Sunday 31 May 2020

கந்து வட்டியா? வேண்டவே வேண்டாம்!

கோரோனா காலத்தில் சிரமங்கள் பல வரும் என்பதில் சந்தேகமே இல்லை.

குடும்பத்தைத் தூக்கி நிறுத்த பணம் தேவை. பொருளாதார வலிமை இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம். இல்லாதவர்கள் நிலை என்ன?

ஆனால்ஒன்று மட்டும் சொல்லுவேன். கடன் என்பது மட்டும் வேண்டாம். கடனே வேண்டாம் என்றால் "ஆலோங்"  ங்கிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்துவதாவது!  மறந்து விடுங்கள்!

ஆலோங் என்றாலே அது ஒரு பெரிய  குண்டர் கும்பலால் இயக்கப்படும் சட்டவிரோத குழு.  குண்டர்கள் இல்லாமல் அவர்களால் தொழில் செய்ய முடியாது. ஒரு முறை கடன் வாங்கினால் அந்தக் கடன் என்பது நிரந்திரம்.  அதுவும் நீங்கள் கொஞ்சம் நல்ல மனிதராக தெரிந்துவிட்டால் உங்களை எந்த அளவுக்குத் தொல்லை கொடுக்க முடியுமோ அந்த எல்லைவரை அவர்கள் போவார்கள்!  "எவ்வளவு அடித்தாலும் தாங்குவான்!" என்கிற நிலைமைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள்!

ஆலோங்கிடம் பணம் வாங்கியவர்களில் பலர் தற்கொலை செய்கின்ற அளவுக்குப் போய்விட்டனர்.செய்தும் கொண்டனர்.

கடன் வேண்டுமென்றால் வங்கிகளை நாடுங்கள். எல்லாமே சட்டப்படியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களின் நெருங்கிய உறவுகளை நாடுங்கள்.அவர்களும் உங்கள் நிலைமையில் இருந்தால் அவர்களாலும்  உங்களுக்கு உதவ முடியாது.

ஆனாலும் எல்லாவற்றிலும் சிறந்தது ஒரு தற்காலிக வேலையையாவது நீங்கள் தேடிக் கொள்ளவேண்டும்.  அது தான் சிறந்த வழி.  உங்கள் குடும்பத்தின் மீது உள்ள அக்கறை உங்களுக்குத்தான் இருக்க வேண்டுமே தவிர வேறு யாருக்கும இருக்கும் என்று எதிர்ப்பார்க்க முடியாது.

நாடு எந்த நிலையில் இருந்தாலும் அதற்காக ஒன்றுமே இல்லை என்று கை கழுவிவிட முடியாது. வாய்ப்புக்கள் இருந்து கொண்டு தான் இருக்கும். அதற்கான் முயற்சிகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளவது சரியான முடிவு அல்ல. முடியும் வரை முயற்சிகள் தொடர வேண்டும்.

ஒன்றுக்கும் வழியில்லை என்றால் அதற்கும் பயப்பட ஒன்றுமில்லை. ஏதோ ஒரு நேரடித் தொழிலில் ஈடுபடுங்கள். ஆயிரக்கணக்கான நேரடித் தொழில்கள் நாட்டில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.  இந்தத் தொழில்கள் பலரை லட்சாதிபதிகளாக்கி இருக்கின்றன.  தேவை எல்லாம் உங்கள் உழைப்புத் தான்.

நேரடித் தொழில் செய்வதில் கேவலம் ஒன்றுமில்லை. மக்களைச் சந்திக்க வேண்டும். அவ்வளவு தான்.

மீண்டும் சொல்லுகிறேன். கடன் வாங்கி குடும்பம் நடத்த வேண்டாம். அது உங்கள் சுமையைக் கூட்டும். உங்களைச் சின்னாபின்னாமாக்கி விடும்.

நல்லதொரு முடிவு எடுத்து உங்கள் வாழ்க்கயை ஜெயித்துக் காட்டுங்கள்!


No comments:

Post a Comment