Sunday, 27 July 2025

இளம் வயதில் இப்படி ஒரு கணக்கு(48)

 பள்ளி காலத்தில், அதாவது எனது மூன்றாம் வகுப்பில், தெரிந்து கொண்ட ஒரு விஷயம்,  இப்போதும் நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்பது ஆச்சரியம் தானே!

அப்போது எல்லாம்  ஒவ்வொரு மாதத்திலும் எத்தனை நாள்கள் என்பது எங்களுக்குப் புரியாத விஷயம். ஏனேனில் காலண்டர் என்பது பயன்பாட்டில் இருந்ததா என்பதே தெரியவில்லை. அப்போது எங்களில் ஒருவன் அதனை  எளிமையாக விளக்கினான். 

இதோ மேலே உள்ள கையில்  விரல்முட்டிகளைப் பார்க்கிறீர்கள். அதன் முதல் முட்டி உயர்ந்து நிற்கிறது.  அது ஜனவரி மாதம். அப்புறம் தாழ்ந்து, அப்புறம்  உயர்ந்து, அப்புறம் தாழ்ந்து  - அப்படியே  போய்க்   கொண்டிருக்கும். அதில் உயர்ந்து நிற்பவை 31 நாள்கள் தாழ்ந்து இருப்பவை 30 நாள்கள் ஃபெப்ரவரியைத் தவிர. இது தான் கணக்கு. காலண்டர் இல்லாத காலத்தில் இப்படித்தான்  நாங்கள்  மாதத்தின் நாள்களைக் கணக்கிடுவோம்.  இப்போதும் நான் இதே முறையைத்தான்  கையாளுகிறேன்!   இது தான் நம் கையே நமக்கு உதவி என்பதோ1



 அறிவோம்: நாடு நமக்கு ஒன்றும் செய்யவில்லை  என்பதாக தமிழ் மக்கள் நினைக்கின்றனர். ஆனால் மலையாளிகளும், தெலுங்கர்களும்  அப்படியெல்லாம் புலம்பவில்லை.  அவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.  தமிழர்களே!  நமது கடமையை நாம் செய்வோம். நம்மை நாமே உயர்த்திக் கொள்ளாதவரை, பணம், துட்டு, மனி  இல்லாதவரை, நமது குரல் எடுபடாது!  எடுபட வைப்பது தான் நமது வேலை! உழைப்பைத் தவிர வேறு எதுவும் நமக்கு உயர்வைத் தராது!

Thursday, 24 July 2025

TAFE COLLEGE - ன் தொடக்கம் (47)

சிரம்பானில் வெற்றிகரமாக ம.இ.கா. வினால் நடத்தப்பட்டு வரும்  டேஃப் காலேஜ் பற்றி ஓரளவு அறிந்தவன் என்னும் முறையில் இதனைப் பதிவு செய்கிறேன். 

அதன் ஆரம்பம் எனக்கு ஞாபகத்திற்குக் கொண்டுவர முடிய இல்லை. ஏறக்குறைய 1965/66-ம் ஆண்டுகளில் இருக்கலாம். அப்போது  வானொலி  தான் வீடுகளில் பிரபலம். ஆனால் வானொலிப் பெட்டிகள் பழுது அடைந்து விட்டால்  சீனர்களிடம் தான் தஞ்சம் அடைய  வேண்டும்.

அப்போது தான் தோட்டப்புறங்களில் உள்ள இந்திய இளைஞர்களுக்கு வானொலி பழுது பார்க்கும் பயிற்சி ஆரம்பிக்க வேண்டும் என்கிற   ஒரு சூழல் ஏற்பட்டது. அதன்படி சிரம்பான் மினவுதல் மாதா தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த அருள்திரு ஃபாதர் பீட்டர் அதன் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.

ஆரம்ப காலத்தில் அந்த ரேடியோ பயிற்சியில் சுமார் முப்பது இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பயிற்சி நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அதனை ITN  முருகன்  என்பவர்  வாங்கி அந்தப் பள்ளியை  தொழிற்பள்ளியாக மாற்றி அமைத்தார். அதன் பின்னர் அப்பள்ளி மீண்டும் கைமாறியது. அப்போது நெகிரி செம்பிலான் ம.இ.கா. மாநிலத் தலைவராக இருந்த டத்தோ பொன்னையா அவர்கள்  அதனை ம.இ.கா.வின் சொத்தாக தேசிய அளவில்  கொண்டு வந்தார். அது தான் பின்னர் ஃடப் கல்லுரியாக மாறியது. இது ஒரு சிறிய சுருக்கம். அவ்வளவு தான்.

இங்கு நாம் சொல்ல வருவது: சிறு துளி பெருவெள்ளம் என்பார்கள்.   ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் நல்ல நோக்கமாக  இருந்ததால் முப்பது இளைஞர்களோடு  ஆரம்பிக்கப்பட்ட பள்ளி இன்று ம.இ.கா.வினரால்  ஃடப் கல்லுரியாக வானளவு உயர்ந்து நிற்கிறது.

கடைசியாக ஒன்று.  ரேடியோ பயிற்சிக்காக  சென்றவர்கள் பின்னர் நிறுவனங்களில் என்ஜினியராகப்  பணிபுரிந்தனர்!  அப்போது என்ஜினியர்கள்  சொல்லும்படியாக இல்லாத காலம்.

அதனால் தான் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் என்றார்கள் பெரியவர்கள்.

Wednesday, 23 July 2025

தலைவணங்குகிறேன் புனிதன், சஞ்சே சார்!

 யார் என்ன சொன்னாலும்  சரி  நீங்கள் செய்கின்ற தொண்டு என்பது  காலத்தால் அழிக்க முடியாதது. 

டாக்டர் புனிதன் அவர்களுக்கும் டாக்டர் சஞ்சே அவர்களுக்கும்  எனது இதயங்கனிந்த வாழ்த்துகள். எல்லாராலும் செய்ய முடியாத சேவையை   நீங்கள் செய்கிறீர்கள். சமூக அக்கறை என்பதெல்லாம்  இப்போது ஏதோ ஓரிருவரிடம்  மட்டுமே உண்டு. அரசியல்வாதிகளிடம் சுத்தமாக இல்லை.  சுயநலமே அவர்களின் சமூக அக்கறை!

உங்கள் இருவரைப் பற்றியும்  பல அவதூறு செய்திகள்  வருகின்றன என்பது நமக்கு வருத்தம் தான். ஆனால் இதனைத் தவிர்க்க முடியாது.  நல்லதைச் செய்தால்  சிலருக்குப் பொறுக்காது.  அவதூறுகளைப் பரப்புவர்களில் பலர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்!  நாம் படித்த சமூகமாக மாறி வருகிறோம்  என்றாலே  அவர்களுக்கு  வயிறு எரிகிறது!

என்னைக் கேட்டால் நமது மாணவர்கள் உயர்க்கல்வி படிப்பதற்குத் தடையாக இருப்பவர்கள்   நமது அரசியல்வாதிகளும், தனியார் கல்லூரிகளும் தான். அரசியல்வாதிகள் தனியார் கல்லூரிகளிடமிருந்து பல இலட்சங்களைக் கறந்து விடுகின்றனர்! அதனால் தான் அரசாங்கக் கல்லூரிகளிடமிருந்து  நம் மாணவர்களுக்குப்  போதுமான ஆதரவு  கிடைப்பதில்லை. இதில் கலவி அமைச்சை சேர்ந்தவர்களுக்கும் பங்கு உண்டு. வெளியே உள்ளவர்கள் யாரும் நமக்கு எதிரிகள் இல்லை. இந்த மூன்று தரப்பினர் தான் குற்றவாளிகள்.  ஆனால் என்ன செய்ய? எல்லாரும் தங்கள் பிள்ளைகளையே வழக்கறிஞராக வைத்துக் கொண்டு செயல் படுகிறார்கள்!  ஆனால் என்றுமே இவர்களால் தப்பிக்க முடியாது. .

இந்த இரு டாக்டர்களுக்கும் நமது வேண்டுகோள் இது தான். இவர்களுக்கெல்லாம் நீங்கள் பணிந்து விடாதீர்கள். இதெல்லாம் ஒரு நாதாறிக் கூட்டம். நாசம் பண்ணத்தான் தெரியுமே தவிர  நல்லதைச் செய்யத் தெரியாது.  உங்களின் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன். நமது மக்கள் அனைவருமே  உங்கள் மீது அன்பு கொண்டுள்ளனர். நாங்கள் அனைவரும் பிரர்த்திக்கிறோம்.

நல்லதையே செய்யுங்கள். நாடு நம் கைவசம்.