Friday 30 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி .......! (45)

தொழில் செய்பவன் வீழ்வதில்லை


தொழில் செய்பவன் வீழ்ச்சி அடைவதில்லை. ஏன் அவனுக்கு வீழ்ச்சி என்பதில்லை!

ஆனால் அதற்காக வீழ்ச்சி அடையாமலா இருக்கிறார்கள்? வீழ்ச்சி என்றாலும். தோல்வி என்றாலும் அது நடந்து கொண்டு தான் இருக்கும். நாம் நமது தொழிலை ஒன்றும் நடவாதது போல் தொடர்ந்து கொண்டு தான் இருக்க வேண்டும்.

வீழ்ச்சி என்றால் நாம் எங்கோ, எதிலோ சரியாகச் செய்யவில்லை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை! இப்போது அது நமக்குக் கண் முன்னாலேயே தெரிகிறது! அது போதும். அது தான் நமது தேவை. இனி நாம் அதனைச் சரிசெய்து கொண்டு நமது தொழிலைத் தொடர வேண்டியது தான்.

வீழ்ச்சி என்பதெல்லாம் நமக்குப் பாடங்கள். வீழ்ச்சி என்று ஒன்று இல்லாவிட்டால், தோல்வி என்று ஒன்று இல்லாவிட்டால், சறுக்கல் என்று ஒன்று இல்லாவிட்டால் நாம் எங்கே தவறு செய்தோம் என்பது நமக்குத் தெரியாது, நமக்குப் புரியாது!

நமது தவறுகளைப் புரிய வைக்கவே நமக்கு வீழ்ச்சிகள் வருகின்றன; வர வேண்டும். அந்த வீழ்ச்சிகள் எதனால் வருகின்றன, எங்கே நாம் தவறு செய்தோம், யாரை நம்பி நாம் மோசம் போனோம்,  ஏதாவது கீழறுப்பு வேலைகள் நடந்தனவா போன்ற கேள்விகள் எழ வேண்டும். அப்போது தான் நமது கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்கும். ஒரு சில விஷயங்களை நாம் அலட்சியப்படுத்தி விட முடியாது.

வீழ்ச்சி என்பது தொழிலில் இல்லை. அது பாடம்.  சில பாடங்களை நாம் சொந்த காசு போட்டுப் படிக்கிறோம். சில பாடங்களை நாம் அனுபவங்கள் மூலம் படிக்கிறோம். தொழிலில் நாம் செய்யும் தவறுகள் வீழ்ச்சிகள் அல்ல.  அவை பாடங்கள். பாடங்களைப் படிப்பதற்கு வீழ்ச்சி என்று சொல்ல முடியுமா?  எல்லாமே நமது மனதில் தான் இருக்கிறது! வீழ்ச்சி என்றால் அது வீழ்ச்சி!  வீழ்ச்சியில்லை என்றால் அது வீழ்ச்சி இல்லை. அப்படித்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் எதிர்மறை கண் கொண்டு பார்க்காதீர்கள். எது நடந்தாலும் "அது நன்மைக்கே!" என்கிற மனநிலை நமக்கு இருக்க வேண்டும். அது தான் நேர்மறை.

மீண்டும் சொல்லுகிறேன். தொழில் செய்பவனுக்கு வீழ்ச்சி என்பது இல்லை. தற்காலிகமாக ஏற்படுகின்ற சில வீழ்ச்சிகளை, சில இடர்பாடுகளை,  சில தடங்கல்களை  வீழ்ச்சி என்று சொல்லி, பெரிதுபடுத்தி தொழிலை விட்டே  ஓடி விடாதீர்கள் என்பதே எனது வேண்டுகோள்.

எல்லாருமே, வணிகத்துறையில் ஈடுபட்டவர்கள்  அனைவருமே, வீழ்ச்சியைச் சந்தித்தவர்கள் தான். அது ஒரு தற்காலிகத் தடங்கள், அவ்வளவு தான்!  அது தொடர வேண்டும்!

வீழ்ச்சி என்று சொல்லி வீழ்ந்து விட வேண்டாம்!

Thursday 29 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.......! (44)

நமது வளர்ச்சிக்குத் தோல்விகள் தேவையே!


இந்த தொடரில் நான் அடிக்கடி தோல்விகளைப் பற்றி எழுதி வருகிறேன். எனக்கும் அதில் வருத்தம் தான்.  

ஆனால் தோல்விகள் பற்றி நாம் நிறையவே தெரிந்து கொள்ள வேண்டும். நமக்குத் தடையாக இருப்பவை இந்த தோல்விகள் தான். ஒரு முறை தோல்வி என்றாலே உடனே மூட்டையைக் கட்டிக்கொண்டு ஓடிவிட நினைக்கிறோம். அப்படி செய்தது சரிதான் என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்கிறோம்!

நம் சொந்த பணத்தை முதலீடு செய்து ஆரம்பித்த  தொழிலொன்று தோல்வியில் முடிந்தால் அது நமது மனத்தைப் பாதிக்கவே செய்யும். அது பெரிய பாதிப்பு என்பதில் ஐயமில்லை.

ஆனால் இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் அந்த தோல்வி என்பது நிரந்தரம் அல்ல என்பது தான். அந்த தோல்வி நமக்கு ஒரு பாடத்தைச் சுட்டிக் காட்டுகிறது. அவ்வளவு தான்.  அதற்காக நமக்கு நிரந்தர தோல்வி அடைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு தொழிலே இனிமேல் வேண்டாம் என்று  ஒதுங்க நினைப்பது மிகத் தவறாகும்.

தோல்விகள் என்பது எல்லாத் துறைகளிலும் உண்டு. ஆனால் தொழிலில் தோல்வி என்பது நாம் சேர்த்து வைத்திருந்த நமது சொந்தப் பணம் காலியாகிறதே என்கிற பயத்தில்  தான் அதிகமாக வருகிறது.

தோல்விகள் இல்லாமல் வெற்றிகள் இல்லை என்பதை நாம் முதலில் உணர வேண்டும். வாழ்க்கையில் நாம் பல வழிகளில் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனாலும் ஏதோ ஒரு வழியில் மற்றவர்களுடன் சமரசம் செய்து கொண்டு  வாழ்க்கையைத் தொடர்கிறோம்!

ஆனால் தொழில் என்று வரும் போது மட்டும் நம்முடைய சிந்தனைகள் மாறி விடுகின்றன. காரணம் போட்ட பணம் வருமா என்கிற பயம் வந்து விடுகிறது! ஆனாலும் நாம் உறுதியோடு அந்த பயத்தை எதிர்த்து நிற்க வேண்டும். இப்போதும் தொழில் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தோல்விகளைச் சந்திக்காமல் இல்லை.  எல்லாம் சரியாகி விடும் என்கிற ஒரு மனநிலையை உருவாக்கிக் கொண்டு தான் செயல்படுகிறார்கள். துணிந்தவர்களுக்குத் துக்கமில்லை என்பது சரியான ஒரு பழமொழி. பயந்தவனுக்குப் பார்த்ததெல்லாம்  பன்றிக்கூட்டம்!

ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தோல்விகள் இல்லாமல் வெற்றிகள் இல்லை. அந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தோல்விகளை வைத்துத்  தான் நமது தொழிலில் சரியான பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும். தோல்விகள் இல்லை என்றால் பாதை சரியாக அமைய வழியில்லை.

அதனால் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். துவண்டு போவதற்காக நாம் தொழில் செய்ய வரவில்லை! துணிந்து நின்று போராடி வெற்றி பெறவே தொழில் செய்ய வந்தோம்! அதனைக் கருத்தில் கொண்டு வெற்றி பெறுவோம். வெல்வோம்! 

Wednesday 28 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (43)

 தோல்வி என்பது மிகப்பெரிய வாய்ப்பு!

தோல்வி என்பது மிகப்பெரிய வாய்ப்பு என்பது தான் நமது புரிதலாக இருக்க வேண்டும்.

தோல்வி என்றதும் "கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்"  என்கிற  மாதிரி சிலர் ஒடுங்கி, அடங்கி விடுவர்.  கடன் பட்டவர்கள் கலங்குவது என்பது இயல்பு தான். காரணம் கடனைப் போல கலங்க வைப்பது வேறு எதுவும் இல்லை.

வர்த்தகத்தில் தோல்வி என்பது பொருளாதாரம் தான். கடன் படுவது தான். கடன்பட்டால் நெஞ்சம் கலங்கும் தான். கடன் நம்மை ஒடுக்கி விடும் என்பது உண்மை தான்.  எல்லாருக்கும் அந்த அனுபவம் உண்டு.  நமக்கும் அந்த அனுபவம் உண்டு. அதனால் கடன் படுவது என்பது வர்த்தகத்தில் இயல்பான ஒன்று.  ஆனால் ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமானது!

ஆக தோல்வி என்பதே பொருளாதாரத் தோல்வி தான்.  அதனை எப்படி அணுகலாம் என்பது தான் நமது நோக்கம். எல்லாமே அனுபவத்தின் அடிப்படையில் தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. நமக்குத் தெரிந்த சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோம்.

கடன் என்றதும் முதலில் நம்மிடம் உள்ள பயத்தைப் போக்க வேண்டும். இங்கு பயம் தேவை இல்லை.  பயத்தைக் களைவது தான் நமது முதல் வேலை. அடுத்து நாம் யாரிடம் கடன்பட்டிருக்கிறோமோ அவர்களிடம் உட்கார்ந்து பேச ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.  இங்கு "நீ பெரியவனா, நான் பெரியவனா?"  என்கிற  பாகுபடுகள் தேவை இல்லை. இரண்டு பேருமே பெரியவர்கள் தான்! ஆனால் கடன்பட்டவர் தன்னைத் தானே சிறியவர் ஆக்கிக் கொள்வது என்பது இயல்பு!  அது தவிர்க்க முடியாதது!

நாம் செய்ய வேண்டியதெல்லாம் உட்கார்ந்து பேசி நாம் அவர்களின் கடனை எப்படி அடைக்கைப் போகிறோம் என்கிற நமது பரிந்துரையை அவர்கள் முன் வைக்க வேண்டும். நம்மிடம் எந்த ஒரு திட்டமும் இல்லாமல் அவர்களிடம் போய் வெறும் வாய்மொழியாக எதனை வேண்டுமானாலும் கூறலாம். அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள். கடிதம் மூலமாக செய்வதை அவர்கள் ஏற்றுக்கொள்ள சாத்தியங்கள் உண்டு. அதில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் அது பற்றி விவாதித்து மாற்றங்கள் செய்யலாம். எல்லாவற்றுக்குமே சாத்தியங்கள் உண்டு.

முக்கியமாக நமது கடன் பிரச்சனைகளை இப்படி அணுகுவது பயனாக இருக்கும். பயந்து ஓடுவது பயன் தராது! அவர்களைப் பார்த்து நடுங்குவது பயன் தராது! நாம் தவறு செய்யவில்லை. சில நிர்வாகக் குளறுபடியால் தவறுகள் நேர்ந்து விட்டன. அதனை உட்கார்ந்து பேசி நாம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

தவறுகள் நேர்வது எல்லாக் காலங்கிலும் உண்டு. ஒன்றும் புதிதல்ல. நமக்கு அது புதிதாக இருக்கலாம்.

தோல்வி என்பதை ஒரு வாய்ப்பாக  எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் நாம் படிக்க வேண்டியது நிறையவே உண்டு. முறையான ஒரு நிர்வாகத்தை நடத்துவதற்கு நமக்குத் தோல்விகள் தேவைப்படுகின்றன. தோல்விகள் என்றதுமே அச்ச உணர்வு தேவை இல்லை. அவைகளை எப்படி சரி செய்வது என்பது தான் முக்கியம்.

வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

Tuesday 27 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..... ! (42)

உயரே! உயரே!


                                                                Petronas Twin Towers
பொதுவாக தொழிலில் உயர வேண்டும் என்னும் வேட்கை உள்ளவர்கள் எப்போதுமே உண்டு. 

ஆமாம்,  அதற்காகத்தானே தொழிலில் இறங்குகிறோம்?  தொழிலில் இறங்குபவர்கள் ஆயிரத்தில் ஒருவனாகத்தான் இருக்க விரும்புவார்கள். இல்லாவிட்டால் நூறோடு நூற்று ஒன்னாக  அவர்களும்  எங்கேயாவது  வேலை செய்து கொண்டு தான் இருக்கப் போகிறார்கள்!

வேலை செய்பவர்கள் அடுத்த பதவி உயர்வு,  ஒவ்வொரு வருடமும்  சம்பள உயர்வு - இது தான் அவர்களின் எதிர்பார்ப்பு. பதவி உயர்வு கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்!  பதவி உயர்வு என்பதெல்லாம் நிறுவனத்தின் உள்  அரசியலைப் பொறுத்தது!  சம்பள உயர்வு என்பதெல்லாம் அவர்களுடைய வேலை ஒப்பந்தத்தைப் பொறுத்தது. இது தான் அவர்களது எதிர்பார்ப்பு.  இந்த வருமானத்திற்குள் தான் அவர்கள் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் தொழில் செய்பவர்களின் வாழ்க்கை கொஞ்சம் வித்தியாசமானது. அவர்கள் தங்களின் வருமானத்தை மாத சம்பளம் வாங்குபவர்களோடு ஒப்பிட முடியாது. ஒரு நாள் வருமானம் மிகக் குறைவாக இருக்கும்.  அடுத்த நாள் வருமானம்  நாம் எதிர்பாராத அளவு நமது எதிர்பார்ப்பை  மிஞ்சிவிடும். அது தான் வியாபாரம் என்பது. வருமானத்தை அதிகரிக்க இன்னும் கொஞ்சம் உழைப்பை அதிகம் போட வேண்டும்.

வியாபாரத்துறையில் உழைப்பு மட்டும் தான் உங்களது வருமானத்தை அதிகரிக்கும்.  நாம் வேலை செய்யும் போது அதிக உழைப்பை நாம் கொடுத்தாலும் நமக்கு அது பெரிய அளவில் பயன் தராது. பயன் இல்லை என்றதுமே முணுமுணுக்கத் தோடங்கி விடுவோம்! இது இயல்பு தான். அது தான் நடந்து கொண்டிருக்கிறது!

வியாபாரத்தில் மாத சம்பளம் இல்லை என்றாலும் நமது மாத வருமானம்  ஒவ்வொரு மாதமும் - வித்தியாசப்படும். வித்தியாசம் என்பதை விட வருமானம் அதிகரிக்கும் என்று தாராளமாகச் சொல்லலாம். அதே போல இங்கே பதவி உயர்வு  என்பதெல்லாம் இல்லை.  நீங்கள் இருப்பதே பெரிய பதவி தான். முதலாளி என்பதே பெரிய பதவி தானே! அதைவிட பெரிய பதவி என்ன உண்டு? 

வியாபாரத்துறையில் உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள வாய்ப்புக்கள் அதிகம். உங்களின் வருமானத்தை நீங்களே திட்டமிடலாம். இந்த ஆண்டு உங்களின் வருமானம் ஐந்து இலட்சம் என்றால் அடுத்த ஆண்டு அதனை பத்து இலட்சமாக மாற்றிக் கொள்ளக் கூடிய சக்தி வியாபாரத்தில் மட்டுமே முடியும்.  உங்களுக்கென்று சில இலட்சியங்கள் இருக்கலாம். இலட்சங்கள் சம்பாதிக்கலாம்.  கோடிகளையும் சம்பாதிக்கலாம். ஒரு தொழில் சாம்ராஜ்யத்தை அமைக்கலாம். இதெல்லாம் முடியாது என்று சொல்ல முடியாது. தொழிலில் இதுவெல்லாம் சாத்தியம்.

தொழில் மட்டும் தான் உங்களை உயரே உயரே கொண்டு செல்லும். வானமே எல்லை என்பார்கள். உங்கள் எல்லையை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இங்கு உயரே உயரே என்றால் அது ஏதோ ஒரு இனத்தைத் தான் குறிக்கும் என்பதில்லை.  சீனர்களாலும் முடியும். அதே போல இந்தியர்களாலும் முடியும். சீனர்கள் தொழில் துறையில் பல தலைமுறைகளைக் கடந்து விட்டார்கள். நாமோ இன்னும் ஆரம்பக் கட்டத்தில் தான் இருக்கிறோம்.  ஆனால் நம்மில் ஒரு சிலராவது உலக வரிசையில் இருக்கத்தான் செய்கிறோம்.

தொழில் என்பது நம்மை உலகளவில் உயர்த்தும்.  அதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

Monday 26 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.....! (41)

 முதலில் தோல்வி! அடுத்தது தான் வெற்றி!


வணிகத்தில்  வெற்றி என்பதெல்லாம் எடுத்த எடுப்பில் வர வழியில்லை. 

அதுவும் முதல் தலைமுறையில் வணிகத்தில் இருப்பவர்கள் அடுத்து வரப்போகும் தலைமுறையினரை விட கொஞ்சம் அதிகமாகவே தோல்விகளைச் சந்திக்க நேரிடும்.

அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை! காலங்காலமாக முதல் தலைமுறையினர் தான் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். காரணம் வணிகம் அவர்களுக்குப் புதிது. அனுபவக் குறைவு. வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்குக் கட்டுப்படியான விலைகளில் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும்.  பொருள்களைக் கொள்முதல் செய்கின்ற இடங்களில் அங்கு அவர்களின் திருப்தி என்பதும் முக்கியம். சமயங்களில் கூடுதலான விலைகளில் பொருள்களை வாங்க வேண்டி நேரும். கையில் பணம் இல்லாது கடனில் வாங்கினால் விலையோ இன்னும் அதிகரிக்கும்.

அத்தோடு முதல் தலைமுறையினருக்கு சுற்றும் புறமும், உறவுகளும் உற்றாரும் அவர்களின்  பல அமங்கலமான ஆலோசனைகளும் அவர்களைக் கிறுகிறுக்க வைக்கும்! நல்ல வார்த்தை, உற்சாகமான வார்த்தை, ஆறுதலான வார்த்தை எதனையும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது!  அதுவும் நாம் வெற்றி பெறுவதை விட தோல்வி அடைவதையே அவர்கள் விரும்புவார்கள்!    காரணம் "நான் அப்போதே சொன்னேன் பார்!" என்று  மார்த்தட்டுவதற்கு  அவர்களுக்கு நமது தோல்வி தான் ஆதாரம்!

ஆனாலும் எல்லா வணிகர்களுமே,  தங்களுக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, அனைத்தையும் கடந்து தான் செல்ல வேண்டும். அது நஷ்டமோ கஷ்டமோ,  கடுஞ்சொல்லோ கனிவான சொல்லோ, மானமோ அவமானமோ எல்லாமே வரத்தான் செய்யும். ஏன்? சாதாரணமாக தொழில் செய்பவர்களுக்கு மட்டும் தானா இவை  வருகின்றன? வேலை செய்து பிழைப்பவர்களுக்கும் வரத்தானே செய்கின்றன! ஆனால் ஒரு வித்தியாசம். தொழில் செய்பவர்களுக்குக் கொஞ்சம் அதிகமாகவே வரும். 

எப்படிப் பார்த்தாலும் வெற்றி தான் நமது இலக்கு என்றாலும் முதலில் தோல்வியைச் சந்தித்துவிட்டுத் தான் அடுத்து வெற்றிக்குச் செல்ல வேண்டும். அதனால் தோல்வி என்றதுமே ஓடி ஒளிய வேண்டும் என்கிற எண்ணத்தைப் போக்க வேண்டும். வெற்றிக்குப்  பாதை அமைத்துக் கொடுப்பதே தோல்விகள் தான்!  தோல்விகள் இல்லையென்றால் வெற்றியின் அருமை நமக்குத் தெரியாது.

தோல்வி தானே? இருந்துவிட்டுப் போகட்டும்! மீண்டும் தோல்வி வராமல் பார்த்து கொள்வோம்! ஒன்று தான் தேவை. நமது மனதை நாம் தான் தேற்றிக் கொள்ள வேண்டும். அதைத்தான், ஒரு சிலர்,  Take it Easy! என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே போய்விடுவார்கள்!

அடுத்து வெற்றி என்பதில் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஆமாம்,  அது தானே வர வேண்டும்? எத்தனை தோல்விகளைச் சந்தித்தாலும் அது முடியப் போவது வெற்றியில் தானே!

தோல்விகள் தொடர்ந்து வரலாம்! ஆனால் வெற்றி வர ஆரம்பித்துவிட்டால் அதுவும் தொடர்ந்து வரத்தான் செய்யும்! தோல்விகள் வரும்! அதைப் புறந்தள்ளுங்கள்! வெற்றி வரும் அதைக் கொண்டாடுங்கள்!


Sunday 25 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி .........! (40)

தவறுகள் இல்லாமல் எப்படி? 

வாழ்க்கை என்றாலே தவறுகள் இருக்கத்தான் செய்யும். அது தொழில்களிலும் இருக்கும்.

தவறுகளே செய்யாமல் "நான் தொழில் செய்து பணக்காரன் ஆகிவிட்டேன்!"  என்று சொல்லக் கூடிய மனிதர்கள் யாருமில்லை! அப்படி சொன்னால் ஏதோ கோளாறு உள்ளவராக இருக்க வேண்டும் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும்!

தவறுகள் செய்யாமல் மனிதன் வாழ முடியாது. அது இயற்கையின் நியதி. தவறுகள் செய்யாதவர்கள் இருக்கும் இடம் என்று ஒன்று உண்டு. அது தான் சுடுகாடு !  எல்லாத் தவறுகளையும் செய்துவிட்டு இப்போது தவறுகளே செய்யாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள்!

ஆனால் தவறுகள் என்பது நமது வாழ்க்கைப் பயணத்தில்  மிகத் தேவையான ஒன்று. தவறுகள் என்பது நமக்குப் படிப்பினை. நெருப்பு என்று சொன்னால் குழந்தைகளுக்குப் புரியாது. ஒரு முறை அது என்ன என்று அனுபவித்துவிட்டால் அதன் பிறகு குழந்தை அங்கே தனது  கையைக் கொண்டு போகாது! எல்லாமே அது போலத் தான்.

தவறுகள் மட்டும்தான் நமது வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது.

வணிகம் செய்யும் போது எத்தனையோ பாடங்களைப் போகிற போக்கில் நாம் கற்றுக் கொள்ளுகிறோம்.  ஒரே ஒரு பாடம் இன்னும் எனது ஞாபகத்தில் இருக்கிறது. கிள்ளானில் இருந்த வந்த புத்தக வியாபாரி ஒருவர் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு வந்தார். புத்தகங்கள் விற்குமா என்கிற சந்தேகம் எனக்கிருந்தது.  அதனால் புத்தகங்கள் விற்றால் மட்டுமே பணம் தருவேன் என்பதாகச் சொல்லிவிட்டேன்.  ஒரு சில மாதங்கள் ஆன பின்னரும் அவர் ஆளையே காணோம்! நான் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விற்பனையான புத்தகங்கள் தவிர விற்பனையாகாத புத்தகங்களை மீட்டுக் கொள்ளும்படி சொல்லிவிட்டேன். ஆனால் அவர் நான் வாங்கிய புத்தகங்களுக்குப் பணம் தரவில்லை என்பதாக வழக்கறிஞர் மூலம் கடிதம் எழுதியிருந்தார்! தவறு அவர் மேல் ஆனால் அவரோ என்னைக் குற்றம் சாட்டுகிறார்!

இதெல்லாம் நமக்குப் படிப்பினைகள். தவறுகள் நமது பக்கமும் உண்டு.  அதே போல கொஞ்சம் ஏமாந்தால்  வியாபாரிகளும் நம்மைச் சோதித்துப் பார்ப்பார்கள். நாம் பல விஷயங்களக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. நாமும் தவறு செய்வோம் அவர்களும் தவறுகள் செய்வார்கள். இவைகளையெல்லாம் போகிற போக்கில் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

தவறுகள் இல்லாமல் மனிதனால் வாழ முடியாது! ஆனால் ஒரே தவறை மீண்டும் செய்யாதே என்பது தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!


Saturday 24 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.......! (39)

வெற்றி என்பது வரவே செய்யும்!

வெற்றியும் வரும். தோல்வியும் வரும். ஆனால் கடைசியில் வெற்றி வந்தே தீரும். வெற்றி தான் நமது இலக்கு என்றால் வெற்றி வராமல் எப்படிப் போகும்? 

எத்தனை தோல்விகள் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அத்தோடு நமது பயணம் நீர்த்துவிடப் போவதில்லை. எத்தனை தோல்விகள் வந்தாலும் நாளை என்று ஒன்று இருக்கிறது என்பதை மறந்து வீடாதீர்கள். நாளை மீண்டும் முயற்சி செய்யலாமே? என்ன கெட்டுப் போய்விட்டது?


முயற்சிகளை என்று கைவிடுகிறோமோ அன்று தான் தோல்வி நம்மை நோக்கி தாக்குதல் நடத்துகிறது.. தோல்விக்கு அத்தகைய வாய்ப்பைக் கொடுக்கக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

எத்தகைய சூழலிலும் வெற்றி தான் நமது இலக்காக இருக்க வேண்டும். வெற்றி தான் நமது இலக்கு என்றால், வெற்றி தான் நமது நோக்கம் என்றால் தோல்விக்கு அங்கு இடமில்லை.

தோல்வி நம்மை வீழ வைக்கலாம். நாம் வீழ வில்லை. வீழ்ந்தாலும் அது அடுத்தக்கட்ட வெற்றிக்கு நம்மைத் தயார் செய்யும் அடுத்த ஆயுதம். என்பது தான்.

எத்தனை தோல்விகள் வந்தாலும் சரி தோல்விகளைத் தோல்வி அடையச் செய்வது தான் நமது வேலையாக இருக்க வேண்டும். தோல்விகளைப் புறமுதுகிட்டு ஓடச் செய்ய வேண்டும். எந்த நிலையிலும் தோல்வி என்று ஒன்றை என்றைக்கும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தோல்விகளைக் கண்டு அஞ்சும் கோழைகளா நாம்?  உலகெங்கும் சென்று வணிகம் செய்த இனம் நாம். எல்லாம் கடல் மார்க்கமான பயணம். அபாயகரமான பயணம். அப்போதும் நமது முன்னோர் தோல்வியைக் கண்டதில்லை! எல்லா நாடுகளுடனும்  வர்த்தக உறவுகளைச் சிறப்பாகவே  வைத்திருந்தனர்.

தோல்வி என்பது நமது அகராதியில் இல்லை. எல்லாமே ஒரு வெற்றிப் பயணம் தான். நாடு விட்டு நாடு போய் இன்றளவும் வேலை செய்கிறோம், வர்த்தகம் செய்கிறோம் - நாம் எப்படி கோழையாக இருக்க முடியும்?

அதனால், வாருங்கள்! வரிந்து கட்டுங்கள்! வெற்றி என்பது தவிர்க்க முடியாதது! வெற்றி நமதே!
 


எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி,,,,,,,,,! (38)

 பொறுமை காக்க வேண்டும்!

தொழில் செய்பவர்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். 

அவசரம் அவசரமாக, உடனடியாகப் பணத்தைப் பார்த்து விட வேண்டும் என்று செயல்பட்டால் கடைசியில் ஒன்றுமில்லாமல் போக வேண்டி வரும்! வரலாம்!

நண்பர் ஒருவரைத் தெரியும்.  தோட்டமொன்றில் தொழிலாளியாக இருந்தவர். பகுதி நேரமாக பொது சேவையிலும் ஆர்வம் காட்டினார். அந்த நேரத்தில் அவருக்கு ஒரு நபரின் தொடர்பு ஏற்பட்டது.  அந்த நபர் நிலம், வீடு ஆகியவற்றை விற்று பணம் சம்பாதிப்பவர். பொதுவாக பிரோக்கர் என்று சொல்லுவார்கள். 

அவருக்கும் அவரைப் போன்று செய்ய வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது.  அதில் தவறில்லை. மனிதன் என்றால் ஒவ்வொரு நாளும் வளர்ச்சியடைய வேண்டும். தேங்கிக் கிடந்தால் அது குட்டையாகி, குப்பையாகி விடும்!

நண்பரும் அவரைப் போன்றே ஓரிரண்டு முயற்சிகளைப் பண்ணினார். அவருடைய நல்ல நேரம். அவருடைய முயற்சிகள் பலனளித்தன. பணத்தைப் பார்த்தார். பணம் கட்டு கட்டாக வந்தது. அதனால் அதனை முழு நேரமாக செய்ய வேண்டும் என்கிற ஆசை அவருக்கு வந்துவிட்டது. அதுவும் தவறில்லை!

ஆனால் சில விஷயங்களில் அவர் கோட்டைவிட்டு விட்டார். அவருடைய கல்வி போதுமானதாக இல்லை. அவர் அதே தொழிலில் நிறைய படிக்க வேண்டியிருந்தது. சில நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளவேண்டி இருந்தது.  அவர் அதனை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. தனியாக ஒரு அலுவலகத்தைத் திறந்தார்.  அலுவலகம் ஏதோ பாதி கல்யாண மண்டபம் போல் காட்சியளித்தது!  ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்திக் கொண்டார். அந்த பெண்ணுக்கு  என்ன மொழில் தான் தெரியும் என்று கணிக்க முடியவில்லை. ஆங்கிலம் தெரியாவிட்டால் பரவாயில்லை. மலாய் மொழியிலேயே கடிதப் போக்குவரத்துகளை வைத்துக் கொள்ளலாம். அதுவும் இல்லை. இவர் என்னவோ சொல்லுவார் அவர் என்னவோ ஆங்கிலத்தில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுதுவார்! இவர் கடிதத்தில் கையெழுத்து இடுவார். அவர் போகுமிடம் எல்லாம் ஒரு வழக்கறிஞரைக் கூட்டிச் செல்லுவார். எல்லாம் பணம்  என்பதை மறந்து போனார்!

இரண்டு ஆண்டுகள் தாக்குப் பிடித்தார். அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை! எல்லாவற்றையும் இழுத்து மூடிவிட்டு தனது பழைய வேலைக்கே திரும்பிப் போய்விட்டார்!

அதில் நமக்கு வருத்தம் தான். அவர் தனது புதிய துறையில் சரியாகத்  திட்டமிடவில்லை. அவர் தனியாக அலுவலகம் திறக்க வேண்டிய அவசியமில்லை.  யாரும் அவருக்குத் தேவை இல்லை. தான் சொந்தமாகவே  நிலம், வீடு  விற்பனையைச் செய்திருக்கலாம். கடிதப் போக்குவரத்துகளைத் தனக்குத் தெரிந்தவர்களை வைத்தே செய்யலாம். தனக்குத் தேவை என்றால் வழக்கறிஞரின் உதவியை நாடலாம். எத்தனையோ வழிகள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன. முதலில் அவர் சிக்கனத்தைக் கடைபிடிக்கவில்லை என்பது தான் அவர் செய்த பெரிய தவறு. கொஞ்சம் ஆர்ப்பாட்டம் அதிகமாகப் போய்விட்டது. இல்லையென்றால் அவர் வெற்றிக்குரிய மனிதராக இருந்திருப்பார்.

ஒரு தொழிலில் இறங்கிவிட்டதும் உடனடியாகப் பணத்தைக் குவிக்கலாம் என்கிற எண்ணத்தைக் கைவிட வேண்டும்.  பொறுமை வேண்டும். 

பூமியை ஆள வேண்டும் என்றால், நண்பணே! பொறுமை வேண்டும்!


Friday 23 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (37)

அதிர்ஷ்டம் என்று ஒன்றுமில்லை!

பொதுவாக ஒருவர் தனது தொழிலில் வளர்ந்து விட்டால் அல்லது வெற்றி பெற்று விட்டால் அவரை அதிர்ஷ்டசாலி என்று சொல்லுவது சோம்பேறிகளின் வாடிக்கை!

இன்று நாம் அவரை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவர் ஆரம்ப காலத்தில் பட்ட சிரமங்கள், அவமானங்கள் - இது பற்றி எல்லாம் நாம் கவலைப்படுவதில்லை. 

வெற்றி என்பதெல்லாம் சும்மா வருவதில்லை.  கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்திற்குப் போவது  என்பது நாம் நினைப்பது போல அவ்வளவு எளிதான காரிய அல்ல.  அது எளிது என்பதாக வெற்றி பெற்ற யாரும் சொல்லுவதில்லை.  மேலே போவதற்கு ஒவ்வொரு படியாகத்தான் ஏற வேண்டும். மூன்று நான்கு படிகளைக் குதித்துக் குதித்து தாண்டி ஏற முடியாது!

ஆனால் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத வெளியே உள்ளவர்கள் ஏதோ அதிர்ஷ்டம் வந்து அவர்களை அணைத்துக் கொண்டது போலவும் அதனால் தான் இன்று பெரிய பணக்காரர் ஆகிவிட்டார்கள் என்பது போலவும் மிகச் சாதாரணமாக பேசிக் கொள்ளுவது வேடிக்கை என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்டம் நம்மை அணைக்க வேண்டுமானால் நாம் அதற்காக உழைக்க வேண்டும். ஆம், உழைப்பு தான் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். சிந்தும் வேர்வைத் துளிகள்  தான் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். பெறுகின்ற அவமானங்கள் தான் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.

வெறுமனே உட்கார்ந்து கொண்டு அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வரும் என்றால் அப்படியெல்லாம் எதுவும் வருவதில்லை!  உட்கார்ந்து கொண்டு, வெட்டிக் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தால்,   அதிர்ஷ்டம் வரும் என்று காத்திருந்தால், வருவது வறுமையாகத் தான் இருக்கும்!

அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்று எத்தனையோ முறை, நான்கு நம்பர், ஐந்து நம்பர், ஆறு நம்பர், டோட்டோ, மேக்னம் என்று ஒன்று விடாமல் எடுத்தும் எந்த அதிர்ஷ்டமும் இல்லாத போது  தொழில் செய்பவர்களுக்கு எப்படி, எங்கிருந்து அதிர்ஷ்டம் வரும்? அதிர்ஷ்டம் என்பது சும்மா வருவதில்லை. அதற்காக உழைக்க வேண்டும். வேர்வை சிந்த வேண்டும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆகவே அதிகமாக அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள். மாறாக உழைப்புத் தான் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று நம்புங்கள். உழைப்பைக் கொட்டுங்கள். அதிர்ஷ்டம் வரும்.

Wednesday 21 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி .......! (36)

 தொழிலைப் பற்றிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்!

தொழிலில் காலெடுத்து வைத்த பின்னர் உங்களது எண்ணங்கள் முழுவதும தொழிலில் தான் இருக்க வேண்டும்.

சொந்தக் கடை. நினைத்தால் கடையை அடைத்துவிட்டுப் போகலாம் என்று தொழிலுக்கு வருவதற்கு முன்னர் கூறலாம். ஆனால் வந்த பின்னர் அப்படியெல்லாம் தான்தோன்றித்தனமாக பேச முடியாது. அது உங்களுக்கே தெரியும். காரணம் நாம் தினமும் எதிர் நோக்கும் போட்டிகள் அதிகம். ஒரு நாள் அடைத்தால் நமது வாடிக்கையாளர்கள் வேறு ஒரு கடை பக்கம் திரும்பிவிடுவார்கள் என்கிற பயம் நமக்கு உண்டு. அடுத்த கடைக்காரனும் அப்படித்தான் நினைக்கிறான்! போட்டிகள் நிறைந்த உலகம்! அப்படித்தான் இருக்கும்!

இன்னொரு பக்கம் அரசியல்வாதிகள். எனக்குத் தெரிந்த நண்பர்களின் ஒரு சில அனுபவங்களைச் சொல்லுகிறேன். தொழிலில் இன்னும் சரியாக வளரவில்லை. வளர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் இருக்கிறார்கள். அதற்குள் அரசியல்வாதிகள் அவர்களைத் தேடி வந்துவிடுவார்கள். அவர்களுக்குப் பலவிதமான ஆசைகளைக்காட்டி அவர்களைப் பெரிய தொழிலதிபர் ரீதியில் அவர்களைக் கொண்டு சென்றுவிடுவார்கள். பாவம் அவர்கள்! தொழிலையும் கவனிக்க முடியாமல், அரசியலிலும் பேர் போட முடியாமல் தொழிலையே மூடிவிட்டுப் போகும் சூழல் ஏற்பட்டுவிடும்.

சீனர்களும் அரசியலில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பணம் தான் முதலிடம். பணம் சம்பாதித்தப் பின்னர் தான்  அரசியல் பக்கம் தலை காட்டுவார்கள்.  தொழிலில் எந்த அளவு உயர முடியுமோ அந்த உச்சத்தை அவர்கள் தொட்ட பின்னர் தான் அரசியல், பொது சேவை என்பதெல்லாம் அதன் பின்னர் தான். நாமோ 'அதுவும் இல்லை இதுவும் இல்லை' இரண்டும் கெட்டான்!

தொழிலை நாம் விளையாட்டாக எடுத்துக் கொள்ளுகிறோம். அது தவறு. தொழில் என்பது மிகவும் சீரியஸான ஒரு விஷயம்.  கொஞ்சம் ஏமாந்தால் நாறிப் போவோம்!

நம்முடைய தேவை எல்லாம் தொழிலின் மூலம் பூர்த்தி செய்யப்பட  வேண்டும். அதற்காகத்தானே நாம் தொழிலில் இருக்கிறோம்? தொழிலை சரியான நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தொழிலை விட்டு நம்மாலும் ஓடிவிட முடியாது. நமக்கு உடலில் சக்தி இருக்கும் வரை நாம் உழைக்கப் போகிறோம்.  நமக்கு எப்போது ஓய்வு என்பதை யாராலும் அனுமானிக்க முடியாது! இருக்கும் வரை வேலை! அவ்வளவு தான்! நமது முன்னோடிகள் எல்லாம் அப்படித்தானே?

நாம் எந்நேரமும் தொழில், தொழில் தொழில் தான்! நாம் மூச்சு விடும் போதும் சரி,  தூங்கும் போது சரி, விழிக்கும் போதும் சரி, காலை மாலை இப்படி எல்லாக் காலங்களிலும் தொழில் தொழில் தொழில் மட்டும் தான். இதற்கெல்லாம் நமக்கு முன்னோடிகள் இருக்கிறார்கள்!  சீனர்கள் அப்படித்தானே இருக்கிறார்கள்!  அவர்கள் குடும்பங்கள் மகிழ்ச்சியாகத்தானே இருக்கின்றன. பொருளாதாரம் வலிமை பெற்றிருந்தால் மற்ற வலிமைகள் எல்லாம் தானாகவே வந்துவிடும்!

அருமை நண்பா! தொழில் என்று வந்துவிட்ட பின்னர் பொருளாதார வலிமைக்குத்தான் முதலிடம். பொருளாதார வலிமை தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது.

பொருளாதார வலிமையைப் பெருக்கிக் கொள்ளுங்கள்! வளமாக வாழுங்கள்!


Tuesday 20 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (35)

 தொழிலின் முதல் பாடம்

                                                            Little India, Kuala Lumpur

தொழிலின் முதல் பாடம் என்பது முக்கியம். தொழிலில் எந்த அளவுக்கு நம்மால் வெற்றி பெற முடியும் என்கிற தீவிரம் நம்மிடம்  இருக்கிறதோ அதே போல தோல்விகளும் வரும் என்கிற எண்ணமும் நமக்கு ஏதோ ஓரு மூலையில் இருக்க வேண்டும்.

அதாவது 95% விழுக்காடு வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை நமக்கு இருப்பது போல ஒரு 5% விழுக்காடு "கவிழலாம்" என்கிற எண்ணமும் நமக்கு இருக்க வேண்டும்.

இங்கு "கவிழலாம்" என்பது நமக்குள்ள எச்சரிக்கை! மனதிலே,  கவிழலாம், தோல்வி அடையாளம் என்பது தவறுகளைச் செய்யாமல் இருக்க நமக்குள்ள எச்சரிக்க உணர்வு நமக்கு உதவுகிறது. தோல்வி என்கிற பய உணர்வு நமக்கு ஒர் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துகின்றது.

தொழிலில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்கும் வரை நம்மிடையே உள்ள அந்த பய உணர்வு ஒரு எச்சரிக்கை உணர்வாகவே இருந்து கொண்டு நமக்குப் பாதுகாப்புக் கொடுக்கும்.

பெருந் தொழிலில் உள்ளவர்கள் தங்களது முதலீடுகளைப் பல்வேறு வகைகளில் முதலீடு செய்கிறார்கள் என்றால் 'அது போனால் இது காப்பாற்றும், இது போனால் அது காப்பாற்றும்' என்கிற பய உணர்வு தான் அவர்களுக்கு அந்த எச்சரிக்கையைக் கொடுக்கிறது. அதனால் தான் இன்று நாம் பார்க்கும் தொழில் அதிபர்கள் பல்வேறு தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

சான்றுக்கு ஒன்றைச் சுட்டிக் காட்டுகிறேன். பிரபல சூதாட்ட மையமான  கெந்திங் ஹைலன்ஸை எடுத்துக் கொள்ளலாம்.  கோவிட்-19 க்குப் பின்னர் அவர்கள் நூறு விழுக்காடு முடங்கிப் போனார்கள். ஆனால் அவர்களின் இன்னொரு முதலீடான தோட்ட நிறுவனங்கள் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பாதுகாப்பாக இருந்தது!

நாம் என்ன தான் வெற்றிக்கொடி நாட்டினாலும் நம் எல்லாருக்குமே அந்த எச்சரிக்கை உணர்வு அவசியம் தேவை. `இன்று உணவகத் தொழிலில் இருக்கும் பலர் ஆள் பற்றாக்குறை என்று அலறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மற்ற முதலீடுகள் அவர்களுக்கு வருமானத்தைத் தராமல் போகுமா, என்ன?

அதனால் முதல் கடமை எச்சரிக்கை என்பது தான். அந்த எச்சரிக்கை நம்மை கீழே விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ளும். அடுத்து நம்மை நாமே நிலை நாட்டிய பின்னர் மற்ற முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

வாழ்ந்து காட்டுவோம்!

Monday 19 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி...........! (34)

புத்தகங்கள் தொழிலை புரிந்து கொள்ள உதவும்


எனது ஆரம்பகால அனுபவங்கள் அனைத்தும் புத்தகங்கள் மூலமாகத் தான் கிடைத்தன. நான் வேலை செய்து கொண்டிருந்த  காலத்தில் உடனடியாக என்னால்  வியாபாரத்தில் ஈடுபட இயலவில்லை.

அந்த காலக்கட்டத்தில் புத்தகங்களே எனக்குத் துணையாக இருந்தன.  வியாபாரத் துறையில் முன்னேறியவர்கள் பற்றிய புத்தகங்கள் அவர்களுடைய வாழ்க்கை  வரலாறுகள் இவர்களைப் பற்றித்தான் நான் அதிகமாகப் படித்தேன்.

வியாபாரத் துறையின்  ஏற்ற இறக்கங்கள், தோல்வி வெற்றிகள் இவைகள் எல்லாம் எனக்குத் தேவையாக இருந்தன. அவர்களுடைய அனுபவங்கள் எனக்குப் பாடமாக  அமைந்தன. இன்று வியாபாரத் துறையில்  பெரும் கோடிசுவரர்களாக இருப்பவர்கள் அவர்களது ஆரம்பகாலம் பல  தோல்விகளைக் கொண்டது தான்.  

இந்த இன்றைய கோடிசுவரர்களின் வாழ்க்கை வரலாறுகள் முக்கியமாக இரண்டு பாடங்களை எனக்குப் போதித்தன. ஒன்று: விடாமுயற்சி. எந்த காரணத்தைக் கொண்டும் நீங்கள் ஏற்றுக் கொண்ட தொழிலிலிருந்து பின் வாங்காதீர்கள். தொடர் முயற்சிகள், தொடர் போராட்டங்கள் நம்மைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். நிலைத்து நின்று போராடித் தான் அனைவரும் வெற்றி பெற்றார்கள்.  இரண்டு: தோல்விகள் இல்லாமல் வெற்றிகள் இல்லை. ஏதோ ஒரு கட்டத்தில் இவர்கள் அனைவருமே தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள். ஆனால் அந்த தோல்விகளை அவர்கள் தோல்விகளாக ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து வெற்றியை நோக்கிய பயணமாகவே தங்களது தொழிலைக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

நான் தொழிலில் பயணித்த நாள்களில் அந்த இரண்டு கொள்கைகளையும் புறக்கணிக்கவில்லை. என்ன நடக்கும் என்பதை முன்னமையே நான் அறிந்திருந்தேன். அதனால் எதுவும் எனக்குப் புதிதாக இல்லை. விடாமுயற்சியை  நான் விட்டுவிடவில்லை. தோல்விகளையும் மாற்றி அமைத்துக் கொண்டேன்.

இது போன்ற வாழ்க்கை வரலாறுகள் நமக்கு அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கின்றன. மற்றவர்களின் அனுபவங்கள் நமக்குப் பாடமாக அமைகின்றன.

ஒன்றுமே தெரியாமல், ஒன்றுமே அறியாமல் தொழில் செய்கிறேன் என்பதை விட குறைந்த பட்சம் இது போன்ற புத்தகங்கள் மூலமாவது அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நேரடி அனுபவம் பெற்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள். அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றது. அப்படி கிடைக்காதவர்கள் புத்தகங்கள் மூலம் ஓரளவு அதனைப் பெறலாம். அதுவே  நமது நோக்கம்

அனுபவப்பட்டவர்களின் வாழ்க்கை நமக்குப் பாடங்கள்.  உலகப்  பணக்காரர்கள் அனைவருமே வெற்றி, தோல்வியைக் கண்டவர்கள். அவர்களுக்கும் நமக்கும் உள்ள ஒரே வித்தியாசம்: அவர்கள் பின் வாங்கவில்லை! நாம் புறமுதுகிட்டு ஓடிப்போனோம்! வெற்றியும் நம்மை விட்டு ஓடிபோய்விட்டது!

புத்தகங்கள் நமக்குச் செல்வங்கள், பயன்படுத்திக் கொள்வோம்!

Sunday 18 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி ..........! (33)

நம்மால் ஏன் வெற்றி பெற முடியாது?


நம்மிடையே, ஒரு சிலர், சில கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, தொழில் செய்ய நினைக்கும் இளைஞர்களுக்கு இவர்கள் எப்போதுமே தடையாக உள்ளவர்கள்.

"நமக்கு இந்த வியாபாரம் எல்லாம் சரிப்பட்டு வராது!  அதெல்லாம் சீனர்களுக்குத்தாம்'பா! காலம் காலமா அவன் தான் செய்யிறான்! அவன் தான் ஏச்சு பிழைப்பவன்!  நம்மால அதெல்லாம் முடியாது! நமக்கு ஏய்க்கவும் தெரியாது!பிழைக்கவும் தெரியாது!" என்று கூறுபவர்கள் நம்மிடையே உள்ளனர்.

இவர்கள் பேசுவதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை எடுத்துக் கொண்டால் உண்மையில் நாம் துணிவை இழந்து விடுவோம்! கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது போன்று பேசுபவர்களிடம் நாம் எந்த உறவையும் வைத்துக் கொள்ளக் கூடாது!  அவர்களிடமிருந்து விலகி நின்றாலே நம்மிடமிருந்து ஒரு சனியன் ஒழிந்தது என்று எடுத்துக் கொள்ளலாம்.

பொதுவாக நாம் எதைப் பேசினாலும் எதிர்மறைக் கருத்துகளை கூறுபவர்கள் தான் நம்மைச் சுற்றியே இருப்பார்கள். அதில் நம் உறவுகளும் அடங்குவர்.   அவர்களுடைய கருத்துகளைச் செவிமடுப்போம். அதோடு வைத்துக் கொண்டால் போதும். அந்த கருத்துகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை.  ஆனால் கணவன் - மனைவி என்கிற போது இருவரும் ஒத்தக் கருத்துகளைக் கொண்டிருந்தால்  நன்மைப் பயக்கும். அது தொழிலுக்கும்  நல்லது. எதிர்காலத்திற்கும்  நல்லது.

தொழில் என்றால் அது சீனர்கள் தான் திறன் பெற்றவர்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சீனர்கள் தொழில் செய்வதற்கு முன்னரே நமது செட்டியார் சமூகம் இந்நாட்டில்  தொழிலை செய்து வந்திருக்கிறார்கள். தமிழ் முஸ்லிம் சமூகமும் அப்போதே தொழில் செய்தவர்கள் தான்.சீன சமூகம் ஓரளவு நகர் பக்கம் இருந்ததால்  நகர்ப்புற வாய்ப்புகளை அவர்கள்  பயன்படுத்திக் கொண்டனர். நமது இனமோ தோட்டப்புறங்களில் இருந்ததால் அப்போதே நம்மைத் தனிமைப்படுத்தி  ஆண்டுக் கணக்கில் தனிமைப்பட்டுக் கிடந்தோம்! அது தான் உண்மை!  சீனர்கள் செட்டியார்களிடம் கடன் வாங்கித் தான் தங்களது தொழிலை ஆரம்பித்தார்கள் என்கிற சரித்திரமும் உண்டு என்பதையும் மறக்க வேண்டாம்.

நமக்கு மட்டும் தான் தொழிலில் வெற்றி பெறுகின்ற வாய்ப்பு அதிகம் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் வேண்டும். நமக்கு அந்த திறமை என்பது இயற்கையாகவே  அமைந்தது. காரணம் அது நமக்கு வழிவழியாக வந்தது.   நமது சரித்திரத்திரத்தை நாம் அறியவில்லை என்பது தான் நமக்குள்ள சிக்கல்.

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு"  என்று சும்மா யாரும் சொல்லி வைக்க வில்லை.  திரைகடல் பல ஓடியிருக்கிறோம். திரவியமும் தேடியிருக்கிறோம். ஒளவையார் காலத்திற்கு முன்னரே அது நடந்திருக்கிறது. அதனால் திரவியம் தேடுவது என்பது நமக்குப் புதிதல்ல.  கடல் கடந்தாலும் சரி கடல் கடக்காவிட்டலும் சரி  வியாபாரம் செய்து திரவியம் தேடுவது என்பது நமக்கு இயல்பான ஒன்று.

வெற்றி என்பது நமது இரத்தத்தில் ஊறியது. வியாபாரமும் அதற்கு விதி விலக்கல்ல. அந்த ஊறல் என்பது அப்போதும் இருந்தது இப்போதும் நம்மிடையே தொடர்கிறது. அது எப்போதும் தொடரும். நாம் சந்தேகப்பட வேண்டிய அவசியம் இல்லை!

நம்மிடையே உள்ள பெரும்பாலான குறைபாடுகள் என்பது தொழில் தொடங்குவதற்கான மூலதனம் என்கிற குறைபாடு மட்டும் தான். என்னைக் கேட்டால் ஆரம்பகால மூலதனம் என்பது நம்முடையாதகவே இருக்க வேண்டும்.  கையில் பணம் இல்லாவிட்டால் அதற்காக உழைத்து மூலதனத்தைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். நாம் தொழில் செய்ய இன்னொருவர் பணம் போடுவார் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது!

ஆக வெற்றி என்பது ஏதோ ஒரு சாராருக்கு முட்டும் தான் சொந்தம் என்கிற பேச்சு ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை! அதிலும் வியாபாரத்தில் வெற்றி என்பது நமக்கு மட்டுமே சொந்தம். நம்முடைய அறிவுக்கு ஈடாக யாரையும் ஒப்பிட முடியாது! நம்முடைய திறமைக்கு ஈடாக யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது!

நம்மால் வெற்றி பெற முடியும்! முடியும் என்று நினைத்துச் செயபடுங்கள்! அதுவே வெற்றி!



Saturday 17 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (32)

 ஏன் சிறிய தொழில்?

`ஏன் சிறிய தொழிலில் கவனம் செலூத்துங்கள் என்று வலியுறுத்துகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வசதி படைத்தவர்கள் சிறியதோ பெரியதோ பிரச்சனை இல்லை. காரணம் ஒரு தரப்பினரிடம் பணம் இருக்கிறது அவர்கள் பெருந்தொழில்களில் ஈடுபடுவது என்பது இயல்பான காரியம்.

நண்பர் ஒருவர் ஞாபகத்திற்கு வருகிறார்.   ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை செய்தவர். குடும்பத்திற்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டார். வீடு, கார், பிள்ளைகளின் உயர் கல்விக்கான ஏற்பாடுகள், அனைத்தையும் செய்துவிட்டார். மனைவியும் வேலை செய்கிறார். சொந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்னும் வேட்கை அவரிடமிருந்தது. ஒரு சில இலட்சங்களைச் செலவு செய்து கணினித் துறையில் இறங்கிவிட்டார்.  நடுத்தர தொழில்  என்று சொல்லலாம். வாழ்த்துகள் நண்பரே!  இப்படி வசதி உள்ளவர்கள் தங்களுக்கு ஏற்ற தொழிலைத் தேர்ந்தெடுப்பதில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் சில ஆயிரங்களைக் கையில் வைத்திருப்பவர்கள் தங்களுடைய முதலீடுகளைச் சரியாகக் கவனித்து தொழிலில் இறங்க வேண்டும். சிறிய தொழிலில் தங்களது அனுபவங்களை வளர்த்துக் கொண்டு பின்னர் தொழிலை மேம்படுத்த வேண்டும்.

வியாபாரத்துறையில் ஈடுபட வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள் இப்போது நமது இனத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். செய்கின்ற வேலையில் பாகுபாடுகள் ஏராளம். முன்னுக்கு வருவதில் முட்டுக்கட்டைகளைப் போட்டு முடக்கி விடுகிறார்கள். எத்தனை நாளைக்குத் தான் முணுமுணுத்துக் கொண்டிருப்பது என்கிற நிலையில் தான் பல இளைஞர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நாம் சொல்ல வருவதெல்லாம் வியாபாரத்துறையில் காலெடுத்து வையுங்கள். துணிச்சலோடு வாருங்கள்.  யாரும் உங்களை விழுங்கி விடப்போவதில்லை. கணவனும் மனைவியும் சேர்ந்து செய்கின்ற தொழில் என்றால் அதற்கு இன்னும் வலிமை அதிகம். ஒரு சில பொருளாதாரக் காரணங்களுக்காக மனைவி வேலை செய்யட்டும் என்று நினைத்தால் அப்படியே செய்யுங்கள்.

நம் நாட்டில் நாம் மூன்றாவது பெரிய இனம். ஆனால்  தொழிலில் அது நமது விகிதாச்சாரத்தைக் காட்டவில்லை. நாம் மிகக் கீழான நிலையில் தான் இருக்கிறோம். ஒரு சிறிய தொழில் செய்கின்ற அளவுக்குக் கூட நம்மிடம் அந்த துணிச்சல் என்பது இல்லை.  பாக்கிஸ்தானியர், வங்காளதேசிகள் நமது தொழில்களைத்  தங்கள் வசம் இழுத்துக் கொண்டார்கள். நாம் பார்த்துக் கொண்டும், ரசித்துக் கொண்டும் இருக்கிறோம்!

முதலில் சிறிய சிறிய தொழில்களில் அக்கறைக் காட்டுங்கள்.  அதுவே நமக்கு மாபெரும் சக்தியைத் தரும்.


Friday 16 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (31)

 பொருள் ஈட்டுவதற்கு எது சிறந்த வழி?

பொருள் ஈட்டுவதற்கு இரண்டே இரண்டு வழிகள் தாம். ஒன்று வேலை  செய்வது அல்லது வியாபாரம் செய்வது.

இந்த இரண்டில் ஒன்றைத்தான் நாம் தேர்வு செய்ய வேண்டும்.

வேலை செய்வதன் மூலம் நாம் பொருள் ஈட்டலாம். உலகெங்கிலும் வேலை செய்து பிழைப்பவர்கள் கோடிக் கணக்கில் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சம்பளமாகப்  பெறுகின்றனர். அந்த சம்பளம் என்பது ஒரு சிலருக்குப் போதுமானதாக  இருக்கலாம். பலருக்கு  அது ஒவ்வொரு மாதமும் பற்றாக்குறையில் தான் போய்  முடிகிறது!  முதலாளிகளைக் குற்றம் சொல்லுவது நியாயம் ஆகாது. ஒவ்வொருவரும்  தங்களது வரவு செலவுகளைத் தங்களது வருமானத்திற்கு உட்பட்டு செலவு செய்தால் தான் கட்டுப்படியாகும். இல்லாவிட்டால் கடனில் மாட்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இன்னும் ஒரு சிலர் "நமக்கு ஏன் இந்த நிலை? ஏன் இந்த பற்றாக்குறை? நாம் ஏன் சம்பளம் வாங்க வேண்டும்? நம்மால் மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாதா?"  என்று நினைத்தவர்கள் தங்களது நிலையை மாற்றிக் கொண்டார்கள். அதற்கு நிறைய துணிவு வேண்டும். பல பிரச்சனைகளை எதிர் நோக்க வேண்டி வரும் என்று தெரிந்தே ஒரு முடிவை எடுத்தார்கள்!  பலப்பரிட்சையில் இறங்கினார்கள். பல தோல்விகளைச் சந்தித்தார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. அது கடைசியில் வெற்றியில் தான் கொண்டு சேர்க்கும்! இடையில் பயந்து ஓடியவர்கள் தோல்வியே நிரந்தரம் என்று தங்களுக்குத் தாங்களே முடிவுக்கு வந்து தோல்வியைத் தழுவினார்கள்!

ஒன்றை நான் இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன். நீங்கள் வெற்றி பெற விரும்பினால் தோல்வியாளரிடம் போய் ஆலோசனைக் கேட்காதீர்கள். தோல்வியாளரிடம் ஆலோசனைக் கேட்டால்  அவர்களிடமிருந்து உங்களால் என்ன பதிலை எதிர்பார்க்க முடியும் என்று நீங்களே யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.  உங்களைச் சுற்றி எத்தனையோ வெற்றியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கொஞ்சம் படியுங்கள். அவர்களுடைய குணாதிசயங்களை உன்னிப்பாகப் பாருங்கள். அவர்களின் வெற்றி எங்கிருந்து வருகிறது என்று கவனியுங்கள். நமக்கும் அவர்களுக்கும் அப்படி என்ன வித்தியாசம் என்று யோசியுங்கள்.

ஒருவரின் வெற்றி என்பது வெறும் பணத்தால் மட்டும் வருவதல்ல. ஒருவருடைய எண்ணங்கள், செயல்பாடுகள் சிந்தனைகள்  எல்லாமே வெற்றிக்கு அடிப்படையானவை.

வேலை செய்து பிழைப்பது என்பது எல்லாக் காலங்களிலும் பற்றாக்குறையை நோக்கித்தான் போகும். நம்முடைய வாழ்க்கை முறை அப்படித்தான்  அமைந்திருக்கிறது. அதுவே வியாபாரம் செய்பவர்களை நோக்குங்கள், அவர்களுடைய வாழ்க்கை முறையைக் கவனியுங்கள் - நம்மால் பொறாமைப் படத்தான் முடிகிறது! ஆனால் அதனை நாம் சரி செய்து கொள்ளலாம். தேவை எல்லாம் துணிச்சல்!

பொருளை எப்படி வேண்டுமானாலும் ஈட்டலாம். ஒன்று: பற்றாக்குறை வாழ்க்கை. இரண்டு: வளமான வாழ்க்கை! நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Thursday 15 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (30)

 மாபெரும் தொழில்கள் தேவையா?

மாபெரும் தொழில்கள் தேவை இல்லையென்று நான் சொல்ல வரவில்லை. சொல்ல வருவதெல்லாம் எடுத்த எடுப்பில் நம் நாட்டு தொழில் அதிபர் டோனி ஃபெர்னாண்டெஸ் போல ஆகாசத்தில் பறக்க நினைக்க வேண்டாம். 

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மலேசிய இந்திய நிறுவனம் விமானத் தொழிலில் ஈடுபட்டது. எந்த ஒரு குறையும் இல்லை. ஆனால் ஒரு சில மதவெறிக் கும்பலினால்  குறைகள் கண்டுபிடிக்கப்பட்டு கடைசியில் அந்த நிறுவனம் செயல் படமுடியாமலே போயிற்று. அவர்களால் எந்த ஒரு நெருக்கடியையும் சமாளிக்க முடியும். காரணம் அது உலகளவில் இயங்கும் நிறுவனம்.  

அவர்களோடு நம்மை ஒப்பிட முடியாது. தரையிலேயே செய்வதற்கு நமக்கு  நிறையவே தொழில்கள் இருக்கின்றன. இப்போதைய நிலையில் நாம் சிறிய தொழில்களில் கவனம் செலுத்துவோம். ஆரம்பம் அதுவாகத்தான் இருக்க முடியும். அது தான் நமது வளர்ச்சிக்கு நல்லது.

இப்போது உள்ள பெரிய தொழில்களை எல்லாம் எடுத்துக் கொண்டால்  எல்லாமே சிறிய அளவில் தான் ஆரம்பிக்கப்பட்டது. சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டு நாளடைவில் பெருந் தொழிலாக இன்று வளர்ந்துவிட்டன.

ஒருவர் அனுபவம் பெறுவதற்கு ஒரே வழி சிறிய தொழில்கள் தான்.  அதன் மூலம் ஒவ்வொன்றையும் அணு அணுவாக நாம் கற்றுக் கொள்ளுகிறோம். நேரடி அனுபவம் நாம் பெறுகிறோம். அனுபவமே சிறந்த ஆசான்!

ஒரு காலக் கட்டத்தில் சிறிய தொழில், பெரிய தொழில் என்று எதை எடுத்துக் கொண்டாலும் சீனர்களே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று  பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இன்று எல்லா இனத்தாருமே சிறு தொழில்களில் ஈடுபட்டிருக்கின்றனர். நடுத்தர தொழில்களில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. 

தொழில் வளர்ச்சி என்பது வளர்ந்து கொண்டிருக்கிற காலக்கட்டம் இது. ஒரு விஷயத்தில் நான் வியக்கிறேன். நமது பெண்கள் தான் சிறு தொழில்கள் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். அவர்களுக்குத் தெரிந்த உணவு, மாலை கட்டுதல், தேநீர் வியாபாரங்கள் போன்றவை அவர்களுக்குக் கை கொடுக்கின்றன.  பெண்களைப் பார்த்துத் தான் ஆண்களும் வியாபாரத் துறையில் ஈடுபாடுகளைக் காட்டுகின்றனர். நல்ல வளர்ச்சி!

மாபெரும் தொழில்கள் நமது நாட்டிற்குத் தேவை. அதில்  பெரும் இந்திய தொழில் அதிபர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.  ஆனால் இப்போது நாம், இந்திய சமுதாயம்,  இன்னும் அதிகமாக வளர வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.  இன்னும் தொழில் செய்யவே நாம் தயாராகாத  இல்லை என்பதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அதனால் தான் சிறு தொழில் மூலம் நம்மை முதலில் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

மாபெரும் தொழில்களில் ஈடுபட சிறு தொழில்களில் முதலில் நாம் கவனம் செலுத்துவோம்!

Wednesday 14 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (29)

நாம் பலவீனமான சமுதாயம் அல்ல!


ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம்மில் ஒரு சிலர் நினைப்பது போல நாம் பலவீனமான சமுதாயம் அல்ல.

நமது தமிழ் அரசர்கள் கடல் வழியாகப் பல நாடுகளுக்குப் பயணம் செய்து வணிகம் செய்தவர்கள். அவர்கள் எந்த நாட்டும் மீதும் படை எடுக்கவில்லை. வணிகம் ஒன்றையுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள். வணிகம் செய்தனர் அதைத் தவிர அவர்கள் வேறு நோக்கங்களைக் கொண்டிருக்கவில்லை. பல நாடுகளை வென்றனர் ஆனால் எந்த நாட்டையும் அடிமைப்படுத்தவில்லை.  அது தமிழனின் பலவீனம் அல்ல. அவர்கள் எல்லாரையும் வாழ வைத்தனர். எல்லாக் காலங்களிலும் அமைதியையே விரும்பினர்.

இப்போதும் கூட நாம் வீழ்ந்துவிடவில்லை. எத்தனையோ தடைகளைத் தாண்டி வந்திருக்கிறோம். பல துறைகளில் வெற்றியும் பெற்றிருக்கிறோம். நமது ஒவ்வொரு வெற்றிக்கும் நாமே காரணமாக இருந்திருக்கிறோம்.  யாருடைய உதவியும் இல்லாமல் பல தடைகளைத் தகர்த்தெறிந்திருக்கிறோம். அரசாங்கம் கோடிக்கணக்கில் தொழில் செய்பவர்களுக்குப் பண உதவிகள்  செய்தாலும் அது என்னவோ அரசியல்வாதிகளுக்குத் தான் போய்ச் சேருகிறது!

ஆக, இந்த வெற்றிகள் எல்லாம் எப்படி நிகழ்ந்தது? நாம் தொழில் செய்ய வேண்டும் என்கிற முயற்சி நம்மிடம் எப்போதும் உண்டு. தோட்டப்புறங்களில் அடிமை வாழ்க்கை தான். ஆனால் அங்கும் சிறு சிறு வியாபாரங்கள் நடந்து கொண்டு தான் இருந்தன. காலை நேரத்தில் பசியாறல்,  பசும்பால், நெய் விற்பனை, வீட்டிலிருந்தே மளிகைக்கடை வைத்து நடத்துதல், ஆடு மாடு விற்பனை,  ஆட்டிறைச்சி, காட்டுப்பன்றி இறைச்சி விற்பனை,  தையல் நிலையங்கள் - இவைகள் எல்லாம் நடந்து கொண்டு தான் இருந்தன. பட்டணங்களில் இருந்த ஆரவாரம் இங்கில்லை என்றாலும் எல்லாம் அமைதியாக வியாபாரங்கள் நடந்து கொண்டு தான் இருந்தன.

நமது வியாபார சிந்தனை என்பது நமது இரத்தத்தில் ஊறிப் போனது. அது எங்கோ ஒரு மூலையில் நம்மோடு ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது. தேவை எல்லாம் ஓரு தூண்டுதல், நாலு நல்ல வார்த்தைகள், கொஞ்சம் உற்சாகப்படுத்துதல் - இவைகள் தான் இன்றைய இளைய தலைமுறைக்குத் தேவை.  குடும்பத்தினரின் ஆதரவு இருந்தால் அதுவே அவர்களுக்கு  உற்சாகப்பானமாக அமையும். கணவனுக்கு மனைவி அணுசரனையாக இருந்தால் அது போதும் அவன் சாதனைகள் புரிய!

எப்போதும் ஞாபகத்தில் வையுங்கள். நாம் தாழ்ந்த சமுதாயம் அல்ல.  யாருக்கும் இளைத்த சமுதாயமும் அல்ல.  நாம் தொழிலில் தோற்ற சமுதாயம் அல்ல. வெற்றி பெற்ற சமுதாயம். இன்றும் வெற்றியை உலகிற்கு அறிவித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.  ஆனந்த கிருஷ்ணன், ஞானலிங்கம், டோனி ஃபெர்னாண்டஸ் - இவர்கள் எல்லாம் நம் கண் முன்னே நிற்கும் சான்றுகள். உள்ளூரில் இன்னும் பலர் இருக்கின்றனர். எல்லாமே நமக்கு எடுத்துக்காட்டுகள்.

இவர்கள் எல்லாம் மாபெரும் வெற்றியாளர்கள். அதற்காக பல ஆண்டுகள் உழைத்திருக்கின்றனர். வெற்றி சும்மா வருவதில்லை.  உழைப்பு தான் வெற்றி. 

அதனால் உங்களால் முடியாது என்று  எவனாவது சொன்னால் அவனைப் புறந்தள்ளுங்கள். உங்கள் வட்டத்தில் அவனைச் சேர்க்காதீர்கள்! அவன் ஆபத்தானவன்.

கடைசியாக ஒன்று சொல்லுகிறேன். நாம் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல. நாம் பலவீனமானவர்கள் அல்ல!

நாம் வெற்றியாளர்கள்!

Monday 12 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.......! (28)

 நாம் பார்வையாளர்கள் அல்ல!

நாம் எல்லாக் காலங்களிலும் சீனர்களின் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறோம். அதிசயப்பட்டிருக்கிறோம்.

ஆனால் ஒன்றை நாம் மறந்து விட்டோம். சீனர்களின் தொழில் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியமடைகிறோம் அல்லது அதிசயம் அடைகிறோம், எல்லாமே சரி தான்.  ஆனால் நாம் அவர்களைப் போல ஏன் அந்த அதிசயத்தைச் செய்ய மறுக்கிறோம்?  அது தான் எனக்குப் புரியவில்லை!

சீனர்கள் நம் கண் முன்னே சாதனைகள் புரிகிறார்கள் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால் அதனையே ஏன் நாம் ஒரு பாடமாக எடுத்துக் கொள்வதில்லை?

இதோ ஒரு பாடம்:  தோட்டமொன்றுக்கு சீனர் ஒருவர் வருகிறார். அவரிடம் உள்ளது எல்லாம் அவருடைய பழைய சைக்கிள் வண்டி, கையில் ஒரு உளி. அவருக்குத் தெரிந்த ஒரே திறன் என்பது  அந்த உளியைக் கொண்டு மரக்கன்றுகளுக்கு ஒட்டுக் கட்டுவது. 

அதற்காகத்தான் அவர் அந்த தோட்டத்திற்கு வந்திருந்தார்.  பார்ப்பதற்கு ஏதோ  பாவப்பட்ட மனிதர் போல இருப்பார். நல்ல மனிதராகவும் இருந்தார். தொடர்ந்து அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார்.   அவருடைய வேலை மேலிடத்திற்குத் திருப்திகரமாக அமைந்தது. வேலை முடியும் தருவாயில் அவர் பால் மரம் சீவும் குத்தகையை எடுத்தார். இப்போது "கான்ரேக்டர்" உயர்வு கிடைத்தது.  பிறகு அந்த தோட்டத்திலேயே அவருக்கு வியாபாரம் செய்ய மளிகைக்கடை ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டது. எல்லாமே சீராக ஓடிக் கொண்டிருந்தது.

அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள். அதில் மூன்று பேர் சொந்தமாக  பெட்ரோல் விற்பனை நிலையம்  வைத்து நடத்தினார்கள். பின்னர் பல்வேறு தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.அதில் ஒருவர் சிறிய ரப்பர் தோட்டம்  வாங்கி சொந்தமாகவே தொழிலைச் செய்கிறார்.

ஆனால் கதை பேசும் கில்லாடிகளான நமது மக்கள் அதையே சொல்லிச் சொல்லி ஏதோ ஒரு நகைச்சுவையாக பேசுவதைத் தவிர அதை ஒன்றும் பாடமாக எடுத்துக் கொள்ளவில்லை. காலங்காலமாக தோட்டத்தில் வேலை செயூம் நம்மவர்களுக்கு உளி என்பது புதிதா அல்லது ஒட்டுக்கட்டுவது என்பது புதிதா? ஆனால் ஒட்டுகட்டத் தெரியவில்லை!

முதல் தலைமுறை உளியோடு வந்தது. அடுத்த தலைமுறை பலவித தொழில்களுக்குத் தன்னை மாற்றியமைத்துக் கொண்டு நகர் பக்கம் நகர்ந்துவிட்டது. நாம்? முதல் தலைமுறை, அடுத்த தலைமுறை இன்னும் அடுத்த தலைமுறை - பால்வெட்டு, பால்வெட்டு வேறு எதுவும் தெரியவில்லை! தோட்டமே கதி!

நம்மைச் சுற்றியே நமக்கு நிறைய பாடங்கள் இருக்கின்றன. நாம் எதையுமே கற்றுக் கொள்ளவில்லை. ஓர் அடிமை வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனால் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துவது என்பது எளிதல்ல!

ஆம்! நாம் பார்த்துக் கொண்டே இருந்தது போதும்!  எல்லாக் காலங்களிலும் பார்வையாளர்களாக இருந்தது போதும். பார்த்தது போதும். இனி செயலில் இறங்குவோம்!


Sunday 11 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி...........! (27)

வளர்ச்சி பெற்ற சமுதாயமாக மாறுவோம்!


                                            (Tan Sri G.Gnanalingm - Westports Holdings Bhd.)
வளர்ச்சி என்பது என்ன? எப்படிப் பார்த்தாலும் அது கடைசியில் போய் முடிவது பொருளாதார வளர்ச்சி என்பதில் தான். பொருளாதார வளர்ச்சி தவிர்த்து வேறு எதனையும் வளர்ச்சி என்பதாக இன்றைய உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை!

அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியை நாம் வெறுமனே பாரவையாளராக பார்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை.

நாம் களத்தில் இறங்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் பலர் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் பெரும்பாலான மனைவியர் வேலை செய்பவர்களாக இருக்கின்றனர். அதுவே அவர்களுக்கு தொழிலில் இறங்குவதற்கு ஊக்கத்தை அளிக்கின்றது. ஓரளவு அவர்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பு இருக்கின்றது. அதுவே அவர்களுக்கு அதிகப் பலத்தையும் கொடுக்கிறது. 

இன்று நம்மிடையே உள்ள பெரிய பயம் என்பது "தொழிலில் தோற்றுவிட்டால்?" அடுத்த என்ன செய்வது என்பது தான் பயத்திலும் பெரும் பயம்.  உண்மை தான். குடும்பத்தை வைத்து சூதாட்டம் ஆட முடியாது!  ஆனால் குடும்பத்தில் ஒருவர் வேலையில் இருந்தால் அதுவே நமக்குச் சாதகமாக அமையும். ஏதோ ஒரு வகையில் நமக்கு வருமானம் வருகிறது என்கிற போதே நமக்குத் துணிச்சல் தானாகவே வந்து விடும்!

மனிதனாகப் பிறந்து விட்டோம். ஒரு வேளை நாம் ஏழ்மையான சூழலில் பிறந்திருக்கலாம். அது நமது குற்றம் அல்ல! ஆனால் ஏழையாக மட்டும் சாகக் கூடாது. அது நமது குற்றம்!  எப்படிப் பார்த்தாலும் அடுத்தக்கட்ட வளர்ச்சி நமக்கு இருக்க வேண்டும். பிறக்கும் போது வீடு இல்லை, வேலை இல்லை என்று பல குறைபாடுகள் இருக்கலாம்.  ஆனால் அந்த குறைபாடுகளைப் போக்கி அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு நம்மை நாம் நகர்த்திக் கொண்டு போக வேண்டும்.

அடுத்தக்கட்ட நகர்வு என்னும் போது ஒரு சொந்த வீடு, ஒரு வேலை நம்மை வளர்த்துக் கொள்ள சிறு முதலீடுகளைப் பெருக்கிக்கொள்ள  - இவைகள் எல்லாம் நமக்குத் தேவை  நம்மை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்ட செல்ல.  முதல் தலைமுறை ஏழ்மை, இரண்டாவது தலைமுறை ஏழ்மையை அகற்றல், வேலை அல்லது சிறு தொழில்களில் ஈடுபாடு. 

ஆனால் இரண்டாவது தலைமுறையே தொழிலில் ஈடுபாடு காட்டி தொழில் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். வழி வழி வணிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் சிறு முதலீட்டை வைத்துக் கொண்டே தொழிலுக்கு மாறி விடுகிறார்கள். 

எனக்குத் தெரிந்த ஒரு செட்டியார் குடும்பம். செட்டியார்கள் தோட்டத்தில் வேலை செய்ததை நான் பார்த்ததில்லை. தந்தை வயதானவர். நான்கு அண்ணன் தம்பிகள். முன்று பேர் பால் மரம் வெட்டும் வேலை. ஒராண்டு ஆன பின்னர்  பெரிய அண்ணன் மளிகைக் கடை ஆரம்பித்துவிட்டார். மற்ற இரண்டு பேர் இரண்டு ஆண்டுகளில் அவர்களும் தொழிலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். மூன்றமவர் மிக இளம் வயது. கல்வியில் கவனம் செலுத்தி இப்போது வெளிநாட்டில் இருக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டியது. அப்பா எப்படியோ நொடித்துப் போனார். அவருடைய மகன்கள் ஒரு சில ஆண்டுகளில் மீண்டும்  தங்களை வணிகம் சார்ந்த சமூகமாக மாற்றிக் கொண்டனர், தங்களை வளர்த்துக் கொண்டனர். தங்களைத் தோட்டத் தொழிலாளர்கள்  என்கிற அடையாளத்தை  அவர்கள் விரும்பவில்லை.

இது தான் வளர்ச்சி. ஏன் எப்போதும்  தொழிலாளர் பரம்பரை என்கிற அடையாளம்?  மற்றவர்கள் நமது சமூகத்தைப் பார்த்து பெருமைப் பட வேண்டும். ஏதோ ஒரு தொழில், ஏதோ ஒரு சிறு தொழில், ஏதோ ஒரு நேரடித் தொழில் என்று ஈடுபாடு காட்டி நமது தொழில் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.வளர வேண்டும். வளர்ச்சி அடைய வேண்டும்.

நமது வளர்ச்சி நமது சமூகத்தின் வளர்ச்சி! நமது சமுதாயத்தின் வளர்ச்சி!

Saturday 10 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி ..........! (26)

 இளைஞர்களே! கனவு காணுங்கள்!



இளைஞர்களே! கனவு காணுங்கள்!

நீங்கள் சாதாரணமாக அனுதினமும் காண்கின்ற கனவுகள் அல்ல. மேதகு அப்துல் கலாம் சொன்னது போல கனவு காணுங்கள்.

கனவுகள் வந்து போகும். நீங்கள் தூங்கும் போது வருவது கனவுகள் அல்ல. நீங்கள் காணுகின்ற கனவுகள் உங்களை விட்டு எந்த நிமிடமும் அகலக் கூடாது. அது தான் கனவு. உங்களைத் தூங்க விடாமல் சுற்றிச் சுற்றி உங்களை இலட்சியத்தை நோக்கி விரட்டியடித்துக் கொண்டிருப்பதான் கனவு.

தொழிலில் ஈடுபட்டவனுக்கு எது பெரிய கனவாக இருக்கும்?  செய்கின்ற தொழிலில் மேம்பாடு காண வேண்டும் என்பது சராசரி கனவு. ஆனால் அதைவிட மேலே உயரே பார்க்க வேண்டும்.

மேகங்களுக்குக் கீழே பறப்பது குருவிகளின் தன்மை. அதற்கு மேலே அவைகள் யோசிப்பதில்லை. ஆனால் இராட்சத பறவையான கழுகு மேகங்களுக்கு மேலே பறப்பதில் சுகம் காண்கின்றது. அது இவைகளின் தன்மை.

தொழில் செய்பவர்கள் முதலில் உங்கள் மாவட்டத்தில் உங்களின் நிலை என்ன என்று பாருங்கள். அடுத்து உங்கள் மாநிலத்தில் உங்களின் வளர்ச்சி எப்படி என்று பாருங்கள். 

நாம் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் விதி. ஆனால் நாம் யாருடனும் போட்டி வேண்டாம். போட்டி என்பது பொறாமையில் முடியும். அதுவும் தொழிலில் என்பது மிகவும் மூர்க்கமாக அது நம்மை நகர்த்திக் கொண்டு செல்லும். 

இன்று நாட்டில் மிகப் பெரிய பணக்காரர்கள் என்றால் இந்தியர்களில் இரண்டு மூன்று பேர் நமது ஞாபகத்திற்கு வருகிறார்கள். ஆனால் இவர்கள் யாருடனும் போட்டி போடவில்லை. தாங்கள் தேர்ந்தெடுத்த தொழிலில் அவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டார்கள்.  இன்னும் வளர்கிறார்கள்.

இளைஞர்களே! கனவு காணுங்கள்.  அது நீங்கள் செய்கின்ற தொழிலில் வளர வேண்டும், உச்சத்தைத் தொட வேண்டும் என்கிற கனவாக இருக்கட்டும். போட்டிகள் வேண்டாம். யார் மீதும் பொறாமை வேண்டாம்.

இந்த உலகில் ஒவ்வொருவரும் தங்கள் உச்சத்தை தொடர வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. யாரும் யாருடைய உரிமைகளையும் பறித்து விட முடியாது. தேவை எல்லாம் முயற்சி, உழைப்பு மட்டுமே.

இளைஞர்களே!  கனவு காணுங்கள்! தொழிலதிபர் என்கிற கனவு காணுங்கள். உங்களால் இந்த சமுதாயம் பயன் அடைய வேண்டும் என்று கனவு காணுங்கள்.

வாழ்த்துகள்!

Friday 9 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (25)

சுதந்திரம் என்பது தான் தொழில்!

நீங்கள் என்ன தான் பெரிய சம்பளம் வாங்கி பெரியதொரு நிறுவனத்தில் பதவியில் இருந்தாலும் உங்களுடைய நிலை என்ன?

முதலில் நீங்கள் சுதந்திரமாக இயங்க முடியாது!  உங்களுக்கு மேலே ஒருவன், அவருக்கு மேலே ஒருவன் - இந்த அடுக்கு இப்படித்தான் போய்க் கொண்டிருக்கும்! முடிந்ததெல்லாம் ஏதோ கீழ்மட்ட அப்பாவி ஒருவனை ஆட்டிப் படைக்க முடியும். அதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது!

ஒரு சிறு வியாபாரியாக இருந்தாலும் அவனுடைய நிலை என்ன? நிச்சயமாக அவன் உங்களை விட சுதந்திரமாக இயங்குகிறான்! அவன் எடுக்கும் முடிவு அவனுடையது. யாரும் அவனைக் கட்டுப்படுத்த முடியாது! இரவல் மூளையை அவன் கடன் வாங்கவில்லை! நல்லதோ, கெட்டதோ அவனுடைய முடிவு அவனுடையது!

இது தான் வியாபாரத்திற்கும் வேலை செய்வதற்கும் உள்ள வித்தியாசம்.

இங்கு நாம் வெறும் சுதந்திரத்தை மட்டும் பேசவில்லை. அந்த சிறு வியாபாரம் செய்கின்ற ஒருவர் நாளையே தனது தொழிலை பெரியதொரு வியாபாரமாக மாற்றி அமைக்க முடியும். அது அவருடைய முயற்சியைப் பொறுத்தது. இன்றைய ஒரு சிறிய வியாபாரி நாளையே நாடு போற்றும் பெரும் தொழில் அதிபராக மாற முடியும். அது அவருடைய உழைப்பு, எதிர்காலத் திட்டம் போன்றவை தீர்மானிக்கும்.

நாடு போற்றும் தொழில் அதிபர் டான்ஸ்ரீ வின்சன் டான் கையில் பணம் இல்லாத நிலையில் காப்புறுதி நிறுவனத்தில் ஒரு முகவராக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அங்கு கிடைத்த வருமானத்தைக் கொண்டு உணவகத் தொழிலுக்கு மாறினார். அதன் பின்னர் பல மாறுதல்கள், பல முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கொண்டு இன்று இந்நாடு போற்றும் தொழில் அதிபராக தன்னை மாற்றிக் கொண்டார்.

இப்படி பிரமாண்டமான மாற்றங்கள் வியாபாரங்களில் ஈடுபட்டவர்களால் தான் கொண்டு வர முடியும். வேலை செய்பவர்களால் ஒரு போதும் இந்த உச்சத்தை எட்ட முடியாது. ஏர் ஏசியா,  டான்ஸ்ரீ டோனி ஃபர்னாண்டஸ்,  துணிந்து விமானத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாதிருந்தால் அவர் தான் படித்த கணக்கியல் துறையோடு தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும்! ஆனால் இன்று நாடு போற்றும் ஒரு தொழில் அதிபராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தொழிலில் உங்களுக்குச் சுதந்திரமும் உண்டு. நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்கிற வழிகாட்டுதலும் உண்டு. சிறிய அளவிலும் உங்களை இணைத்துக் கொள்ளலாம். பெரிய அளவிலும் உங்களை வளர்த்துக் கொள்ளலாம். உங்களுக்குப் போதும் என்றால் நிறுத்திக் கொள்ளலாம்.  உங்கள் இலக்கை நீங்களே நிர்ணயித்தும்  கொள்ளலாம்.

இது தான் தொழில்!  சுற்றித்திரிய சுதந்திரமும் உண்டு!  சுற்றும்வரை சுகங்களும் உண்டு!

Thursday 8 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........(24)

 யார் அதிகம் கஷ்டப்படுகின்றனர்?


கோவிட்-19 காலத்தில் அதிகம் சிரமத்திற்குள்ளானவர்கள் உள்ளாகிறவர்கள்  யார் என்று பார்த்தால் வேலை செய்து பிழைப்பவர்களே அதிகம்.

வேலை செய்து பிழைப்பவர்கள் என்னும் போது கீழ்த்தட்டு மக்கள் மட்டும்  அல்ல மேல்தட்டு மக்கள், நடுத்தரத்தட்டு மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாருமே வேலை செய்து பிழைக்கும் மக்கள். காரணம் மாதம் முடிந்ததும் சம்பளம் கிடைத்து விடும். இப்போது அனைத்தும் நின்றுவிட்டன! வேலை இல்லை! தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுவிட்டன. வெளிநாட்டு நிறுவனங்கள் மூட்டைக் கட்டுகின்றன. உள்நாட்டு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கருணை காட்டும்படி கண்ணைக் கசக்குகின்றன! ஒரு பொறுப்பற்ற அரசாங்கத்திடம் நம்மை ஒப்படைத்துவிட்டோம்! பலனை அனுபவிக்க வேண்டியது நமது கடமையாகி விட்டது!

ஆனால்  சீனர்கள் அப்படி ஒன்றும் கடைகளைச் சாத்திவிட்டு ஓடிவிடவில்லையே! பெரிய நிறுவனங்கள் ஒரு வேளை  பாதிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் நடுத்தர நிறுவனங்கள் பெரிய பாதிப்பை எதிர்நோக்கவில்லை! என்னதான் ஊரடங்கு என்று சட்டம்  போட்டாலும் வீட்டில் சமைக்க வேண்டியுள்ளதே! சீனர்கள் தங்களது நிறுவனங்களை மூடிவிட்டு ஓடினால் சமைப்பது எப்படி?  ஆனால் மலேசியர்களான நாம் அதிர்ஷ்டசாலிகள். சீனர்கள், மலாய்க்காரர், இந்தியர் - அனைத்து இனத்தவரின் மளிகைக் கடைகள் திறந்திருப்பதால் மக்கள் பொருள்கள் வாங்குவதில் சிரம்பப்படவில்லை. ஆனால் பொருள்கள் தாரளமாகக் கிடைப்பது என்னவோ சீனர்களின் கடைகளில் தான்.

இங்கு நான் சொல்ல வருவது எல்லாம் தொற்று நோயினால் அதிகப் பாதிப்பு என்பது வேலை செய்து பிழைக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் தான்.  ஆனால் வியாபாரத்தில் உள்ளவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. எப்படியோ அவர்கள் அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள பல வழிகள் உள்ளன. பணம் தான் பிரதானம் என்றால் அதனை அவர்கள் புரட்டிக் கொள்ள முடியும்!

ஆனால் வேலையில் இருக்கும் கீழ்மட்டத்தினரின் நிலை என்ன? சொற்ப ஊதியத்தில் குடும்பத்தை நடத்தும் இவர்கள் என்ன தான் செய்வார்கள்? தினசரி சாப்பாடு, பிள்ளைகள், கல்வி - இப்படி பல அன்றாடக்  கடமைகள் இருக்கின்றன.  நல்ல வேளை இன்று பல நிறுவனங்கள் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு உதவியாக இருக்கின்றன. பட்டினி கிடந்து ஏதேனும் மரணங்கள் நேர்ந்ததா என்கிற விபரங்கள் நம்மிடம் இல்லை. அதனையும் எளிதாக மறைத்துவிடுவார்கள்!

எப்போதும் யாரையும் நம்பி இருக்காதீர்கள். வேலை, வேலை என்று அலையாதீர்கள். சிறு சிறு தொழில்கள் ஈடுபட்டாலும் நம்மால் பிழைத்துக் கொள்ள முடியும் என்பதை இந்த கொரோனா தொற்று காலத்தில் நாம் நேரடியாகவே பார்க்கிறோம்.

நிச்சயமாக சிறு தொழில்கள் உங்களுக்குக் கைக்கொடுக்கும். காலம் புராவும் உங்களுக்குக் கைக்கொடுக்கும். உங்கள் உயர்வுக்கு வழி வகுக்கும்.

Wednesday 7 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி...........! (23)

 பாதுகாப்பு என்பது எந்த வேலையிலும் இல்லை!

பாதுகாப்பு என்பது நாம் செய்யும் எந்த வேலையிலும்  இல்லை என்பதை இப்போது கண்கூடாகப் பார்க்கிறோம். அதுவும் குறிப்பாக இந்த கோவிட்-19 தொற்று நோயின் காலத்தில் நாம் என்ன அவஸ்தைப்படுகிறோம் என்பதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஒருவர் விமான ஓட்டுனர் ஆக வேண்டும் என்றால் அதன் படிப்பு, அதன் செலவு என்பதெல்லாம் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில் ஒரு இளைஞர் தொற்று நோய் காலத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதே வேலையில் இருந்த இன்னொரு மலாய் இளைஞர் சொந்தமாக சிறிய வணிகத்தில் ஈடுபட்டு பலகாரங்கள், மீ கோரெங் போன்றவற்றை விற்று தனக்கென ஒரு வழியைத் தேடிக் கொண்டார். விமானப் பணிப்பெண்ணாக இருந்த ஒருவர் வீட்டிலிருந்து கொண்டே கடைகளுக்குப் பலகாரங்கள் செய்து விற்பனை செய்து வருகிறார். நமது பெண்களில் பலர் தங்களது மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்து பத்தாய் காய், கீரை வகைகள்  போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். தேநீர் விற்கின்றனர். இன்னும் பல.

ஒர் உண்மையை இப்போது நாம் புரிந்து கொள்ள வேண்டும். வேலையை இழக்கும் காலக் கட்டத்தில் சிறிய வணிகங்கள் நமக்கு அரணாக இருக்கும் என்கிற உண்மை இப்போதும் சரி எப்போதும் சரி நமக்குப் பாடத்தைப் புகுட்டுகின்றன என்பது நமக்குத் தெரிகிறது.

என்னைக் கேட்டால் இதுவே சரியான தருணம். இப்போது நீங்கள் செய்கின்ற சிறு வணிகங்கள் உங்களின் பொருளாதாரத்தை உயர்த்துகிறதா? அப்படியென்றால் அதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. தொடருங்கள். இன்னும் உங்களின் வருமானத்தைக் கூட்ட முயற்சி செய்யுங்கள்.

எப்போதும் ஒன்றை நினைவிற் கொள்ளுங்கள். ஒரு தொழிற்சாலையில் வேலை செய்வதை விட இன்று நீங்கள் செய்கின்ற இந்த சிறு வணிகம் உங்களின் கௌரவத்தைக் கூட்டும்.  இன்னும் ஒரு படி மேலே போனால் அந்த தொழிற்சாலை முதலாளியின் ஒப்பிடும் அளவுக்கு நீங்களும் ஒரு தொழில் செய்கிறீர்கள் என்பது தான் உண்மை! ஒரே வித்தியாசம். அது பெரிய தொழில், இது சிறிய தொழில். ஆனால் ஆண்டுகள் கூடும் போது நீங்களும் அவர்கள் அளவுக்கு உயரலாம்! காரணம் அது தான் தொழில்! அது தான் வணிகம்! தொழில் உங்களை உயர்த்தும்!

அதனால் பாதுகாப்பு என்பது எந்த வேலையிலும் இல்லை. அப்படி பாதுகாப்பு இல்லையென்பதால் தான்  நாம் வேலை செய்கின்ற இடங்களில் போட்டி, பொறாமை, கோள்சொல்லுதல், காட்டிக்கொடுத்தல் - இவைகளெல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன! இதனால் என்ன ஆகிறது? மனநிம்மதி இல்லை. வேலையில் நாட்டம் செலுத்த முடிவதில்லை. மாதத் தவணைகளைக் கட்டியாக வேண்டுமே என்று தலையலடித்துக் கொண்டு வேண்டா வெறுப்பாக வேலையைத் தொடர வேண்டியுள்ளது.  ஆக வேலை செய்து பிழைப்பதிலும் அப்படி ஒன்றும் 'ஆகா, ஓகோ'  என்று சொல்லுவதற்கில்லை! 

முடிந்தவரை சிறு தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் அது நமது தொழில், நமது வருமானம், நமது சம்பாத்தியம், நாம் தான் முதலாளி என்கிற அந்த கௌரவம் நம்மைத் தலை நிமிர வைக்கும். மக்களிடையே நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும். எந்த நேரத்திலும் தொழிலை வளர்த்தெடுக்க முடியும்.

ஆக, வேலை செய்வது தான் பாதுகாப்பு என்கிற மாயையை உடைத்தெறிவோம்!

Tuesday 6 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (22)

 குடும்பத் தொழிலாக மாற்றுங்கள்


குடும்பத் தொழிலை தொடர்ச்சியாக அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் தமிழர்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரே முன் நிற்கின்றனர்.

தொழில் ஆரம்பிக்கப்படுகின்ற காலக் கட்டத்தில் நாம் ஒருவரே வேர்வையைச் சிந்தி தொழிலை வளர்க்க வேண்டிய நிலையில் இருப்பதில் வியப்பில்லை.  அதில் ஒன்றும் மாற்றமில்லை.  ஆனால் அப்படி வியர்வைச் சிந்தி வளர்க்கப்பட்ட தொழில் ஒரு தலைமுறையோடு தலைமறையாகி விடுமானால் அதில் எந்தப் பயனுமில்லை.

நான் படித்த, வளர்ந்த நகரை இப்போது திரும்பிப் பார்க்கின்ற போது அதிர்ச்சியைத்தான் காண முடிகிறது. அங்கு தமிழர்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பெரிய தொழில்கள், நடுத்தர தொழில்கள் அனைத்தையும் காணோம்! மறைந்து போயின!

என்ன ஆயிற்று?  அவர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தார்கள். படித்த பின்னர் வேலைகளுக்குப் போய்விட்டார்கள். காரணம் "நான் பட்ட கஷ்டம் என் பிள்ளைகள் படக்கூடாது!" என்கிற மாபெரும் தத்துவம் அவர்களை முடக்கிப் போட்டுவிட்டது! வேலை செய்யும் அவன் படுகிற கஷ்டம் அவனுக்குத்தான் தெரியும்!

அதே சமயத்தில் சீன சமுதாயத்தைப் பார்க்கிறேன். முதல் தலைமுறை செய்த தொழிலை இப்போது பேரப்பிள்ளைகள் வரை சென்றுவிட்டது. இன்னும் தொடர்கிறது.  ஏன் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கவில்லையா?  அவர்கள் வெளி நாடு சென்று பெரிய படிப்பை படித்துவிட்டு இப்போதும் அவர்களின் தொழிலைத் தொடர்கிறார்களே!

நான் வளர்ந்த அந்த காலகட்டத்தில் மூன்று நிறுவனத்தினர் மட்டும் இன்னும் தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்று தங்க விறபனையில் உள்ளவர்கள் இன்னொன்று துணிமணி  விற்பனை செய்பவர்கள். ஒன்று இஸ்லாமியக் குடும்பம் இன்னொன்று செட்டியார் குடும்பம். இன்னொன்று அழகு பொருள்களை விற்பனை செய்யும் குஜாராத்தி குடும்பம்.மற்றவர்கள் இருந்த அடையாளமே இல்லை! அனைவரும் தமிழர்கள் என்பது தான் இதில் ஆச்சரியம்.

ஒரே வித்தியாசம். அப்போது பார்த்த அவர்கள் யாரும் இப்போது இல்லை. இப்போது புதிய தலைமுறையிடம் தங்களது தொழிலை ஒப்படைத்து விட்டார்கள். தொழில் தொடர்கிறது. இப்போது நடத்துபவர்கள் அனைவரும் படித்த பட்டதாரிகள். தொழிலை இன்னும் விரிவுபடுத்துவதில் தீவிரம் காட்டுகிறார்கள். முதலீடுகளை இன்னும் அதிகப்படுத்துகிறார்கள். இதற்கெல்லாம் படிப்பு தேவை தானே?

நாம் படிப்பு என்பதையே வேறு ஒரு கோணத்தில் பார்க்கிறோம். படிப்பதே வேலை செய்வதற்குத்தான் என்கிற ஒரு மனோநிலையை உருவாக்குகிறோம்! அவர்களோ படித்தால் தொழிலை இன்னும் வெற்றிகரமாக நடத்தலாம் என்கிற மனோநிலையை உருவாக்குகிறார்கள்!

எப்படியோ நாம் செய்கின்ற இப்போதைய தொழில்கள் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். தொழிலை இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டும். அது அடுத்த தலைமுறையினரிடம் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட வேண்டும்.

Monday 5 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி......,..! (21)

 சிறு தொழில்களில் கவனம்  செலுத்துங்கள்

                                  

Saturday 3 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி...........! (20)

 ஒரு சில படிப்பினைகள்

 
வெற்றி பெற்ற ஒரு  சிலரை நான் பார்த்திருக்கிறேன்.  அவர்களிட அசாத்தியமான சில பண்புகள் இருக்கின்றன.  எங்கு கற்றார்கள், எங்கிருந்து அதனைப் பெற்றார்கள், அதன் மூலம் என்ன என்பதெல்லாம் நமக்குப் புரியாத புதிர்.

எனக்குத் தெரிந்த உறவு முறைகளில் ஒருவரிடம் இந்த அசாத்தியமான குணம் இருப்பதைக் கண்டு அயர்ந்து போனேன்! அவர் பல பேருந்துகள், லோரிகள், உணவகங்களுக்குச் சொந்தக்காரர். அவருடைய ஆரம்பம் என்பது காரில் பின்னால் கய்கறிகளை வைத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று வியாபாரம் செய்தவர். அவருடைய வளர்ச்சி என்பது பெருமைப்படத்தக்கது. அந்த வளர்ச்சி  சும்மா வந்துவிடவில்லை.  கடும் உழைப்பு. உழைக்க அஞ்சாதவர். 

இவரிடம் ஒரு பழக்கம். இவர் தனது வாடிக்கையாளர்களிடம் ஜப்பானியரைப் போல குனிந்து வணங்குவார்!  இயற்கையாகவே அவரிடம் அந்த பழக்கம் இருந்தது. ஒரு வேளை ஜப்பானியரைப் பார்த்து அவருக்கு அந்த பழக்கம் வந்ததா தெரியவில்லை! அந்த பணிவை மக்கள் விரும்பினர் என்பது மட்டும் உண்மை. அவ்ருக்கு உயர்வைத் தந்தது என்பதும் உண்மை.

எனது நண்பர் ஒருவர் பல லோரி டேங்கர்களை வைத்திருப்பவர். அவருடைய அந்த டேங்கர்கள் தினசரி ரப்பர் பால் ஏற்றிக் கொண்டு துறைமுகம் செல்ல வேண்டும்.  சமயங்களில் அவருடைய ஓட்டுனர்கள் தீடீரென்று வேலைக்கு வராமல் போய் விடுவர். நண்பர் களத்தில் இறங்கிவிடுவார். அவரே ஓட்டுனராக மாறிவிடுவார்.  இது ஒன்றும் அதிசயம் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருந்தவர் அவர். அப்படி செய்வது அதிசயம் தானே!

எனது சீக்கிய நண்பர்  ஒருவர் தோட்டத்தில் மருத்துவ உதவியாளராக இருந்தவர். அவருடைய தந்தையார்  டெக்சி ஓட்டுனராக இருந்தவர். அவர் தந்தையாரின் மரணத்திற்குப் பின்னர் தனது வேலை முடிந்ததும்  டெக்சி ஓட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார். வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதனையே முழு நேரமாக எடுத்துக் கொண்டார்.

ஒரு சிலருக்கு நாம் எதிர்பார்க்காத சில குணாதிசயங்கள் உண்டு. எதற்கும் அஞ்சுவதில்லை.  எதற்கும் பயப்படுவதில்லை. யார் என்ன சொல்லுவார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஊர் என்ன சொல்லும் ஊர் என்ன பேசும் என்பது பற்றி அவர்களுக்குப் பெரிதாகப் படுவதில்லை.

நமது பாதை சரியாக இருந்தால் எல்லாம் சரியானதே!



 பார்த்திருக்கிறேன். 

Friday 2 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (19)

சிறிய அளவில் செய்வது பாதுகாப்பாக இருக்கும்!

தொழிலை ஆரம்பிக்கும் காலக்கட்டத்தில்  முடிந்தவரை முதலீடுகளைக் குறைத்துக் கொள்வது பாதுகாப்பாக இருக்கும். அதுவும் முதல் தலைமுறையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இது பணம் சம்பந்தப்பட்டது. இருக்கிறதையெல்லாம் அள்ளிப் போட்டு விட முடியாது. இது அனுபவம் இல்லாதவருக்குக் கொடுக்கின்ற எச்சரிக்கை. அனுபவம் உள்ளவர்கள், தங்கள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் - இவர்களெல்லாம் விதிவிலக்குகள். எது நேர்ந்தாலும் இவர்களால் எதிர் நோக்க முடியும்.

தொழிலைச் செய்து கொண்டே அனுபவத்தைப்  பெறுபவர்களும் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி பயம் இல்லை. அவர்களிடம் எச்சரிக்கை உணர்வு இருக்கும்.

எப்படிப் பார்த்தாலும் முதன் முதலில் தொழிலில் ஈடுபடுபவர்கள்  முதலீடுகளை முடிந்தவரை சுருக்கிக் கொள்ள வேண்டும். அதுவே நலம் பயக்கும்.

இன்னொன்றை  நாம் குறிப்பிட வேண்டும். பணம் உங்கள் கையில் இருப்பில் அல்லது வங்கியில் இருக்கிறது என்கிற ஒரு விஷயமே உங்களை எதுவும் பயமுறுத்தாது.  தொழிலில் மேடு பள்ளம் இருந்தாலும் அந்த இருப்பு உங்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். முடிந்தவரை கையிருப்பில் கை வைக்காமல் வருகின்ற வருமானத்தில் தொழிலை நடத்துவது என்பதே சிறப்பு.

தொழிலில் அனுபவம் கிடைத்துவிட்டது என்கிற நம்பிக்கை வந்துவிட்டால்,  தொழிலை மேலும் வளர்ச்சி பெற செய்ய  வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால், கடன் பெற முயற்சி செய்யுங்கள். வங்கியில் கடன் அல்லது அரசாங்க அமைப்புக்களிலிருந்து கடன் பெறுவது எல்லாம் எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் உங்கள் இருப்பில் உள்ள பணத்தில் மட்டும் கைவைக்காதீர்கள். அது உங்களுக்கு ஒரு பாதுகாப்பு.

ஒரு சீன இளைஞனை எனக்குத் தெரியும்.  கைபேசி தொழிலில் ஈடுபட்டிருந்தான். பணம் பற்றாக்குறை. கடன் அட்டைக்கு விண்ணப்பித்து அதுவும் கிடைத்தது. எவ்வளவு பணம் எடுக்க முடியுமோ அவ்வளவு பணத்தையும் எடுத்து தொழிலில் முதலீடு செய்தான். கடனுக்கான பணத்தையும் வட்டியையும்  கட்டி வந்தான். பிரச்சனையைத் தீர்த்துக் கொண்டான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் சீனர்களுக்குத் தொழில் என்பது பிழைப்பு. இந்தியர்களுக்கு அது இன்னும் முழுமையான பிழைப்பாக கொண்டு வர முடியவில்லை!

கையில் இருப்பு என்பது ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. அதுவும் முதல் தலைமுறையினருக்குப் பாதுகாப்பு உணர்வு தேவை.

வெற்றி பெறுவோம்!



 குறைத்துக்

Thursday 1 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (18)

சிறு தொழில்கள் செழிக்க வேண்டும்!

                                    இந்திய இளம் தொழில் முனைவர் மாநாடு

தொழில், யார் வேண்டுமானாலும் செய்யலாம். வயது வித்தியாசம் இல்லை. ஏழை பணக்காரர் இல்லை.

யாருக்குத் துணிச்சல் இருக்கிறதோ அவர்கள் தொழில் செய்யலாம். முக்கியத் தேவை என்பது துணிச்சல் தான்.

முதலீடு என்பது தானே முக்கியம் என்று  சொன்னாலும் அதற்கும் துணிச்சல் தான் தேவை. கையில் காசு இல்லை அவர் எப்படி தொழில் செய்ய முடியும்?

அதற்கும் நமக்கு முன்னோடிகள் இருக்கிறார்கள்! இன்றும் அது நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் விசேஷம்! 

காலையில் கடன் வாங்குவார்கள். தேவையான பொருள்களை  வாங்குவார்கள்.  வாங்கிய பொருள்களை விற்பனை செய்வார்கள். அதாவது இலாபத்திற்கு விற்பார்கள். அன்று மாலை வட்டியோடு கடனை அடைப்பார்கள். அடுத்த நாள் காலை மீண்டும் கடன், மாலை கடனடைத்து இலாபத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் அடுத்து நாள் அதே நடைமுறை.

இப்படி வியாபாரம் செய்பவர்கள் ஆயிரக்கணக்கில் நம்மிடையே இருக்கிறார்கள். இப்படியே தொழில் செய்து வெற்றிகரமான  முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கையில் துட்டு வந்ததும் அவர்களே பிறருக்குப் கடன் கொடுப்பார்கள்! வேண்டியதெல்லாம் அசாத்தியமான துணிச்சல்!

சிறு தொழில் செய்பவர்கள் அதுவும் அன்றாடம் வட்டிக்கு வாங்கி வியாபாரம் செய்யும் இவர்களுக்குத் துணிச்சலைத் தவிர வேறு என்ன முதலீடு தேவை.

எப்படியெல்லாம் வியாபாரம் செய்கிறார்கள், எப்படியெல்லாம் முதலீடுகளைப் பெறுகிறார்கள் என்பதை நோக்கினால் நாம் மலைத்துப் போவோம்!

துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை என்பார்கள். வியாபாரம் செய்வதே ஒரு துணிச்சல் தான். அதுவும்  கையில் காசில்லாமல் வட்டிக்குக் கடன் வாங்கி வியாபாரம் செய்கிறார்களே இவர்களின் துணிச்சலை யாருடன் ஒப்பிடுவது?

ஆக, எல்லாவற்றுக்கும் ஒரு வழி இருக்கின்றது. அதையெல்லாம் நமக்கு முன்பே கண்டுபிடித்து விட்டார்கள்! காசும் பார்த்து விட்டார்கள்! பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்!

ஏற்கனவே கவியரசு கண்ணதாசன் பாடிவிட்டுப் போயிருப்பதை ஞாபகப்படுத்துவதா? "வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்!" அது போதுமே!  இன்னும் வேண்டுமென்றால் "துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை!" என்பதையும்  சேர்த்துக் கொள்ளுங்கள்!

ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இன்று சிறு தொழில் செய்பவர்கள் தான் நாளை பெரும் தொழில்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அதற்கான துணிச்சல் அவர்களிடம் உண்டு. பயிற்சி உண்டு. பிரச்சனைகளை எதிர்நோக்கும் ஆற்றல் அவர்களிடம் உண்டு.

சிறு தொழில்கள் செழிக்க வேண்டும். சீனர்கள் ஏன் சிறு தொழில்களைக் கூட விட்டுவைப்பதில்லை? அதிலுள்ள வருமானம் தான். ஓர் அலுவலகத்தில் வேலை செய்பவரின் வருமானத்தையும் ஒரு சிறு தொழில் செய்யும் வியாபாரியின் வருமானத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பது புரியும்.

சிறுசோ பெருசோ வியாபாரத்திற்கு ஈடு இணை இல்லை!