Saturday, 28 June 2025

அது என்ன 'பெராட்டா ரொட்டி'?

நாங்கள் முதன் முதலாக  இந்த ரொட்டியைச் சாப்பிட  ஆரம்பித்த போது  அப்போது அதனை பெரட்டா ரொட்டி என்று தான் சொன்னோம்.  அதன் பின்னர் தமிழ் நாட்டில் பரோட்டா  என்று சொல்லுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டோம்.  அதுவே இப்போது நம் நாட்டி; ரொட்டி சனாய் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பரோட்டா  ரொட்டி எனது பள்ளி பருவத்தில் ஏறக்குறைய 1956  களில்  மற்றொரு மாணவருடன்,  சாப்பிட ஆரம்பித்தேன்.  அதுவே தினசரி மதிய உணவாக மாறிவிட்டது! மத்தியான பள்ளி என்பதால்  வீடு போய் சேரும்வரை  பசி தாங்கும்.  தேவையெல்லாம் 10 காசும்  வெறும் தண்ணீரும் தான்! 

சிரம்பானில் 1956 களில் தான் அதுவும் அலீஸ் கஃபே என்னும்  தமிழ் முஸ்லிம்  நண்பரின் உணவகத்தில் தான்  பரோட்டா  விற்கப்பட்டது.அப்போது தான் பரோட்டா சிரம்பானில் அறிமுகம் என நினைக்கிறேன். இப்போதும்  அந்த உணவகம் உள்ளது    அப்போது பரோட்டாவை  புறக்கணித்த இந்திய உணவகங்கள்  பின்னர்   அள்ளி அணைத்துக் கொண்டன!

இப்போது  ரொட்டி சனாய் என்கிற பெயரில் நமது நாட்டின் காலை நேர தேசிய உணவாக மாறிவிட்டது.




அறிவோம்:  இன்று மெட் ரிகுலேஷன் கல்வி பற்றி நம் மக்களால்  பெரிதளவு விமர்சனம் செய்யப்படுகிறது.  இது வழக்கமான  ஒன்று தான்.  ஆனாலும்  என்ன செய்ய? கல்வி மீதான புரிதல்  இன்னும் நம் மக்களுக்கு  வரவில்லை. பொது மக்களால்  குரல்  எழுப்பப்பட்டு  ஏதோ கொஞ்சநஞ்ச  பிச்சை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நம் பெற்றோர்களோ  'தூரம்' எனக் காரணம் காட்டி. குறிப்பாக பெண் பிள்ளைகளை அனுப்ப மறுக்கிறார்கள்!  யாரைக் குற்றம் சொல்லுவது? கொடுப்பவனுக்கு அதுவே கொண்டாட்டமாகி விடுகிறது!

Friday, 20 June 2025

எனது முதல் ஆங்கிலப் புத்தகம் (45)

 

எனது முதல் ஆங்கிலப் புத்தகம்  இது தான்.  அந்தக் காலத்திய பதிப்பு இப்படித்தான் இருந்தது.

அப்போது பள்ளியில் பரிட்சை முடிந்த நேரம்.  சிரம்பானில் ?பிளாஸா" தியேட்டர் ஒன்று இருந்தது. அங்கு எப்போதும் ஏதாவது ஆங்கிலப்படங்கள்  ஓடிக் கொண்டிருக்கும். எல்லாம் பழைய படங்களாகவே இருக்கும். கட்டணமும் குறைவாக இருக்கும். அந்தத் தியேட்டரின் வெளியே ஒரு சிறிய புத்தகக்கடை.  அனைத்தும் ஆங்கிலப் புத்தகங்களாகத்தான் விற்பனையில்  இருக்கும். 

அங்கு வாங்கப்பட்டது தான் இந்த எனது முதல் ஆங்கிலப் புத்தகம் Dale Caenegie  எழுதிய  How to  Win Friends  and Influence People.  அதன் பின்னர் பல ஆங்கிலப் புத்தகங்கள் எல்லாம் டேல் கார்னெகி  எழுதியவை.  அப்போது சிரம்பானில்  ஆங்கிலப்  புத்தகக்கடைகள்   ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. இதை விட்டால் திமியாங் 'கத்தே'  தியேட்டரில் ஒரு சிறிய புதகக்கட்டை. சிரம்பானில் ஒரே தமிழ் புத்தகக்கடை என்றால் . அன்றும் இன்றும், என்றும் அது  பவுல் ஸ்திரீட்டில் அமைந்துள்ள "ரெங்கசாமி புத்தக நிலையம்" தான். அங்கு தான் எனது அனைத்துத்  தமிழ் புத்தகங்களையும் வாங்கினேன்.  

இதுவரை நான் வாங்கிய புத்தகங்கள் சுமார் ஆயிரம் இருக்கலாம். ஓர்  நூல்நிலையத்திற்குப்  பல புத்தகங்கள் போய்விட்டன.. இப்போது என்னிடம் இருப்பவை எல்லாம் சுய முன்னேற்றம்  (self-improvement)  புத்தகங்கள்  மட்டுமே.. அந்தப் புத்தகங்கள் என்னை ஈர்த்தது போல வேறு புத்தகங்கள் என்னை ஈர்க்கவில்லை!

ஒரு  மனிதனின்  உயர்வுக்குப்  புத்தகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. வாழ்க்கையில் எந்த நேரத்திலும் புத்தகங்கள் கைகொடுக்கும்.



அறிவோம்:  "யானை படைகண்டு சேனை பல வென்று"  என்று கவியரசு கண்ணதாசனின் பாடலைக் கேட்டிருப்போம்.  உலகிலேயே யானை படை வைத்திருந்தவர் சோழப்பேரரசர்  ராஜராஜ சோழன் மட்டும் தான். வேறு எந்த அரசரும் யானை படை வைத்திருந்ததாக  வரலாறு இல்லை.

Tuesday, 17 June 2025

நான் வாங்கிய முதல் புத்தகம் (44)

                                                   அறிஞர் அப்துற் றகீம்

நான் புத்தகப்பிரியன். என்னுடைய புத்தகங்கள் எல்லாம்  நானே காசு கொடுத்து வாங்கியவை.  தெரிந்தோ தெரியாமலோ எனது ஆரம்பகால புத்தகங்கள் அனைத்தும் தன்முனைப்பு (motivation)புத்தகங்களாகவே  அமைந்துவிட்டன. இத்தனைக்கும் அந்த நேரத்தில்  தப்பறியும் கதைகள், மர்மக்கதைகள் என்றுதான் எனது சுற்றுவட்டாரம் அனைத்தும்  மூழ்கியிருந்தன! நானும் தான்! ஆனால் ஒன்றில் மட்டும் நான் தீர்க்கமாக இருந்தேன். இதுவரை நான் சினிமா புத்தகங்களையோ, துப்பறியும் புத்தகங்களையோ நான் லாசு போட்டு வாங்கிப் படித்ததில்லை!  அந்தக்கால கட்டத்தில் துப்பறியும் கதைகளை எழுதி வந்த  அனைத்து எழுத்தாளர்களின் பெயர்களையும் நான் இப்போதும் அறிவேன்.

அறிஞர் அப்துற் றகீம்  எழுதிய புத்தகம் தான் "வாழ்க்கையில் வெற்றி". ஆனால் அன்றைய நிலையில்  அவருடைய மொழிநடை   எனக்குப் புரியவில்லை! பின்னர் பல ஆண்டுகள் கழித்து அவர் எழுதிய  புத்தகங்கள் அனைத்தையும் வாங்கினேன்.   அப்போது மிக எளிய நடையில் தமிழ்வாணன் எழுதி வந்தார்.  அவருடைய நடை தான் என்னைக் கவர்ந்தது. தமிழ்வாணனின் வார இதழான  "கல்கண்டு"  தான் நான் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வாசித்திருக்கிறேன். அவர் எழுதிவந்த துணிவே துணை கட்டுரைகள்  எனக்குப் பிடித்தமானவை.



அறிவோம்:   மிளகாய் என்பது மிகவும் காரசாரம் என்பதை நாம்  அறிவோம். மிளகாய் வகைகளில் பலவகை உண்டு.  காரம் அதிகம், குறைவான காரம் அல்லது காரமே இல்லை என்பது தான்  அதன் குணம். Chili  என்கிற நாட்டிலிருந்து வந்ததால் மிளகாயின் பெயர் ஆங்கிலத்தில் Chilli யாக மாறிவிட்டது!  மிளகாய் தமிழர்களின் உணவு  அல்ல. நமது பாரம்பரியம்  என்பது மிளகு தான். மிளகாய் வருவதற்கு முன்னர் நாம் மிளகைத்தான் பயன்படுத்தினோம். இரண்டுமே காரம் தான்.  ஆனால் மிளகு எந்தத் தீங்கையும் செய்யாது.  மருத்துவ குணமிக்கது.