Thursday, 30 June 2016

நண்பர்கள் நலமா...?


உங்களைச் சுற்றியுள்ள உங்கள் நண்பர்களைப்  பாருங்கள். அனவைரும் நலம் தானே? உங்கள் நண்பர்கள் நலமாக இருந்தால் நீங்களும் நலமாகத்தான் இருப்பிர்கள்!

நாம் சிரித்து வாழ்வதும், மகிழ்ச்சியாக வாழ்வதும் நமது சுற்றுப்புறமும் ஒரு காரணமாக அமைகிறது. சிரித்துப் பேசி, மகிழ்ச்சியாக வாழ்வது என்பது ஒரு சிலருக்குக் கனவாகவே போய்விடுகிறது!

ஒரு சில நண்பர்களைப் பார்த்திருப்பீர்கள். ஏதாவது ஒரு பிரச்சனை அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்! அவர்களைப் பொருத்த வரைக்கும் அந்தப் பிரச்சனைகளிலிருந்து அவர்களால் விடுபடவே முடிவதில்லை! "உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது"  என்று கவிஞர் கண்ணதாசன் பாடிவிட்டுப் போனார்! அந்த வரிகள் இவர்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்!

எல்லாம் உப்புச்சப்பில்லாத பிரச்சனைகளாக இருக்கும்! ஆனால் இவர்கள் பண்ணுகின்ற சேட்டைகள் நம்மைக் கலங்கடித்து விடும்! இவர்களுடைய சோகங்கள் இவர்களோடு போய்விட்டால் நமக்கு மிக மிக சந்தோஷம். ஆனால் சுற்றுபுறத்தையே இவர்கள்  கலங்கடித்து விடுவார்கள்! அவர்கள் சோகங்கள் நம்மைத் தாக்கி நாமும் தேவையற்ற சோகங்களில் வீழ்த்தப்படுவோம்!

ஒரு சிலர் நோய்களப்பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களோடு நாமும் கலந்துவிட்டால் போதும் வேறு வினையே வேண்டாம்! நமக்கும் நோய் வந்துவிடும்! ஒரு நண்பரை எனக்குத் தெரியும்.நோய்களைப் பற்றி பேசுவதில் வல்லாதி வல்லவர்! நமது நாட்டில் உள்ள அத்தனை டாக்டர்களையும் தெரியும்; அத்தனை மருத்துவ நிபுணர்களையும் தெரியும். எந்த டாக்டர் எந்த வியாதியைக் குணப்படுத்துவார்! எந்த டாக்டரிடம் போனால் எந்த வியாதி குணமாகும் அத்தனையும் விரல் நுனியில் வைத்திருப்பார்! கடைசியில் அவரும் ஏதோ ஒரு பெயரைச் சொல்லி அந்த வியாதியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்! நோயில்லாமல் அவரைப் பார்க்கவே முடியாது! நமக்கு நோய் என்றால் டாக்டரைப் பார்ப்போம்; டாக்டர் சொல்லுவதைக் கேட்போம். அத்தோடு பிரச்சனை முடிந்தது.

ஆனால் 24 மணி நேரமும் நோய்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பவர்கள் மிக ஆபத்தானவர்கள்! மற்றவர்களுக்கு நோயைப் பரப்புவர்கள்! ஒரு நோயும் இல்லாமல் நாமும் ஏதாவது ஒரு நோயால் வாடிக் கொண்டிருப்போம்!

நாம் பெரும்பாலும் நண்பர்களோடு சேர்ந்து நேரத்தை கழிக்கிறோம். சிரித்துப் பேசி மகிழ்ந்திருப்போம்! அந்த வேளையில் நோய்களைப் பற்றி பேசுவதும் சோகங்களையே பகிர்ந்து கொள்ளுவதும்  நமக்கு எந்த நலனையும் கொண்டுவரப் போவதில்லை! நல்லதையே பேசி நலமோடு வாழ்வோம்! நல்ல நண்பர்கள் நமக்கு நலத்தைக் கொண்டுவருவார்கள். நோய் பரப்பும் நண்பர்கள் நோயைக் கொண்டு வருவார்கள்!

நலமோடு வாழ்வோம்! நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்போம்!

Wednesday, 29 June 2016

கேள்வி-பதில் (21)


கேள்வி

பூச்சோங் ஜெயா, I.O.I Boulevard, Movida Restaurant -ல் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கும் ஐ.எஸ்.ஐ. பயங்கரவாத கும்பலுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குமோ?

பதில்

இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே  பலமுறை நடந்திருக்கின்றன. புதிது என்று சொல்லுவதற்கில்லை. காவல்துறையினர் அதனைத் தொழில் போட்டி அல்லது பொறாமை காரணமாக நடைப்பெற்ற சம்பவங்களாக வகைப்படுத்தினர்.

ஆனால் இப்போது நமது பார்வை மாறிவிட்டது! காவல்துறை சொல்லுவதை இப்போது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! காரணம் சமீபத்தில் ஐ.எஸ்.ஐ.யின் மிரட்டல் - இன்னொரு பக்கம் பகாங் மாநில முப்தியின் மிரட்டல் - இது போன்ற மிரட்டல்களுக்கிடையே இந்த வெடிப்புச் சம்பவம் நடந்திருக்கிறது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் காயமடைந்திருக்கின்றனர்.  ஒரு இந்திய இளம் தம்பதியினர் கடுமையானக் காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். கணவர் ஜெயசீலன்,  கழுத்து, கால் மற்றும் முகம் ஆகியப் பகுதிகளில் கடுமையானக் காயங்களுக்கு உள்ளாகி அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.  அவரின்  மனைவி பவானி கையில் ஏற்பட்ட முறிவுக்காக சிகிச்சைப் பெற்று வருகிறார். இருவரும் தங்களது இரண்டாம் ஆண்டு திருமண நிறைவு நாளைக் கொண்டாட முதன் முதலாக அந்த உணவுவிடுதிக்குச் சென்றிருந்தனர்.

இதற்கிடையே இந்தக் குண்டுவெடிப்புக்குத் தாங்களே காரணம் என ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதக் கும்பலின் மலேசியப்பிரிவு  அறிவித்திருக்கிறது.  "இது உங்களுக்கு முன் எச்சரிக்கை"  என அறிவித்துள்ளது. இவர்கள் சொல்வது உண்மையோ பொய்யோ ஆனால் நம்பத்தான் வேண்டியிருக்கிறது. இதற்கு முன்னர் நடந்த வெடிக்குண்டு சம்பவங்களால் இந்த அளவு மனித பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இப்போது தான் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது. இரவு உணவுக்காக உணவகங்களுக்குச் செல்லலாம். ஆனால்  நேரத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். காலை, அதிகாலை என்று இழுத்துக்கொண்டு போகாதீர்கள். இந்த வெடிப்புச் சம்பவம் காலை 1.45 க்கு நடந்திருக்கிறது என்பதை மனதில் வையுங்கள்.

பயங்கரவாதக் கும்பல்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது! அவர்கள் உலக அளவில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். நமது காவல்துறையோ இது போன்ற சம்பவங்களை இதுவரை எதிர்நோக்கியதில்லை! ஆனாலும் நமது காவல்துறையினர் மீது நமக்கு நம்பிக்கை உள்ளது.

நமது நாடு அமைதியான நாடாகத் தொடர்ந்து திகழ இறவைனைப் பிரார்த்திப்போம்! வாழ்க மலேசியா!


Monday, 27 June 2016

உயர்ந்த இனத்தின் உன்னதப் பெயர்கள்!


"உயர்ந்த இனத்தின் உன்னதத் தமிழை எழுதவது எப்படி?"என்னும் கட்டுரையை நான் படிக்க நேர்ந்தது. எழுதியவர்: வழக்கறிஞர் பொன்முகம் பொன்னன் அவர்கள்

அதிலும் குறிப்பாக என்னைக் கவர்ந்தது பிள்ளைகளுக்கு எப்படி பெயரிடுவது என்பது மீதான பகுதி தான்.


இப்போது நமது பிள்ளைகளின் பெயர்களைப் பார்க்கும் போது என்ன நினைத்து, எப்படி நினைத்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கிறார்களோ என்பது  நமக்குப் புரியவில்லை! பெயர்களைப் பார்க்கும் போது இவன் எந்த ஊர்காரன், இவன் என்ன இனம் என்று ஒன்றுமே புரியவில்லை! அவன் தமிழன் என்பதற்கான அடையாளமே அங்கு இல்லை!

முன்பு நாம் நமது தாத்தா பாட்டி அல்லது தெய்வங்களின் பெயர்கள் அல்லது சினிமா நடிகர்களின் பெயர்கள் என்று ஏதோ நமது தமிழர்களின் அடையாளத்தைக் காட்டி வந்தோம். இப்போது அந்தப் பழக்கம் முற்றிலுமாக தொலைந்து போனது!

இது பற்றி ஒரு சில இளம் பெற்றோர்களை நான் விசாரித்துப் பார்த்தேன். அவர்கள் சொன்னதிலிருந்து முதல் குற்றவாளியாக நான் நினைப்பது கோவில் பூசாரிகளைத்தான்! அவர்கள் தான் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். முதல் எழுத்தை அவர்கள் கொடுத்து விடுகிறார்கள். பிறகு பெற்றோர்கள் அந்த எழுத்துக்குத் தகுந்தவாறு பிள்ளைகளுக்குப் பெயர்களை வைக்கிறார்கள். அவர்கள் கொடுக்கின்ற முதல் எழுத்து  இப்படியும் தொடங்கலாம்:  டு, ஷு, ஜு  இப்படி நடைமுறைக்குக் கொஞ்சமும் ஒத்துவராத எழுத்துக்களைக் கொடுத்தால் பெற்றோர்கள் என்ன செய்வார்கள்?  கேட்டால் நாங்கள் ஜாதகத்தைப் பார்த்து கணித்து எழுத்துக்களை எழுதி கொடுக்கிறோம் என்கிறார்கள்!

சரி! போனது போனவைகளாக இருக்கட்டும்! இப்போது "தமிழ் எங்கள் உயிர்" என்னும் அமைப்பு இவைகளை நிவர்த்திச் செய்ய சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதனைப் பலரும் வரவேற்றுள்ளனர். நாமும் இருகரம் கூப்பி வரவேற்போம்!

அதில் முக்கியமாக "தமிழுக்கு நாம் செய்யாமல் வேறு யார் செய்வது"  என்று மலேசிய அர்ச்சகர்கள் சங்கம் களத்தில் குதித்துள்ளது! இவர்களைத்தான் நாம் அதிகமாக எதிர்பார்த்தோம். காரணம் குழந்தைகள் பிறந்ததும் பெற்றோர்கள் முதலில் நாடுவது அர்ச்சர்களைத்தான். அவர்கள் நினைத்தால் இந்தப் பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்! அதிலும் வெறும் பெயரின்  தொடக்க எழுத்தைக் கொடுக்காமல் நல்லதொரு பெயர் பட்டியிலைத் தயார் செய்து பெற்றோர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

அத்தோடு இந்த நேரத்தில் "தமிழ் எங்கள் உயிர்: அமைப்பு மேற்கொண்டிருக்கும் - தமிழ் தமிழர் சம்பந்தப்பட்ட - எல்லா  முயற்சிகளிலும்
வெற்றிபெற நமது வாழ்த்துகள்!  

தமிழன் தலை நிமிர வேண்டும்! வாழ்க தமிழினம்!