Saturday, 28 June 2025

அது என்ன 'பெராட்டா ரொட்டி'?

நாங்கள் முதன் முதலாக  இந்த ரொட்டியைச் சாப்பிட  ஆரம்பித்த போது  அப்போது அதனை பெரட்டா ரொட்டி என்று தான் சொன்னோம்.  அதன் பின்னர் தமிழ் நாட்டில் பரோட்டா  என்று சொல்லுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டோம்.  அதுவே இப்போது நம் நாட்டி; ரொட்டி சனாய் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பரோட்டா  ரொட்டி எனது பள்ளி பருவத்தில் ஏறக்குறைய 1956  களில்  மற்றொரு மாணவருடன்,  சாப்பிட ஆரம்பித்தேன்.  அதுவே தினசரி மதிய உணவாக மாறிவிட்டது! மத்தியான பள்ளி என்பதால்  வீடு போய் சேரும்வரை  பசி தாங்கும்.  தேவையெல்லாம் 10 காசும்  வெறும் தண்ணீரும் தான்! 

சிரம்பானில் 1956 களில் தான் அதுவும் அலீஸ் கஃபே என்னும்  தமிழ் முஸ்லிம்  நண்பரின் உணவகத்தில் தான்  பரோட்டா  விற்கப்பட்டது.அப்போது தான் பரோட்டா சிரம்பானில் அறிமுகம் என நினைக்கிறேன். இப்போதும்  அந்த உணவகம் உள்ளது    அப்போது பரோட்டாவை  புறக்கணித்த இந்திய உணவகங்கள்  பின்னர்   அள்ளி அணைத்துக் கொண்டன!

இப்போது  ரொட்டி சனாய் என்கிற பெயரில் நமது நாட்டின் காலை நேர தேசிய உணவாக மாறிவிட்டது.




அறிவோம்:  இன்று மெட் ரிகுலேஷன் கல்வி பற்றி நம் மக்களால்  பெரிதளவு விமர்சனம் செய்யப்படுகிறது.  இது வழக்கமான  ஒன்று தான்.  ஆனாலும்  என்ன செய்ய? கல்வி மீதான புரிதல்  இன்னும் நம் மக்களுக்கு  வரவில்லை. பொது மக்களால்  குரல்  எழுப்பப்பட்டு  ஏதோ கொஞ்சநஞ்ச  பிச்சை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நம் பெற்றோர்களோ  'தூரம்' எனக் காரணம் காட்டி. குறிப்பாக பெண் பிள்ளைகளை அனுப்ப மறுக்கிறார்கள்!  யாரைக் குற்றம் சொல்லுவது? கொடுப்பவனுக்கு அதுவே கொண்டாட்டமாகி விடுகிறது!

Friday, 20 June 2025

எனது முதல் ஆங்கிலப் புத்தகம் (45)

 

எனது முதல் ஆங்கிலப் புத்தகம்  இது தான்.  அந்தக் காலத்திய பதிப்பு இப்படித்தான் இருந்தது.

அப்போது பள்ளியில் பரிட்சை முடிந்த நேரம்.  சிரம்பானில் ?பிளாஸா" தியேட்டர் ஒன்று இருந்தது. அங்கு எப்போதும் ஏதாவது ஆங்கிலப்படங்கள்  ஓடிக் கொண்டிருக்கும். எல்லாம் பழைய படங்களாகவே இருக்கும். கட்டணமும் குறைவாக இருக்கும். அந்தத் தியேட்டரின் வெளியே ஒரு சிறிய புத்தகக்கடை.  அனைத்தும் ஆங்கிலப் புத்தகங்களாகத்தான் விற்பனையில்  இருக்கும். 

அங்கு வாங்கப்பட்டது தான் இந்த எனது முதல் ஆங்கிலப் புத்தகம் Dale Caenegie  எழுதிய  How to  Win Friends  and Influence People.  அதன் பின்னர் பல ஆங்கிலப் புத்தகங்கள் எல்லாம் டேல் கார்னெகி  எழுதியவை.  அப்போது சிரம்பானில்  ஆங்கிலப்  புத்தகக்கடைகள்   ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. இதை விட்டால் திமியாங் 'கத்தே'  தியேட்டரில் ஒரு சிறிய புதகக்கட்டை. சிரம்பானில் ஒரே தமிழ் புத்தகக்கடை என்றால் . அன்றும் இன்றும், என்றும் அது  பவுல் ஸ்திரீட்டில் அமைந்துள்ள "ரெங்கசாமி புத்தக நிலையம்" தான். அங்கு தான் எனது அனைத்துத்  தமிழ் புத்தகங்களையும் வாங்கினேன்.  

இதுவரை நான் வாங்கிய புத்தகங்கள் சுமார் ஆயிரம் இருக்கலாம். ஓர்  நூல்நிலையத்திற்குப்  பல புத்தகங்கள் போய்விட்டன.. இப்போது என்னிடம் இருப்பவை எல்லாம் சுய முன்னேற்றம்  (self-improvement)  புத்தகங்கள்  மட்டுமே.. அந்தப் புத்தகங்கள் என்னை ஈர்த்தது போல வேறு புத்தகங்கள் என்னை ஈர்க்கவில்லை!

ஒரு  மனிதனின்  உயர்வுக்குப்  புத்தகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. வாழ்க்கையில் எந்த நேரத்திலும் புத்தகங்கள் கைகொடுக்கும்.



அறிவோம்:  "யானை படைகண்டு சேனை பல வென்று"  என்று கவியரசு கண்ணதாசனின் பாடலைக் கேட்டிருப்போம்.  உலகிலேயே யானை படை வைத்திருந்தவர் சோழப்பேரரசர்  ராஜராஜ சோழன் மட்டும் தான். வேறு எந்த அரசரும் யானை படை வைத்திருந்ததாக  வரலாறு இல்லை.

Tuesday, 17 June 2025

நான் வாங்கிய முதல் புத்தகம் (44)

                                                   அறிஞர் அப்துற் றகீம்

நான் புத்தகப்பிரியன். என்னுடைய புத்தகங்கள் எல்லாம்  நானே காசு கொடுத்து வாங்கியவை.  தெரிந்தோ தெரியாமலோ எனது ஆரம்பகால புத்தகங்கள் அனைத்தும் தன்முனைப்பு (motivation)புத்தகங்களாகவே  அமைந்துவிட்டன. இத்தனைக்கும் அந்த நேரத்தில்  தப்பறியும் கதைகள், மர்மக்கதைகள் என்றுதான் எனது சுற்றுவட்டாரம் அனைத்தும்  மூழ்கியிருந்தன! நானும் தான்! ஆனால் ஒன்றில் மட்டும் நான் தீர்க்கமாக இருந்தேன். இதுவரை நான் சினிமா புத்தகங்களையோ, துப்பறியும் புத்தகங்களையோ நான் லாசு போட்டு வாங்கிப் படித்ததில்லை!  அந்தக்கால கட்டத்தில் துப்பறியும் கதைகளை எழுதி வந்த  அனைத்து எழுத்தாளர்களின் பெயர்களையும் நான் இப்போதும் அறிவேன்.

அறிஞர் அப்துற் றகீம்  எழுதிய புத்தகம் தான் "வாழ்க்கையில் வெற்றி". ஆனால் அன்றைய நிலையில்  அவருடைய மொழிநடை   எனக்குப் புரியவில்லை! பின்னர் பல ஆண்டுகள் கழித்து அவர் எழுதிய  புத்தகங்கள் அனைத்தையும் வாங்கினேன்.   அப்போது மிக எளிய நடையில் தமிழ்வாணன் எழுதி வந்தார்.  அவருடைய நடை தான் என்னைக் கவர்ந்தது. தமிழ்வாணனின் வார இதழான  "கல்கண்டு"  தான் நான் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வாசித்திருக்கிறேன். அவர் எழுதிவந்த துணிவே துணை கட்டுரைகள்  எனக்குப் பிடித்தமானவை.



அறிவோம்:   மிளகாய் என்பது மிகவும் காரசாரம் என்பதை நாம்  அறிவோம். மிளகாய் வகைகளில் பலவகை உண்டு.  காரம் அதிகம், குறைவான காரம் அல்லது காரமே இல்லை என்பது தான்  அதன் குணம். Chili  என்கிற நாட்டிலிருந்து வந்ததால் மிளகாயின் பெயர் ஆங்கிலத்தில் Chilli யாக மாறிவிட்டது!  மிளகாய் தமிழர்களின் உணவு  அல்ல. நமது பாரம்பரியம்  என்பது மிளகு தான். மிளகாய் வருவதற்கு முன்னர் நாம் மிளகைத்தான் பயன்படுத்தினோம். இரண்டுமே காரம் தான்.  ஆனால் மிளகு எந்தத் தீங்கையும் செய்யாது.  மருத்துவ குணமிக்கது.

Friday, 13 June 2025

முதல் பல் பிடுங்கிய அனுபவம்! (43)

ஒரு காலகட்டத்தில், அன்றைய சிரம்பான் பட்டணத்தில் , பல் சொத்தையாகப்  போய்விட்டால்  பல் பிடுங்குவதில்  நிறைய  பிரச்சனைகள் எழும் என்பது  இப்போது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

மருத்துவமனைகளுக்குப் போனவர்கள் கூட  அவதிப்பட்ட கதைகள் தான் அதிகம். வெளியே  போலி பல் மருத்துவர்களுக்குப் பெயர் போனவர்கள் சீனர்கள். இவர்கள்  பரவலாகப் பல இடங்களில்  தொழில் செய்து வந்தனர். ஆனால் நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

எனக்கு 21 வயதில் பூச்சிப்பல  குடைந்தெடுத்தது!  அப்போது முறையாக தொழில் செய்து வந்தவர்  Dr.Cheah  எனகிற பல மருத்துவர். ஆஸ்திரேலியாவில்  கல்வி கற்றவர். அவர் ஒருவர் தான் உண்மையான பல் மருத்துவர். போய் அவரிடம் பல்லைக் காட்டினால் போதும்  பல்லைப்பிடுங்கி விட்டுத் தான்  மறுவேளை! !  நான் முதன் முதலில் பிடுங்கிய பல் கடவாப்பல்  அப்போது ஒரு பல்லை பிடுங்குவதற்கு ஐந்து வெள்ளி கட்டணம். .  தொடர்ந்தாற் போல என் பற்களை அவர் தான் பிடுங்கினார்!  ஒருசில ஆண்டுகளுக்குப்  பின்னர் தான்  நமது இந்திய மருத்துவர்கள் வர  ஆரம்பித்தனர். என்னுடைய இருந்த  பற்களைக்  காப்பாற்றினர்! இது தான்  நிலை.அன்றைய சிரம்பானில்!

இப்போது பல் மருத்துவர்களுக்குக் குறைச்சல் இல்லை. கட்டணம் வசூல் பண்ணுவதிலும் குறைச்சல் இல்லை!



அறிவோம்:சிரம்பானைச் சேர்ந்த நாடறிந்த கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர்  பாவலர் ஐ.இளவழகு அவர்கள்  கடந்த 10-6-2025 அன்று இயற்கை எய்தினார். அவரைப் பிரிந்து துயருறும் அவரது குடும்பத்தைற்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Thursday, 5 June 2025

எனது முதல் மூக்குக் கண்ணாடி (42)

 

முதன் முதலாக எனது கண்பார்வையில்  குறைவு ஏற்பட்ட போது என்னுடைய வயது பதினாறு. வகுப்பில் கரும்பலகையில்   ஆசிரியர் எழுதுவதைப் பார்க்க முயாமல் போயிற்று.

அப்போது தான் சிரம்பான் மருத்துவமனைக்குச் சென்று  கண்களைப் பரிசோதிக்க வேண்டி வந்தது. கண் டாக்டர் ஓர் வெள்ள்க்காரர். மலேசிய மருத்துவர்கள் இல்லாத காலம்.

இன்றைய நவீன வசதிகள் அப்போது இல்லை. பொதுவாக அனைவரையும் ஒரு பெஞ்சில்  உட்கார வைத்து  முன்னால் உள்ள எழுத்துகள் தெரிகின்றனவா என்று பார்ப்பார்கள்.  என் பக்கத்தில் ஒரு சீன பாட்டி உட்கார்ந்திருந்தார். என்ன அதிசயம் என்றால் அந்தப் பாட்டியின்  பார்வை திறனும் என்னுடைய பார்வை திறனும்  சமமாகவே இருந்தது!

அன்றைய காலகட்டத்தில் ஒரே ஒரு தனியார்  கண் கிளினிக் தான். அதை நடத்தியவர்  டாக்டர் தாரா சிங் என்கிற பஞ்சாபியர். கண் டாக்டர் மட்டும் அல்ல  மூக்குக்  கண்ணாடிகளும் அங்கு விற்பனைக்கு இருந்தன.  சிரம்பானில் வேறு எங்கும் கிடைக்க வழியில்லை. அங்கு நான் முதன் முதலாக வாங்கிய கண்ணாடியின்  விலை 45 வெள்ளி. அதாவது  1956-ம் ஆண்டு கண்ணாடியின் அன்றைய விலை!   அப்போதெல்லாம் மூக்குக் கண்ணாடிகள் ஏதோ  பணக்காரர் வீட்டு அலாங்காரப்  பொருளாகப்  பார்க்கப்பட்டன!

அன்றைய டாக்டர் தாரா சிங்கின் அந்தக் கிளினிக்  இ[ப்போதும் கண்  கிளினிக்  தான்.  இப்போது அது கைமாறிவிட்டது, தமிழர்களின் கையில்.




அறிவோம்:  அறிஞர் பெர்னாட்ஷா சுமார் 94 ஆண்டுகள் நல்ல ந;லத்தோடு வாழ்ந்தவர். கண்களில் எந்தப் பிரச்சனையும் இல்லை. நாள்தோறும்  கையில் புத்தகங்களோடும், பேனாவோடும்  எழுதிக்கொண்டும் படித்துக் கொண்டும்  இருந்தவர். கண்களை நீரில் தொடர்ந்து கழுவி வந்ததால் மங்காத பார்வை பெற்றிருந்தார்.

Sunday, 1 June 2025

வானொலி ஒலிபரப்புகள் (41)

          இந்த கட்டடத்திலிருந்து தான்  'ரேடியோ மலாயா'  ஆரம்பம்.


ஆரம்ப காலத்தில் எனக்கும் வானொலி ஒலிபரப்புகளுக்கும்  எந்த சம்பம்தமும் இல்லை.

எனது இடைநிலைக் கல்வியின் போது  ஒரு மாணவர் வந்து சேர்ந்தார்.  அவர் படிப்பைவிட  ரேடியோ ஒலிபரப்புகளுக்கு  அடிமையாக இருந்தார். எனக்கும் அவரின்  பழக்கம் ஏறக்குறைய ஒட்டிக் கொண்டது என்று சொல்லலாம். அதாவது அவர் இல்லாமல் வானொலியில் "நேயர் விருப்பம்" இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரது பெயர் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மூன்று நான்கு தடவை  ஒலிபரப்பாகும்! அதெல்லாம் பெரிய சாதனை என்று நாங்களும் நினைத்துக் கொள்வோம்!

அப்பொழுது  "பாரதி அச்சகம்" பள்ளி பக்கத்திலேயே இருந்ததால்  நானும் நேயர் விருப்பம் கார்டுகளை வாங்கி  வானொலி இரசிகனாகி  மாறிவிட்டேன்! அப்போது சிங்கப்பூர் வனொலி தான் மிகவும் பிரபலம். அப்புறம் தான் மலாக்கா வானொலி, கோலாலம்புர் வானொலி, ஜொகூர் வானொலி. இவைகளில் மலாக்கா, ஜொகூர்  இரண்டும் பகுதி நேர ஒலிபரப்புகள். அது மட்டும் அல்ல. புதுடில்லியிலிருந்து  ஒலிபரப்பாகும் "ஆகாசவாணி" யையும்  சேர்த்துக் கொள்ளலாம். எப்படியோ நாமும் அதில்  கரைந்து போனோம்!

படிப்பில்  திறமை இல்லாததால் இப்படித்தான் கவனம் சிதறிப்போனது!  ஆனாலும் அதிலும் சில வெளி உலக  அனுபவங்கள்!



அறிவோம்:   நீங்கள் வானொலி நிகழ்ச்சிகளை அல்லது கைப்பேசியைப் பயன்படுத்துகிறவராகவோ  இருந்தால் ஒன்றை மட்டும் தவற விடாதீர்கள்.  செய்திகளைக் கேட்பது  அத்தியாவசியம். இன்றைய பல பெண்கள் நாட்டில் நடப்பதை அறியாமல் பிரச்சனைகளுக்கு  உள்ளாகிறார்கள்.  அதனால் செய்திகள் என்பது தவிர்க்க முடியாதவை.