி, கிருஷ்ணர், நள தமயந்தி,  தங்க மயில் முருகன் போன்றவையும் அவர் வரைந்த படங்கள் தாம். 

முன்னாள் முதலைமைச்சர், சி.என்.அண்ணாத்துரையால் "ஓவியப் பெருந்தகை" என்னும் பட்டத்தை அளித்து சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.

வேணுகோபால் சர்மாவின் தொழில் என்பது: அவர் முன்னாள் நாடக நடிகர். அதன் பின்னர் சினிமாவுக்கு வந்து சொந்தமாகப் படங்களைத் தயாரித்து இயக்கி வெளியிட்டவர். ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

கடைசியாக நாம் சொல்ல வருவதெல்லாம்:  திருவள்ளுவர் எல்லாக் காலங்கிலும்  பலரில் ஏதோ அவரும் ஒரு சாமியார் என்பதாகத்தான் இருந்து வந்தார்!  அதிலும் பல படங்களில் ஓரு கோமாளி சாமியாராகவே காட்டப்பட்டு வந்தார்!  

ஆனால் அதனைத் திருத்தி அமைத்தவர் கே.ஆர்.வேணுகொபால் சர்மா.  சும்மா திருத்தி அமைக்கவில்லை. நாற்பது ஆண்டுகளின் உழைப்பு. திருக்குறளைப் படித்து, புரிந்து  அதனை அவர் செய்திருக்கிறார்.

தமிழுலகம் அவரது ஓவியத்தை ஏற்றுக்கொண்டது. அதுவே தொடர வேண்டும் என்பதே நமது ஆசை.

ஆமாம், யார் இந்த கே.ஆர்.வேணுகோபால்  சர்மா?அவர் தான் காமாட்சிப்பட்டி  ராமசாமி ஐயர் மகன் வேணுகோபால்!

இனி அடுத்த ஆண்டும் இல்லை..!


பிரதமர் பதவியை அன்வார் இப்ராகிடம் ஒப்படைப்பது பற்றி,  மகாதிர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார் என்று சொல்லுவதில் நியாயமில்லை!

அவர் எப்போதும் ஒன்றை மட்டும் வலியுறுத்துகிறார்.  "அன்வார் இப்ராகிம் தான் அடுத்த பிரதமர்" என்பதை மட்டும் அவர் சொல்லத் தவறுவதில்லை.  அப்படி அவர் ஒவ்வொரு முறையும் சொல்லும் போதும் அடுத்து வருவது ஏதோ ஓர் அறிவிப்பு.  அது அன்வாருக்குப் பாதகமாகவே அமைகிறது!

சமீபத்தில் பேங்கோக்கில் ஒரு பேட்டியின் போது "அன்வார் தான் அடுத்த பிரதமர், அஸ்மின் அலி அல்ல" என்பதாகப் பேட்டி கொடுத்திருந்தார். இங்கு வந்த பிறகு  அடுத்து ஆண்டும் "நான் தான் பிரதமர்" என்பதாகக் கூறியிருக்கிறார்!

இதனையெல்லாம் குறை கூறுவதில் புண்ணியமில்லை.  அவர் தன்னை விட சிறந்த பிரதமர் இன்றைய நிலையில் யாரும் இல்லை என்கிற எண்ணத்தில் அவர் இருக்கிறார். 

அதற்கும் காரணங்கள் உண்டு.   முன்பு அவர் பிரதமர் பதவியிலிருந்து  விலகிய போது  அவரின் வாரிசுகள் என்று சொல்லப்பட்டவர்கள் யாரும் அவர் எதிர்பார்த்தபடி அவர்களின் செயல்பாடுகள் சரியாக அமையவில்லை  என்பது தான் அவர்கள் மீது இப்போதும் அவர் வைக்கின்ற குற்றச்சாட்டு!

அதனால் அடுத்த பிரதமர் யார்  என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்று அவர் நினைக்கிறார்.

உண்மை தான் நாமும் அவர் கருத்தில் உடன்படுகிறோம். ஆனால் இப்போது அவர் யாரையும் வாரிசாக நினைக்க வேண்டிய நிலையில் இல்லை.  காரணம் அடுத்த பிரதமர் யார் என்கிற பிரச்சனை எப்போதோ தீர்க்கப்பட்டு விட்ட ஒரு பிரச்சனை.  சென்ற பொதுத் தேர்தலின் போது  அந்த முடிவு எடுக்கப்பட்டு விட்டது.  ஆமாம், அன்வார் இப்ராகிம் தான் அடுத்த பிரதமர் என்கிற முடிவு பக்காத்தான் தலைவர்களிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முடிவாகும்.  

பிரதமர் மகாதிர் தற்காலிகமாகத் தான் பதவிக்கு வந்தார்.  அடுத்த பிரதமரிடம் ஒப்படைக்கும் தேதி, ஆண்டு என்பதெல்லாம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.  பதவியை ஒப்படைக்க அவர் விரும்பினாலும் அவரைச் சுற்றியிருக்கும் ஊழல்வாதிகள் அன்வார் பதவிக்கு வருவதை விரும்பவில்லை! அதன் காரணமாகத்தான்  இந்த இழுத்தடிப்பு நாடகம்!

பிரதமர் மகாதிர் எப்போது தனது பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பார் என்பது நம் முன்னே உள்ள கேள்வி.  இப்போதைக்கு அல்ல என்பது நமக்குத் தெரிகிறது.  அடுத்த தேர்தல் வரை இழுத்தடிக்கப்படலாம் என்றே தோன்றுகிறது. அவர் பதவி விலகுவார் என்று நமக்குத் தோன்றவில்லை!

அடுத்த பொதுத் தேர்தல் வர ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அவர் விலகலாம்  என்பதே நமது கணிப்பு! இது அரசியல்! எதுவும் நடக்கும்!

ஏதோ நல்லது நடக்கப்போகிறது என்பதே நமது எதிர்பார்ப்பு!

Tuesday 5 November 2019

ஏன் இந்த குற்றச்சாட்டு?


பொதுவாகவே நம் நாட்டில் "அடுத்த பிரதமர் யார்?" என்கிற கேள்வி அடிக்கடி எழுந்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

இதில் ஏதொ மந்திரமோ மாயமோ ஒன்றுமில்லை!  பத்திரிக்கை நிருபர்கள் இந்த கேள்வியைக் கேட்கும் போதெல்லாம் அந்த பிரச்சனை விவாதிக்கப்படுகிறது அல்லது மீண்டும் தலை தூக்குகிறது.  

கடைசியாக பிரதமர் மகாதிர் தாய்லாந்தில் நடைபெற்ற  ஒரு மாநாட்டிக்குப் பின்னர் மீண்டும் இந்த கேள்வியை ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பியிருக்கிறார். அதனால் மீண்டும்  பிரதமர் மகாதிர் அதற்கான பதிலை கொடுத்திருக்கிறார். இந்த இடத்தில் கூடுதலான ஒரு தகவலையும் வெளியிட்டிருக்கிறார். அடுத்த பிரதமர் அன்வர் தான் அஸ்மின் அலி அல்ல என்பதாகவும் விளக்கமளித்திருக்கிறார்.

அடுத்த பிரதமர் யார்? என்கிற கேள்வி எழும் போதெல்லாம் இங்குள்ள ஒரு சிலருக்கு அது பிடிப்பதிலை.  ஒரு சில மலாய் அரசு சாரா அமைப்புக்கள், ,பாஸ்  அம்னோ கட்சிகளுக்கு அது பிடிப்பதில்லை. இந்த பிரச்சனை பொது வெளியில் இப்படி அடிக்கடி சர்ச்சையாவதும் பின்னர் அது  அப்படியே அமிழ்ந்து போவதும்  நமக்குத் தெரிந்தது தான்.

பிரச்சனை என்னவென்றால்  இந்தக் குற்றச்சாட்டை ஏன் அன்வார் மீது வைக்கிறார்கள்?  அன்வார் பிரதமர் பதவிக்கு அலைவதாக ஏன் குற்றம் சாட்டுகிறார்கள்?

சரி அன்வார்  அலைவதாகவே எடுத்துக் கொள்ளுவோம்.  

இன்று நாட்டின் நிலைமை எப்படி உள்ளது?  பிரதமர் மகாதிர் மீதான மக்களின் மதிப்பு தாழ்ந்து உள்ளது.   புதிய அரசாங்கத்தை அமைத்த பக்காத்தான் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணருவதற்கு மகாதிரே காரணம். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள்  அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு விட்டன! எதனையும்  நிறைவேற்ற முடியாமல் பக்காத்தான் கட்சியினர் மனதுக்குள் புழுங்குகின்றனர். காரணம் பிரதமர் மகாதிர்.

உள் நாட்டில் ஜாகிர் நாயக் பிரச்சனையைத்  தீர்க்க முடியாமல் கடைசியில் விடுதலைப்புலிகள் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறார்.  தமிழர்கள் தான் இளிச்சவாயர்கள்! வெளி நாட்டில் இந்தியாவை பகைத்துக் கொண்டு செம்பணை எண்ணையின் ஏற்றுமதியை  வீழ்ச்சியடைய செய்திருக்கிறார்!

இவர் பிரதமர் பதவியில் தொடர்ந்தால் நமது நாடு இன்னும் பல இடர்களைச் சந்திக்க வேண்டி வரும் என்பது  பெரும்பானமை மக்களிடையே உள்ள கருத்து. அது உண்மை தான்.  தேர்தல் வாக்குறுதிகள் என்பதை எல்லாம் மறந்து போனார். இவர் செய்கின்ற செயல்கள் வருங்கால மலேசியாவை பாதிக்கும். இவர் எவ்வளவு சீக்கிரத்தில் பதவி விலக முடியுமோ அது நாட்டுக்கு நல்லது!

குற்றச்சாட்டு என்பது அன்வார் மீது அல்ல, மகாதிர் மீது தான்!

Monday 4 November 2019

அடுத்த பிரதமர் அன்வாரே!


"அடுத்த பிரதமர் அன்வாரே, அஸ்மின் அல்ல!" என்று தாய்லாந்தில் ஒரு பத்திரிக்கை பேட்டியின் போது கூறியிருக்கிறார் பிரதமர் மகாதிர்.

இப்படி அவர் கூறுவதால் நாம் மகிழ்ச்சியடைந்து விட முடியாது.  ஒவ்வொரு முறையும அவர் கூறும் போதும்   அதன் பின்னால் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதும் தான்  நமது அனுபவ்ம்.

அது மட்டும் அல்ல. அவருடைய கட்சியினர் அல்லது அவருடைய விசுவாசிகள் அன்வாருக்கு எதிரான ஒரு விளக்கம் கொடுப்பதும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. பிரதமர் மகாதிர் அவர்களைக் கண்டிக்காமல் இருப்பது அன்வாரின் எதிரிகளை அவர் ஆதரிக்கிறார் என்கிற தோற்றத்தை அவர் ஏற்படுத்துகிறார்.

அன்வார்க்கு எதிராக கருத்துக் கூறுபவர்களை பிரதமர் மகாதிர் கண்டிக்கவில்லை என்றால் அவர் அவர்களை ஆதரிக்கிறார் என்பது தான் பொருள்!  அவர் இது வரையில் அன்வாருக்கு எதிராகப் பேசுபவர்களைக் கண்டீக்கவில்லை . அவர் அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கிறார் என்பது தான் அதன் அர்த்தம்.

அவர் இன்னும் எத்தனை முறை "அன்வார் தான் அடுத்த பிரதமர்!"  என்று சொன்னாலும் அது அவரின் மனதிலிருந்து வரவில்லை என்பதாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். வெளி உலகிற்கு அவர் தன்னை உத்தமன் என்று காட்டிக் கொள்வதால் மட்டும் பிரச்சனைகள் தீர்ந்து விடப் போவதில்லை!

இவர் போகின்ற போக்கும், இவருடைய ஆதரவாளர்கள் என்று சொல்லப்படும் தரப்பும், பேசுகின்ற பேச்சுக்களும் நமக்கு மன நிறைவைத் தரவில்லை. அடுத்த பிரதமர்  பிரச்சனை என்பது தொடர்ந்து இழுபறியாகவே இருக்கும்.

நம்முடைய ஆருடம் என்பது  பிரதமர் மகாதிர் அடுத்த தேர்தல் வரை நீடிப்பார் என்றே தோன்றுகிறது.  இடையே போவதற்கு அவரும் தயாராக இல்லை அவருடைய ஆதரவாளர்களும்  அவரை விடத் தயாராக இல்லை  என்பது தான் பொருத்தமாக இருக்கும்!

அடுத்த பிரதமரிடம் பதவி ஒப்படைத்தால் மட்டுமே எதனையும் உறுதி செய்ய முடியும்.  அதுவரை பிரதமர் மகாதிர் சொல்லுவதை சும்மா ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டு விட்டுப் போக வேண்டியது தான்!

"வரும்! ஆனால் வராது!" என்கிற கதை தான்!

Sunday 3 November 2019

தமிழர் புறக்கணிப்பு வேண்டாம்..!


வருகின்ற டிசம்பர் மாதத்தில் மேலவை உறுப்பினர்களில் பலர் விடை பெறுகிறார்கள் என அறிகிறோம்.

முந்தைய பாரிசான் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் பலரின் தவணைக் காலம் முடிவடைகிறது.  அந்த இடங்களை நிரப்ப புதிய முகங்களை எதிர்பார்க்கலாம்.

நமக்கும் சில கோரிக்கைகள் உண்டு. 

சமீப காலங்களில்  மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய செனட்டர்களில்  ஒருவர் கூட தமிழர் இல்லை என்பதாக நாம் அடையாளம் காண்கிறோம்.

அப்படி என்றால் பி.கே.ஆர்.  கட்சியிலோ அல்லது ஜனநாயக செயல் கட்சியிலோ  தமிழர்கள் இல்லை என்கிற நிலை நிலவுகிறதா என்பது நமக்குத் தெரியவில்லை.  அப்படி ஒரு நிலை இல்லை என்பது நமக்குத் தெரியும். 

ஆனாலும் ஏனோ  இந்தக் கட்சிகளால் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். உண்மையைச் சொன்னால் இந்தக் கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள்  என்றால் அவர்கள் தமிழர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் பதவி என்று வரும் போது அந்தப் பதவிகளுக்கு மட்டும் தமிழர்கள் தகுதி இல்லாதவர்கள் என முத்திரைக் குத்தப்படுகிறார்கள்.

இதனை ஒரு சரியான நடைமுறை என நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

நாம் அனைவரும் மலேசியர்கள் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள  வேண்டும்  என்று நாம் பேசுகிறோம்; எழுதுகிறோம். அது சரி தான்.  ஆனால் அது இந்தியர்களுக்கு மட்டும் என்றால் அது சரியாக வராது.  

இப்போது கல்வி சம்பந்தமான ஒரு பிரச்சனை என்றால் சீனர்கள் கல்வி துணை அமைச்சரைச் சந்திக்கிறார்கள். அது சரியோ தவறோ அவர்கள் குறைகளைச் சொல்ல அவர்களுக்கு ஒரு இடம் இருக்கிறது. அது இந்தியர்களுக்கு இல்லை!

செனட்டர்களில் தமிழர்கள் இல்லையென்றால் அவர்கள் பிரச்சனைகளை மேலவையில் எழுப்புவதற்கு ஒருவரும் இருக்கப் போவதில்லை.  இந்திய செனட்டர்கள் என்றால் அவர்கள் பொதுவான பிரச்சனைகளைத்தான்  பேசுவார்கள். தமிழ் சம்பந்தப்பட்ட பிரச்சனையோ, தமிழர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையோ அவர்கள் பேச மாட்டார்கள். காரணம் அவர்களில் பலருக்கு தமிழர் நலன், தமிழ் மொழி பற்றி அறியாதவர்கள்.

அதனால் தான் நாங்கள் சொல்ல வருவதெல்லாம் இந்தப் புதிய முகங்களில் தமிழர்களில் இருக்க வேண்டும் என்கிறோம். காலங்காலமாக தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள்.  அது தொடரக் கூடாது என்பதே நமது விருப்பம்.

புறக்கணிப்பு வேண்டாம்!

அடிப்படையற்ற ஒரு செய்தி..!

விடுதலைப்புலிகளின் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக காவல்துறையினரால் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கும் 12 பேர்களில் சிலர் பயங்கரமான துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக வெளிவந்த சேய்தியை மறுத்திருக்கிறார் காவல்துறையின் தலைவர் ஐஜிபி  டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர்.

இந்தக் குற்றச்சாட்டை  அவர்கள் நேரடியாகவே தங்களது குடும்பத்தினரிடம் கூறியிருக்கின்றனர். 

ஆனாலும் ஐஜிபி, ஹமிட் இதனை மறுத்திருக்கின்றார்.  பொதுவாக காவல்துறை இது நாள் வரை அவர்கள் மீதான எந்தக் குற்றச்சாட்டையும் ஏற்றுக் கொண்டதில்லை.  இப்பவும் அது தான் நடந்திருக்கிறது என்பதில் ஒன்றும் அதிசயமல்ல.

ஐஜிபி சொன்ன ஒரு கருத்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அவ்ர் என்ன சொல்ல வருகிறார்?  ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள் என்கிறார்!  'அது சிசிடிவி ஆதாரமாக இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் ஆதாரமாகவும் இருந்தால் சரி! கொண்டு வாருங்கள்" என்கிறார்!

இதற்கு நம்மிடம் என்ன பதில் உண்டு? கைதிகள் அவர்களுடைய பாதுகாப்பில். ஆதாரங்கள் எல்லாம் அவர்களிடம் தான் உண்டு. அவர்கள் கைது செய்யப்பட்டது சோஸ்மா சட்டத்தின் கீழ்.  அந்த கைதிகளை 28 நாள்களுக்கு யாராலும் பார்க்க முடியாது என்பது சட்டம். அந்த 28 நாள்களில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. 

கைது செய்யப்பட்டு தான் மூன்று நாள்கள் இருட்டறையில் இருந்ததாகக் கூறுகிறார் ஒருவர். அடுத்த மூன்று நாள்கள் கடுமையான குளிரான அறையில் அடைத்து வைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். இன்னும் அதிக நேரம் குடும்பத்தோடு அவர்கள் இருந்திருந்தால் இன்னும் பல செய்திகள் அவர்களிடமிருந்து வெளியாகி இருக்கும்.

பொது மக்களிடமிருந்து ஆதாரம் கொண்டாருங்கள் என்றால் அவர்களை காவல்துறை பார்ப்பதற்குக் கூட அனுமதிக்காத நிலையில் அவர்களிடமிருந்து எந்த ஆதாரத்தை எதிர்ப்பார்க்கிறார்? அதைவிட அவர்களிடம் இருக்கும் ஆதாரத்தை நீதிமன்றத்தில் காட்டலாமே! அவர்கள் கூறுவது பொய் என்றால் காவல்துறையே முன் வந்து சிசிடிவியை நீதிமன்றத்தில் ஒப்படைக்கலாமே! அது இன்னும் எளிதாக இருக்குமே!

சிறையில் துன்பத்தை அனுபவிக்கும் ஒரு மனிதர் பொய் சொல்ல காரணம் இல்லை. இத்தனைக்கும் இவர்கள் செய்யாத குற்றத்தை செய்ததாக வற்புறுத்தப்படுகின்றனர்.

அவர்கள் கூறுவதில் உண்மை உண்டு என்று பொது மக்கள் நம்புகிறோம். அதனை தீர்த்து வைப்பது காவல்துறையின் கடமை!


Saturday 2 November 2019

பட்டியலை வெளியிடுங்கள்...!


சுவாராம் விடுத்த கோரிக்கையை நாமும் ஆதரிக்கிறோம்.

தீவிரவாத அமைப்புக்களோ,  பயங்கரவாத அமைப்புக்களோ எந்தப் பெயரைச் சொன்னாலும் சரி அரசாங்கம் அதன் பட்டியலை பொது மக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்பதில்  சுவாராமுடன் சேர்ந்து நாமும் அரசாங்கத்திற்கு அழைப்பை விடுக்கிறோம். 

இப்படி செய்வதில் பல பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். 

பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் என்பது எப்படி தீர்மானிக்கப்படுகின்றது என்பது விளக்கப்பட வேண்டும்.

சான்றுக்கு சமீபத்தில் ஏற்பட்ட குளறுபடிகள்.  விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என்று சொல்லி கைது செய்யப்பட்ட 12 பேர்  பற்றியான செய்திகள் எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டாரகள் என்கிற விவரம் தெரியாமல் நாம் இன்னும் காத்துக் கிடக்கிறோம்.

மாவீரர் தினத்தன்று அஞ்சலி செலுத்த வந்தவர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரைக் குத்துவது எந்த வகையில் நியாயம் என்பது நமக்குப் புரியவில்லை!

விடுதலைப்புலிகளின் மேல் உலகத் தமிழர்களுக்கு ஓர் அனுதாபம் உண்டு. ஈழ விடுதலைக்காக பல இலட்சம் பேர் தங்கள் உயிரைக் காவு கொடுத்திருக்கின்றனர்.  அது ஒரு விடுதலைப் போராட்டம்.  எந்த வகையிலும் அதனைப் பயங்கரவாதமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இப்போது மலேசிய காவல்துறை செய்த இந்தக் கைதுகள் தமிழர்களை உலக அரங்கில் தலைக்குனிவை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. ஒரு நினைவு தினத்தைக் கொண்டாடியவர்களைக் கைது செய்து அவர்களைப் பயங்கரவாதிகள் என முத்திரைக் குத்துவது பைத்தியக்காரத்தனத்தின் உச்சம்!

அப்போதும் சரி இப்போதும் சரி தலைவர்கள்  யாரேனும் இறந்து போனால் அவர்களுக்காக மரியாதை செய்வது என்பது காலங்காலமாக நடந்து வருகின்ற ஒரு நடைமுறை தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அது இரங்கல் தினம் அல்லது நினைவு தினம், மரண தினம் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

இது  போன்ற  கைது  நடவடிக்கைகளைப் பார்க்கும் போது வீட்டில் இறந்து போகும் பெரியவர்களுக்குக் கூட மரியாதை செய்வது என்பது  பயங்கரவாதப் பட்டியலில் வருமோ என்று யோசிக்க வேண்டியுள்ளது!

எது தான் பயங்கரவாதம் என்பதைப் பட்டியிலிடுங்கள்.  பயங்கரவாதிகளையும் பட்டியிலிடுங்கள். நாங்களும் தெரிந்துகொள்ளுகிறோம்.

அப்பாவிகளைக் கைது செய்து அவர்களின் குடும்பங்களை நோகடிக்காதீர்கள் என்பது தான் நமது வேண்டுகோள்!

Friday 1 November 2019

சோஸ்மா சட்டம் தேவையா?

சோஸ்மா சட்டத்துடன் பி.கே.ஆர். கட்சி  உடன்படவில்லை  என்பதாக கூறியிருப்பது ஒன்றும் புதிதல்ல.  ஜ.செ.க. வின் நிலையும் அது தான். ஏன், மகாதிரின் பெர்சாத்து கட்சியின் நிலைமையும் அது தான். சோஸ்மா சட்டம் தேவையில்லை என்பது தான் அனைத்துப் பக்காத்தான் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதி.  அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொண்ட வாக்குறுதி.

கடந்த பொதுத் தேர்தலின் போது, தாங்கள் பதவிக்கு வந்தால்,  சோஸ்மா சட்டம் அகற்றப்படும்  என்று அன்று அவர்கள் கொடுத்த அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

அப்படி நிறைவேற்றப்படாத அந்த வாக்குறுதி இன்று பிரதமர் மகாதிரால் தமிழர்களுக்கு எதிராக, விடுதலைப்புலிகளின் பெயரால், பயன்படுத்தப்படுகிறது என்பது தான் எதிர்பாராத ஒன்று.

விடுதலைப்புலிகள் எப்படி உள்ளே வந்தார்கள்?  ஜாகிர் நாயக் என்கிற ஓர் இஸ்லாமிய அறிஞர்,  ஸம்ரி வினோத் என்கிற உள்ளூர் இஸ்லாமிய அறிஞர், இவர்களை வைத்து அவர்கள் உள்ளே புகுந்து விட்டார்கள்! ஆமாம், அப்படித்தான் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் நிகழ்ந்துவிட்டது.

ஜாகிர் நாயக்கையும், ஸ்ம்ரி வினோத்தையும்  விமர்சித்தால் இது தான் நடக்கும் என்பதை பிரதமர் மகாதிர் காட்டி விட்டார்!

ஜாகிர் நாயக் எல்லாக் காலத்திலும் தீவிரவாதம் பேசியவர்.  அவர் மீது சோஸ்மா சட்டம் பாயவில்லை. ஸம்ரி வினோத், அவரும் ஜாகிர் நாயக்கோடு சேர்ந்து கொண்டு மதக்கலவரத்தை ஏற்படுத்த தூண்டியவர்! அவர் மீது சோஸ்மா சட்டம் பாயவில்லை!

ஆனால் அவர்களை எதிர்த்தவர்கள் மீது சோஸ்மா சட்டம் பாய்ந்திருக்கிறது!  இதன் பின்னணியிலிருந்து செயல்படுபவர் பிரதமர் மகாதிர் தான் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்! 

இந்த சோஸ்மா சட்டத்தை பக்காத்தான் தலைவர்கள் யாரும் ஆதரிக்கவில்லை. காரணம் இந்தச் சட்டத்தின் மூலம் எந்த விசாரணையுமின்றி அவர்கள் 28 நாள்கள் காவலில் வைக்கப்படுவர்.  ஜாமினில் அவர்கள் வெளி வர முடியாது.  குடும்ப உறுப்பினர் அல்லது அவர்களது வழக்கறிஞர்கள் யாரும் அவர்களைப் பார்க்க அனுமதி இல்லை. 

இப்போது கைது செய்யப்பட்டவர்கள் கூட ஒரு பக்கம் இருட்டறையில் இன்னொரு பக்கம் பயங்கர குளிர் அறைகளில்,  கற்பனைக் கதைகளை ஒத்துக்கொள்ள தொடர் விசாரனை - இப்படித்தான் அமையும் காவல் துறையினரின்  புலனாய்வு.

பயங்கரவாதிகள் என உறுதியாகத் தெரிந்தால் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் என்பது தான் நமது கோரிக்கை. 

இப்போது பிரதமர் மகாதிரும்,  காவல்துறையும் செய்திருப்பது  உலகத் தமிழர்களைக் கேவலப்படுத்தும் நோக்கம் கொண்டது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. 

இவர், நாட்டின் பிரதமரா..?


ஆமாம் நாட்டின் பிரதமர் மகாதிரை நோக்கித் தான்  நாம் இந்தக் கேள்வியை  எழுப்ப் வேண்டி உள்ளது!

எல்லாக் காலங்களிலும் அவர் இந்தியர்களுக்கு  எதிரானவராகவே தன்னை அடையாளப்படுத்தி வந்திருக்கிறார். தன்னை பூமிபுத்ராக்களின் ஏகபோக தலைவனாகவும் காவலனாகவும்  காட்டிக் கொள்ளுகிறார்!

முன்பு அவர் பிரதமராக இருந்த போது இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு, அன்றைய அமைச்சர் சாமிவேலுவுடன் சேர்ந்து கொண்டு, தடையாக இருந்தார்.  பின்னர் அவர் சாமிவேலுவை குற்றம் சாட்டினார்.

இப்போதும் அவர் அதே நடைமுறையைப் பின்பற்றுகிறார் என்றே தோன்றுகிறது. இப்போது குறை சொல்ல பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியைப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்! அவ்வளவு தான் வித்தியாசம். 

ஆனால் இப்போது அவர் செய்து வருகின்ற காரியங்கள் இந்தியர்களை வெறுப்பேற்ற வேண்டும் என்பது போல் அவரது நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. .

அவருடைய வயதுக்கும், அவருடைய அனுபவத்திற்கும் அவர் செய்கின்ற காரியங்கள் நமக்குச் சரியானதாகப்  படவில்லை! 

இந்திய சமுதாயம் என்பது அரசாங்கத்தின் உதவியோடு திட்டம் போட்டே வீழ்த்தப்பட்ட ஒரு சமுதாயம். பாரிசான் ஆட்சியில் அது நடந்தது. ஆனால் இப்போதும் தொடர்கிறது என்பது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அன்று என்ன நடந்ததோ அது தான் இப்போதும் தொடர்கிறது. 

புதிய அரசாங்கம் அமைந்த போது இந்தியர்களுக்கு நிறைய எதிர்பார்ப்புக்கள் இருந்தன.  நிறைவேற்றப்படும் என்பதாக உறுதிமொழிகள் கூறப்பட்டன. 

ஆனால் டாக்டர் மகாதிர் இந்தியர்களை  தனது சொந்த நலனுக்காக பயன்படுத்திக் கொண்டார், அவர் இரண்டாவது முறையாக பதவி ஏற்ற போது அவரிடம் ஒரே ஒரு நோக்கம் தான் இருந்தது.   பிரதமர் நஜிப்பை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது மட்டும் தான்.  மற்றபடி அவருக்கு வேறு இலட்சியங்கள் எதுவும் இருப்பதாகத்  தெரியவில்லை.

அந்த ஒரு நோக்கத்திற்காக  வந்த  அவ்ருக்கு அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது.  மற்றபடி அவர் பழைய பிரதமர் தான்  

ஜாகிர் நாயக்கை அவரால் அடக்க முடியவில்லை. ஆனால் மிக  எளிதாக தமிழர்களை  விடுதலைப்புலிகள்  ஆதரவாளர்கள் என்று சொல்லி  அடக்க முடிகிறது. 

நடப்பு அரசாங்கத்தில் உள்ளவர்கள் யாரும் அவரது நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இல்லை என்பது நமக்குத் தெரியும்.  ஆனால் பிரதமர்  என்கிற அதிகாரத்தை நாம் அவருக்குக் கொடுத்து வைத்திருக்கிறோம்.  அதனை மிகவும் தவறான வழிகளில் அவர் பயன்படுத்துகிறார் என்பதும் நமக்குத் தெரிகிறது.

தமிழர்களிடம் தனது அச்சுறுத்தலைக் காட்டும் அவர் சீனர்களிடம் காட்ட முடிகிறதா? முடியவில்லையே! அவர்களிடம் உள்ள பொருளாதார பலத்தால் அவர்கள் பக்கம் அவரால் நெருங்க முடியவில்லை!

பிரதமர் பதவியைத் தூக்கிக் கொடுத்து விட்டோம். அவருடைய அநியாயங்களைப் பொறுத்துத் தான் ஆக வேண்டும்!

நல்லதே நடக்கும்!