Saturday 31 December 2016

விடை கொடுப்போம்..!

இன்றோடு 2016-ம் ஆண்டு ஒரு முடிவுக்கு வந்து விட்டது. நாளை முதல் புதிய ஆண்டு. புதிய தொடக்கம்.புதிய புத்துணர்ச்சி. ஆண்டு புதிது. நாமும் புதிய மனிதனாக நம்மை மாற்றிக் கொள்ளுவோம்.

சென்ற ஆண்டைத்  திரும்பிப் பார்க்கும் போது எத்தனையோ செயல்கள். நாம் விரும்பியது, நாம் விரும்பாதது, நமக்குப் பிடித்தது, நமக்குப் பிடிக்காதது, நாம் சாதிக்க நினைத்தது, நாம் சாதிக்க முடியாமற் போனது என்று இழுத்துக்கொண்டே போகலாம்.

நம்மால் என்ன சாதிக்க முடிந்ததோ அதற்காக மகிழ்ச்சியடைவோம். நாம் எதிர்பார்த்தது நிறைவேறியதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லுவோம்.

நமது சாதனைகளுக்காக நன்றி! நாம் சாதித்தவைகளுக்காக நன்றி! நன்றி! சென்ற ஆண்டு நிறைவேறாமல் போனவைகளுக்காகவும் நன்றி சொல்லுவோம்! காரணம் நாம் சாதிக்கவில்லை என்றால் அது நமக்கு ஒரு பாடம். அது ஒரு பயிற்சி.

இந்த ஆண்டும் நாம் என்ன சாதிக்க வேண்டும் என்னும் ஒரு பட்டியலை வைத்திருப்போம். சென்ற ஆண்டு சாதிக்க முடியாததை இந்த ஆண்டு மீண்டும் முயற்சி செய்வோம்.

சென்ற ஆண்டு நாம் சாதிக்க முடியவில்லை என்றால் அதனை நாம் அனுபவமாக எடுத்துக் கொள்ளுவோம். முயற்சி செய்தோமோ அதுவே ஒரு சாதனை தான்! முயற்சி தான் முதல் படி. வெற்றிபெறவில்லையானாலும் அந்த அனுபவத்தின் மூலம் பல அனுபவங்களைப் பெற்றிருப்போம். அந்த அனுபவங்கள் தான் வருகின்ற ஆண்டு நாம் பெறப்போகும் வெற்றி.

சென்ற ஆண்டு நடந்தவைகள் அனைத்தும்  நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ளுங்கள். எது நடந்தாலும் அது நன்மைக்கே! தோல்வியாக இருந்தால் என்ன? அதன் மூலம் நல்லதொரு படிப்பினை நமக்குக் கிடைத்திருக்கும்.

தோல்வி என்று எதுவும் இல்லை.  அந்தத் தோல்வியுலும் ஏதொ ஒரு வெற்றி ஒளிந்து கொண்டிருக்கும். அதனை அலசி ஆராய்ந்தால் உங்கள் தோல்வியே உங்களுக்குக் கிடைத்த வெற்றியாகத் தெரிய வரும்!

எல்லாமே நமது எண்ணங்களில் தான் அடங்கி இருக்கிறது. வெற்றி என்றால் வெற்றி! தோல்வி என்றால் தோல்வி! தோல்வி என்றால் ஓர் அனுபவம். அது தான் உங்களை வெற்றிக்கு இட்டுச் செல்லும். எடுத்த எடுப்பில் யாருக்கும் வெற்றிகள் குவிந்து விடாது. எந்த முயற்சியாக இருந்தாலும் முதலில் தோல்வி தான் முட்டுக்கட்டையாக வந்து நிற்கும். அதன் பிறகு தான் வெற்றி தலையை நீட்டும்!

ஆக, சென்ற ஆண்டுக்கு விடை கொடுப்போம்! வருகின்ற ஆண்டை கை நீட்டி வரவேற்போம்! அத்தோடு,  வெற்றியே வருக! வருக!

Friday 30 December 2016

கேள்வி - பதில் (40)


கேள்வி

சசிகலா முதல்வர் ஆவாரா...?

பதில்

பொதுவாக அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளர் தான் தமிழக முதல்வர் ஆகலாம்.  அது தான் கட்சியின் பாரம்பரியம்.

இந்த பாரம்பரியம் தொடரலாம் அல்லது தொடராமலும்  போகலாம்.. அரசியலில் எதுவும் நடக்கலாம். ஆனால் இப்போதைக்கு இது தொடரும் என நிச்சயம் நம்ப வேண்டும். காரணம் இப்போது சசிகலா தான் பொதுச் செயலாளர்.

ஆனாலும் பெரும்பாலானோர் பன்னிர்செல்வம் தான் முதல்வர் ஆவார் என்று நினைத்தனர். ஆனால் அது நடக்கவில்லை!

ஆனால் இதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படத் தேவை இல்லை! இந்த இருவரில் யார் வந்தாலும் தமிழ் நாட்டுக்கு ஆகப்போவது எதுவும் இல்லை!

இவர்கள் நினைப்பதெல்லாம் அடுத்த தேர்தல் வரை யார் முதல்வர் என்பது தான். அது தான் இப்போதைய போட்டி. அடுத்த தேர்தலக்குப் பிறகு எதுவும் நடக்கலாம். ஆட்சி பறி போகலாம். இவர்கள் இருவருக்குமே அ,தி,மு.க. தொண்டர்களிடம் எந்த மதிப்பும் மரியாதையும் இல்லை. இன்னும் நான்கரை ஆண்டுகளில் கட்சியை இவர்கள் வளர்ப்பார்கள் - இவர்களால் வளர்க்க முடியும் - என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வெறும் சினிமா நடிகர்களை வைத்தெல்லாம் கட்சியை வளர்த்து விட முடியாது!

இப்போது - இந்த நிமிடம் - கையில் இருப்பது அடுத்த நாலரை ஆண்டுகள். அதனை நோக்கித்தான் சசிகலா காய்களை நகர்த்துவார்! அவர் நகர்த்துகிறாரோ இல்லையோ அவருடைய மன்னார்குடி மன்னர்கள் அவரை நகர்த்த வைப்பார்கள்!

இவர் காலத்தில் தமிழ் நாடு 'ஆகா! ஒகோ!' என்று வளர்ந்து விடும் என்பதையெல்லாம்  நாம் மறந்து விட வேண்டும்.

ஆட்சியில் இல்லாத போதே இசையமைப்பாளர் கங்கை அமரனின் சொத்துக்களை அபகரித்தவர் சசிகலா! ஆக, அடுத்த நாலரை ஆண்டுகள் எதனை நோக்கிப் போகும் என்பதை இதனை வைத்தே ஒரளவு ஊகித்துக் கொள்ளலாம்!

இருப்பினும் எதனையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. நல்லதும்  நடக்கலாம். தீடீரென அவர் திருந்தலாம். நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டுமென்று நினைக்கலாம்!

இப்படி எத்தனையோ ...லாம்...லாம்....லாம்....! ஆம்! சசிகலா தான் முதல்வர்! நடக்கட்டும் நல்லாட்சி!

Friday 23 December 2016

RM 50 மில்லியன் வெள்ளியைக் காணோம்!


சீன ஆரம்பப்  பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வெள்ளி 50 மில்லியனைக் காணோம்!

2016-ம் ஆண்டு பட்ஜெட்டில் சீன  ஆரம்பப் பள்ளிகளுக்காகாக ஒதுக்கப்பட்ட 50 மில்லியனைக் காணோம் என்பது தான் இப்போதைய பரப்பான செய்தி!

நம்மைப் பொருத்தவரை நாம் பல ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளிக்கூடங்களுக்கு ஒதுக்கப்பட்ட -  பணமாக இருந்தாலும் சரி, நிலமாக இருந்தாலும் சரி -  பல காணோம்களை   நாம் கண்டுவிட்டோம்.

ஆனால் சீனப்பள்ளிகளைப் பொருத்தவரை இப்போது தான் முதன் முதலாக பெரியளவில் பேசப்படுகிறது! இது போன்று காணாமல் போவது முதல் தடவையாகக் கூட  இருக்கலாம்!

இந்தக் காணாமல் போவதில் ஒரு பெரிய வித்தியாசமுண்டு. தமிழ்ப்பள்ளிகளைப் பொருத்தவரை காணாமல் போனால் போனது தான்!  அதற்குக் காரணமானவன் ஆளுங்கட்சியில் உள்ள தமிழனாகத்தான் இருப்பான்! அவனுக்கு மொழியைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை! காரணம் அவன் தாய்ப்பால் குடிக்காமல் 'தண்ணி அடிச்சே'  வளர்க்கப்பட்டவன் என்பதால் தாய்மொழி பற்றெயெல்லாம் துறந்தவனாக இருப்பான்!




                (அரசாங்கம் கட்டிய இருபது இலட்சம் வெள்ளி தமிழ்ப்பள்ளி)


 சீனர்கள் நிலை வேறு.  அவர்கள் தங்கள் தாய்மொழியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.இன்று நாட்டில் சீனப்பள்ளிகள் தான் எல்லா இனப் பெற்றோர்களும் விரும்பும் பள்ளிகளாக இருக்கின்றன. சிறப்பான கல்விக்கு அவர்கள் தான் முதலிடம்.

காணாமல் போன பணம் அப்படியே ஓடிவிடாது! அவர்கள் அதனைத் தேடிக் கண்டுபிடித்து விடுவார்கள்!

இன்று  இந்தப் பிரச்சனையை எதிர்கட்சியில் உள்ளவர் கொண்டுவந்தாலும் அவரைத் தூண்டிவிட்டதே ஆளுங்கட்சியில் உள்ள சீனராகத்தான் இருப்பார்! இது போன்ற பிரச்சனைகளில் அவர்கள் கமுக்கமாக காதும்-காதும் வைத்தால் போல நடந்து கொள்ளுவார்கள்.

ஆனாலும் பயப்பட ஒன்றுமில்லை! அப்படி ஒன்றும் ஏமாந்த சோணகிரிகளோ - ஏமாளிகளோ அல்ல சீனர்கள்! பணம் கைக்கு வரும்வரை அவர்கள் விடமாட்டார்கள்!

இப்படிக் கையாடல் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

இளைஞனே! நீ வெற்றி பெறுவாய்!


இளைஞனே நீ வெற்றி பெறுவாய்!  நீ வெற்றி பெற வேண்டும். நீ தான் நமது சமுதாயத்தின் சொத்து. நீ தான் இந்தச் சமுதாயத்தை தூக்கி நிறுத்த வேண்டும்.

உன் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு, நீ வெற்றி பெறுவாய் என்பதில் எனக்கு ஐயமில்லை.

காலையில் ஒரு இளைஞனைச் சந்தித்த போது எனக்கு அந்த நம்பிக்கை பிறந்தது.  துடிப்பான இளைஞன். அப்படித்தான் நமது இளைஞர்கள் இருக்க வேண்டும்.

ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அந்த இளைஞன் படிவம் ஆறு முடித்ததும் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பம் போட்டான். அரசாங்கத் தரப்பிலிருந்து எந்த நல்ல செய்தியும் கிடைக்கவில்லை. அரசாங்கம்,  இந்தியர்கள் என்றாலே ஒதுக்குவதும் அலட்சியம் படுத்துவதும் நமக்குத் தெரிந்தது தானே!

வேறு வழியில்லாமல் தனியார்ப் பல்கலைக்கழகத்தில் சேர வேண்டிய ஒரு கட்டாயம் அந்த இளைஞனுக்கு. சேர்ந்த பிறகு ஏதேனும் கல்விக்கடனுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்னும் நம்பிக்கையோடு சேர்ந்தான். ஓர் ஆண்டு தான் அவனால்   கட்டணம் கட்ட  முடிந்தது. எந்தவிதக் கல்விக்கடனும் கிடைத்தபாடில்லை.

வேறு வழியில்லை.. படிப்பைபைத் தொடர முடியவில்லை. கல்விக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ' முதலில் பணம் சம்பாதிப்போம். பிறகு உயர்கல்வியைப் பற்றி யோசிப்போம்' என்று முடிவெடுத்து ஒரு வேலையைத் தேடிக் கொண்டான். ஆனாலும் கல்வியைத் தொடர வேண்டும் என்னும் அந்த எண்ண்த்தை மனதிலிருந்து அவனால் அகற்ற முடியவில்லை.

அப்போது தான் அவன் கண்ணில் பட்டது OPEN UNIVERSITY.  சரியானத் தகவல்களைத் தெரிந்து கொண்டு உடனடியாகச் சேர்ந்து விட்டான் அவனது கல்வியைத் தொடர. இப்போது வேலையைச் செய்து கொண்டே கல்வியைத் தொடர்ந்து விட்டான்.

இதில் என்ன அதிசயம் என்று நினைக்கத் தோன்றும். இப்போது நமது இளைஞர்கள் மிக எளிதில் சோர்ந்து போய் விடுகிறார்கள். முதல் முயற்சியிலேயே அனைத்தும் தங்களது காலடியில் விழுந்துவிடும் என்று நினைக்கிறார்கள்!

அப்படியெல்லாம் ஒன்றும் விழுந்துவிடாது! ஒரு முயற்சி அல்ல. பல முயற்சிகள். யாருமே முதல் முயற்சிலேயே வெற்றிபெற்று விடுவதில்லை. அது கல்விக்கும் பொருந்தும். மேலே சொன்ன அந்த இளைஞனைப் போல விடாமுயற்சி  வேண்டும். பணம் இருந்தால் வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடரலாம். பணம் இல்லாதவர்கள்?  இப்படித்தான் பல முயற்சிகள் செய்து கல்வியைத் தொடர வேண்டும். அதற்குக் கடுமையான உழைப்பு வேண்டும்.

ஒரு நம்பிக்கை எனக்குத் தோன்றுகிறது. நமது  இளஞர்கள் சரியான பாதையை நோக்கித் தான் செல்லுகிறார்கள். பட்டதாரியாக வேண்டும் என்னும் அந்த இலட்சியம் எல்லா இளைஞர்களிடமும் கனன்று கொண்டு தான் இருக்கிறது.

நமது இளைஞர்கள் வெற்றி பெறுவார்கள்! இந்த சமுதாயம் வெற்றி பெறும். நாம் வெற்றி பெறுவோம்!

Wednesday 21 December 2016

ஏன் தண்ணிர் தட்டுப்பாடு?

நம் நாட்டில் தண்ணீர் தட்டுப்ட்டிலும் சமயம் புகுந்து விடுகிறதோ என்னும் சந்தேகம் நமக்கு வலுக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் பெருநாள் காலங்களில் தண்ணிர் தட்டுப்பாடு வந்துவிடுகிறது!

தீபாவாளி வருகிற போது தண்ணீர் தட்டுப்பாடு வந்து விடுகிறது. கிறிஸ்துமஸ் பெருநாள் வருகின்ற போது தண்ணீர் தட்டுப்பாடு வந்து விடுகிறது.

நாடு முழுவதும் இல்லையென்றாலும் ஆங்காங்கே ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் அதை எப்படி - என்னவென்று சொல்லுவது?

அரசாங்கம் தான் இதனைச் செய்கிறது என்று நாம் சொல்லவில்லை. ஆனால் அரசாங்கத்தின் மீது தான்  பழி போகிறது என்பதைத் தான் நாம் சொல்ல வருகிறோம்.




பலரின் முணுமுணுப்புக்களை இது போன்ற காலங்களில் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்.

"தீபாவளி வந்தாதான் தண்ணீர் தட்டுப்பாடு வரும்! இதுவரை சும்மா இருந்துவிட்டு இப்ப தான் எல்லா வேலையும் செய்வானுங்க!" என்று நாமே பல முறை முணுமுணுத்திருக்கிறோம்.

ஒரு உண்மையை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது ஏன் - குறிப்பாக விழா காலங்களில் மின்சார வாரியம் தனது பழுது பார்க்கும் வேலையையோ அல்லது சுத்திகரிப்பு வேலையையோ அல்லது சீரமைப்பு வேலைகளைச் செய்வது ஏன்? அதுவும் குறிப்பாகத் தீபாவளி, கிறிஸ்துமஸ் காலங்களில்?

விடுமுறைக் காலங்களில் வேலை செய்தால் மூன்று மடங்கு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்னும் காரணமாயிருக்குமோ? நமக்குத் தெரியவில்லை!  பண்டிகை நாள்கள் இல்லாத காலங்களில் இந்த வேலைகளைச் செய்யலாம். மக்களுக்குப் பிரச்சனைகள் இல்லாத காலங்களில் வேலைகளைச் செய்யலாம்.  ஒவ்வொரு ஆண்டும் தங்களது திட்டமிடும் பணிகளை அப்படித்தான் செய்ய வேண்டும். அவர்கள் திட்டமிடல் அப்படித்தான் அமைய வேண்டும்.
மக்களுக்கு இடையூறு செய்வதை தவிர்க்க வேண்டும்.


ஒரு நல்ல செய்தியும் நமக்குக் கிடைத்திருக்கிறது. இனி விழாக்காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிகழாது என தேசியத் தண்ணீர் சேவையின் ஆணையத் தலைவர் டத்தோ லியாங் உறுதி அளித்திருக்கிறர். நாம் அதனை வர வேற்கிறோம்!

Monday 19 December 2016

112 வயதிலும் ஊதித் தள்ளுகிறார் பாட்டி!




பாட்டியம்மாவுக்கு 112 வயது. அதற்கு மேலும் அவருக்கு ஓரிரு வயது கூடவே  இருக்கும் என்கிறார்கள் அவர் ஊர்க்காரர்கள்.

நுவாகோட், நேப்பாளிலுள்ள ஊரைச் சேர்ந்தவர் பத்துளி லாமிச்சான். அது தான் அவர் பெயர்.

சுமார் 95 வருடங்களாக விடாமல் சிகிரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர் பாட்டி. ஒரு நாளைக்கு சுமார் 30 சிகிரெட்டுக்களை ஊதித் தள்ளுகிறார்!  17 வயதில் ஆரம்பித்த பழக்கம்.  யார் பேச்சையும் கேட்பதாக இல்லை!

இளம் வயதில் இந்தியாவிற்குவேலைத் தேடிப் போன அவரது கணவர் இதுவரை வீடு திரும்பல!

பாட்டி எல்லாக் காலத்திலும் சுறுசுறுப்புக்குப் பேர் போனவர். வயதானவர்கள்  சும்மா இருக்கக் கூடாது என்கிறார். எப்போதும் வேலை செய்து கொண்டே இருங்கள். அது தான் உங்களை உயிரோடு வைத்திருக்கும் என்கிறார். சோம்பித் திரிவதும், சொம்பேறித்தனமும் வயதானவர்களைக் கொல்லும். அது தான் வயதானவர்களுக்கு அவரது அறிவுரை.

மன அழுத்தம் என்பது தான் இப்போது உள்ள மிகப் பெரிய பிரச்சனை. அதிலிருந்து விடுபடுங்கள். மகிழ்ச்சியாயிருங்கள். நீங்கள் நீண்ட நாள் வாழ்வீர்கள்.

ஆமாம், அவரின் புகைப்பழக்கத்தை பற்றீ...?  மற்றவர்கள் தயாரிக்கும் சிகிரெட்டுக்களை அவர் பயன் படுத்துவதில்லை.  எல்லாமே அவரது சொந்தத் தயாரிப்புக்கள் தான்!அது தான் அவரை மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது என்கிறார்!

ஒரு இந்துக் கோயிலின் உதவியோடு தனது காலத்தை மகிழ்ச்சியோடு கழித்து வருகிறார் பத்துளி.

வேலை! வேலை! வேலை! அது தான் நீண்ட ஆயுளைக் கொடுக்கும்!

அது தான் பாட்டியின் அறிவுரை!






Sunday 18 December 2016

கேள்வி-பதில் (39)

கேள்வி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை இரும்புப் பெண்மணி  என்று சொல்லுகிறார்களே, சரியா?

பதில்

நமக்குத் தெரிந்த இரும்புப் பெண்மணிகள் இருவர். ஒருவர் பிரிட்டனின்  மார்கரெட் தாட்சர் மற்றறொருவர் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி.

இந்த இரண்டு இரும்புப் பெண்மணிகளோடு ஜெயலலிதாவை ஒப்பிட முடியமா என்பது எனக்குத் தெரியவில்லை. பிரதமர் தாட்சர் நாட்டில் ஏற்பட்ட கலவரங்களை அடக்கி பொருளாதார சீர்திருத்ததைக் கொண்டு வந்தார். இந்திரா காந்தி வங்காள தேசம் என்னும் ஒரு புதிய நாட்டையே உருவாக்கினார்.

ஜெயலலிதா,  ஈழத்திற்கு ஒரு விடிவைக் கொண்டு வந்திருந்தால் ஒரு வேளை அவரை  ஒரு இரும்புப் பெண்மணி என்று நாமும் தாராளாமாகக் கூறலாம்.

அவருடைய அரசியல் பார்வையே வேறு. இளம் வயதில் ஆண்கள் மீது அவருக்கு ஏற்பட்ட சங்கடங்களை வேறு வகையில் பழி தீர்த்துக் கொண்டார். தனது ஆட்சி காலத்தில் ஆண்களைக் காலில் விழ வைத்து 'அழகு' பார்த்தவர் அவர். அவருடைய கார் டையர்களை  வணங்குவதும், அவர் மிதித்த மண்ணைத்  தொட்டு வணங்குவதும் - இவைகள் எல்லாம் ஏதோ புரட்சி என்பதாக அவருடைய தொண்டர்கள் நினைக்கலாம். நாம் அப்படி நினைக்க முடியுமா?

அவர் ஏழைபாழைகளை அரசியலுக்குக் கொண்டு வந்தார் என்பதற்குக் காரணங்கள் உள்ளன.  பணக்காரன் காலில் விழமாட்டான். ஏழை என்றால் தான் சொல்லுவதைக் கேட்பான். காலிலும் விழுவான்.    ஏழைகளை அரசியலுக்குக் கொண்டு வந்ததில் தவறில்லை. ஆனால் அவரவர் தொகுதிகளில் அவர்களைத் தாராளாமாக பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிக்க வைத்து கொள்ளைக்காரர்களாக மாற்றினாரே, அதை அவர்கள் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளலாம் , நாம் எப்படி ஏற்றுக் கொள்ளுவது?

ஊகூம்....! அவர் அரசியல்வாதியே அல்ல..! இரும்புப் பெண்மணியும் அல்ல!.

Saturday 17 December 2016

கேள்வி-பதில் (38)

கேள்வி

சின்னம்மா சசிகலா செய்வது சரியா?


பதில்

எப்படிப் பார்த்தாலும் சின்னம்மா செய்வது சரியில்லை!

எந்த அரசியல் பின்னணியுமில்லை. பெரியம்மா இருந்தவரை வாலைச் சுருட்டிகொண்டு இருந்தவர் இப்போது தேர்ந்த அரசியல்வாதி போல செயல்பட ஆரம்பித்துவிட்டார்!

நமக்கும் வருத்தமாகத் தான் இருக்கிறது. தமிழ் நாட்டை  யார் வேண்டுமானாலும்  ஆட்சி செய்யலாம் என்கின்ற ஒரு நிலைமை தமிழ் நாட்டில் உருவாகிவிட்டதாகவே தோன்றுகிறது!

சசிகலாவுக்கு அரசியல் செல்வாக்கு இல்லை என்பது அவருக்கே தெரியும். மக்கள் யாரும் அவரை ஆதரிக்கப் போவதில்லை. ஆனாலும் இன்னும் தேர்தல் வர நான்கரை ஆண்டுகள் இருக்கும் இந்த இடைக்காலத்தில் ஒரு முதலமைச்சராக இருந்தால் எவ்வளவு  சம்பாதிக்கலாம் என்பதில் குறியாக இருக்கிறார்.



ஜெயலலிதாவுடன் 30 ஆண்டு கால நெருக்கமாக இருந்தவர். அவருடைய ஒவ்வொரு அடியும் எதை நோக்கிப் போகிறது என்பதை அறிந்தவர்.  தேர்தல் முடிந்து அடுத்த ஐந்து ஆண்டுகள் அவருடைய செயல் திட்டங்கள் எப்படி இருக்கும் என்பதை நன்கு புரிந்தவர். "செயல் திட்டங்கள்" என்றால்? எத்தனை பாலங்கள், எத்தனை ஏரிகள், எத்தனை குளங்கள், குட்டைகள், எத்தனை அலுவலகங்கள் - இப்படி இரு அம்மாக்களும் சேர்ந்து பேசி, விவாதித்து தமிழ் நாட்டின் 'வளர்ச்சிக்காக' ஒரு முடிவுக்கு வந்திருப்பார்கள்!

இப்போது பெரிய அம்மா இல்லை. சின்னம்மாவுக்கு அந்தப் பணம் பண்ணும் அற்புத விளக்குப் பற்றிய இரகசியம் என்பது அவருக்கு மட்டுமே உரியது! அவரால் அதனை மற்றவர்கள் வசதிக்காக விட்டுக்கொடுக்க முடியாது! அப்படியெல்லாம் விட்டுக் கொடுக்க மாட்டார்!

முடிந்தவரை இழுபறியிலேயே ஆட்சி நடக்கும்! இவரை அடக்குவதற்கு மோடியைத் தவிர வேறு யாராலும் முடியாது. இவரின் ஊழல் வழக்கை வைத்தே மோடியால் இவரை மிரட்டி உட்கார வைக்க முடியும்!

பார்ப்போம்! தமிழனின் தலையெழுத்தை!

Friday 16 December 2016

சவியா வைத்தியநாதன் மேயரானார்!


உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் தலமையகம் அமைந்திருக்கும் ஒரு சிறிய நகரமான குப்பெர்டினோ, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மிக முக்கிய நகரங்களில் ஒன்று..  கல்வியில் சிறந்து விளங்கும்  சிறிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.

புகழ் மிக்க இந்த  நகரத்தின் மேயராக சவியா வைத்தியநாதன் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இந்திய வம்சாவளி பெண்ணான இவர் இந்த நகரத்தின் முதன் முதலில் தேர்ந்தேடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

இருபது ஆண்டுகளாக குப்பெர்டினோ நகரில் வசித்து வரும் இவர் அமெரிக்கக்  குடியுரிமைப் பெற்றவர். எம்.பி.ஏ. படித்தவர்.

இவர் இடைநிலைப்பள்ளி ஒன்றில் கணித ஆசிரியையாகத் தனது பணியை ஆரம்பித்து அதன் பின்னர் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாகப் பணி புரிந்தவர். ரோட்டரி கிளப் போன்ற இயக்கங்களில் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கின்றார். இன்னும் பல சமூக அமைப்புக்களிலும் தனது சேவைகளைத் தொடர்ந்திருக்கின்றார்.

கடந்த வாரம் டிசம்பர், 8-ம் தேதி குப்பெர்டினோவின் புதிய மேயராக பதவியேற்றிருக்கிறார் சவியா. அவரது  உறவினர்களும், நண்பர்களும் இன்னும் பலரும் இந்தப் பதிவியேற்பின் போது கலந்து கொண்டனர். இந்தியாவில் வசித்து வரும் அவரது தாயாரும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

இது குறித்து சவியா வைத்தியநாதன் பேசும்போது இனவேறுபாடு பார்க்காமல் தன்னை மேயராகத் தெர்ந்தெடுத்த குப்பெர்டினோ வாழ் மக்களுக்குத்  தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.





சவியா வைத்தியநாதனுக்கு நமது வாழ்த்துகள்!

Thursday 15 December 2016

தொழிலதிபர் அஜய் ஒரு முன்னோடி!




காலை நேரத்தில் நல்லதொரு செய்தியைப் படிக்க நேர்ந்தது.

மும்பையைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர் பாராட்டும்படியான ஒரு செயலைச் செய்திருக்கிறார்.

நல்லதைச் செய்பவர்களை நாம் பாராட்ட வேண்டும். பராட்டுவதில் கஞ்சத்தனம் வேண்டாம். நல்லதைச் செய்பவர்களை நாம் முடக்கிவிடக் கூடாது!

அஜய் முனோட் என்னும் அந்தத் தொழிலதிபர் தனது மகளின் திருமணத்திற்காக செலவு செய்ய வேண்டிய பணத்தில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார். அது தான் அந்தச் செய்தி.

மகளின் திருமணத்திற்காக அவர் செய்ய வேண்டிய செலவு சுமார் எண்பது இலட்சம். அதுவே அவர் மகளின் திருமணத்திற்கான அவரின் செலவுத் திட்டப்பட்டியல்.

ஆனால் அத்தனையையும் ஒரு நொடியில் மாற்றிவிட்டார் அஜய். அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் சேர்ந்து அவரது மகளின் திருமணத்தின் போது ஏதாவது நல்லதொரு செயலைச் செய்யலாமே என்னும் கருத்தைச் சொல்ல அதனையே ஏற்றுக்கொண்டார் அஜய்.

என்றென்றும் அவரது மகளின் பெயரைச் சொல்லும்படியாக சுமார் 90 வீடுகளை ஏழைகளுக்கு அன்பளிப்பு செய்திருக்கிறார் அஜய்.

நாம் அவரை வாழ்த்துகிறோம்! அவரது மகளையும் நீடுழி வாழ வாழ்த்துகிறோம். மகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இது நடக்கக்கூடிய சாத்தியமில்லை!  கோடீஸ்வர வீட்டுப்பிள்ளைகள் அப்படியெல்லாம் எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு வீட்டுப்பிள்ளையும்  தனது  திருமணத்திற்கு எத்தனை கோடி செலவு செய்தார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பந்தயம் மாதிரி!

 அவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய  நம்முடைய வாழ்த்துகள்!

கேள்வி - பதில் (37)


கேள்வி

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நீடிக்கிறதே?

பதில்

ஆமாம்! எல்லாப் பக்கங்களிலிருந்தும் நாம் கேள்விப்படாத, ஆச்சயரியமான, பல செய்திகள் வெளியாகின்றன. எதை நம்புவது என்று ஒன்றும் புரியவில்லை!

ஆனால் அனைத்துச் செய்திகளும் சசிகலாவையே சுட்டிக் காட்டுகின்றன. அனைத்தையும் நம்ப முடியவில்லை என்றாலும் ஒரு சில விஷயங்கள் நம்மை விழி பிதுங்க வைக்கின்றன!

போகிற போக்கைப் பார்த்தால் சசிகலாவைப் புரட்டி எடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது!  அவரோ இதுவரை வாய்த் திறக்கவில்லை! திறக்கவும் மாட்டார்  என்றே தோன்றுகிறது!

அ.தி.மு.க. மேல் மட்டத்தில் எல்லாருமே கப்சிப்! பணத்தைக் கொடுத்து அவர்களைக் 'கப்சிப்' ஆக்கிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது!

ஒன்று மட்டும் புரிகிறது. இந்திய பிரதமர் மோடிக்கும் இது பற்றி தெரிந்திருக்க வேண்டும். இப்போது சசிகலாவின் குடுமி பிரதமர் மோடியின் கையில். அல்லது பன்னிர்செல்வத்தின் குடுமியையும் சேர்த்துக் கொள்ளலாம். இவர் இருவரில் யாரோ ஒருவர்! ஆனால் சசிகலாவின் பக்கம் தான்  'வர்தா' வீசுகிறது!

சசிகலாவின் அமைதியே அவரை குற்றவாளியாகச் சுட்டிக் காட்டுகிறது! அது மட்டும் அல்லாமல் ஏதோ எதுவுமே நடவாதவர் போல் நடந்து கொள்ளுவதும், ஜெயலலிதாவைப் போல் தமிழகத்திற்கு வரும் பிரமுகர்களை வரவேற்பதும் - எல்லாவற்றிலும் ஒரு அவசரத்தைக் காட்டுவதும் - அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் ஐயப்பாட்டைத்தான் உருவாக்குகின்றன! அவர் இயல்பாக நடந்து கொள்ளவில்லை என்பது மட்டும் புரிகிறது!

இதுவரை பன்னிர்செல்வமோ, சசிகலாவோ பேசவோ, கொள்ளவோ, பொது மக்களுடனான தொடர்பை ஏற்படுத்தவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இது வெறும் அ.தி.மு.க. என்னும் கட்சியின் பிரச்சனை மட்டும் அல்ல. தமிழ் நாட்டு முதலைமைச்சரின் மரணம் என்பது தமிழ் நாட்டுப் பிரச்சனை. இப்போது இவர்கள் இருவருமே ஏதோ - இந்தப் பிரச்சனை - கட்சி பிரச்சனையாக நினைத்துக்  கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

இந்த மரணம் என்பது தமிழகப் பிரச்சனை. தமிழக மக்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் மரணத்தில் இன்று இந்த மர்மம் நீடித்தால் நாளையும் இது போன்ற மர்மங்கள் தொடர வாய்ப்புண்டு. அவரின் அண்ணன் மகளையும் காணோம் என்னும் வதந்தியும் இப்போது நிலவுகிறது!

இதற்கு ஒரு முடிவு காண்பது பிரதமர் மோடியின் கையில்! வேறு வழி இல்லை!


Wednesday 14 December 2016

சிறார் மதமாற்றம் - தடம் மாறுகிறதா பெர்லிஸ்?


மத்தியில் தேசிய முன்னணி அரசாங்கம். பெர்லிஸ் மாநிலத்திலும் தேசிய முன்னணி அரசாங்கம். ஆனால் போகிற போக்கோ  வெவ்வேறு பாதைகளில். பெர்லிஸ் மாநிலம் திடீரென மத்திய அரசாங்கத்திற்கு எதிர்ப்பான ஒரு கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டிய காரணம் என்ன?

எதிர்ப்பு என்று சொல்லலாமா அல்லது இரு தரப்பும் சேர்ந்து நமக்குக்  காது குத்துகிறார்களா?  பெர்லிஸ் மாநிலம் இப்படி ஒரு  சட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன? மத்திய அரசாங்கத்திற்குத் தெரியாமல் - அவர்களுடைய ஆசியில்லாமல் - பெர்லிஸ் மாநிலம் இப்படி செய்யுமா? அதை நாம் நம்ப வேண்டுமா? இதனை நாம் ஏதோ ஒரு நாடகம் அரங்கேறுகிறது என்று தானே நினைக்க வேண்டியிருக்கிறது! நாடகம் என்ன, நாடகமே தான்!

அதுவும் நாடாளுமன்றத்தில் இந்த மதமாற்றத்திற்கு  முடிவு காண கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த அரசாங்கம் முன்வந்திருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு  அவசர மதமாற்ற சட்டத்தை மாநில அர்சாங்கம் கொண்டு வருவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.  மாநில அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் சேர்ந்து மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவே இது தோன்றுகிறது! இதற்கு ஒரு முடிவு காணுப்படும் என்று நமக்குத் தோன்றுவில்லை!

ஏற்கனவே சிறுவர்கள் மதமாற்றம் சம்பந்தப்பட்ட வழக்குகள் பல எந்த ஒரு முடிவுமில்லாமல் இழுபறியில் நிற்கின்றன.இழுபறி  என்றாலும் அது இஸ்லாத்துக்குச் சாதகமாகத்தான் இருக்கின்றது.

இந்த நேரத்தில் பெர்லிஸ் மாநிலம் ஒரு தலைப்பட்சமாக  சிறார் மதமாற்றத்தை அனுமதிக்கும் விதமாக சட்டத்தைக் கொண்டு வந்திருப்பது மிகவும் கண்டித்தக்கது. நாம் கண்டிப்பதை அல்லது நமது தலைவர்கள் கண்டிப்பதை - யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளுவதில்லை!  அது தான் இங்குள்ள பிரச்சனை.

இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறிய பத்மநாதன் குழந்தையோடு தலைமறைவாய் இருப்பதை இதுவரை காவல்துறை கண்டுபிடிக்க முடியவில்லை! நீதிமன்றம் ஆணையிட்டும் குழந்தையை அதன் தாய் இந்திரா காந்தியிடம்  ஒப்படைக்க காவல்துறையினரால் இயலவில்லை!      

                                                   

முகமது ரிதுவான் அப்துல்லா என்னும் பதமநாதன்  நாட்டில் தான் வாழ்கிறார். ஆனால் அவருக்கு முகவரி இல்லை. கைதொலைப் பேசி இல்லை. தொடர்புக்கான எந்த வழியும் இல்லை. ஆனால் அவர் நாட்டில் தான் வாழ்கிறார்! நீதிமன்ற வழக்குகளிலும் அவர் முகவரி குறிப்பிடப்படவில்லை! அவர் கடைசி மகள் இப்போது பள்ளி போகிறாள். ஆனாலும் அவருடைய முகவரியை யாராலும் கண்டுப்பிடிக்க முடியவில்லை!

அதனால் என்ன சட்டதிருத்தம் கொண்டு வந்தாலும் அதனை - நீதி, நியாயம் பற்றி கவலைப்படாத ஒரு நாட்டில் - எந்தச் சட்ட திருத்தத்தினால் எந்தப் பயனும் இல்லை!

இப்போதைக்கு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டதிருத்தம் ஒரு தேர்தல் அறிவிப்பாகவே எடுத்துக் கொள்ளலாம்! மற்றபடி இந்தச் சட்டதிருத்தத்தினால் பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது!

மாநிலமும் நடுவண் அரசாங்கமும் சேர்ந்து நமக்குக் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகிறார்கள்!

மனமாற்றம் ஏற்பட்டால் தான் சிறார் மதமாற்றம் பயன் உடையதாக அமையும்! அதை நோக்கி பயணிப்போம்!


Monday 12 December 2016

இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதில்லையா?


இந்தியர்களும், சீனர்களும் அரச மலேசிய விமானப்படையில் சேர்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதாக விமானப்படைத் தளபதி ஜெனெரல் டான்ஸ்ரீ ரோஸ்லான் சாட் கவலைத் தெரிவித்திருக்கிறார் என்பதாக ஒரு செய்தி.

இது போன்ற செய்திகளைப் படிக்கும் போது நிச்சயமாக நமக்கு ஒன்று தோன்றும்.  எப்படியெல்லாம் நாம் ஏமாற்றப்படுகிறோம் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

அது விமானப்படையாக இருந்தாலும் சரி, கப்பற்படையாக இருந்தாலும் சரி நம் இந்திய இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது தான் சரி. எனக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்தும் ...ஊகும்..  ஒன்றும் ஆகவில்லை!

இது போன்ற சூழலில் - ஒவ்வொரு முறையும் புறக்கணிக்கப்படும் போது - எந்த இளைஞன் வினானப்படைக்கு மனு செய்வான்? குறைவாக விண்ணப்பங்களே வருகின்றன என்று சொல்லுவதில் பயனில்லை.  இந்தியர்களுக்கு வாய்ப்பு இல்லை என்பதனால் தான் குறைவான விண்ணப்பங்கள் வருகின்றன என்பதை விமானப்படைத் தளபதி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்டு முழுவதும் தகவல்கள் வெளியிடப்படுகின்றன என்பது சரி தான். நீங்கள் விளம்பரம் செய்வதோடு சரி. நீங்கள் இடைஇடையே இது போன்ற செய்திகளைக் கொடுப்பதோடு உங்கள் கடமை முடிந்துவிட்டது. அவ்வளவு தான்! ஆனால் ஆள் சேர்ப்பதற்காக நீங்கள் நியமித்திருக்கிறீர்களே அவர்கள் சரியாக இல்லையே! அவர்கள் மலாய்க்காரர்களுக்குத் தானே முன்னுரிமை கொடுக்கிறார்கள்!  அவர்களைத் தாண்டி போக முடியதே!

அதனால் தளபதி அவர்களே, உங்கள்  கவலை பொருளற்றது. இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது தான் உண்மை!

ஒவ்வொரு ஆண்டும் இத்தனை இந்தியர்கள் விமானப்படையில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஒரு கட்டாயம் இல்லாதவரை இதற்கு ஒரு முடிவில்லை! நீங்கள் சொல்லுவதையே சொல்லிக் கொண்டிருப்பீர்கள் நாங்களும் சொல்லுவதையே சொல்லிக் கொண்டிருப்போம்!

Sunday 11 December 2016

சீமானுக்கு தற்காலிக வெற்றி!


யார் என்ன தான் சொல்லட்டும்,  சீமானுக்கு இது ஒரு தற்காலிக வெற்றி என்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அவர் தான் தமிழக மேடைகளில், தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்று முழக்கமிட்டவர். அவரே இதனை எதிர்பார்த்திருக்க மாட்டார்.

ஜெயலலிதா மறைவார் என்று யாரும் எதிர்பாபார்க்கவில்லை. இப்படி திடீரென்று பன்னிர்செல்வம் முதலைமச்சர் ஆவார் என்று நாம் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

ஒரு பக்கம்,  சசிகலா சீவி சிங்காரித்துக் கொண்டு ஜெயலலிதா எந்த மூலை முடுக்குகளில்லாம் அமர்ந்து ஆட்சி செய்தாரோ அங்கெல்லாம் உட்கார்ந்து கொண்டு முதலமைச்சர் பாணியில் செயல்பட ஆரம்பித்துவிட்டார்!

ஆக, சீமானுக்கு ஒரு தமிழர் அல்ல, இருவர் தமிழ் நாட்டுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றனர்!



சசிகலா எந்த அரசியல் பின்னணியும் இல்லாதவர்.ஆனாலும் இரும்புப் பெண்மணியோடு 33 அண்டுகாலம்  பேர் போட்டவர். இரும்பு இல்லையென்றாலும் செம்பு அளவாவது கர்வம், ஆணவம், பழிவாங்கும் குணம் எல்லாம் இவருக்கு  இருக்கும்! இவருடைய பலமே பண பலம்  தான்! அடுத்த தேர்தல் வரை - அந்த  இடைக்காலத்தில் - இவருடைய ஆட்டம் அதிகமாகவே இருக்கும்!  

பன்னிர்செல்வம் இது நாள்வரை அம்மாவுக்கு மிக அடங்கிய  மனிதராகத் தான் இருந்து வந்தார். இனி மேலும் அப்படித்தான் இருப்பாரா? இருக்க மாட்டார்!  அப்படியே இருந்தாலும் அவருடைய சமுதாயத்தினர் அவரை சும்மா இருக்கவிட மாட்டார்கள்!  

இந்த இருவரும் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ் நாட்டுக்கும் எந்த அளவுக்குப் பயனாக இருப்பார்கள்? இருவருமே திராவிடப் பாரம்பரியத்தைச் சார்ந்தவர்கள். கர்னாடக அரசு,  காவேரி நீர் தமிழகத்துக்கு வரக்கூகூடாது என்பதற்காகப் பாலம் கட்டிய போது அவர்களுக்கு லோரி லோரியாக தமிழக மணலை அவர்களுக்கு விற்று காசாக்கியவர்கள்!  இது போதும் இவர்களைப் பற்றி! ஒரு வேளை இப்போது அவர்கள் மாறலாம்! மாறினால் நமக்கு மகிழ்ச்சியே!

எப்படிப் பார்த்தாலும்  "நாம் தமிழர்" சீமானுக்கு இது வெற்றியே! அவர் மட்டும் தான் தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று பட்டி, தொட்டி, தெருவெல்லாம் முழக்கமிட்டவர்.

எப்படியோ ஒரு மாற்றம் வந்திருக்கிறது. இனி எப்போதும் தமிழர் ஆட்சி தக்க வைக்கப்பட வேண்டும்.. இது தொடர வேண்டும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழன் தான் தலைமை பீடத்தில் இருக்க வேண்டும். அதுவே நமது ஆசையும் கூட!



                                                                     

கேள்வி - பதில் (36)


கேள்வி

அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளராக சசிகலா வரும் வாய்ப்பு உண்டு என்று நினைக்கிறீர்களா?

பதில்

அவர் பொதுச் செயலாளராக வருவதற்கான வாய்ப்புக்குள் சிறப்பாகவே இருக்கிறது.

அ.தி.மு.க.வின்  மிக முக்கிய பதவி பொதுச் செயலாளர் என்பது தான். பொதுச் செயலாளர் தான் முதலைமைச்சராக வர முடியும்.

 ஜெயலலிதாவின் உயிர்த் தோழியாக வலம் வந்தவர் சசிகலா. இத்தனை ஆண்டு காலம் அவருடன் இருந்தவர். அவரோடு இருந்து அனைத்தையும் அனுபவித்தவர்,

ஜெயலலிதாவை வைத்தே கோடிக்ணக்கில் தமிழகத்தை சுரண்டியவர். இப்போது அவரது குடும்பத்தினர் ஏழு ஏழு தலைமுறைக்கும் பணத்தைப் பற்றி கவலையில்லாதவர்கள்! பணம் இருக்கும் போது பதவியெல்லையென்றால் எப்படி?  அவர் சம்பாதித்த பணம்  எல்லாம் அரசியல் மூலம் வந்தது! அந்த அரசியலை அவர் அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுத்து விடமாட்டர்!

பொதுச் செயலாளர் பதவி என்பது அ.தி.மு.க பொதுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்டும் பதவி. பொதுக்குழுவில் உள்ள ஓரிருவர் இப்போதே சசிகலாவின் காலில் விழ ஆரம்பித்து விட்டார்கள்! மீதம் உள்ளவர்களைப் பணத்தைப் போட்டு வளைத்து விடுவார்! ஜெயாவோடு இருந்தவர்க்கு இதெல்லாம் கைவந்த கலை!




அவரை எதிர்ப்பவர்களைப் பணத்தால் வளைத்து விடுவார்! அது மட்டும் அல்ல. கட்சியிலுள்ள அனைவரையும் அறிந்தவர். அவர்களுடைய பலம், பலவீனங்களையும் அறிந்தவர்.எப்படி சொடுக்கலாம், மடக்கலாம் என்பதெல்லாம் ஜெயா காலத்திலிருந்தே அறிந்து வைத்திருப்பவர். அவர்களின் பாவ, புண்ணியங்கள்,  எதற்காக அலைகிறார்கள் என்பதைப் புரிந்தவர்!

ஆக,  சசிகலா பக்கம் தான் அதிர்ஷ்டக் காற்று பலமாக வீசுகிறது! அவர் பொதுச் செயலாளராக வருவார் என்பதே நமது எண்ணம். குறைந்த பட்சம் அடுத்த தேர்தல் வரும்வரை அவருக்கு நல்ல காலம் பிறக்கலாம்!

யார் வந்தாலும் சரி! தமிழ் நாட்டுக்கு நல்ல காலம் பிறக்க வேண்டும்! அதுவே நமது ஆசை!



Saturday 10 December 2016

கேள்வி - பதில் (35)


கேள்வி

ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருக்கிறதா?

பதில்

அப்படித்தான் தோன்றுகிறது. பல்வேறு செய்திகள் நம்மைக் குழப்புகின்றன. ஆனாலும் அவை அனைத்தும் பொய் என்று நாம் ஒதுக்கிவிட முடியாது.

உண்மையில் நடந்தது என்ன என்பது சசிகலாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அப்பல்லோவின் மருத்துவர்களுக்கும் தான் தெரியும்.

ஆனால் அப்பல்லோ மருத்துவமனை அவர் டிசம்பர், 5, இரவு மணி 11.30 க்குக் காலமானார் என்னும் அறிவிப்போடு முடித்துக் கொண்டது.

இப்போது அவர் சாவில் மர்மம் இருப்பதாகப் பலவாறாகப் பேசப்படுகிறது. இக்குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சசிகலாவின் பக்கமே சுட்டிக்காட்டப் படுகிறது. ஆனால் அவர் அதனைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை! அப்பொல்லோ என்ன சொன்னதோ அது தான் அவரின் நிலைப்பாடு. அதற்கு மேல் அவர் வாய் திறப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது! திறந்தால் அவருக்கத்தான் பிரச்சனை! அதனால் அவர் அ.தி.மு.க. வை  தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியில் தனது கவனத்தை திருப்பிக் கொண்டார்!

பலர் பலவகையான சந்தேகங்களை எழுப்பியது போல என்னிடமும் ஒரு சந்தேகம் உள்ளது. எல்லாச் சந்தேகங்களோடு இதனையும் சேர்த்துக் கொள்ளட்டுமே என்று நானும் இதனை இங்கு வெளியிடுகிறேன். இது சரியா, , தவறா என்று என்னால் சொல்ல முடியாது.

ஜெயா தொலைகாட்சியில்  ஒவ்வொரு நாள் காலையிலும் இந்திய நேரம் 6.00 - 7.00 வரை நாகப்பட்டினத்திலிருந்து வேளாங்கண்ணி மாதா வழிபாடு நேரடி ஒளிபரப்பாக நடைபெறும். இது எங்கள் குடும்பத்தினர் தினசரி பார்க்கின்ற நிகழ்ச்சி. இது ஒரு கட்டண நிகழ்ச்சி.  அதனால் எந்தத் தடையுமில்லாமல் தினசரி நடைபெறும் நிகழ்ச்சி. ஜெயலலிதா இறந்த அடுத்த நாள் காலை - அதாவது 6-ம் தேதி காலை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. அது மரியாதை நிமித்தம் ஒளிபரப்பாகவில்லை எனலாம். அது நமக்குப் புரிகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சி அவர் இறந்த அன்று காலையே (5-12-2016)ஒளிபரப்பாகவில்லை. அது ஏன் என்பதே எனது கேள்வி? அன்று காலை அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை என அறிந்ததும் நான் அவர் இறந்து விட்டதாகவே நினைத்துக் கொண்டேன். வேறு மாதிரி நினைக்கத் தோன்றவில்லை! அவர் இறக்கவில்லையென்றால் அது ஏன் ஒளிபரப்பாகவில்லை என்னும் கேள்வி தொக்கி நிற்கிறது.

அப்படியென்றால் உண்மையில் அவர் எப்போது தான் இறந்தார்?

அனைத்தும் மர்மம், மர்மம் தான்!

Friday 9 December 2016

ஸ்ரீலங்கா அதிபரின் கம்பீர வருகை..!

       நன்றி: வணக்கம் மலேசியா - போலிஸ் புகாருடன்...........

ஸ்ரீலங்கா அதிபர் மைத்ரிபால சிரிசேனாவின் மலேசிய வருகை  என்பது மிகவும் கம்பீரமான ஒரு வருகை! மலேசியா என்றுமே அவருக்கு  மிகவும் நெருக்கமான ஒரு நாடு!  ஆளும் தரப்பினர் அவரின் வருகைக்காக காத்துக் கிடக்கின்றனர்!

அவரின் வருகையை மலேசியத் தமிழர்கள் எதிர்ப்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாமலில்லை. அரசாங்கத்துக்குத் தெரியும். 'உங்கள் எதிர்ப்புக்களை எல்லாம் நாங்கள் மதிக்கவில்லை' என்பதே அவர்களின் கோட்பாடு!

ஒரு சிறிய கூட்டத்தின் ஆர்ப்பாட்டங்களுக்கெல்லாம் நாங்கள் பயந்து கொண்டு இருக்க முடியாது. என்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

மேலும் ஸ்ரீலங்காவில் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழர்கள்.. அவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டுமே தவிர தங்கள் விருப்பத்திற்கேற்ப  செயல்பட முடியாது என்பது அவர்கள் வாதம்!

மலேசியாவிலும் அது தானே நடந்து கொண்டிருக்கிறது? கோயில்கள் எந்த முன்னறிவிப்புமின்றி உடைக்கப்படுகின்றன. கோயில் சிலையில் தகர்த்தெறியப்படுகின்றன! சிறுபான்மையினர் இதனை எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது.மனிதாபிமானம் பற்றிப் பேசக்கூடாது என்பது தான் இங்கு உள்ள கொள்கையும்!

சரி! எப்படிப் பார்த்தாலும் சிரிசேனாவின் வருகையை நாம் தமிழர்கள் எதிர்த்துப் பயனில்லை என்று புரிகிறது. அரசாங்கம் அவரை ஆதரிக்கிறது. நமது எதிர்ப்புக்களைக் காட்டலாம். ஆங்காங்கே கொடிகள் பிடிக்கலாம். போலிஸ் புகார் செய்யலாம். ஒழிக என்று கூச்சல் போடலாம். கொடும்பாவி எரிக்கலாம். அனைத்தும் சிறிய அளவில் மட்டுமே செய்ய முடியும். வெளி உலகிற்கு எட்டாதவாறு தான் செய்ய முடியும்! ஆனாலும் செய்யத்தான் வேண்டும். தமிழ்ப்பத்திரிக்கைகளும் ஏதோ ஒரு பக்கம் வேண்டாத செய்தியாகப் போடலாம். அந்த அளவுக்குத் தான் அவர்களின் உரிமை!

தனிப்பட்ட வகையில் ஒவ்வொரு தமிழனும் சரித்திரம் படைப்பவன் தான். அந்த அளவுக்கு அவன் திறமைப் படைத்தவன்.இவனை ஒன்று சேர்க்க முடியாததால் தான் இன்று இவன் வீழ்ந்து கிடக்கிறான். இந்த வீழ்ச்சியால் தான் உலகம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது. ஆனால் இது தொடர் கதை அல்ல! விழுவது எழுவத்ற்குத்தான்!

அரசாங்கத்தில் நம்மைப் பிரதிநிதிப்போர் கொஞ்சம் அக்கறை காட்டினால் போதும். இது ஒரு பிரச்சனையே அல்ல. அமைச்சரவையில் பேசி மிக எளிதாக சிரிசேனாவின் வருகையைத் தடுக்கலாம்.ஆனால் அவர்கள் அதற்குத் தயாராக இல்லை. கொத்து கொத்துகாக மக்கள் கொல்லப்பட்ட போது கருணாநிதி தனது பிள்ளைகளின் பதவிக்காக ஆளாய்ப் பறந்து கொண்டிருந்தார். இங்கும் நமது அரசியல்வாதிகள் பதவிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!  எந்தப் போர் ஒய்ந்தாலும் இவர்கள் போர் ஓயப்போவதில்லை!

அப்படி ஓயும்வரை
 சிரி சேனாக்கள் கம்பீரமாக வருவார்கள்! போவார்கள்! நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்!

ரோஹிங்யா சமுகத்தின் மீதான தாக்குதல்!




மியன்மாரில்,  ரோஹிங்யா சமூகத்தினர் மீது தொடுக்கப்படுகின்ற தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்று மலேசிய வெளியுறவு அமைச்சு மியன்மாரை நினைவுறுத்தியது.

தொடர்ந்து மியன்மார் இன, சமய வெறியர்களால் ரோஹிங்யா முஸ்லிம்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும், நாட்டைவிட்டு அவர்கள் துரத்தப்படுவதும் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயல்.

இன்று இராணுவத்தினரால் பலவகையானத் துன்பங்களுக்கு உள்ளாகும் இந்த மக்களை எந்த நாடும் வரவேற்பதாக இல்லை. வெளி நாடுகளுக்குப் படகுகள் மூலம் தப்பியோடுவதும், கடலிலேயே சாவதும், கரைக்கு வெளியே அவர்களால் வெளியேற முடியாததும் - அதன் பிறகு அவர்கள் கடலையே சுற்றிச்சுற்றி - நாமே  நமது வசதிக்கேற்ப ஊகித்துக் கொள்ள வேண்டியது தான்.

ஆண்டுக் கணக்கில் இந்தப் பிரச்சனை இழுத்துக் கொண்டு போகிறதே தவிர இவர்களுக்கு எந்த ஒரு முடிவும் காணப்படவில்லை.

இவர்கள் ஒரளவு அருகில் உள்ள வங்காள தேசத்தின் உறவுகள். ஆனாலும் வங்காள தேசம் இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கத்  தயாராக இல்லை. எந்த நாடும் ஏற்காத நிலையில், இருக்கின்ற நாடும் இம்சைப் படுத்துகின்ற நிலையில், இவர்கள் நிலை என்ன?  எங்கு தான் போவார்கள்? என்ன தான் செய்வார்கள்?

இதனை மியன்மார் தனது உள்நாட்டு விவகாரமாக காண முடியாது என்றும் இது ஒரு அனைத்துலக விவகாரமாக காண வேண்டும் எனவும் மலேசிய வெளியுறவு அமைச்சு கூறுகிறது. இது சமய சம்பந்தமான விவகாரம் அல்ல; மாறாக மனிதாபிமானம் சம்பந்தமான விவாகாரம். அது மட்டும் அல்லாது ஓர் இனத்தை மட்டுமே குறிவைத்து வெளியேற்றும் இந்தச் செயல் இன அழிப்பு விவகாரந்தான் என  அது மேலும் கூறியது.

மியன்மார் பதிலடியாக தனது நாட்டுக் குடிமக்கள் இனி மலேசிய நாட்டிற்கு வேலை செய்ய அனுமதி இல்லை என அறிவித்துவிட்டது

வெளியுறவு அமைச்சின் இந்தச் செயல்பாட்டை நாமும் வரவேற்கிறோம். இன அழிப்போ, அல்லது பலவீனப்பட்டுப் போயிருக்கும் ஒரு பகுதி மக்களை வெளியேற்ற முயற்சிப்பதோ மிகவும் கொடூரமான ஒரு  செயல்.

இலங்கையில் பல இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது கூட நமது அரசாங்கம், இதுவரை கூட, - மகிந்த ராஜபக்‌சே, இப்போதைய அதிபர் மைத்திரி பாலா சிரிசேனா வரை - கண்டு கொள்ளவில்லை என்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. தமிழ் மக்கள் அவ்வளவு எளிதில் அதனை மறந்து விட முடியாது.

இது போன்ற செயல்கள் எங்கு நடந்தாலும் மனிதாபிமானமற்ற செயல்கள் தான். இது சமயம் சார்ந்ததும் அல்ல. இனம் சார்ந்ததும் அல்ல.இது மனிதம் மட்டும் தான்.

ஆனாலும் நமது வெளியுறவு அமைச்சு தெளிவாகவே இருக்கிறது. ரோஹிங்யா சமூகம் என்பது முஸ்லிம்கள் என்னும் கோணத்தில் பார்க்காமல் அவர்களும் மனிதர்கள், மனிதாபிமான கோணத்தில் பார்க்கப்பட வேண்டியவர்கள் என்னும் கொள்கையைக் கொண்டிருப்பது நமக்கும் ஏற்புடையதே.

ரோஹிங்யா மக்களின் துயர் துடைக்கப்பட வேண்டும். குடியிருக்க ஒரு வீடு  மட்டும் அல்ல, ஒரு நாடும் வேண்டும். அவர்களுக்கு யார் அடைக்கலம்  தருவார்?  இஸ்லாமிய நாடுகளுக்கே இதில் அதிக பொறுப்புக்கள் உண்டு. மனிதாபிமானத்தைப் பாருங்கள் - முஸ்லிம்களாகப் பார்க்காதீர்கள் - என்று சொல்லி தப்பிவிட முடியாது!


எனினும் இந்த மக்களுக்கு நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்!








Wednesday 7 December 2016

கேள்வி-பதில் (34)


கேள்வி

ஜெயலலிதாவின் மறைவு அதிர்ச்சி தானே?


பதில்

உண்மை தான். அவருடைய மறைவு என்பது அதிர்ச்சி செய்திதான். அவர் மறைவு என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

அவர் உடல் நலம் குன்றியிருந்தார் என்பது நாம் அறிந்தது தான். நாம் யாரையாவது  குற்றம் சொல்ல வேண்டும் என்றால் அவரது தோழி சசிகலாவைத் தான் குற்றம் சொல்ல வேண்டும்.

எல்லாவற்றையும் மூடி மறைத்தார். அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவரது குடும்பமே ஜெயலலிதாவைச் சுற்றி நின்று கொண்டு யாரையும் நெருங்க விடவில்லை.

அந்த அளவுக்கு என்ன ரகசியத்தை அவர் மூடி மறைத்தார்? இப்போது சசிகலாவின் மீது கொண்டு வரப்படுகின்ற குற்றச் சாட்டுக்களில்  உண்மை இருக்கலாம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

எல்லாவற்றையும் மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு மாநில முதல்வரை ஏதோ ஒரு சிறைக்குள் அடைத்து வைத்து ஒரு கைதியைப் போல நடத்தியிருக்கிறார் சசிகலா. இதற்கு அப்பல்லோவும் உடந்தை என்பதாகவே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு மாநில முதல்வரின் உடல்நிலையை அறிந்துகொள்ள அந்த மாநில மக்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.எந்த  ஒளிவு மறைவும் தேவை இல்லை.

இப்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்புக்களும், தற்கொலைகளும், சேதங்களும் அனைத்தும் சசிகலாவின் பிழையான அணுகுமுறை தான் காரணம் என்பதில் ஐயமில்லை. ஆரம்பத்திலேயே அவருடை உடல்நிலை குறித்து அறிவிப்புக்கள் கொடுத்திருந்தால் - அவரது புகைப்படங்களை வெளியிட்டிருந்தால் - இந்த அள்வுக்குத் தற்கொலைகள் ஏற்பட்டிருக்காது. .தொடர்ந்தாற் போல அறிவிப்புக்களும் , புகைப்படங்களும் வெளியிடப்பட்டிருந்தால் அவருடைய தொண்டர்கள் நல்லதோ, கெட்டதோ அவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்கள்; மனதளவில் தங்களைத் தயார் படுத்தியிருப்பார்கள்.

ஆனால் கொடுக்கப்பட்ட செய்திகள் அனைத்தும் நம்பிக்கை தரும் செய்தியாகவே இருந்தன.நடக்கிறார், பேசுகிறார், சாப்பிடுகிறார், அமைச்சர்களுக்குக் கட்டளையிடுகிறார் என்று  ஊக்கம்தரும் செய்திகளாகவே கூறிவிட்டு கடைசியில் தீடீரென இறந்து போனார் என்றால் எங்கோ, ஏதோ சரியாக இல்லை; ஒரு சந்தேகத்தை தான் ஏற்படுத்துகிறது.

எப்படிப் பார்த்தாலும் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம் என்பது இருந்து கொண்டு தான் இருக்கும். அதற்கு சசிகலா தான் காரணம் என்பதும் இருந்து கொண்டுதான் இருக்கும்.

அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!

ஆனாலும் எங்களுக்குப் பஞ்சமே இல்லை!


அரசாங்கம் கட்டிய இருபது இலட்சம் வெள்ளி தமிழ்ப்பள்ளிளி!

நமது நாட்டில் என்னன்னவோ நடந்து கொண்டிருக்கிறது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதும்,  அவர் இவரைக் குற்றம் சாட்டுவதும் இவர் அவரைக் குற்றம் சாட்டுவதும் என்பது மிகவும் சாதாரணம். அதுவும் அரசியால்வாதிகளாயிருந்தால் சொல்லவே வேண்டாம்!

நாட்டில் அரசியல்வாதிகளின் மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள்! குற்றச்சாட்டுகளுக்குப் பஞ்சமே இல்லை! ஆனால் யாரும் எவரும் எந்தக் குற்றச்சாட்டையும் ஒத்துக்கொள்ளுவதாகவும் இல்லை! அதனால் நாம் குற்றச்சாட்டுக்களைக் காதில் போட்டுக்  கொள்வதோடு சரி!

தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசாங்கம் நிறைய நிதி ஒதிக்கீடு செய்கிறது. அரசாங்கத்தின் கணக்குப்படி பார்த்தால் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியும் ஒரு கல்லூரிக்குச் சமமாக இருக்க வேண்டும்!  ஆனால் அரசாங்கம் கொடுக்கின்ற நிதி யார் கைக்குப் போகிறதென்று யாருக்கமே தெரியவில்லை! ஒன்று மட்டும் உறுதி. அப்பணம் பள்ளிகளுக்குப் போய் சேர்வதில்லை!

நிதி ஒதுக்கீடுகளுக்குப் பஞ்சமில்லை  நிதி போய் சேர்வதில் தான் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது! எந்தப் பஞ்சப் பராரிகளுக்குப் போய் சேருகிறது என்பது தான் புரியாத புதிர்!

இந்தியர்களை வியாபாரத் துறையில் ஊக்குவிக்க ஒரு திட்டம் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. சிறு வியாபாரிகள் பலன் பெரும் பொருட்டு அரம்பிக்கப்பட்ட ஒரு திட்டம். அரசாங்கம் சில கோடிகளையும் அதற்காக ஒதுக்கியது. ஆனாலும் அந்தப் பணம் ஏதோ ஓரிரு சிறு வியாபாரிகளைத் தவிர வேறு யாருக்குத்தான் அந்தப் பணம் போய் சேர்ந்தது என்று இது நாள் வரை யாருக்கும் தெரியவில்லை! இதில் பெரிய வியாபாரிகள் தான் பயனடைவதாக ஒரு பேச்சும் உண்டு!

வியாபாரம் செய்ய நிதி  ஒதுக்கீடுகளில் எந்தப் பஞ்சமுமில்லை! அரசாங்கம் அதனைச் செய்கிறது. ஆனால் சிறு வியாபாரிகள் ஆயிரம் பேருக்குச் சேர வேண்டிய நிதி ஒதுக்கீடு - அத்தனை பணமும்  ஒரு பெரிய பணக்காரர்க்குப் போய்ச் சேர்ந்தால் - அதனால் சிறு வியாபாரிகளுக்கு என்ன பயன்? அப்படி பஞ்சப்பாட்டுப் பாடுகிற பெரிய வியாபாரி கூட இருக்கிறாரா? தெரியவில்லை! ஆனால் ஒதிக்கீடுகளில் எந்தப் பஞ்சமும் இல்லை! சரியாகப் பஞ்சமே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது!

ஆனால் எல்லாவற்றையும் விட அரவமே இல்லாமல்  ஒரு பஞ்சமா பாதகம் ஒன்று அரங்கேறியிருக்கிறது! அதையும் தெரிந்து கொள்ளுங்கள்!

மீஞாக்/செரண்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் பற்றி  செம்பருத்தி இணைய இதழில்  படிக்க நேர்ந்தது!

பிரதமர் நஜீப், 2010-ம்ஆண்டில் இந்தப் பள்ளியின் கட்டுமானப்பணிக்காக ஒரு மில்லியன் ரிங்கிட் கொடுப்பதாக அறிவித்தார்!. அவரைத் தொடர்ந்து முன்னாள் கல்வி அமைச்சர் முகமது யாசின் 2012-ம் ஆண்டில் இந்தப் பள்ளிக்கு இரண்டரை மில்லியன் கொடுப்பதாக அறிவித்தார்!அதே ஆண்டில் முன்னாள் ம.இ.கா. தலைவர், ஜி.பழனிவேலு அவரின் பங்காக இரண்டு மில்லியன் தருவாதாக வாக்குக் கொடுத்தார்!

ஆகக் கடைசியாக, அரசாங்கத்தின் மூலம், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் வழி, மேற்குறிப்பிட்ட மீஞாக்/செரண்டா தமிழ்ப்பள்ளிக்கு வெள்ளி20,00,000.00 (வெள்ளி இருபது இலட்சம்) நிதி உதவியின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது!

வாக்களிக்கப்பட்டதோ வெள்ளி 55,00,000.00. (ஐம்பது இலட்சம்).  கட்டடம் நிர்மாணிக்கப்பட்டதோ வெள்ளி 20,00,000.00 (இருபது இலட்சத்தில்).

சரி, ஏதோ 20,00,000 வெள்ளியாவது பள்ளிக்கூடம் கட்ட கொடுத்தார்களே, நிர்மாணித்தார்களே  என்று பெருந்தன்மையோடு நாமும்  ஏற்றுக்கொண்டோம்! ஆனால் பள்ளிக்கூடம் எங்கே என்பது தான் யாருக்கும் தெரியவில்லை! அடிக்கல் நாட்டிய இடத்தில் ஏதோ ஒரு சில சிமிண்ட் தூண்களைத் தவிர வேறு ஒன்றையும் காணவில்லை!

இல்லாதப் பள்ளிக்கூடத்திற்கு இருபது இலட்சம் செலவா? ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கிணற்றைக் காணோம் என்று காவல்துறைக்குப் புகார் செய்வார்! இப்போது நமது நிலையும் அப்படித்தான்! இருபது இலட்சம் செலவில் கட்டப்பட்ட தமிழ்பள்ளியைக் காணோம் என்று புகார் செய்யலாம் தான்! ஆனால் காவல்துறை இந்தப் புகாரையெல்லாம் கண்டு கொள்ளாது! காரணம் இது அரசியல்! இதையெல்லாம் தெரிந்தவர்கள் அரசியல்வாதிகள் மட்டும் தான்! அது சரி! நல்ல அரசியல்வாதிகளை எங்கே போய் நாம் தேடுவது?

ஆனாலும்  எங்கள் நாட்டில் எதற்கும் பஞ்சமே இல்லை!






Saturday 3 December 2016

பெட்ரோல் விலை குறைந்தது! ஆனால்......!


பெட்ரோல் விலை குறைந்தது என்பது மகிழ்ச்சிக்குறிய செய்தி தான். ஆனாலும் மலேசியர்கள் மகிழ்ச்சியடைய முடியவில்லை!

காரணம் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தான் பெட்ரோல் விலை பதினைந்து (15)காசுகள் கூட்டப்பட்டன. அது ஒரு அதிர்ச்சி தரும் செய்தி என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் இப்போது குறைக்கப்பட்டதோ ஐந்தே ஐந்து (5)காசுகள் தான்!

ஏமாற்றம் தான் என்றாலும் ஏதோ அந்த அளவாவது குறைக்கப்பட்டதே என்பதில் மகிழ்ச்சியே!

ஆனால் இங்கு யோசிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. விலை ஏற்றத்தின் போது எல்லாப் பொருள்களின் விலையும் ஏறிவிட்டன. அவ்வளவு தான்!  இனி மேல் பொருள்களின் விலை இறங்கும் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை!

வியாபாரிகள் விலைகளை ஏற்றிவிட்டார்கள் என்பது வழக்கமான பல்லவி தான். ஆனால் இதற்கு அரசாங்கமும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறதோ என்று நாம் நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை.

பதினைந்து காசுகள் ஏற்றிவிட்டு ஐந்து காசுகள் குறைக்கும் போது விலைவாசிகளில் எந்தத் தாக்கமும் ஏற்படப்போவதில்லை. சாதாரணக் காலங்களிலேயே ஏறிய பொருள்களின் விலை குறைக்கப்படுவதில்லை.

முன்பு பதினைந்து காசுகள் ஏற்றத்தின் போது பொருள்களின் விலை மட்டும் ஏறவில்லை.  பல பொருள்கள் அப்போதிருந்தே காண முடியவில்லை!

மக்கள் பயன்படுத்தும் மிக அத்தியாவசியமான பொருள்களான சமையல் எண்ணைய், குழந்தைகளின் பால் பவுடர்கள் பெரும்பாலும் கடைகளில் காணப்படவில்லை!  ஒரு சிலர் பேராங்காடிகளில் ஒரு சிலப் பொருள்கள் கிடைப்பதாகச் சொல்லுகிறார்கள். அப்படி என்றால் சிறு வியாபாரிகளின் நிலை என்ன?

மக்கள் மனதிலே வேறு ஒர் எண்ணமும் வலூவூன்றுகிறது. ஏன்? இப்போதே அனைவரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்! ஐந்து காசுகள் குறைக்கபட்டதற்கு மகிழ்ச்சியடைவதைவிட  வெகு சீக்கிரத்தில் அதாவது ஜனவரியில் இருபது (20) காசுகள் கூட்டுவது உறுதி என்பதாக இப்போதே மக்கள் கவலைப்பட  ஆரம்பித்துவிட்டார்கள்!

ஏற்றமோ, இறக்கமோ எல்லாம் நன்மைக்காக என்றே எடுத்துக் கொள்ளுவோம்!

Friday 2 December 2016

தலைமறைவானவர் நாட்டில் தான் இருக்கிறார்!


இந்த நாட்டில் எத்தனையோ குற்றவாளிகள், மிகவும் ஆபத்தான, படு பயங்கரமானக் குற்றவாளிகள் கூட, போலிஸ் கண்களில் இருந்து தப்பித்தது கிடையாது! எப்போதோ, எங்கயோ அவர்கள் பிடிபட்டு விடுவார்கள். அல்லது சுட்டுத் தள்ளப்படுவார்கள்!

ஆனால் இந்திராவின் முன்னாள் கணவர் முகமது ரித்வான் என்னும் பத்மநாதன் மட்டும் போலிஸாரின் கண்களுக்கு அகப்படும் சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை! நமது ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூட மிகவும் சலித்துக் கொள்ளக்கூடிய வகையில் இந்தத் தேடு பணி தொடர்...தொடர்ந்து ........கொண்டே ..........இருக்கிறது!

இந்த பத்மநாதன் என்னும் ரிதுவான், நீதிமன்ற உத்தரவின் படி, இந்நேரம் தனது கடைசி குழந்தையை தனது முன்னாள் மனைவியிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் ஒப்படைக்கவில்லை. என்று  நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்ததோ அன்றிலிருந்து அவர் காணப்படவில்லை!

பத்மநாதன் வெளி நாடுகளுக்குப் போகும் நிலையில் இல்லை.  காரணம் எல்லாச் சோதனைச் சாவடிகளிலும் அதிகாரிகள் விழிப்பு நிலையில் உள்ளனர் என்கிறார் போலிஸ் படைத்தலைவர்.

பத்மநாதனுக்கு அவரின் கைது உத்தரவு பற்றி பெரிய விளம்பரம் கொடுத்ததனாலேயே அவர் உஷாராகி விட்டார் என்கிறார் டான்ஸ்ரீ காலிட்! அதனாலேயே அவரைக் கைது செய்ய முடியாத நிலை என்கிறார் அவர்!

போலிஸாரைக் குற்றம் சொல்ல வேண்டாம். நாங்கள் வேண்டுமென்றே அவரைக் கைது செய்யாமல் இருக்கிறோம் என்பது உண்மையல்ல! தேவையான, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்கிறார் அவர்.

போலிஸ் படைத் தலைவரின் கருத்துக்கு எதிர்கருத்து சொல்லக்கூடிய நிலைமையில் நாம் இல்லை. "வேண்டுமென்றே அவரைக்கைது செய்யாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்" என்று மக்கள் பேசுவதை அவர் தெரிந்து வைத்திருக்கிறார்! நன்றி! அவருக்கு அதிகப்படியான விளம்பரம் கிடைத்ததானாலேயே அவர் தலைமறைவாகிவிட்டார் என்பதும் நம்பக்குட்டியதாக இல்லை. தமிழ்ப்பத்திரிக்கைகளைத் தவிர மற்றபடி பெரிய அளவில் எந்த ஊடகங்களும் ரித்துவானைப் பற்றிய செய்திகளைப் போடுவதில்லை.

இருந்தாலும் போலிஸார் இன்னும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்துகொண்டு வருவதாக அவர் கூறியிருப்பதை வரவேற்போம்! இது மிகவும் சாதாரண ஒரு வழக்கு. நிச்சயம் போலிஸார் இதற்கு ஒரு முடிவு காண்பார்கள் என நம்புவோம்!



Thursday 1 December 2016

குழந்தைகள் விற்பனையா..?


சமீப காலங்களில்,  உலகளவில்,  மலேசியா பற்றிய செய்திகள் கேட்பதற்கு வருத்தம் அளிப்பதாகத்தான் இருக்கிறது.

அரசியல்வாதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மோசமான  ஊழல் சம்பந்தமான  செய்திகள் ஒரு பக்கம். இப்போது படிப்படியாக இறங்கி எல்லா மட்டத்திலும் வெவ்வேறு வகையில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

சில நாள்களுக்கு முன்னர் ஆள் கடத்தல் செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டன.அதற்கும் மலேசியா பெரிய அளவில் பேசப்பட்டது!

குழந்தைகள் கடத்தல் என்பது எப்போதுமே உள்ள ஒரு குற்றச்சாட்டு. ஆனால் எதற்குமே சரியான பதில் இல்லை!

இப்போது குழந்தைகள் கடத்தல் இல்லை. குழந்தைகள் விற்பனை என்பதாக ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது அல்ஜஸீரா தொலைக்காட்சி நிலையம்,  சமீபத்திய தனது செய்தித் தொகுப்பொன்றில்  மலேசியாவை குழந்தைகள் விற்பனை மையமாக சித்தத்திரிக்கிறது அல்ஜஸீரா. மலேசியாவுக்கு இது மிகவும் சங்கடத்துக்குறிய செய்தி என்பதில் ஐயமில்லை.

அல்ஜஸீரா கொடுக்கும் மேலும் அதிர்ச்சிக்குறிய  செய்தி: இந்த குழந்தைகள் விற்பனையில் டாக்டர்கள்,  அராசங்க  அதிகாரிகள்,  தேசிய பதிவு இலாகா அதிகாரிகள், காவல் துறையினர் போன்றவர்கள் பலர் சம்பந்தப்பட்டதாக குறிப்பிட்டிருக்கும் செய்தி தான்! .

சராசரி மலேசியர்களோடு ஒப்பிடும் போது மேற் குறிப்பிட்டவர்கள் அனைவருமே நல்ல நிலையில் உள்ளவர்கள். அதாவது வருமானம் என்று வரும்போது கொஞ்சம் அதிக சம்பாத்தியம் உள்ளவர்கள்!  ஆனாலும் இவர்களெல்லாம் இது போன்ற ஊழல்களில் ஈடுபடும் போது - ஊழல் என்பதைவிட இதுவும் பயங்கரவாதம் தான் - பொது மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை! இப்படி படித்தவன் எல்லாம் பண்பற்ற முறையில் நடந்து கொண்டால் நாடு எங்கு நோக்கிச் செல்கிறது என்று தான் நாமும் கேட்க வேண்டி இருக்கிறது!

இந்த செய்திகள் வந்த அடுத்த நாளே காவல்துறை தலைவர், காலிட் அபு பக்கர் இதனை மறுத்துள்ளார்!  சட்டதிட்டங்கள் எல்லாம் மிகவும் கடுமையாக இருப்பதாகவும் குழந்தைகள் விற்பனை என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்று அவர் கூறியிருக்கிறார்.  பொதுவாகவே காவல் துறைத் தலைவர் எந்த விஷயமானாலும் முதலில் மறுப்பதும் பின்னர் 'நான் அப்படிச் சொல்லவில்லை, இப்படிச் சொல்லவில்லை' என்று மறுப்பதும் அவரின் இயல்பு!

ஆனாலும் காவல்துறையினரால்  இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அறியும் போது நமக்கும் ஆறுதலாக இருக்கிறது! தனியார் துறை தான் அவர்களின் இலக்கு என்பது அவர்களின் நடவடிக்கைகளின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.

பொதுவாகவே மலேசியர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது நாம் கேட்டிராத ஒன்று. வெளி நாடுகளிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் பெண்கள் ஒரு சில கிளினிக்குகளை மட்டுமே, தேர்ந்தெடுத்து  பயன்படுத்தி  வருகின்றனர். இங்கு தான் தவறான பல நடவடிக்கைகள் செயல்படுத்தப் படுகின்றன. இவைகள் எல்லாம் காவல்துறைக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் அனைத்தும் மறைக்கப்படுகின்றன. வரம்புகள் மீறப்படுகின்றன.

யாரும் ஒன்றும் செய்வதற்கில்லை! காரணம் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் 'பெரிய' மனிதர்களாக வெளியே உலா வருகின்றனர்! யார் என்ன செய்ய?

இவ்வளவு இடர்பாடுகளிலும் ஒரு சிலர் துணிந்து இது போன்ற செய்திகளை வெளி உலகிற்குக் கொண்டு வந்து விடுகின்றனர்!

அதற்காக நாம் அல்ஜஸீரா தொலைக்காட்சி நிருபரைப்  பாராட்ட வேண்டும்.

காவல்துதுறை இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்ப்போம். சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய புள்ளிகளாக இருந்தாலும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். அதுவே நமது எதிர்பார்ப்பு!








Tuesday 22 November 2016

நஜிப்: போராட்டம் போலியானது!


'பெர்சே' யின் இன்றைய (19.11.2016) ஐந்தாவது பேரணி போலியானது என தனது வலைப்பதிவில் வர்ணித்திருக்கிறார் பிரதமர் நஜிப்!

இதுவரை நடந்த  பேரணிகள் அனைத்தும்  எதிரணியினர் செய்த ஏற்பாடுகள் தான்!  மக்களால் தேர்ந்தெதெடுக்கப்பட்ட  ஓர் அரசை கவிழ்ப்பது தான் அவர்கள் நோக்கம் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால் அவர் சொல்லும்: "மக்கள் அரசாங்கத்திடம் சேவையைத் தான் எதிர்பார்க்கிறார்கள்"  என்று சொல்லுவது தான் நமக்குக் கொஞ்சம் நெருடுகிறது!

பிரதமர் சேவை என்று எதனைக் குறிப்பிடுகிறார்?  விலைவாசிகள் எக்கச்சக்கமாக ஏறிவிட்டன. அரசாங்கம் எதனையும் கட்டப்படுத்த முடியும் என்னும் நிலையில் இல்லை என்று தான் சராசரி மனிதன் நினைக்கிறான்.

பெட்ரோல் விலை 15 காசு ஏற்றப்பட்டது சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதனை ஒட்டி எல்லா விலைகளும் ஏறி விட்டன.

சமையல் எண்ணைய் விற்பனையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று சும்மா அமைச்சர்கள் அறிக்கைவிட்டால் போதாது. உண்மையில் இப்போது எண்ணைய் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை! பிலாஸ்டிக் பைகளில் விற்கப்படும் விலை குறைவான எண்ணைய் இப்போது முற்றிலுமாகக் கிடைக்கவில்லை. எத்தனையோ ஏழைகள், நடுத்தரக் குடும்பங்கள் இந்தக் குறைந்த விலை சமையல் எண்ணையைத் தான் பயன் படுத்துகிறார்கள். உண்மையைச் சொன்னால் கடந்த ஐந்து, ஆறு மாதங்களாக இந்த எண்ணைய் முற்றிலுமாக கடைகளிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது!அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை!

இன்னொன்று குழந்தைகளின் பால் மாவு என்பது இன்னொரு முக்கியமான விஷயம். அதன் விலை கிடுகிடு என்று ஏறிக்கொண்டே போனால் குடும்பங்கள் எப்படி அதனைத் தாக்குப்பிடிக்க முடியும்?  விலை குறையும் என்னும் சாத்தியமே இல்லாமல் தலைதெறிக்க அதன் விலை ஏறிக்கோண்டிருக்கிறது! இதற்கு யார் பொறுப்பு?

அடுத்த மாதத்திலிருந்து சமையல் எரிவாயு (gas cylinder) விலை இன்னும் ஏழு வெள்ளி அதிகரிக்கப் போவாதாக இப்போது பேசுப்படுகிறது. கடைக்காரர்களே இதனைச் சொல்லுகிறார்கள். ஆக, அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்! இதன் விலை ஏற்றம் இன்னும் அதிகமானப் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் பிரதமர் நஜிப் அவர்கள் மக்கள் சேவையைத் தான் எதிர்பார்க்கிறார்கள் என்கிறார். அவர் எதனைச் சேவை என சொல்ல வருகிறார் என்பது நமக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது!

இப்படி விலை ஏற்றத்தை கண்டும் காணாதது போல் இருக்கும் பிரதமர் கொஞ்சம் மக்கள் பக்கம் திரும்பி தனது சேவையைச் சரியான வழியில் கண்காணித்து மக்களின் பிரச்சனைகளைக் கவனித்தால் நாம் அவரைப் போற்றலாம், புகழலாம்! 

பிரதமர் அவர்களே! உங்களிடம் நாங்கள் சேவையை எதிர்பார்க்கிறோம். சேவையில் போலி வேண்டாம்!

Friday 18 November 2016

மோடி அதிரடி! மக்கள் அவதி!


மோடி அதிரடியான முடிவெடுத்தார்!  இப்போது மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் மூழ்கிருக்கின்ற்னர்! பல பிரச்சனைகள்; பல துயரங்கள்; பல இன்னல்கள். பல இறப்புக்கள்; பல துக்கங்கள் இன்னும் பல பல!

ஐனூறு ருபாய் நோட்டுக்களும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் செல்லாது என்று மோடி அறிவித்த அந்த நொடியிலிருந்து இதுவரை பல ஏழை எளிய மக்கள் மட்டும் அல்ல நடுத்தரக் குடும்பங்களும் பல வகைகளிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்!

நடுத்தர மக்கள் எப்படியோ ஏதோ சில வழிகளில் தப்பித்துக் கொள்ளுகின்றனர். அவர்களுக்கும் துன்பம் தான். ஆனால் அவர்கள்  எப்படியோ யாரையோ பிடித்து தங்களது காரியங்களைச் சாதித்துக் கொள்ளுகின்றனர்.

ஏழை மக்களின் துயரக்குகுரல் தான் நம்மையும் துயரத்தில் ஆழ்த்துகிறது.. திருமணம் நின்று போனது, இறந்தோரை அடக்கம் செய்ய முடியவில்லை, நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வழியில்லை, குழந்தைகளுக்கு உணவு தர முடியவில்லை என்று இப்படி ஏகப்பட்ட அவலக்குரல்; அழுகைக்குரல்.

மிகவும் வருத்தத்திற்கு உரியது தான். அதில் ஐயமில்லை. ஒன்று மட்டும் நமக்குப் புரிகிறது. நமது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிரமத்திற்கு உள்ளாகும் போது நாம் யாரும் அவர்களைக் கண்டு கொள்வதில்லை.  நமது சிரமத்தைபற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறோம். நமது பிரச்சனை ஒரு வேளை அவசரமில்லாத பிரச்சனையாக இருக்கலாம்.  நாளை செய்து கொள்ளலாம். அல்லது அதற்கு அடுத்த நாள் கூட  செய்து கொள்ளலாம். இந்த வேளையில் இப்போது யாருக்கு உதவி தேவைப் படுகிறதோ அவர்களுக்கு நாம் உதவ முன் வரவேண்டும். அப்படி உதவி செய்தவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை நாம் வாழ்த்துகிறோம். ஆனால் அப்படி உதவும் நிலையில் இருந்தும் உதவாதவர்கள் நிறையவே இருப்பார்கள்..அவர்களுக்காக நாம் வருந்தத்தான் வேண்டியிருக்கிறது.

ஆபத்து அவசர வேளைகளில் நாம் உதவத்தான் வேண்டும். அது நமது கடமை. சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர், பலத்தரபட்ட  மக்கள் நேரங்காலம் பாராமல்.தங்களால் முடிந்தவரை உதவினர். அரசியல்வாதிகள் தான் இதற்கு விதிவிலக்கு. மக்கள் மனிதாபிமானம் உள்ளவர்கள். இது பணம் சம்பந்தப்பட்டது என்பதால் மனிதாபிமானம் கொஞ்சம் விலகிப்போய்விட்டதாகாவே நாம் நினைக்க வேண்டியிருக்கிறது.

நாட்டின் மேம்பாட்டுக்காக சில நடவடிக்கைகள் எடுக்கும் போது பாதிப்புக்கள் வரத்தான் செய்யும். அதிலும் ஏழை மக்கள் பாதிக்கப்படும் போது நமக்கும் அது வருத்தத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஆனால் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் இந்தப் பிரச்சனைகள் எளிதாகக் களையப்பட வேண்டியவை. ஆனால் நம்மிடையே உள்ள அந்த அலட்சியம், ஏழை என்றால் இரக்க உணர்வு நம்மிடம் இல்லை.

மோடியின் இந்த நடவடிக்கையில்  சில குறைபாடுகள் இருக்கலாம். "இப்படித்தான் செய்யணுமா, அப்படிச் செய்யலாமே!" என்று குறை சொல்லுவதில் பயனில்லை! இப்போது அவர் இப்படித்தான் செய்திருக்கிறார்! இப்படியும் செய்யலாம் என்பது அவரின் நிலைப்பாடு.

இது வரையில் வந்த செய்திகளைப் பார்க்கும் போது பல கோடிகள்   வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன! இன்னும் வரும்!

இது வெற்றியா, தோல்வியா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Thursday 17 November 2016

அம்மா! நீங்கள் நலமா?


அம்மாவை நினைத்தால் நமக்கு இன்னும் தலை சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது!

தமிழக முதல்வர் அம்மா அவர்கள் உடல்நிலை தேறி வருகிறார், வருகிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர மற்றபடி உண்மை நிலவரம் தெரிந்தபாடில்லை!

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் அம்மாவின் ஆசியோடும், அம்மாவின்  ஆலோசனையின் பேரிலும் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று செய்திகள் கூறுகின்றன. அப்படியென்றால் அம்மா படுத்தப்படுக்கையாக இருக்கிறார் என்றெல்லாம்  சொல்லமுடியாது.

அவர் தெளிவாகத்தான் இருக்கிறார். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. தனது அமைச்சர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று ஆலோசைனைகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார். எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது.

ஆனாலும் இதுவரை அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்பட வில்லை!

சமீபத்தில் வெளியான அறிக்கையில் தமிழக வாக்காளர்களை அவருடைய கட்சிக்கு வாக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் செய்த பிரார்த்தனைகளினால்  தான் தேறி வருவதாகவும், விரைவில் பணிக்குத் திரும்புவேன் என்றும் கூறியிருக்கிறார்!

ஆனால் அப்படி என்ன தான் தேறிவருகிறார் என்று யாராலும் கணிக்கமுடியவில்லை! அப்பொல்லோ மருத்துவமனையை விட அவரது ஜோஸ்யர்கள் சொல்லுவதைத்தான் நாம் நம்ப வேண்டியிருக்கிறது! எல்லாவற்றையும் கணித்து சொல்லுபவர்கள் அவர்கள் தான்! முதல்வரும் மருத்துவர்களைவிட ஜோஸ்யர்களைத்தான் அதிகம் நம்புபவர் என்பது அனைவரும் அறிந்தது தான்!

ஜோஸ்யர்கள் அவர் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்புவார் என்று எல்லாவற்றையும் கணக்குப்போட்டுத் தான்  சொல்லியிருக்கிறார்கள்! ஆனால் லண்டன் டாக்டரோ இன்னும் சிறப்பான சிகிழ்ச்சை வேண்டுமென்றால் லண்டனுக்கு வாங்கோ என்று அழைப்பு விடுத்திருக்கிறார்!

ஆனாலும் இதுவரை அவரைப்பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை!

அப்பல்லோ மருத்துவமனையோ இப்படி ஒரு நிலைமை அவர்களுக்கு வரும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஐம்பது ஆண்டு காலம் திராவிடக்கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கின்றன. ஆனால் ஒரு முதல்வருக்கு மருத்துவம் பார்க்க ஒர் அரசாங்க மருத்துவமனைக் கூட தகுதியானதாக இல்லை!

இப்போதைய,  முதல்வரின் புகலிடம் அப்பல்லோ மருத்துவமனை தான்! நூல்நிலையத்தை இடித்து அதனை மருத்துவமனை ஆக்கினார். அது ஏன் என்பது இப்போது தான் நமக்குப் புரிகிறது! அது அவருக்கு முன்னரே புரிந்துவிட்டது!

இப்போது மருத்துவமனை வீடாகிவிட்டது! அப்பல்லோவுக்கு தலைவலி, திருகுவலி எல்லாம் சேர்ந்து கொண்டது! அப்பல்லோவின் மருத்துவ 'பில்' கோடிகளுக்கு வரலாம்! அது ஒரு பிரச்சனை அல்ல! தமிழன் சாராயத்தைக் குடித்தே அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான்!  இப்போது தனது குடும்பம் அழிந்தாலும் பரவாயில்லை அம்மாவைக் காப்பாற்ற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறான்! சாராயப்பணம் சரியான வழிகாட்டும் என நாமும் எதிர்பார்ப்போம்!

ஆனாலும் அம்மாவின் நிலைமை என்னவென்று இன்னும் நமக்குத் தெரியவில்லையே! தனது மேல் இருக்கும் ஊழல் குற்றச்சாட்டு ஒரளவு தணிந்த பின்னர் தான் அம்மாவின் உடல்நிலை சரியாகுமா? அதுவரை மருத்துவமனை தான் - அல்லது வீடாகக்கூட இருக்கலாம் - அவர் நிரந்தர ஓய்வில் இருப்பாரா? அவருடைய  உடல்நிலைமைக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஏதும் தொடர்புகள் இருக்கின்றனவா என்பது போகப் போகத்தான் தெரியும்!

இப்படியெல்லாம் நினைப்பதற்கு நாம் காரணமல்ல. சசிகலா,  முதல்வரை தனது இரும்புப்பிடியில் வைத்திருக்கிறார் என்று சொல்லப்படுவதால் தான் இப்படியெல்லாம் நாம் நினைக்க வேண்டியிருக்கிறது! இதுவரை அவரை யாரும் பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை! அப்படியென்றால்.......?

இப்போது நாம் கேட்பதெல்லாம்: அம்மா! நீங்கள் நலமா?


Sunday 13 November 2016

அமெரிக்கா புதிய பாதையில் பயணிக்கமா?


அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். எல்லாரும் அறிந்த செய்தி.

புதிய அதிபரின் போக்கு  எப்படி இருக்கும் என்பது இன்னும் நமக்குத் தெரியாத செய்தி. அடுத்த நான்கு  ஆண்டுகளுக்கு அதிபரின் நடவடிக்கைகள் எந்தத் திசையை நோக்கி பயணிக்கும் என்பது போகப் போகத்தான் தெரிய வரும்.

ஒன்று மட்டும் உறுதி. இத்தனை ஆண்டுகள் அதிபராக இருந்தவர்கள் பெரும்பாலும்  அரசியல்வாதிகள்.  ஆனால் டொனால்ட்  டிரம்ப் இதில் வித்தியாசப்படுகிறார். அவர் ஒரு தொழில் அதிபர். இளம் வயது தொட்டே அவர்   தொழிலில் ஈடுபட்டவர்.  தோல்விகளையும் வெற்றிகளையும் சந்தித்தவர். மாபெரும் தோல்விகளையும் மாபெரும் வெற்றிகளையும் சந்தித்தவர்.  எதற்கும் அசராத ஒரு தொழில் அதிபர்!  அரசியலில் அதிகம் ஈடுபாடு காட்டாத ஓர் தொழில் அதிபர்!

ஆனால் இன்று அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். அதிபராகவும் ஆகிவிட்டார்! இது தான் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கும் ஒரு செய்தி! அவர் வெற்றி பெறுவார் என்று யாரும் எதிபார்க்கவில்லை! ஆனால் அவர் வெற்றி பெற்றுவிட்டார்.

அமெரிக்காவின் எதிர்காலப் பயணம் எப்படி இருக்கும்?  தனது கொள்கையில் மிகவும் உறுதியான மனிதர் டிரம்ப். அவர் சொன்னவைகளை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் போகும் மனிதர். அவ்வளவு சீக்கிரத்தில் அவர் எதனையும் விட்டுக் கொடுக்கமாட்டார்! அமெரிக்காவை நேசிப்பவர். தனது மக்கள் நல்லதொரு வாழ்க்கை வாழ வேண்டுமென்று நினைப்பவர்.

அமெரிக்காவை இன்னும் வலிமைமிக்க நாடாக உருவாக்க வேண்டும் என்னும் கொள்கை உடையவர். வையத்துத்  தலைமை அமரிக்காவிடம் தான்  என்பதில் கருத்து வேறுபாடு இல்லாதவர்.

அவரின் பேச்சில் ஒரு முரட்டுத்தனம் தெரிகிறது. அமெரிக்காவின் அதிபர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு சில வரைமுறைகளை வைத்திருக்கின்றனர் மக்கள். இவரோ அனைத்தையும் உடைத்தெரியும் மனிதராக இருக்கிறார்!  எதற்கும் கட்டுப்படும் மனிதராக அவர் இல்லை!

இன்னும் பதவி ஏற்காத  நிலையில் - பதவியேற்க இன்னும் ஓரிரு மாதங்கள் இருக்கும் நிலையில் - இப்போதே பலரின் எதிர்ப்புக்ளுக்கு ஆளாகியிருக்கிறார்!  அவரது  நாட்டில்  மட்டும் அல்ல , உலகங்கெகளிலும் கூட பலர் தங்களது எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றனர்! கொலை மிரட்டல்களும் விடப்படுகின்றன!  இதுவரை எந்த ஒரு அமெரிக்க அதிபரும் இப்படி ஒரு சூழலை எதிர்நோக்கவில்லை!

ஆனாலும் டிரம்ப் அந்த அளவுக்குக் கெட்ட மனிதரா? இல்லவே இல்லை! தனது நாட்டை நேசிக்கிறார். தனது மக்களை நேசிக்கிறார்.தனது மக்கள் வேலை வாய்ப்புக்கள் பெற்று,, நல்ல முறையில் உழைத்து நாட்டின் வளத்தில் பங்கு பெற வேண்டும் என்று நினைக்கிறார்.தனது நட்டில் அமைதி நிலவ வேண்டும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார். இதெல்லாம் தவறு என்று எப்படி நாம் சொல்ல முடியும்? ஒவ்வொரு நாடும் தனது குடிமக்கள் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் தானே குறியாக இருக்கிறார்கள்.

புதிய அமெரிக்க அதிபர் பார்வைக்கு ஒரு கரடுமுரடான மனிதராகத் தோற்றமளிக்கிறார்! கரடுமுரடாகப் பேசுகிறார் என்பதை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது!

அமெரிக்காவின் வருங்கால இன்னும் சிறப்பாகவே இருக்கும்! புதிய பாதையாக இருந்தாலும் பயணம் வெற்றிகரமாகவே அமையும்!


Thursday 10 November 2016

அதிரடி கொடுத்தார் மோடி!


இந்தியப் பிரதமர் மோடி அதிரடியான அறிவிப்பு  ஒன்றினைச் செய்திருக்கிறார்!

ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும், ஐனூறு ரூபாய் நோட்டுக்களும் செல்லாது என அதிரடியான அறீவிப்பு  செய்து அந்த நோட்டுக்களைச் செல்லாதபடி ஆக்கிவிட்டார்!

இது ஒரு துணிச்சலான  முடிவு என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆரம்பத்தில்,  குறிப்பாக நடுத்தர குடும்பங்கள் ஓரளவு பாதிக்கப்படும் என்பது  உண்மையே! ஆனால் பெரிய பாதிப்பு என்பது அரசியல்வாதிகளுக்குத் தான்.

தமிழ் நாட்டில் தேர்தல் வருவதற்கு முன்னரே இப்படி ஒரு அதிரடி அறிவிப்பு வந்திருந்தால் ஒரு வேளை அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

ஆயிரம், ஐனூறு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிய வந்தபோது எனக்கு நடிகர்  மகாலிங்கம் நடித்த  பழைய  "நாம் இருவர்" படம் ஞாபகத்திற்கு வந்தது! அதில் "ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாதா?"  என்று -  நடிகர்  சாரங்கபாணி என்று நினைக்கிறேன் - மயங்கி விழுவது போல ஒரு காட்சி வரும்! சரியாக ஞாபகத்திற்குக் கொண்டு வர முடியவில்லை! என்னால்  உறுதியாகவும் சொல்ல முடியவில்லை! என்ன சொல்ல வருகிறேன் என்றால் அந்தக் காலத்திலேயே இந்தக் கறுப்புப் பணம் ஒரு பிரச்சனையாக இப்போதும் போல் இருந்திருக்கிறது! இப்போதோ அப்போது விட பல மடங்குகள் அதிகரித்துவிட்டன!

ஆனால் சமீபத்தில் வந்த "பிச்சைக்காரன்" படத்திலும் இப்படி ஒரு செய்தி சொல்லப்பட்டிருப்பது ஆச்சரியமான விஷயம்!  இந்திய நாட்டின்  வறுமையையும், கறுப்புப்பணத்தையும் ஒழிக்க படத்தின் இயக்குனர் சசி அமைத்திருந்த அந்த  வசனம் இப்போது உண்மையாகிவிட்டது! ஆக, நமது சினிமாப் படங்களும் அவ்வப்போது சில செய்திகளை முன்கூட்டியே சொல்லிவிடுகின்றன. "சுனாமி" பற்றி நடிகர் கமலஹாசன் தனது அன்பே சிவம் படத்திலும் அப்படித்தான் சொல்லியிருந்தார்!

சரி! பிரதமர் மோடி கொடுத்த இந்த அதிரடி அறிவிப்பினால் யாருக்கு பலத்த அடி?  தீவிரவாதிகள், கறுப்புப்பணம் வைத்திருப்போர், ஊழல்வாதிகள்,
 லஞ்சம் வாங்குவோர்  இவர்களுக்கெல்லாம் சரியான அடி விழும்!  சரியான முறையில் அனைத்தையும் கடைப்பிடித்தால் - அரசியல்வாதிகள் எதனையும் உடைத்தெறியக் கூடியவர்கள் -அமலாக்கம் சரியாக இருந்தால் - இந்த அதிரடி என்பது இந்தியாவைச் சரியானப் பாதைக்குக் கொண்டு செல்லும்.

இந்தியப் பிரதமர் மோடி தான் ஒரு துணிச்சல்வாதி  என்பதை நிருபித்திருக்கிறார். எந்த ஒர் அரசியல்வாதியும் செய்யத் துணியாததைச் செய்திருக்கிறார்! அவரது மாநிலமான, குஜாராத் மாநிலம், கறுப்புப் பணத்திற்குப் பெயர் போன மாநிலம்! அப்படியிருந்தும் இப்படி துணிச்சலோடு அவர் ஓர் அதிரடியைக் கொண்டு வந்ததற்கு அவரை நாம் பாராட்ட வேண்டும்!

மோடி அவர்கள் நல்லதைச் செய்திருக்கிறார்! பாராட்டுக்கள்!


Wednesday 9 November 2016

டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்!


அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட்  ட்ரம்ப் வெற்றி பெற்றார்!

உலக அளவில் இந்தச் செய்தி எப்படி வரவேற்கப்படும் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. இஸ்லாமிய உலகம் அதனை வரவேற்கவில்லை என்று ஆரம்பச்  செய்திகள் கூறுகின்றன.  ஆனாலும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நான் ட்ரம்பின் விசிறி.  அவருடைய ரசிகன். என்னுடைய இளமைக்காலத்தில் அவரை நான்  எனது சுப்பர் ஸ்டாராக நினைத்தவன். எனக்குச் சினிமா நடிகர்களில் யாரும் சுப்பர் ஸ்டார் இல்லை!

நான்  சொல்லுபவை எல்லாம் அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு - பல ஆண்டுகளுக்கு முன்பு! அவர் அரசியலில் இல்லாத காலத்தில்!

அவர் முதன் முதலில் எழுதிய "The Art of the Deal" என்னும் தலைப்பைக் கொண்ட புத்தகம் பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் படித்திருக்கிறேன். அதன் பின்னரும் நான் படித்திருக்கிறேன். இப்போதும் நான் படிக்கிறேன். இன்னும் அவர் எழுதிய ஒருசில புத்தகங்களையும் நான் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

இந்தப் புத்தகங்கள் அனைத்தும் தொழில் சம்பந்தமானவை. அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதில் சந்தேகமில்லை. ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர். எதனையும் பெரிய அளவில் நினைத்துப் பார்ப்பவர். நினைத்துப் பார்ப்பவர் மட்டும் அல்ல. அதனைச் செயல்படுத்தியவரும் கூட. திறமையானவர்.

ஆனால் அவருடைய அரசியல் எப்படி?  அவர் உதிர்த்த சில கருத்துக்கள் மக்களிடையே பலவித எதிர்மறை எண்ணங்களை உருவாக்கியிருக்கின்றன என்பது உண்மை தான். அதுவும் குறிப்பாக முஸ்லிம்களிடையே அவருடைய கருத்துக்கள் ஏற்கக்கூடியவையாக இல்லை.

ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். தேர்தலில் போது அவர் உதிர்த்த கருத்துக்கள் தேர்தல்கால கருத்துக்கள்! அவைகளுக்கு எந்த அளவுக்கு மரியாதை உண்டு என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அது முற்றிலும் ஓர் அரசியல்வாதியின் பேச்சாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அமெரிக்க அதிபர் பதவி என்பது உலக அளவில் அதற்கு ஈடு இணை இல்லை! அந்த  அளவு உயர்ந்த பதவி. அந்தப் பதவியை வைத்துக்கொண்டு ஓர் அதிபர் தனது விருப்பத்திற்கு எதனையும் செய்துவிட முடியாது! அவரைக்  கட்டுப்படுத்தவும் அவர்களுடைய செனட்டுக்கு அதிகாரமுண்டு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

டொனால்ட் ட்ரம்ப்,   நான் விரும்பிய ஒரு 'கதாநாயகர்'  என்பதால் அவர் பதவிக்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே!  அதே சமயத்தில் அவர் காலத்தில் உலகில் அமைதி நிலவ அவர் பாடுபட வேண்டும். அது நடந்தால் இன்னும் மகிழ்ச்சி! வாழ்த்துகள்!

Tuesday 8 November 2016

ஹின்ராப் இயக்கம் தேர்தலில் குதிக்குமா?


ஹின்ராப் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் பங்கெடுக்குமா  என்பதை  வெகு விரைவில் தீர்மானிக்கும் என்று அதன் தலைவர் வேதமூர்த்தி அறிவித்திருக்கிறார்.

அவர் ஆளுங்கட்சியில் கூட்டுச் சேர  வழியில்லை. எந்த ஆளுங்கட்சியும் அவரை வரவேற்கத் தயாராக இல்லை. அப்படியே அவர்கள் வருந்தி அழைத்தாலும் அவரும் போகத் தயாராக இல்லை.

ஒரு காலக்கட்டத்தில் இப்போதைய அரசாங்கத்தில் துணை அமைச்சராக இருந்தவர் பொன் வேதமூர்த்தி.  இந்தியர்கள் சார்பில் பிரதமருடன் ஒர் ஒப்பந்தம் போட்டுவிட்டு துணை அமைச்சரானவர். ஆனால் அவர் நினைத்தபடி எதனையும் அவரால் செயல்படுத்த முடியவில்லை!

நல்லதைச் செய்ய வேண்டுமென்று அவரிடம் ஆர்வம் இருந்தது. பிரதமரின் ஒத்துழைப்பும் ஒரளவு இருந்தது. ஆனால் அங்கு ம.இ.கா. (மலேசிய இந்தியர் காங்கிரஸ்} அவருக்கு இடையூறாக இருந்தது! அவர் செய்ய நினைத்த அனைத்துக்கும் அது தடையாக இருந்தது! அவரால் எதனையும் செய்ய இயலவில்லை. மனம் வெறுத்துப் போய் தனது துணையமைச்சர் பதவியை பதவிதுறப்புச் செய்துவிட்டார். பிரதமருக்கு ஒரு விஷயம் புரிந்துவிட்டது. இந்தியர்களுக்கு தான் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை. ம.இ.கா. இருந்தாலே நமக்குப் போதும். அவர்களே நாம் எதையும் செய்ய முடியாதபடி பார்த்துக் கொள்ளுவார்கள் என்று!

ஆளுங்கட்சியில் சேரமுடியாத ஒரு நிலையில் அவர் எதிர்கட்சியில் சேர நினைக்கலாம்.அவர்கள் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் தேர்தல் என்று வரும் போது பெரிதாக அவர்களிடமிருந்து எதனையும் எதிர்பார்க்க முடியாது! ஒரு நாடாளுமன்ற இடம் கொடுத்தாலே அதுவே பெரிய சாதனை!

பொதுவாக ஹின்ராப் தனித்து ஓர் அரசியல் கட்சியாக இயங்க வழியில்லை.  முற்றிலும் அவர்கள் இந்தியர் சார்ந்த ஒர் அமைப்பு. இந்தியர்கள் எந்தத்தொகுதியிலும் பெரும்பான்மை இல்லாதவர்கள். அவர்கள் போட்டிப்போட நினைக்கும் ஒரளவு இந்தியர் சார்ந்த தொகுதிகள் அனைத்தும் ம.இ.கா. வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். எதிர்கட்சி இந்திய  வேட்பாளர்களும் அங்குக் களம் இறக்கப்பபடுவார்கள். தனித்து இவர்கள் போட்டியிட்டால் வேற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவு.

நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்க வேண்டும் என்று நினைப்பது நல்லது தான்.  இப்போது மட்டும் என்ன?  நமது குரல் ஒலிக்காமலா இருக்கிறது? எதிர்கட்சியினர் அதனைச் செய்கிறார்களே! ம.இ.கா.வினரைத் தவிர மற்றவர்கள் குரல்கள் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன!

நாங்கள் நாடாளூமன்றத்திற்குப் போனால் எல்லாவற்றையும் மாற்றிவிடுவோம் என்னும் வீண் நினைப்பால் யாருக்கும் பயனில்லை!

ஒன்று ஆட்சி மாற வேண்டும் அப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டால் ஒரு வேளை ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வரலாம். கல்வி, வேலை வாய்ப்பு  போன்ற சில பிரச்சனைகள் நமக்குச் சாதகமாக இல்லை என்பது உண்மை தான்.

ஹின்ராப் தலைவர் வேதமூர்த்தி அவர்கள் தனது இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றுவது என்பது அவரது உரிமை. ஆனால் காலங்காலமாக ஏமாற்றுப்பட்டு வரும் நம் இனத்தவர்கள் யாரையும் நம்பத் தயாராக இல்லை என்பது தான் உண்மை!

ஹின்ராப் அரசியலில் குதிக்கட்டும்! கூத்தாடட்டும்! வாழ்த்துகிறோம்!

கடைசியாக,

எந்த ஓர் அரசியல்வாதியையும் நம்பிப் பயனில்லை!  நம்மை நாமே நம்புவோம்!


Saturday 5 November 2016

கபாலி ....ஒரு கண்ணோட்டம்!



கபாலி திரைப்படம் வெளியாகி மூன்று மாதங்கள் மேல் ஆகிவிட்டன. 100 நாள்கள் மேல் ஒடி முடிந்துவிட்டது..

இந்த நிலையில் ஒரு கண்ணோட்டமா?  அதனாலென்ன? படம் வெளியானதும் அடித்துப்பிடித்து விமர்சனம் செய்கிற அளவுக்கு எனக்கு ஒன்றும் அவசரமில்லை!

இதனை ஒரு பெரிய விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னுடைய கண்ணோட்டத்தில் சில கருத்துக்கள். அவ்வளவு தான்!

அதுவும் கபாலி மலேசியாவைக் களமாக கொண்ட ஒரு திரைப்படம். அதனை மனதில் கொண்டு சில கருத்துக்கள்.

முதலாவது கபாலி நமக்குச் சீனர்களை எதிரியாகக் காட்டுகிறது. அது உண்மை தான் என்றாலும் நமக்குப் பெரிய எதிரி அரசாங்கம் தான். அந்த உண்மையைச் சொல்ல முடியவில்லை.  அதனால் சீனர்கள் மேல் பழிபோடுவது என்பது எளிதாகப் போய்விட்டது!

அரசாங்கக் கொள்கைகள் அனைத்தும் நமக்கு எதிரானவை.  மேற்கல்வி  தடைச் செய்யப்படுகிறது. அப்படியே கிடைத்தாலும் நாம்  விரும்பிய கல்வி கிட்டுவதில்லை. தனியார் கல்வி நிலையங்களில் படித்து வந்தாலும் வேலை கிடைப்பதில்லை. வெளி நாடுகளில், சொந்தப்பணத்தில், தரமான மருத்துவக் கல்வி கற்று வந்தாலும் அது தரமில்லை என்று குப்பையில் போடுவது. இப்படி எல்லாவற்றிலும் கதவடைப்பது. இவைகளையும் மீறித்தான்  ஒரு சிலர் வெற்றி பெறுகிறார்கள். திறமைக்கு எந்த மரியாதையும் இல்லை.

அரசாங்க வேலை வாய்ப்புக்கள் நமக்கு மறுக்கப்படுகின்றன. தனியார் துறைகளிலும் நமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்களும் திறமைக்கு ஏற்ப அமையவில்லை. அரசாங்கமும் இதனை கண்டு கொள்ளவில்லை. நாட்டின் மூன்றாவது இனம் என்னும் முக்கியத்துவம் இல்லை. எல்லாத் துறைகளிலும் கதவடைத்தால் எப்படி முன்னேறுவது?  வங்காள தேசத்தவனுக்கு உள்ள சலுகைக் கூட நமது இனத்தவருக்கு இல்லை!

சீனர்களின் நிலையோ வேறு. அரசாங்க உதவி அவர்களுக்குத் தேவை இல்லை. தனியார் துறை அவர்களைச் சார்ந்தது. நாடே அவர்களை நம்பித்தான் இருக்கிறது! சீனர்களிடம் ஒரு குணம் உண்டு. சீன இனத்தவரை ஒரு மாதிரியாகவும் மற்ற இனத்தவரை வேறு மாதிரியாகவும் பார்க்கின்ற குணம் அவர்களுடையது. அவர்கள் இனத்திற்கு ஒரு விலை, ஒரு சம்பளம்! நம்மைவிட அவர்களுக்குக் கூடுதலான சம்பளம். கடைகளில் அவர்களுக்கு என்று ஒரு விலை! நமக்கென்று  ஒரு விலை!  என்னதான் அரசாங்கம் சட்டம் கொண்டு வந்தாலும், கொண்டு வந்தவர்களையே கையில் போட்டுக்கொண்டு, அவர்கள் அத்தனையையும் முறியடித்து விடுவார்கள்!

அபின், கஞ்சா என்பதெல்லாம் சீனர்களிடமிருந்து  வருவது தான். நம் இனத்தவர் எல்லாம் அவர்களுக்குக் கீழே தான். ஆனால் அவர்கள் யாரும் தொட முடியாத இடத்தில் இருப்பார்கள். அகப்படுபவன் உதைப்படுபவன் எல்லாம் நம் இனத்தவன்!

 கபாலியில் குண்டர் கும்பல் தலைவனாக ஒர் உயர் ஜாதி தமிழன் தலமை தாங்குவதாக காட்டப்பட்டிருப்பது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியவில்லை. அதனை நான் நம்பவில்லை என்றாலும் இயக்குனர்  ரஞ்சித் இந்தத் தகவலை எங்கு பெற்றார் என்பது தெரிந்தால் தான் அதன் நம்பகத்தன்மை தெரியவரும். ஆனால் கபாலி, வில்லனைப்  பார்த்து பேசுகின்ற அந்த உச்சக்கட்ட காட்சியின் வசனங்களைத் தேவையான ஒன்றாகவே கருதுகிறேன். ஆனால் அது முற்றிலும் தமிழ் நாட்டு நடப்பைப் பேசுகிறது!  மலேசிய நடப்பை அல்ல!

படத்தில் கபாலி உடுத்துகிற உடைகளைப் பற்றி பல இடங்களில் பேசுப்படுகிறது. ஆனால் இவைகள் முற்றிலும் தமிழகப் பின்னணிக் கொண்டவை. இங்கு மலேசியாவில் உடைகள் உடுத்துவது பற்றி எந்த ஏற்றத்தாழ்வுகளும்  இல்லை! மிகச் சாதாரணமானவன் கூட நல்ல  தரமான உடைகளைத்தான் அணிகிறான்.மேலும் நமது நாட்டில் யார் தாழ்ந்தவன், யார் உயர்ந்தவன் என்று எப்படி கண்டு பிடிப்பது?     நான் தாழ்ந்தவன், நான் உயர்ந்தவன் என்று யார் சொல்லிக் கொண்டு திரிகிறார்?  ஒருவருமில்லை!  ஒருவரின் குடும்பப் பின்னணி   நமக்கு நேரடியாகத்  தெரிந்தால்  ஒழிய அதனையெல்லாம் அவ்வளவு எளிதில் நாம் கண்டுபிடித்துவிட முடியாது.

மேலும் கோட்-சூட் போடுபவரெல்லாம்  உயர்ந்தவர்கள் என்னும்  கலாச்சாரம்  தமிழகக் பின்னணி கொண்டவை.  இங்கு இது பிரச்சனை அல்ல. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கணக்காயர்கள், ஆசிரியர்கள்  என்று எடுத்துக் கொண்டால் அனைத்துப் பிரிவினரும் இதில் உள்ளனர்.  அது மட்டும் அல்ல. காப்புறுதித்துறை, விற்பனையாளர்கள், நேரடித் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள்  அனைவருமே கோட்-சூட் போடுபவர்கள் தான். உடை அணிவதில்  சாதியப்பிரச்சனை என்று ஒன்று  இருப்பதாகத் தெரியவில்லை.

இப்போது கலப்புத் திருமணங்கள் அதிகம். குறிப்பாக மருத்துவத்துறை, சட்டம்  பயிலுபவர்கள்  பலர் காதல் திருமணங்கள் செய்கின்றனர். ஒரே துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் இங்கு சாதியம் அடிபட்டுப் போகிறது.  நடுத்தர வட்டத்தில் வேண்டுமானால் இன்னும் இந்தப் பிரச்சனை இருக்கலாம். ஆனால் காதல் என்று வரும்போது சாதியம் தகர்க்கப்படுகிறது.  இதை நான் நேரடியாகவே பார்க்கிறேன்.

தமிழ் சினிமா உலகில் கபாலி ஒரு வித்தியாசமான படம் என்பது உறுதி சொல்ல வந்த கருத்துக்கள் உண்மையானவை. அதுவும் இயக்குனர் ரஞ்சித் அவர் சொல்ல வேண்டிய செய்திகளை ரஜினி மூலம் சொல்ல வைத்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.  ரஜினிக்கு மிக உயர்ந்த குணம். தனக்கும் இந்த சமூகத்தின் மேல் அக்கறை உண்டு என்பதை அவர் காட்டியிருக்கிறார். வாழ்த்துகள், ரஜினி சார்!

கபாலி மலேசியப் பின்னணியைக் கொண்ட படம் என்றாலும் அது தமிழகப்பிரச்சனையையும்  பேசுகிறது என்பது தான் உண்மை. அது தவறு என்று நான் சொல்ல வரவில்லை. யாராவது, எங்கேயாவது அதனை பேசித்தான் ஆக வேண்டும். இது ஒரு ஆரம்பம்! இது தொடர வேண்டும் என்பது எனது நிலைப்பாடு!

இயக்குனர் ரஞ்சித்திடம் இன்னும் பல சமூக மாற்றத்திற்கான படைப்புக்களை   எதிர்பார்க்கிறோம்.

கபாலி ஒரு வெற்றிப் படைப்பே!


Wednesday 2 November 2016

அம்மா உணவகம்..!


அம்மா உணவகம் என்றால் தமிழ் நாட்டில் மிகவும் பிரபலம். அது அரசியல் உணவகம். நம் மலேசியாவில் காக்கா உணவகம் என்றால் மிகவும் பிரபலம்! நாம் அதனைக் "காக்காக் கடை" என்று செல்லமாக அழைப்போம்!

வெளிநாட்டு வாசர்களுக்கு:  காக்காவுக்கும் இந்த உணவகங்களுக்கும் சம்பந்தம் இல்லை.  இங்கு காக்கா என்று குறிப்பிடுவது கேரள நாட்டு முஸ்லிம்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதுவும் குறிப்பாக உணவகங்கள் நடத்தும் கேரள முஸ்லிம்களையே இது குறிக்கும்! இப்போது அது கொஞ்சம் கிளைவிட்டு உணவகங்கள் நடத்தும் தமிழ் முஸ்லிம்களையும்  பற்றிக் கொண்டது!

இப்போது இந்த கேரள முஸ்லிம்களின் கடைகள் நாடெங்கம் அதிகரித்து வருகின்றன. மூலை முடுக்குகள் எல்லாம் இவர்கள் உணவகங்களைத் திறக்கின்றனர். முதாளிகளும் கேரள முஸ்லிம்கள், வேலை செய்பவர்களும்  கேரள முஸ்லிம்கள்!

இவர்களின் முக்கிய வாடிக்கையாளர்களாக  உள் நாட்டு முஸ்லிம்களையே குறி வைக்கின்றனர். இப்போது இந்திய உணவு வகைகளையும் சேர்த்துக் கொண்டு இந்தியர்களையும் வளைத்துப் போடுகின்றனர்! ஆனால் சுத்தம் என்று வரும்போது இவர்கள் இன்னும் தங்களது இந்திய உணவகங்களின் மரபையே பின் பற்றுகின்றனர்! அதனால் உள்நாட்டு இந்தியர்களின் ஆதரவு என்பது கொஞ்சம் தள்ளியே நிற்கிறது!

ஆனால் நாம் இங்கு சொல்ல வேண்டிய செய்தி இதுவல்ல.  இவர்கள் உணவகங்கள் திறக்கிறார்கள். இவர்கள் அருகிலேயே மலாய்க்கார முஸ்லிம்களும் உணவகங்களை நடத்துகின்றார்கள்.  இந்தக் காக்காமார்களின் உணவகங்களோ 'ஓகோ' என்று நடைபெறுகின்றது. மலாய்க்கார உணவகங்களோ 'ஈகோ' என்று ஈ ஓட்டிக்கொண்Mடிருக்கிறது! இது எப்படி சாத்தியம்?

அப்படி ஒகோ என்று நடைபெறுகின்ற அளவுக்கு அங்கு எந்த விசேஷமும் இல்லை. ஆனால் அவர்களின் வியாபாரம் அசாதாரணமாக நடக்கிறது! அவர்களின் உணவகங்களின் விலையோ மற்ற உணவகங்களை விட விலை அதிகம்! அவர்கள் அரசாங்கம் சொல்லுகின்ற விலையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை! அவர்கள் வைத்தது தான் விலை. விலையோ கூடுதல்! ஆனால் அங்கு தான் மலாய்க்காரர்கள் அதிகம் கூடுகின்றனர்!

உண்மையைச் சொன்னால் அவர்களின் உணவகங்களில் விலை அதிகம். சுத்தம், சுகாதாரம் என்பதோ கொஞ்சம் கம்மி! பழைய சரக்குகளை வைத்தே சரிசெய்தல்! இப்படி பல்வகையான குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது உண்டு!

ஆனாலும் எல்லாக்காலங்களிலும்  அவர்கள் வியாபாரங்கள் குறைவதில்லை! ஏறுமுகமாகவே உள்ளன!

இது பற்றி எனது முஸ்லிம் நண்பர் - அவரும் காக்கா தான், உணவகமும் உண்டு -  அவருடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு தகவலைச் சொன்னார்: இந்தக் காக்காமார்களெல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கேரளா போவார்கள். அங்கு போய் தங்களது வியாபாரம் பெரிய அளவில் பெருக வேண்டும் என்பதற்காக 'மந்திரம்' செய்துவிட்டு வருவார்கள்! அதனால் தான் அவர்களின் வியாபார நிலையங்களில் கூட்டம் குறைவதில்லை! என்பதாக அவர் குறிப்பிட்டார்!

பொதுவாக நான் இது போன்ற 'மந்திர,தந்திர' செய்திகளை நம்புவதில்லை. ஆனால் சொன்னவரோ அவரும் அந்த கேரள காக்கா என்பதால் ஏதோ 'இருக்கலாம்!' என்று தலையாட்டியதோடு சரி! ஆனால் முழுமையாக நமபவில்லை!

ஆனாலும் நான் நம்புவதைப் பற்றி யார் கவலைப்பபட்டார்? காரியங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சமீபகாலங்களில் நடைபெறுகின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது அது உண்மைதான் என்று தோன்றுகிறது! ஒருவர் கேரளா போகின்றார் என்றாலே கொஞ்சம் சந்தேகக்கண் கொண்டு தான் பார்க்க வேண்டியிருக்கிறது!

சரி! இந்த மந்திர வேலையெல்லாம் உணவகங்களுக்கு மட்டும் தானா? ஏன், மற்ற தொழில்களுக்குப் பயன்படுத்த முடியாதா? அப்படி ஒரு கேள்வி கேட்க நினைத்தாலும் இந்தக் காக்காமார்கள் எல்லாம் உணவுத்துறைக்கு  மட்டும் தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள்! நான் பார்த்தவரை இவர்கள் உணவகங்கள் மட்டுமே நடத்துகிறார்கள்!   வேறு துறைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை!

ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். அந்தக் காக்காமார்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களின் உழைப்பை நான் குறைவாகச் சொல்லமாட்டேன். நல்ல உழைப்பாளிகள்.24 மணி நேரமும் உழைக்கத் தயாராக இருப்பவர்கள். சரியான, கடுமையான உழைப்பு அவர்களிடம் உண்டு.அந்த உழைப்பை நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எங்கே போனாலும் ஒரு உணவகத்தைத்  திறந்து நடத்த வேண்டும் என்னும் அந்த மன உறுதி நமக்கும் வேண்டும். தொழில் தான் அவர்களின் குறிக்கோள். அது மிகவும் பாராட்டுக்குறியது.

அவர்களிடம் நேர்மைக்குறைவு உண்டு. தொழிலில் அது தேவை என்று அவர்கள் நினைக்கிறார்கள்! ஏமாற்றாமல் ஒரு தொழிலைச் செய்ய முடியாது என்பது அவர்களின் நிலைப்பாடு!

நாம் அவர்களைப்பின் பற்ற வேண்டும் என்னும் அவசியம் இல்லை. நாம் அவர்களின் உழைப்பை மட்டும் பார்ப்போம். தாங்கள் முன்னேற வேண்டும் என்னும் அவர்களின் துடிப்பு நமக்கும் வர வேண்டும். அது போதும்!

கேரள காக்காய்களிடமிருந்து நல்லதை நாம் எடுத்து கொள்ளுவோம்! முன்னேறும் வழியைப் பார்ப்போம்!








Monday 31 October 2016

கேள்வி - பதில் (33)


கேள்வி

ஜெயலலிதா - கருணாநிதி உடல் சுகவீனத்திற்கு பில்லி சூனியம் தான் காரணம் என்று இப்போது புதிதாக செய்திகள் வெளியாகின்றனவே! இப்படியும் நடக்குமா?

பதில்

அரசியல்வாதிகள் எதனையும் செய்யத் தயங்காதவர்கள் என்பது பொதுவான ஒரு குற்றச்சாட்டு உண்டு.

இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியிருப்பவர்  ஒரு ஜோதிடர் என்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

ஜெயலலிதாவுக்கும் ஜோதிடர்களுக்கும் உள்ள தொடர்பை தமிழகமே அறியும். அதில் ஏதும் ரகசியம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் செய்கின்ற ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு செயலும் ஜோதிடர்களின் அறிவுரைப்படி தான் நடக்கின்றன என்பதை ஊரறியும்.

அவரை ஆட்சியில் அமரவைத்த அவருடைய ஜோதிடர்கள் இந்த உடல் சுகவீனத்தைப் பற்றி ஏன் அவரிடம் சொல்லவில்லை? ஏன் அவர்களுக்குத் தெரியவில்லை? ஏன் அவருக்குத் தெரிவிக்கவில்லை?

ஜெயலலிதா கடவுளை நம்பினாரோ,  நம்பவில்லையோ ஆனால் அவர் ஜோதிடர்களை அளவுக்கு அதிகமாகவே நம்பினார்!  அரசியலை முன் அறிந்த ஜோதிடர்கள் அவருடைய உடல்சுகவீனத்தை ஏன் முன்னறியவில்லை? இப்படிக் கேள்விகளை அடுக்கிக்கொண்டு போகலாம். ஆனால் பதில் தான் இல்லை! நம்மிடம் உள்ள ஒரே பதில்: காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையைத்தான் நாம் நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!

ஜோதிடர்கள் அரசியலைக் கணிக்கலாம் ஆனால் அவர்களால் உடல்நலனைக் கணித்து அறிய முடியாது என்பதைத்  தான் இது காட்டுகிறது! அல்லது போகிற போக்கில் இப்படிச் சொல்லிவிட்டுப் போகலாம்: ஜோதிடர்கள் தான் அவரிடம் நெருக்கம் உள்ளவர்கள். பலம், பலவீனம் அறிந்தவர்கள். ஏன் அவர்களிலே ஒருவர் இதனைச் செய்திருக்கக் கூடாது?

கருணாநிதிக்கு இது போன்ற பிரச்சனைகள் இல்லை. அவர் பில்லி, சூனியம், ஏவல் போன்றவைகளில் நம்பிக்கை இல்லாதவர். ஜோதிடரையோ, ஜோதிடத்தையோ நம்பாதவர்! வயதின் காரணமாக சில உபாதைகள் வரும் என்பதை அவர் உணர்ந்தவர். அதனால் அவர் இதனையும் ஒரு பொழுது போக்காக எடுத்துக் கொள்வார்!

நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். இப்போது ஜெயலலிதாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டு வருகிறார்கள். அதுவும் அவர்கள்,  தாங்கள்  சார்ந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். அவர்களை நம்புங்கள். இதுவே ஒரு சராசரி ஏழைப் பெண்ணாக இருந்தால் ஏதோ ஒரு கோயிலுக்குப் போய், பூசாரி கொடுத்த திருநீற்றை நெற்றியில் பூசிக்கொண்டு வருவார்.  அடுத்த நாளே அவர் குணமாகிவிடுவார்! பணக்காரர்களுக்கு ஏற்படும் நோய் கொஞ்சம் இழுத்துப் பறித்துக்கொண்டு தான் இருக்கும்! அதுவும் அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் நோய் மருத்துவர்களிடமும் விதண்டாவாதம் பண்ணிக் கொண்டிருக்கும்!

ஜெயலலிதா அவர்கள் உடல்நலம் பெறுவார்.  மீண்டும் தனது பணிகளைத் தொடர நாமும் இறைவனை இறைஞ்சுவோம்!

Friday 28 October 2016

கபாலி - தீபாவளி செய்தி!


தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள். நல்ல முறையில் கொண்டாடுங்கள். உற்றார்  உறவினர், நண்பர்கள், நமது நலம் விரும்பிகள் அனைவரோடும் சேர்ந்து குதூகலமாக தீபாவளியைக் கொண்டாடுங்கள்.  

வீணடிப்பது என்பது நமது சமூகத்தில் மிக அதிகம். ஒர் அளவு தெரியாமல் அதிகமாகச் சமைத்துவிட்டு அதனை அப்படியே குப்பையில் கொட்டுவது என்பது நம்மிடையே அதிகம். முடிந்தால் ஆதரவற்ற இல்லங்களுக்குச் சென்று உங்களது தீபாவளியைக் கொண்டாடுங்கள். ஆதரற்றவர் என்பது எப்போது வேண்டுமானாலும் மாறலாம். கொஞ்சம் புண்ணியத்தையாவது சேர்த்து வைப்போம்.

எல்லாவற்றையும் விட கபாலி என்ன சொன்னார் என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்.  

பாருங்கள்,  கபாலி என்ன சொல்லுகிறார் என்று: "நாங்கள் ஆண்ட பரம்பரை இல்லை தான்! ஆனால் ஆள விரும்புகிறவண்டா!"  
இதனை மறந்து விடாதீர்கள். நாம்  நாட்டை ஆள வந்த சமூகம். ஆள விரும்புகிற சமூகம். ஆள வேண்டியவர்கள் நாம். பிறரை நாம் ஆள விடக்கூடாது!    தவறுகள் நேர்ந்திருக்கலாம்.  ஆனால் அதனைத் தொடர விடக்கூடாது! இதனைத் திருத்துவதற்கு யாரையும் நாம் எதிர்பார்க்க  வேண்டாம். நாமே தான் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

ஆள விரும்புவது என்றால் அனைத்தையும் ஆள வேண்டும். நாடு, வர்த்தகம், மருத்துவம், நீதித்துறை இப்படி அனைத்துத் துறையிலும் நமது கால்கள் உறுதியாக ஊன்றப்பட வேண்டும் நமக்குச் சாக்குப் போக்குகள் வேண்டாம்..    

சீனனைப் பாருங்கள். யூதனையும் பாருங்கள்.  இன்று வர்த்தகம் என்பது அவர்கள் கையில். யூதனைப் பார்க்க முடியாவிட்டாலும் சீனர்களைத் தினசரி  நாம் பார்க்கிறோம்.  அவன் வர்த்தகத்தைப் பாருங்கள்.  எப்படி செயல்படுகிறான் என்று பாருங்கள். நமது நகரத்தாரிடமிருந்து கடன் வாங்கியவன். இன்று நாம் அவனை அண்ணாந்துப் பார்க்கிறோம்!  

தமிழர் சமூகம் கொடிகட்டி வாழ்ந்த சமூகம். அந்தப் பெருமையை மீட்டெடுக்க நாம் உழைக்க வேண்டும். உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்.நாம் ஆள வேண்டும்! ஆள்கின்ற சமுகமாக மாற வேண்டும்.

இந்தத் தீபாவளி பெருநாளில் "நாம் உயர்வோம்!" என்று உறுதிமொழி எடுப்போம்!    

தீபாவளி வாழ்த்துகள்!                    

Wednesday 26 October 2016

தீபாவளி எச்சசரிக்கை!


காலையில் ஒரு சொற்பொபொழிவைக் கேட்க நேர்ந்தது.

இது தீபாவளி காலம் என்பதால் நான் கேட்டதை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

இப்போதெல்லாம் கண்களில் லென்ஸ் (Contact Lens)  - தொடுவில்லை -போடுவது என்பது மிகவும் சாதராணமாகப் போய் விட்டது. தங்களுக்குக் கண் தெரியவில்லை என்பதை யாரும் காட்டிக் கொள்ள விரும்பவில்லை! அதனால் லென்ஸ் போடுகின்ற பழக்கம் அதிகரித்து வருகிறது.

இதனையெல்லாம்  யாரும் தவறு என்று சொல்லப் போவதில்லை.  பணம் கொஞ்சம் கூடுதலாகப் போட வேண்டியிருக்கும். அவ்வளவு தான்.

தொடுவில்லை போடுவதால் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பது பற்றி இங்கே நாம் பேசப்போவதில்லை.

ஆனால் திருவிழாக் காலங்களில் இந்தத் தொடுவில்லை  போடுகிறவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.

தீபாவளி போன்ற பெருநாட்களில் நாம் பலகாரங்கள் செய்வதில் நிறைய ஈடுபாடு காட்டுகிறோம். பலகாரகங்கள் மட்டும் அல்ல, விதவிதமாகச் சமைப்பது இன்னும் பல. நெருப்பு, புகை, தணல் என்று இவைகளோடு தான் நிறைய போராட்டங்கள் நமது பெண்கள் நடத்த  வேண்டியுள்ளது.

இந்த நேரத்தில் தொடுவில்லையைப் பயன் படுத்துகிற பெண்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்துகின்ற அந்தத் தொடுவில்லைகள் பிளாஸ்டிக்கால் ஆனது. நெருப்புக்கு உருகும் தன்மை உள்ளது  அப்படி உருகும் போது அது உங்களின் கருவிழிகளை நிரந்தரமாகக் குருடாக்கிவிடும்.

நீங்கள் அடுப்படி வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது முடிந்தவரையில் அந்தத் தொடுவில்லைகளைக் கழட்டி வைத்து விடுங்கள். அதுவே உங்களுக்குப்  பாதுகாப்பு.

கண்கள் நமக்கு மிக முக்கியமான உறுப்பு. அதனை இழந்துவிடலாகது. முடிந்தவரை நமது கண்களுக்கு நாம் பாதுகாப்புக் கொடுப்போம்.

மகிழ்ச்சியோடு தீபாவளியைக்  கொண்டாடுவோம்.                                                

.

Tuesday 25 October 2016

ம.மு.க. தமிழைப் புறக்கணிக்கிறதா?


People's Progressive Party (PPP) என்றும் தமிழிலே மக்கள் முற்போக்குக் கட்சி என்று அழைக்கப்படும்  ம.மு.க.தமிழைப் புறக்கணிக்கின்ற வேலையைச் செய்கின்றதா என்று நாம் யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

சமீபத்தில் நடைப்பெற்ற ஒரு நிகழ்வைப் பார்க்கின்ற  போது அப்படித்தான்  ஒரு முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது.

ஜாலான் பெட்டாலிங் (Jalan Petaling) அறிவிப்புப் பலகையில் தமிழைப் புறக்கணித்துவிட்டு அங்கு வங்காள மொழியைப் பயன்படுத்திருப்பதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இது ஒரு தவறான ஆரம்பம். தமிழைப்புறந்தள்ளிவிட்டு, வங்காள மொழியை கொள்ளைப்புற வழியாகக் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன என்பது நமக்குப் புரிகிறது. ஒரு முறை ATM - ல் வங்காளா மொழியை நான் பார்க்க நேர்ந்தது.  அதன் பின்னர் எதனையும் காணோம். ஆனால் ஏதோ வேலைகள் நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. அதற்கும் சரியான பதிலை அரசாங்கம் வைத்திருக்கும். காரணம் கேட்டால் ATM - மைப் பயன்படுத்துதுபவர்களில் வங்காள தேசிகள் முதன்மையாக இருக்கிறார்கள் என்பதாகப் பதில் வரும்!

இன்னொன்றையும் நாம் மறத்தலாகாது, வங்காள தேசிகளின் பிள்ளைகள் இப்போது, பூமிபுத்ரா என்னும் அந்தஸ்தோடு, பல பதவிகளை அலங்கரிக்கிறார்கள்! அவர்களுடைய ஆதிக்கம் பலம் பெற்று வருகிறது. மொழி விஷயங்களில் அவர்களடைய ஊடுருவல் நமக்குப் பாதகமாக அமையலாம்! நமது அரசாங்கமும் தமிழின் மீதான பிரச்சனைகளில் நமக்கு எதிராகவே இருக்கிறது.

நமது பிரதமர் நமக்கு அள்ளிக் கொடுப்பார். ஆனால் ஒரு அரசாங்கக் கடைநிலை ஊழியன் அதனை நமக்குக்  கிள்ளிக் கொடுப்பான்! இதனை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். நம்மைப்  பிரதிநிதிக்கிறவர்கள்   எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள்!


இந்த நிலையில் தான் கூட்டரசு பிரதேச துணையமச்சர் டத்தோ லோகபாலமோகன் நம் கண்முன் வருகிறார். அவருடைய அதிகாரத்திற்கு  உட்பட்ட  ஒரு இடத்தில் தான் இது நடந்திருக்கிறது. நாட்டின் அங்கீகரிக்கபட்ட மொழியினை ஒதுக்கிவிட்டு வேற்று மொழியைக் கொண்டு வரவேண்டுமென்றால் அதனை "ஏதோ தவறு நடந்திருக்கிறது" என்று ஒதுக்கிவிட முடியாது. தெரியாமல் இது நடக்கவில்லை. தெரிந்துதான் இது நடந்திருக்கிறது. அதுவும் துணை அமைச்சருக்குத் தெரியாமல் நடந்திருக்க வழியில்லை.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள  வரவேற்பு வளையத்தில் வங்காள மொழி பயன்படுத்தப் பட்டிருக்கிறது.என்றால் அது எப்படி நமது நாட்டில் அங்கீகரிக்கப்படாத ஒரு மொழியை பயன்படுத்த முடியும்? துணை அமைச்சருக்கும் வங்காள மொழிக்கும் என்ன சம்பந்தம்?

ஏற்கனவே ம.மு.க. தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் தமிழ்ப்பள்ளிகள் தேவை இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பவர். அவர் வழி வந்த டத்தோ லோகபாலமோகன் என்ன சொல்ல வருகிறார்?  தலைவர் தமிழ்ப்பள்ளிகள் வேண்டாம் என்கிறார். இவர் தமிழே வேண்டாம் என்று சொல்ல வருகிறாரோ!

அவர் தமிழ் மொழிக்கு எதிரி என்றால் அது அவருடைய தனிப்பட்ட பிரச்சனை. அவர் அதனைத் தனிப்பட்ட - சொந்த வாழ்க்கையில் - அதனைத் தவிர்க்கலாம்.. ஆனால் அவர் ஒரு துணையமச்சர். இந்தியர்கள் சார்பில் அவர் அங்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ அவர் தமிழ் மொழியை ஆதரித்துத் தான் ஆக வேண்டும்என்று நாங்கள் எதிர்பார்ப்பது யாரும் தவறு என்று சொல்ல முடியாது. அது அவரது கடமை. ஓர் இனத்தை பிரதிநிதிக்கும் ஒர் அமைச்சர், அந்த இனத்தின் தாய் மொழியைப் புறக்கணிப்பது,  மிகவும் கண்டிக்கத்தக்கது.

அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். முதுகில் குத்துபவர்களாக இருக்கக் கூடாது! பதவியில் இருந்து கொண்டு சொந்த இனத்திற்கே துரோகம் செய்வது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஏதோ ஒரு ம.இ.க. தலைவர் .இந்த சமுதாயத்திற்குத் துரோகம் செய்தார் என்பதற்காக அவரையே ஒரு வழிகாட்டியாக எடுத்துகொண்டு அரசியலுக்கு வரும் ஒவ்வொருவரும் அவரையே பின்பற்றினால் அப்புறம் உங்கள் இனத்தைக் காப்பது யார்? அந்தப் பொறுப்புணர்ச்சி என்பது உங்களுக்கு எங்கே போயிற்று?

ம.மு.க. தமிழுக்கு ஆதரவாக இல்லை என்பதற்கு அவர்களுடைய ஆங்கில விக்கிப்பெடியா வைப பார்த்தாலே போதும்.. அவர்கள் தங்கள் கட்சியின் பெயரை ஆங்கிலம், மலாய், சீனம் ஆகிய மொழிகளில் எழுதியிருக்கிறார்களே தவிர தமிழில் எழுதவில்லை. அதனை நாம் கேட்டால் நாங்கள் பல்லினக் கட்சி, இந்தியர் கட்சி அல்ல என்பார்கள்! பல்லினக் கட்சி என்றால் தமிழ் தேவை இல்லை என்பது தான் அவர்கள் கொள்கையோ என்பதும் நமக்குப் புரியவில்லை!

எப்படியோ பல அமைப்புக்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்த பின்னர் அந்த வரவேற்பு வளையத்தில் வங்காள மொழி அகற்றப்பட்டு தமிழ் மொழி புகுத்தப்பட்டு இருக்கிறது.

இதில் நாம் மகிழ்ச்சி அடைய ஒன்றும் இல்லை. வங்காள தேசிகளை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் தங்கள் மொழிக்காக எதனையும் செய்வார்கள். அரசாங்கமும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. கொடுக்க வேண்டியதைக் கொடுத்து அவர்கள் காரியம் சாதிப்பவர்கள்.

நாம் விழிப்போடு இல்லையென்றால் இது போன்ற புறக்கணிப்புக்கள் தொடரும் என்பது நிச்சயம்.  ந்மது அரசியல் தலைவர்களுக்கு எப்படிப் பாடம் புகட்டுவது என்பதை யோசிக்க வேண்டும்.

விழித்திருப்போம்! செயல்படுவோம்!