Wednesday, 31 August 2022

தலைவர் சொல்லுவது சரியா?

 

பாஸ் கட்சியின் தலைவர், அப்துல் ஹாடி அவாங் ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார்.

அதாவது, நாட்டில் இலஞ்சம் பரவலாக இருப்பதற்கு, முஸ்லிம் அல்லாதவர்களே காரணம் என்பதாக அவர் கூறியிருக்கிறார். அவர் அப்படி ஒரு குற்றச்சாட்டை வைப்பதற்குக் காரணம் கிளந்தான், திரெங்கானு போன்ற பாஸ் கட்சி ஆளுகின்ற,  அத்தோடு மலாய்க்காரர் அதிகம் உள்ள, அந்த இரண்டு மாநிலங்களிலும்  இலஞ்சம் இல்லை என்று அவர் சொல்லுவதாகவே எடுத்துக் கொள்ளலாம். அந்த மாநிலங்களைப் பற்றி அவர் அதிகம் அறிந்தவர்.  அதனால் அவர் சொல்லுவது சரியாகவும் இருக்கலாம்.

அவர் மத ரீதியாகவே  பேசியிருக்கிறார். அதாவது   கிறிஸ்துவர்கள், புத்த மதத்தினர், இந்துக்கள், சீக்கியர் இப்படி இஸ்லாம் அல்லாதவரே இலஞ்சத்திற்குக் காராணமானவர்கள் என்பது தான் அவரின் கருத்து. அவர் சொல்ல வருவது  இஸ்லாமியர்களைத்  தவிர்த்து  பிற மதத்தினருக்குப் போதுமான சமயக்கல்வி என்று ஒன்று இல்லாததால் அவர்களால் எளிதாக இலஞ்சத்தைக் கொடுக்க முடிகிறது. இலஞ்சத்தை அனுமதிக்க முடிகிறது. இலஞ்சத்தைப் பரவலாக்க முடிகிறது என்பது தான் அவரின் குற்றச்சாட்டின் சுருக்கம். ஒரு வேளை நீதிமன்றத்தால் நஜிப் ரசாக் குற்றவாளி என்று கூறப்பட்டதால்  அவருக்கு உடனடியாக நஜிப்பின் குருவாக இருந்த  ஜோ லோ,  ஹாடிக்கு நினைவுக்கு வந்திருக்கலாம்!

ஆனால் ஒன்றை ஹாடி நினைவு கொள்ள வேண்டும்.  சமயம் அறியாத பிற மதத்தினர் இலஞ்சம் கொடுத்தார்கள் அதனைச் சமயம் அறிந்தவர்கள் பெற்றுக் கொண்டார்கள் என்பதும் உண்மை தான். இதில் எது நியாயம் என்பது நமக்கும் கேள்விக் குறியே! சமயம் அறியாதவர்களைவிட சமயம் அறிந்தவர்கள் "பெற்றுக்கொண்ட" அதைக் குற்றம் அல்ல என்று ஹாடி சொல்ல வருகிறாரா?

ஹாடி போன்ற தலைவர்கள் இலஞ்சத்தை சமயத்தோடு ஒப்பிடக் கூடாது என்பது தான் நாம் அவருக்குச் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். நமது அண்டை நாடான சிங்கப்பூரில் இலஞ்சம் பெரிய அளவில் இல்லாததற்குச்  சமயம் காரணமென்றால் அதற்காகப் பாராட்டப்பட வேண்டியவர்கள் புத்தமதத்தினர். அவர்களின் எண்ணிக்கைதான் அங்கு அதிகம். அதனால் புத்தமத்தினர் அல்லாதவர்கள் தான் இலஞ்சத்திற்குக் காரணம் என்று சொல்ல முடியுமா அங்கு சமயம் என்பதே ஒரு பாடமாக பள்ளிகளில் இல்லை. வேறு என்ன சொல்ல?

பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் இலஞ்சம் வாங்கினால் கடும் சட்டங்கள் இருக்கின்றன. நமது நாட்டில் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.  தவறு செய்தவன் எந்தக் கட்சியைச் சேர்ந்தவன், எந்த இனத்தைச் சேர்ந்தவன், பணக்காரனா ஏழையா, அரசியல்வாதியா அவனது மகனா, மகளா - இப்படி எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்த பிறகு தான் குற்றம் சாட்டப்படும் ஒரு நாட்டில் இலஞ்சம் இருக்கத்தான் செய்யும்.

இலஞ்சம் சமயத்தைப் பார்ப்பதில்லை! பணத்தைத் தான் பார்க்கும்!

Tuesday, 30 August 2022

இலஞ்சத்தை விரட்டியடிப்போம்!


 நமது நாட்டில் இப்போது இலஞ்சம் என்பது தான் மலேசியர்களிடையே  அதிகம் பேசப்படுகிற ஒரு  விஷயமாகத் தெரிகிறது!

கடந்த சில ஆண்டுகளாகவே முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவரது மனைவி ரோஸ்மா மன்சூர் இவர்களைச் சுற்றிச்சுற்றித் தான் இலஞ்சம் என்கிற விஷயமே  அதிகம் பேசப்பட்டது. அதற்கு முன்னர் இலஞ்சம் இல்லை என்று யாரும் சொல்ல வரவில்லை.

முன்பு இலஞ்சம் என்றால் உரிமம் இல்லாமல் கார் ஓட்டுவது, மோட்டார் சைக்கள் ஓட்டுவது, வேகத்தோடு ஓட்டுவது - இப்படி இவர்களைப் பற்றித் தான்  இலஞ்சம்  அதிகமாகப் பேசப்படும். போலீஸ்காரர்களுக்கு ஏதாவது பணத்தைக் கொடுத்து அதை சரிபண்ண வேண்டும் என்கிற நிலை. நமது நாட்டில் இலஞ்சம் என்பதின் தொடக்கம் இப்படித்தான் இருந்தது.

இலஞ்சம் அதிகம் உலவிய காலகட்டம் என்றால் அது டாக்டர் மகாதிர் பிரதமராக இருந்த காலகட்டம் தான். அவர் எப்போதும் வித்தியாசமாகவே சிந்திப்பவர்.  சீனர்களைப்போல் மலாய்க்காரர்களும் பணக்காரர்களாக ஆக வேண்டும் என்கிற எண்ணம் உடையவர். அது தான் இலஞ்சத்தின் ஆரம்பம் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்போது தான் எல்லாத் துறைகளிலும் இலஞ்சம் வாங்குகின்ற பழக்கத்தின் ஆரம்பம்!

ஆனால் நஜிப் பிரதமராக இருந்த காலத்தில் தான் அனைத்தும் கட்டுமீறிப் போனது என்பது தான் சோகம். அவர் பிரதமர் என்பதைவிட அவரது மனைவி ரோஸ்மா தான் நாட்டை ஆளுகின்ற பிரதமர் என்று பேசப்பட்டது! ரோஸ்மாவை மீறி, அரசாங்கத் துறையில்,  யாரும் செயல்பட முடியாது என்று பலவாறு பேசப்பட்டது! நஜிப் எப்படி அப்படி ஒரு கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டார் என்று இன்றும் புரியவில்லை.

ரோஸ்மா பல தனியார் நிறுவனங்களையும் விட்டுவைக்கவில்லை என்பதாகப் பேசப்பட்டது. ஏன், நமது "பாபாஸ்" நிறுவனத்தைக் கூட  வாங்குவதாக  ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் கூறப்பட்டது.

இலஞ்சம்,  இந்த இருவரைச் சுற்றி மட்டுமே அல்ல. பெரும்பாலான அம்னோ தலைவர்கள், ம.இ.கா. தலைவர்கள் - இப்படிப் பலர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகினர். இன்னும் பல வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதில் பெரும்பாலும் அம்னோ தலைகள் தான்! இந்த. நஜிப் ரோஸ்மா, வழக்கே இத்தனை ஆண்டுகள் நீண்டுக்கொண்டே போனதால் மற்ற வழக்குகள் எல்லாம் முக்கியத்துவம் பெறவில்லை.  ஆனால் இனி  ஒன்று ஒன்றாக வெளிச்சத்துக்கு வரும் என நம்பலாம்.

இலஞ்சம் என்பது விஷம். அது முற்றிலுமாக துடைத்து ஒழிக்கப்பட வேண்டும். இலஞ்சம் வாங்குவது பல விஷயங்களுக்குத்  தடைகளாக இருக்கின்றன. 

இலஞ்சமற்ற நாடாக மலேசிய விளங்க வேண்டும்! அதற்காக அத்தனை பேரும் சேர்ந்து கைகோப்போம்! இலஞ்சத்தை நம் மத்தியிலிருந்து விரட்டியடிப்போம்!

Monday, 29 August 2022

சுற்றுப்பயணிகள் அதிகரிப்பர்!

 

இந்த ஆண்டு மலேசியாவுக்கு வரும் சுற்றுப்பயணிகள் அதிகரிப்பர் என்பதாக சுற்றுலாத்துறை மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறது.

இன்று பல நாடுகள்  வெளிநாட்டுப் பயணிகள் வருவதை ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றன. சுற்றுப்பயணிகள் பணத்தோடு வருகின்றனர். கொண்டு வரும் பணத்தை இங்கே செலவு செய்கின்றனர். அதன் மூலம் நாடுகள் பயனடைகின்றன.

இப்போது நமக்கு ஸ்ரீலங்கா நாட்டைப் பற்றிய செய்திகள் வருகின்றன. சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் நாடு திண்டாடுகிறது. மக்கள் கஷ்டபடுகின்றனர். அவர்கள் சொல்லுகின்ற காரணங்கள் என்ன? கோவிட்-19 காலகட்டத்தில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை குறைந்து போனதால் நாட்டுக்கு வருமானம் இல்லாமல் போய்விட்டது  தான் காரணம் என்கின்றனர்.  ஆமாம்,  சுற்றுப்பயணிகளை அதிகம் நம்பிய நாடுகளில் அதுவும் ஒன்று.  ஒரு துறை பலவீனம் அடையும் போது அது நாட்டைப் பாதிக்கிறது. அந்த வகையில் சுற்றுலாத்துறை முக்கியத் துறைகளில் ஒன்று.

இந்த ஆண்டு, நமது சுற்றுலாத்துறை,  வெளிநாடுகளிலிருந்து சுமார் ஒரு கோடிக்கு மேல் நாட்டுக்குள்  வருவார்கள் என நம்பிக்கையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  எல்லாம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும். இப்போதெல்லாம் ஏதோ ஒன்று வந்து  நமது திட்டங்களைத் தகர்த்தெறிந்து விடுகிறது. அதுவும் வருகின்ற இடர்கள் அனைத்துமே நோய் சம்பந்தமாகவே இருக்கின்றன.

சான்றுக்கு எப்போதோ வந்து மிரட்டிய கோவிட்-19 இன்னும் ஒழிந்த பாடில்லை. இன்னும் மிரட்டிக் கொண்டு தான் இருக்கிறது. இன்னும் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. அது பற்றி பேசுவது குறைந்தால் இதோ இன்னொன்று: குரங்கு அம்மை. இது இன்னும் மிக மோசமான வியாதியாக காணப்படுகிறது.  பார்ப்பதற்கே அச்சத்தை  ஏற்படுத்துகிறது.

ஆண்டு முடிவதற்குள் இன்னும் என்னென்ன நோய்களைப் பரப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள் என்று புரியவில்லை. ஆமாம்,  நோய்கள் பரப்பப்படுகின்றன என்பது தானே குற்றச்சாட்டு!

இந்த நிலையில் தான் சுற்றுப்பயணிகள் வரவேண்டும் என்று ஒவ்வொரு நாடும் திட்டமிடுகின்றன. எது நடந்தாலும் நடக்காவிட்டாலும்  சுற்றுப் பயணங்கள் தொடரத்தான் வேண்டும். அதனையே நம்பியிருக்கும் நாடுகளும் பிழைக்க வேண்டும்.

நமது நாடும் திட்டமிட்டபடி தனது இலக்கை அடைய வேண்டும்!