Monday, 31 July 2023

தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கிறது!

 

பதினைந்தாவது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன!

ஆறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல். அதில் இரண்டு மாநிலங்கள் பாஸ் கட்சிக்கு உரியது. அதனால் அது பற்றி நாம் அதிகக் கவலைப்படுவதில்லை.  அது மலாய்க்கரர்களின் தலையெழுத்து!

ஆனால் நம்மால் அப்படியெல்லாம் சும்மா இருந்துவிட முடியாது. இந்தியர்களின் எதிர்காலமும் இதில் அடங்கும்.

நாம் நீண்ட காலம் தேசிய முன்னணி கூட்டணியில் ஏமாற்றப்பட்டவர்கள். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக. கடைசியில் நம்மை அவர்கள் பழங்குடி மக்களின் நிலைக்குத் தள்ளிவிட்டனர். அதற்காக  ம.இ.கா.வுக்கு ஒரு சபாஷ்!

இப்போது நடப்பது, எந்த ஒரு கட்சிக்கும் போதுமான பலம் இல்லாததால், இதுவும் ஒரு கூட்டணி தான். அதன் பலன் தான் ஒற்றுமை அரசாங்கம்.  பிரதமர் அன்வார் தான் நினைத்தது போல செயல்பட முடியாத ஒரு சூழலில் தான் அவர் இருக்கிறார்.   இருந்தாலும் தன்னால் முடிந்ததை அவர் செய்கிறார் என்று தான் சொல்ல முடியும்.

எதிர்தரப்பைப் பாருங்கள். யாரையாவது நமபக்கூடிய ஒரு மனிதரைச் சொல்லுங்கள்.  எல்லாரும் ஊழல் புரிந்தவர்கள். சரி, அதை விட்டாலும் அவர்கள் நாணயஸ்தர்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு யாரையாவது  சுட்டிக்காட்ட முடியுமா?  நாம் முன்னாள் பிரதமர் முகைதீனையே எடுத்துக் கொள்ளுங்கள். இவர் இந்தியர் பற்றி எந்தக் கவலையும் இல்லாதவர். நமது கோவில்கள், நமது மொழி, நமது முன்னேற்றம்  இது பற்றி கவலை உள்ளவரா,  சொல்லுங்கள்?  நமது மலாய் ஆட்சியாளர்கள்  தேர்தல் நேரத்தில் "அல்லா" பிரச்சனையை எழுப்ப வேண்டாம் என்று சொல்லியும் அவர் எழுப்புகிறார். அவர்  மலாய் ஆட்சியாளர்களை மதிக்கவில்லை என்பது தானே பொருள்?   அது மட்டுமா? தேர்தல் நெருங்க நெருங்க அவர் நடப்பது "கிறித்துவ" ஆட்சி என்று நிச்சயமாக சொல்லுவார்!  எதிர்பார்க்கலாம்!

அடுத்து அவர்களின் பெருந்தலைவர் என்றால் டாக்டர்  மகாதிர்.  இவரை ஒரு தலைவர் என்று சொல்லவே அருகதையற்றவர்.  ஓர் இந்தியராக இருந்தும் இந்தியர்களின் பரம எதிரியாக செயல்பட்டவர்.  துன் சாமிவேலு அவர்களால் தொடங்கப்பட்ட "மைக்கா ஹோல்டிங்ஸ்"   அதன்  மொத்த அழிவுக்குக் காரணமே இவர்தான்.  நாட்டின் நலன்,மக்களின் நலன் என்பதைவிட தனது நலன், தனது குடும்ப நலன் - இப்படித்தான் அவர்  செயல்படுவார்!

இன்றைய பிரதமர் அன்வார் தான் இவர்களில் மாறுபட்டவராகத் தோன்றுகிறார். நம் இனத்தவர் மீது அக்கறை உள்ளவராகச் செயல்படுகிறார்.  அவருக்கு நாம் போதுமான நேரம் கொடுக்க வேண்டும். இப்போதே நம்மைக் கைவிட்டு விட்டார் என்று  புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது.

நாம் பொறுத்துத்தான் ஆக வேண்டும். நம் பிரதிநிதிகளும் நமது பிரச்சனைகளைப் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய நிலை என்பது நாம் பழங்குடி மக்களை விட நமது தரம் உயர்த்தப்பட வேண்டும்.

தேர்தல் பிரச்சாரத்தை அதிகம் நம்பிவிடாதீர்கள்!


Sunday, 30 July 2023

நாட்டுப்பற்று இல்லாத ஒரு மனிதர்!

 

டாக்டர் மகாதிர், நமது முன்னாள் பிரதமர், அரசியலில் எப்படி நுழைந்தவர் என்பதை நம் நாடே அறியும்.

அவரது பலமே இனங்களிடையே அச்சத்தை தோற்றுவிப்பது தான். இப்போது அவர் புதியதோர் அச்சத்தை தோற்றுவித்திருக்கிறார். அதாவது சீனர்களையும், இந்தியர்களையும் வந்தேறிகள் என்றும் இந்த நாட்டை உங்கள் நாடு  என்று சொந்தம் கொண்டாடாதீர்கள் என்று மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

இப்படி சொல்லுவதின் மூலம் தாநும் ஒரு  வந்தேறி என்பதை மற்றவர்கள் மறக்க வேண்டும் என்பதற்காகக் கூட இருக்கலாம். அவர் அரசியலுக்கு வந்த பின்னர் தான் அவர் தனது  செல்வாக்கைப் பயன்படுத்தி  தனது இந்தியர் அடையாளத்தை வலுக்கட்டாயமாக  அழித்தார் என்பது வரலாறு. ஆகவே அவரும் வந்தேறி தான். அதற்கு இன்றும் சான்றுகள் உண்டு.

ஆமாம், அவர் ஏன் இப்போது, இந்த சட்டமன்ற தேர்தல் காலத்தில், அவர் மீண்டும் வந்தேறிகள் பிரச்சனையை எழுப்ப வேண்டும்?  இனக்கலவரத்தை  தூண்டுவதற்கு தேர்தல் காலம் தான்  சரியான காலம் என்பதை  அவர் உணர்ந்திருக்கிறார்.  காரணம் அதன் பலனை அவர் 22 ஆண்டுகாலம்   அனுபவித்தவர். மீண்டும் வாய்ப்பில்லை என்று அவருக்குத் தெரியும்.    ஆனாலும் முயற்சி செய்து பார்க்கிறார்!

விதி என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ இந்த முறை விதி அவருக்குக் கை கொடுக்கவில்லை.  அரசியலில் நுழையும் போது மே 13 கலவரத்தில் மூலம் தான் அரசியலுக்குள் நுழைந்தார்.  அதையே தான் இப்போது அரசியலிலிருந்து விரட்டியடிக்கும் போதும் 'கலவரம்'  தான் தனக்குரிய மரியாதை என்று நினைக்கிறார்!  நாடாளுமன்றத்  தேர்தலில் அவருக்கு  போதுமான அடி விழுந்துவிட்டது. ஆனாலும் அது முழுமை அடையவில்லை. சட்டமன்றத் தேர்தலில் அது முழுமை அடையும்

ஆனாலும் நாடு அமைதியாக இருப்பதில் அவருக்கு நாட்டமில்லை. தான் எப்படி கலவரத்தின் மூலம் பதவிக்கு வந்தாரோ போகும் போதும் அப்படியே தான் போக வேண்டும் என்று அவர் நினைக்கிறார்!  ஆனாலும் அப்படி ஒரு தண்டனை அவருக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. மலேசியர்கள் விழித்துக் கொண்டனர். இந்த இன அரசியலுக்குள் யாரும் விழ தயாராக இல்லை. 

மக்களை அச்சப்படுத்தி,  குழப்பம் விளைவித்து, பயமுறுத்தி அரசியல் விளையாட்டு விளையாடுவதில் மக்கள் தயாராக இல்லை. டாக்டர் மகாதிருக்கும் விளையாடும் வயதில்லை. அவரும் பொறுப்புணர்ந்து  நடந்து கொள்ள வேண்டும்.

நாட்டுப்பற்று என்பதெல்லாம் டாக்டர் மகாதிர் அகராதியில் இல்லை!

Saturday, 29 July 2023

பேராசிரியர் இம்முறை போட்டியிடவில்லை!


 பினாங்கு மாநில துணை முதல்வர்,  பேராசிரியர் இராமசாமி அவர்கள் இம்முறை  எந்தத் தொகுதியிலும் நிறுத்தப்படவில்லை.  அதாவது இந்தப் பதினைந்தாவது  தேர்தலில்  அவர்  போட்டியிடவில்லை.

இது அரசியல். நம்மால் எதனையும் கணிக்க முடியாது.  எது முடியும் எது முடியாது என்பதை நம்மால் சொல்ல முடியாது.

நாம் இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது  அவர் வகித்த துணை முதல்வர் பதவி  யார் நிரப்புவார்  என்பது தான்.  அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம்.  எந்த குப்பனும் வரலாம் எந்த சுப்பனும் வரலாம்.  நமக்கு அதில் பிரச்சனையும் இல்லை.

ஆனால் நமக்குத் தேவை இராமசாமி போன்ற தலைவர்கள் தான். நல்ல படிப்பாளிகள்,  தமிழர் பிரச்சனைகளை அறிந்தவர்கள், நமது சமூகத்தை நல்ல முறையில் வழி நடத்துபவர்கள் - அவர்களைத்தான் இந்த சமூகம் எதிர்பார்க்கிறது.

பேராசிரியர் இராமசாமி அவர்கள் தேர்தலில் போட்டி இடவில்லை  என்றாலும் அவர் தொடர்ந்து இந்தப் பதவியில் இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த சமூகம்  விரும்புகிறது.

நல்ல தலைவர்களை இந்த சமூகம் நீண்ட நாள்களாகக் கொண்டிருக்கவில்லை.  துன் வி.தி.சம்பந்தனுக்குப் பிறகு  வந்தவர்கள் அனைவருமே  இந்த சமூகத்தைக் கைவிட்டுவிட்டனர். இராமசாமி அவர்கள் மாநில அளவில் தான் துணை முதல்வராக இருந்தாலும்  அவருடைய செல்வாக்கு என்னவோ  மலேசிய அளவில்  இல்லை என்று சொல்லிவிட முடியாது.  அதற்கு அவர் தகுதியானவராக இருந்தார்.

நம்முடைய  விண்ணப்பம் என்னவென்றால்  அவர் துணை முதல்வராகத் தொடர்ந்தால் நமக்கு மகிழ்ச்சியே.  அப்படி ஒரு வாய்ப்பில்லை  என்று வந்தால்  அந்தப் பதவி மீண்டும் ஒரு தமிழருக்கே கொடுக்கப்பட வேண்டும் என்பது தான்.  தமிழர் மட்டும் அல்ல தமிழ் அறிந்தவராகவும் இருக்க வேண்டும். தமிழர் பிரச்சனைகளை அறிந்தவராக இருக்க வேண்டும். ஜ.செ.க. வுக்கு தலை ஆட்டுபவராக இருந்தால்  எதுவும் நடக்காது. சீனர்கள் பிரச்சனைகள் வெற்றிகரமாக முடியும். தமிழர் பிரச்சனைகள் அனைத்தும் தள்ளாடும்.  அதற்காகத்தான் நாம் அஞ்சுகிறோம்.

பேராசிரியர்  தேர்தலில் போட்டியிடவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது தான்.  அது பினாங்கு மாநில அரசியல். அவர் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவருடைய சேவை தொடர வேண்டும். நமது இனம் காக்கப்பட வேண்டும். தொடர்ந்து அவர் செய்த பணிகள் தொடர வேண்டும்.

நல்லதே நடக்கும் என நம்புவோம்!