Saturday 30 May 2020

இனி என்ன தான் நடக்கும்?

கொரொனா தொற்று நோய் நம்மிடமிருந்து இன்னும் விலகவில்லை. இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 

நம்முடைய பல தொழில்கள் இன்னும் திறக்கப்படவில்லை. ஒரு சில தொழில் நிறுவனங்கள் வேலையை ஆரம்பித்துவிட்டன. இருந்தாலும் முழு மூச்சாக இன்னும் செயல்படவில்லை.  குறைவான தொழிலாளர்களுடன் ஓரளவு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் பெரும்பாலும் நம்மில் பலருக்கு இது ஒன்றும் நல்ல செய்தி அல்ல. தொழிற்சாலைகள் நூறு விழுக்காடு செயல்பட்டால் தான் நம்மில் பலர் தங்களது குடும்பங்களைக் காப்பாற்ற முடியும். அப்படி ஒரு நிலைமையில் தான் நமது சமுதாயம் இருக்கிறது.

வேலை செய்து தான் பிழைப்போம் என்று நம்பும் சமுதாயத்திற்கு வேறு வழியில்லை. தொழிற்சாலைகள் எப்போது திறப்பார்கள், எப்போது கூப்பிடுவார்கள் என்று காத்துக் கொண்டு தான் இருக்க வேண்டும். ஆனால் அதுவரை குடும்பப் பொருளாதாரம் தாக்குப் பிடிக்க வேண்டுமே! குடும்பத்தில் ஒருவர் கணவனோ மனைவியோ வேலை செய்தால் பாதி வருமானத்திலாவது சமாளிக்கலாம்.  அல்லது உங்களது நிர்வாகமே  பாதி சம்பளத்தில் மீண்டும் உங்களை வேலைக்கு அமர்த்தலாம். அதனை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

நாம் சொல்ல வருவதெல்லாம்  மனம் தளராதீர்கள் என்பது தான். எந்த  சூழ் நிலையிலும் மனம் தளர வேண்டாம். முதலில் ஒரு வருமானத்திற்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். சொற்ப வருமானமாக இருந்தாலும் அது உங்களுக்கு ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

வெளி நாடுகளிலிருந்து வந்து இங்கு வேலை செய்கிறார்கள். காரணம் பல காலமாக ஒரு சில வேலைகளை நாம் புறக்கணித்து விட்டோம். இனி நமது கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். முதலில் வருமானம் அது தான் முக்கியம்.  அவன் என்ன சொல்வான் இவன் என்ன சொல்லுவான் என்று மற்றவர்களுக்காக நாம் நமது வாழ்க்கையை வீணடித்துக் கொள்ளக் கூடாது. நமது வாழ்க்கைக்கு நாம் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

சென்ற முறை பொருளாதாரச் சரிவு ஏற்பட்ட போது எனது நண்பர் ஒருவரின் சம்பளம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. அதனை அவர் வேதனையோடு ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் அவர் காப்புறுதி துறையில் தன்னை வளர்த்துக் கொண்டு அவருடைய வேலையை விட்டுவிட்டார். இப்போது அவர் பொருளாதாரத்தில் பெரிய அளவில் வளர்ந்து விட்டார்.

ஒரு தீமை வரும் போது ஒரு நன்மையும் சேர்ந்து வரும். அந்த நன்மையை நாம் தான் கண்டு பிடிக்க வேண்டும்.

இனி என்ன தான் நடக்கும்? எல்லாம் நல்லதே நடக்கும்! தேவை நம்பிக்கை மட்டும் தான்!

No comments:

Post a Comment