Tuesday, 4 February 2025

வா தமிழா உணவகம்!

                                                     வா தமிழா உணவகம், ஈப்போ
பொதுவாகவே உணவகம் என்றாலே ஆள் பற்றாக்குறை என்பதகத்தான் நமக்குச்  செய்திகள் வருகின்றன.

அதே சமயத்தில்  புதிய புதிய உணவகங்களும்  பல இடங்களில்  திறக்கப்பட்டுக் கொண்டுதான்  இருக்கின்றன. புதிய உணவகங்கள் பெரும்பாலும்  குடும்ப உறுப்பினர்களை வைத்தே  ஆரம்பிக்கின்றனர் என்பது உண்மை தான்.  அதனால் எந்தவொரு  ஆள்பாற்றாக்குறை பிரச்சனைகள்  எழுவதில்லை.  நாட்டில் பல கிளைகளைக் கொண்ட  நிறுவனங்களின் நிலை வேறு. அவைகள் பல நாடுகளில் தங்களது கிளைகளைக் கொண்டிருக்கின்றனர். அதனால் அவர்களுக்குச் சில சலுகைகள் கிடைக்கலாம். 

"வா தமிழா உணவகம்" உண்மையில்  ஆரம்பித்திருக்கும்  நண்பர் மிகவும் துணிச்சலான ஒரு மனிதர் என்பதில் ஐயமில்லை. இப்போதெல்லாம் தங்களது விளம்பரப் பலகையில்  தமிழ் மொழியையே புறக்கணிப்புச் செய்கின்றவர்களே அதிகம்.   ஆனால் இவர் துணிச்சலாக தனது உணவகத்திற்கே "வா தமிழா" என்று பெயர் வைத்திருக்கிறாரே அதற்காக அவரைப்  பாராட்ட வேண்டும். 

இன்று நாட்டில் இயங்கும் பல உணவகங்கள் தமிழர் அல்லாதவர்கள்  தான் நடத்துகின்றனர்.  வெளியே தெரிவதில்லையே தவிர  உண்மை அது  தான். ஆனால்  நாம் அவர்களைக் குறை சொல்ல வரவில்லை.  எப்படியிருந்தாலும்  அவர்கள் பரிமாறும் உணவுகள்  தமிழர் பாரம்பரிய  உணவுகள்  தானே.  அதனால் பாராட்டுவோம். 

இப்போது  ஈப்போவில் இயங்கும்  வா தமிழா உணவகத்திற்கு  நமது தமிழ் மக்களுக்கு நாம் சொல்ல வரும் செய்தி என்ன? அந்தப் பெயருக்காகவே அவர்களுக்கு உங்களின் ஆதரவைத் தாருங்கள்  என்பது தான்.  இப்போது தான் ஆரம்பித்திருக்கின்றனர். அவர்களுக்கு உங்களின் வற்றாத ஆதரவைத் தாருங்கள் என்பது தான் நமது செய்தி.   ஆரம்பத்தில் ஒருசில குறைபாடுகள் இருக்கலாம். அதற்காக  அவர்களைப் புறக்கணிக்க வேண்டாம். போகப் போக,  குறைகள் இருந்தால்,  அவர்களே அதனைச் சரி செய்து விடுவார்கள்.

எப்படி இருந்தாலும் நமது தமிழ் மக்களின்  ஆதரவு  அபரிதமாக இருக்க வேண்டும் என்பதே நமது அவா. அவர்களின் முன்னேற்றத்திற்கு நாம் ஆதரவாக இருப்போம்.  தமிழர்கள் நன்றாக இருந்தால் தான் அவர்களால் தமிழர்களுக்கு நல்லது நடக்கும். வாழ்த்துவோம்!

Monday, 3 February 2025

நுழைவு தேர்வில் தளர்ச்சி!


 நாட்டில் தாதியர் பற்றாக்குறை  மிக மோசாமான சூழலை அடைந்திருப்பதால்  இரண்டு ஆண்டுகளுக்கு (2025-2026+  -ம் ஆண்டுகளில் கல்வியில் சில தளர்வுகளை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இத்தனை ஆண்டுகள் எஸ்.பி.எம். தேர்வில் ஐந்து கிரடிட் பெற்றவர்களே தகுதி பெற்றவர்களாக  அறியப்பட்டனர்.  இந்த நடப்பு இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் மூன்று பாடங்களில் கிரடிட் பெற்றவர்கள்  தகுதி பெற்றவர்களாக ஏற்கப்படும் என சுகாதார அமைச்சர்   அறிவித்திருக்கிறார். கிரடிட் பெற வேண்டிய அந்த மூன்று பாடங்கள்: மலாய், கணிதம், அறிவியல். சாதாரண தேர்ச்சி பெற வேண்டியவை: ஆங்கிலம் அத்தோடு இன்னொரு பாடம்.

இந்தத் தளர்வு என்பது  இரண்டு  ஆண்டுகள் மட்டுமே என்பதைக் கவனிக்க. எத்தனை இந்தியப்  பயிற்சி  தாதியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்  என்பது தெரியவில்லை.  இங்கும் கோட்டா, மெரிட் அனைத்தும் இருக்கத்தான் செய்யும்.  ஏதோ ஒன்று இரண்டு நமக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று நம்பலாம்.

ஆனாலும் நாம் மனம் தளர்ந்து விடக்கூடாது  என்பதை மட்டும்  மனதில் வையுங்கள்.  கிடைக்கின்ற வாய்ப்பை  பயன்படுத்திக் கொள்வது  நமது கடமை.  நமது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல் நாம் இருக்க முடியாது.  அவர்களை நாம் உயரத் தூக்கிவிட்டோம். இனி நம்மை நாமே தூக்கிக்கொள்வது நமது கடமை. 

ஒரு சில மாணவிகளுக்கு இந்தத் தாதியர் டிப்ளோமா பயிற்சி  நல்லதொரு வாய்ப்பாக அமையலாம்.  அந்தத் தகுதிகள் உங்களுக்கு  இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில்  இந்த வாய்ப்பை விடாதீர்கள்.  இந்தத் தளர்வு என்பது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே.   உங்களின் தகுதி இதற்கு ஏற்றமாதிரி இரூக்குமாயின்  பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வாய்ப்புகள் வரும் போது நாம் பயன்படுத்திக் கொள்வதில்லை. பிறகு குறை சொல்லுகிறோம்.  யாரும் நமக்காக பேசப்போவதில்லை. நமக்கு நாமே தான்  உதவிக்கொள்ள வேண்டும்.

யார் கண்டார்? இதுவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம்!

Sunday, 2 February 2025

சம்பளம் உயருகிறது!

இந்த மாதத்திலிருந்து தனியார் துறைகளில் சம்பளம் கூடுகிறது  என்பது தற்போதைக்கு நல்ல செய்தியாகத்தான் தோன்றுகிறது. 

சிக்கனமாக வாழத் தெரிந்தவர்கள் எல்லாச் சூழலிலும் தங்களைத் தயார் படுத்திக் கொள்வார்கள். மிச்சம் பிடிக்கவும் செய்வார்கள்.  ஆனால்  வியாபாரிகள் சும்மா இருப்பார்களா?  அவர்கள் ஒரு பக்கம் விலைகளைக் கூட்டத்தான் செய்வார்கள். அது அவர்களின் இயல்பு. 

வியாபாரிகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்பது தெரியவில்லை. காரணம் சம்பளம் கூடும்போதெல்லாம்  விலைகளும் ஏற்றங்காணும். இது ஒன்றும் புதிதல்ல.  பின் நோக்கிப் பார்த்தால் அது புரியும்.

அநேகமாக உணவுகளின்  விலை ஏற்றம்  எந்தக்காலத்திலும்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலுமா என்பது தெரியவில்லை.  அதுவும் குறிப்பாக குழந்தைகளின் பால்மாவுகளின் விலை ஏற்றத்தைத் தடுப்பது, கடந்தகால அனுபவத்தின்படி,  மிகவும் கடினம் தான். குழந்தைகளின் பால்மாவு ஏற்றத்தையும் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.

வியாபாரிகள், விலை ஏற வேண்டும் என்பதற்காக  ஒரு சில பொருள்களைப்  பதுக்கும் வேலைகளில் ஈடுபடுவார்கள். இது எப்போதும் நடப்பது தான்.  அங்கும் இலஞ்சம் முக்கியமான காரணியாக விளங்குவதால்   முன்பு இப்படி நடந்தது.  ஆனால்  அரசாங்கம் இப்போது கொஞ்சம்  எச்சரிக்கையாய் இருப்பதால்  தவிர்க்க முடியும் என  நம்புகிறோம்.

எந்தச் சூழலிலும்  பணம் என்று வரும் போது அலட்சியமாக இருந்து விடாதீர்கள். சேமிப்பு, காப்புறுதி இவைகள் எல்லாம் தேவையே.   அலட்சியமாக இருந்தால் பணமும்   உங்களை உதாசீனம் செய்துவிடும்

சம்பள உயர்வை வரவேற்கிறோம்!