Tuesday, 6 August 2024

விதிமீறல் ஒரு 'கிக்' அனுபவம்!


 விதி மீறல் என்றாலே  இளையவர்களுக்கு  ஒரு 'கிக்' கிடைக்கும்  என்பது நமக்குத் தெரியும்! அதுமட்டும் அல்ல அகப்பட்டால் அவர்களுக்கும் 'கிக்' கிடைக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்!

என்ன தான் சொன்னாலும் ஒரு சிலருக்கு எதுவும் மண்டையில் உறைப்பதில்லை.  ஆனால் சமீபத்தில் பினாங்கில் நடந்த சம்பவம்  நமக்கே தலையைச் சுற்றுகிறது. இத்தனை மோட்டார் சைக்கிள்களா என்று வியக்கவைக்கிறது.

நடு ரோட்டில் சாகசம் செய்கிறார்களா? ஏதோ  தேன் கூட்டைக் கலைத்துவிட்ட  ஒரு தோற்றம்!  தீடீரென்று நிலநடுக்க ஏற்பட்டு ஓட்டம் எடுக்கிறார்களா?   என்னதொரு காட்சி!

போலீசாரின் சலைத்தடுப்பை திட்டமிட்டே அவர்கள் மீறவதற்கான  முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.  ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்,  சாலைத்தடுப்பை  மீறியதற்காக!  மேலும் பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்காகவும்  25 மோட்டார் சைக்கிள்களை  அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

நமது இளைய தலைமுறை இப்படி சாலை விதிமுறைகளை மீறுவதும், அவர்களைக் கைது செய்வதும், இது தேவை தானா என்று கெட்கத் தோன்றுகிறது.  ஏன்  இவர்கள்  இப்படி எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்  என்பதும் நமக்குப் புரியவில்லை. இவர்களுக்கு என்ன தான் குறை என்றும் தெரியவில்லை.

இவர்களெல்லாம் பெரும்பாலும் பள்ளி மாணவர்களாகத்தான்  இருக்க வேண்டும். வருங்காலத் தலைமுறையினர். வருங்காலப் பட்டதாரிகள். வருங்காலத் தலைவர்கள்.  நாட்டை வழிநடத்த வேண்டியவர்கள்.  இந்த வயதிலேயே  விதிகளை  மீற வேண்டும் என்னும் வேட்கை  இவர்களுக்குள் எப்படி எழுந்தது?  விதிகளை மீறுவது வருங்காலங்களில் ஊழலை ஊக்குவிக்கும் என்பதும் சரியாகத்தானே இருக்கும்!

என்னவோ போங்கள். காவல்துறையினரைத் தவிர வேறு யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.  பள்ளிகளும் சரியான இடங்களாக இல்லை! பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Monday, 5 August 2024

ஏன் மிஞ்ச முடியவில்லை?

 

சீனப் பள்ளிகள் தங்களது வளர்ச்சிக்கு அதாவது கட்டடங்கள் கட்டுவது போன்ற தேவைகளுக்கு,  நீண்ட நாள்களாகவே  மதுபான நிறுவனங்கள் உதவி வருகின்றன.  அவ்வப்போது சீனப்பள்ளிகள் நடத்தும் கட்டட நிதிகளுக்கு  உதவுபவர்கள் பெரும்பாலும்  இந்த நிறுவனங்கள் தான். அரசாங்கத்தின் உதவி இல்லாததால் பள்ளிகள் தாங்களே  பணத்தை திரட்டும்  நிலையில் உள்ளன.  அதற்குப் பெற்றோர்களும் உதவுகின்றனர்.

நாம் இந்த சர்ச்சையில் இறங்கவில்லை.  மதுபான நிறுவனங்கள்  பள்ளிகளுக்கு  அளிக்கும்  இந்த நிதி உதவியினால்  பள்ளிகளின் கலவித்தரம்  பாதிக்காப்படுகின்றனவா  என்பது தான்  நமது கேள்வி.

இன்று நாட்டில் மூன்று மொழி பள்ளிகள் இயங்குகின்றன. தேசியப்பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள், சீனப் பள்ளிகள்.  இதில் மலேசியப் பெற்றோர் பெரும் பகுதியினர் தேசியப்பள்ளிகளுக்கே தங்களது பிள்ளைகளை அனுப்புகின்றனர். தேசியப் பள்ளிகளே பெற்றொரின் முதன்மையான  தேர்வு என்பதில் ஐயமில்லை.

ஆனால் கல்வியில் தேர்ச்சி, வெற்றி  என்று வந்தால் சீனப்பள்ளிகளும், தமிழ்ப்பள்ளிகளும் தான் முக்கியமாக நிற்கின்றன. அதுவும் சீனப்பள்ளிகளையே  பெற்றோர்கள் விரும்பும் பள்ளிகளாக அமைந்து விட்டன.  தரம் என்றால் அது சீனப்பள்ளிகள் தான்  என்கிற நிலைமையை அவர்கள் உருவாக்கிவிட்டனர்.  கல்வியில் சீனப்பள்ளி மாணவர்கள் தான் முன்னணியில் இருக்கின்றனர்.  அவர்களை மிஞ்ச ஆளில்லை என்கிற நிலைமை  தான் இப்போதும்.  தமிழ்ப்பள்ளிகள்,  இருக்கின்ற வசதிகளைக்  கொண்டு அவர்களும் தரத்தில் உயர்ந்த நிலையில் தான் இருக்கின்றனர். 

ஆனால் தேசியப்பள்ளிகளின் நிலைமை வேறு.  தனியார் டியூஷன் இல்லாமல்  அவைகளின் தரம் கீழ்நோக்கிப்  போய்விடும்!  தரமில்லாக் கல்வி என்றால் அவைகள் தேசியப்பள்ளிகள் தான்.  இதனைப் பெற்றோர்கள் அறிந்திருக்கின்றனர். அதனால் தான் நாடெங்கும் டியூஷன்  பள்ளிகள்  ஏகப்பட்டவை நிறைந்துவிட்டன.

சீனப்பள்ளிகள் மதுபான நிறுவனங்களின் விளம்பரங்களை நம்பியிருந்தாலும்  அவர்களின் கல்வித்தரம்  எந்தவகையிலும் தாழ்ந்து போகவில்லை. அவர்களின் தரம் தான் முதன்மையான நிலையில்  இப்போதும் பேசப்படுகின்றது.  தேசியப்பள்ளிகள் ஏன் சீனப்பள்ளிகளை மிஞ்ச முடியவில்லை?  அது முடியாது என்பது மட்டும் தெளிவு. இது வெறும் அரசியல்! வேறு எந்த வெங்காயமும் இல்லை!

Sunday, 4 August 2024

தண்டனைகள் போதாது!

நாய்கள், பூனைகள் போன்ற  பிராணிகள்  எப்படியெல்லாம் கொடுமைப் படுத்தப்படுகின்றன  என்பதைச் சமீப காலங்களில் பார்த்துவருகிறோம்.

வாயில்லா ஜீவன்கள் அவை. இதோ மேலே நாய் ஒன்றை பிக்-அப் வாகனத்தின்  பின்னால் கட்டி  அதை இழுத்துக் கொண்டு போவதைப் பார்த்து இரசிக்கவா முடியும்?  கொடுமையிலும் மகாக் கொடுமை.  அதன்  உரிமையாளர் அந்த நாயை எங்கோ கொண்டு  போய் விடப்போகிறார் என்று தோன்றுகிறது.  கொடுமை என்னவென்றால் இப்படித்தான் அதனை வாகனத்தின் பின்னால் கட்டி, அதனை இழுத்துக் கொண்டு போக வேண்டுமா என்பது தான் கேள்வி.  அதனை வெறுமனே விட்டாலும் அது ஓடிப் போய்விடும்.

எப்படித்தான் பார்த்தாலும்  நமது அரசாங்கம் தான் குற்றவாளி என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.  இதற்கு முன்பும்  இது போன்று நடந்திருக்கிறது. இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னும் தொடரக் கூடிய வாய்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?  குற்றம் புரிபவர்களுக்கு  ஏற்றவாறான  தண்டனைகள் அளிக்கப்படுவதில்லை.   தண்டனைகள் எல்லாம் ஏனோ தானோ என்று தண்டனைகள் இருந்தால்  யாரும் பயப்படப்போவதில்லை.  

சமீபத்தில் டிக்டாக் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் ரி.ம.100 வெள்ளியோடு வழக்கை முடித்தவர்கள் நாய், பூனை வழக்குகளில் பெரிதாக என்ன தண்டனையைக் கொடுத்துவிட முடியும்?  மனித உயிருக்கும்  மரியாதை இல்ல, மனிதனோடு கூடவே வாழும்  நாய்,  பூனை உயிர்களுக்கும் மரியாதை இல்லை.  எல்லாமே உயிர்கள் தான்.  வாயில்லா ஜீவன்களை வதைப்பது என்பதைச்  சாதாரண குற்றமாகக் கருத முடியாது.

எல்லாவற்றுக்கு ஓர் அரசியல் உண்டு என்பது போல்  இந்த நாய், பூனைகளுக்கும்  ஓர் அரசியல் உண்டு. நாய்கள் ஒரு சாராருக்குப் பிடிக்காது என்பதால் நாய்கள் பிரச்சனைகள் வரும்போது ஒரு சாரார்  அதைக் கண்டு கொள்வதில்லை. தப்பித்தும் விடுகின்றனர்.  பூனைகள் தாக்கப்படும் போது அது ஏதோ ஒரு மனித உயிர்கள் போல  முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.  நம்மைப் பொறுத்தவரை இரண்டு உயிர்களும் ஒன்று தான்.  எல்லா உயிர்களும் கடவுளால் படைக்கப்பட்டவை.  கடவுளால் படைக்கப்பட்டவை அனைத்தும் உயர்வானவை தான்.

நாம் கேட்பவையெல்லாம் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான். சிறை தண்டனைக் கிடைக்கிறதோ இல்லையோ  அபராதம் ரி.ம. 10,000 வெள்ளிக்கு மேல் இருக்க வேண்டும். அது தான் கொஞ்சமாவது வலிக்கச் செய்யும்!

போதாது! போதாது! தண்டனைகள் போதாது!