Thursday 17 March 2016

மீண்டும் நமது ஆதிக்கம் மலர வேண்டும்!

ஒரு காலக்கட்டத்தில், அன்றைய மலேயாவில்,, பொருளாதார ரீதியில், தமிழரது  ஆதிக்கம் வலுப்பெற்றிருந்தது.

 1920 களில், நமது பொருளாதாரம்,   சிறப்பாக இருந்ததற்கான ஆதாரங்கள் நம்மிடம் இருக்கின்றன. குறிப்பாக நமது வணிகப் பரம்பரையினரான நாட்டுக்கோட்டை செட்டியார்கள், மற்றும் தமிழ் முஸ்லிம்கள் தென்கிழக்காசியப் பகுதிகளில் கொடிகட்டிப் பறந்தனர், குறிப்பாக இந்த இரு தமிழ் வணிகச் சமூகமும் தங்களது  வணிகத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தனர்.

பொருளாதாரம் உயர்ந்த இருந்த அந்தக் காலக் கட்டத்தில் நமது தமிழ் மொழியும் உய்ர்ந்து இருந்தது. தமிழ் மொழிக்கு முக்கியத்துவமும் இருந்தது.

நாம் தோட்டப்புறங்களில்  வாழ்ந்தோம். அதே சமயத்தில் பட்டணப்புறங்களில் வாழ்ந்த தமிழர்கள் நாட்டின் வளப்பத்திற்காக அளப்பரிய செவைகள் புரிந்தனர்.பொருளாதாரம் என்பது அவர்களது ஆதிக்கத்தில் தான் இருந்தது! அதில் வியப்பு ஒன்றும் இல்லை.

நமது சரித்திரத்தைப் பின் நோக்கிப் பார்த்தால் நாம் வியாபாரம் செய்ய வந்தவர்கள்  என்று சரித்திரம் குறிப்பிடுகிறது. ஆனால் பிற்காலத்தில் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியினால் நம்மைத்தடம் புரள வைத்தது ஆங்கில எகாதிபத்தியம்.

அந்தக் காலக் கட்டத்தில் மிகக் முறைந்த அளவிலேயே மேற்கத்திய வங்கிகள் இயங்கி வந்தன. அதுவும் சிங்கப்பூர், பினாங்கு, கோலாலம்பூர் போன்ற பெரிய - வளர்ந்து வருகின்ற பட்டணங்களில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினர். ஆனாலும் இப்போது போன்று கடன் கொடுப்பது, வாங்குவது எல்லாம் செயல்பாட்டில் இல்லை.

அந்தக்காலக் கட்டத்தில் தான் செட்டியார்கள் வங்கிகளாகச் செயல்பட்டனர். இன்று வங்கிகள் செய்கின்ற வேலைகளை அன்றே  அவர்கள் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதில் முக்கியமானது கடன் கொடுப்பது தான். வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. ஆனால் செட்டியார்களுக்கு அதுவே தலையாயத் தொழில்.

அன்றும் சரி, இன்றும் சரி  சீனர்கள் தான் வங்கிகளை நல்ல முறையில் பயன்படுத்துபவர்கள். வங்கிகளிடம் கடன் கிடைக்காத சூழ்நிலையில்  செட்டியார்களிடம் கடன் வாங்கித்தான் சீனர்கள் தங்களது தொழிலை வளர்த்து வந்தனர்; வளர்ந்தும் விட்டனர். இன்று நாம் சீனர்கள் முன் கைகட்டி நிற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கிறோம்!  நமது வியாபாரிகளும் பலர் அவர்களிடம் கடன் வாங்கி தொழில் செய்தனர். ஆனால் வளர்ச்சி என்னவோ சீனர்களின் ஆக்கிரமிப்பில் வந்துவிட்டது!

காடுகள் சூழ்ந்த ஒரு நாட்டில் வெள்ளைக்காரர்கள் தங்களது முதலீடுகளைப் போடத் தயாராக இல்லாத சூழலில் 'திரைக்கடல் ஓடி திரவியம் தேடு' என்னும் தமிழரின் வாணிக வேட்கையை செயல்படுத்தியவர்கள் இந்த வணிகப் பரம்பையினர். இன்றும் அவர்கள் நடத்திய வாணிப மையங்கள் பல சிறிய, பெரிய நகரங்களில் அடையாளப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. அவர்கள் தங்களது தொழிலை நவீனப்படுத்தாதற்கு அரசியல் காரணங்கள் உண்டு. ஆனாலும் தொழிலை விட்டு அவர்கள் ஓடிவிடவில்லை. இருப்பினும் தமிழ் முஸ்லிம்கள் தங்களது தொழிலை நவீனப்படுத்தியது மட்டுமல்ல இன்றைய நிலையில் வாணிபத்தில் தலைநிமிர்ந்து நிற்கின்றார்கள்! நமக்கும் அது பெருமை தானே!

ஆனாலும் இன்று தமிழர்கள் பல துறைகளிலே.பல்வேறு தொழில்களிலே வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர்.

மலேசியாவின் இரண்டாவது பெரிய கோடிஸ்வரரான ஆனந்தக்கிருஷ்ணன் உலகில் பல்வேறு நாடுகளில் பலவிதமானத் தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். ஆர்.கே.நாதன் போன்ற கோடிஸ்வரர்கள் வெளிநாடுகளில் பெரிய பெரிய கட்டடங்களைக் கட்டிக்கொண்டு தமிழர்களைத் தலைநிமிர வைக்கின்றனர். இன்று உள்நாட்டிலும் இப்போதைய நமது இளைஞர்கள் பலவித தொழில்களில் ஈடுபட்டிருப்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவைகள் அனைத்தும் அரசாங்க உதவியின்றி அமைதியாக நடைபெற்றிக்கொண்டிருக்கிறது. அரசாங்க உதவி இருந்தால் நமது நிலை எப்போதோ மாறி இருக்கும்.

ஒன்று மட்டும் நிச்சயம். நமது நிலை மாறி வருகிறது. அரசாங்க உதவி கிடைக்கிறதோ, கிடைக்கவில்லையோ நமது இளைஞர்கள் துணிந்து செயல்படுகின்றனர்.தொழில் துறையில் ஆழமாகக் கால் ஊன்றுகின்றனர். குறிப்பிட்டவர்கள் தான் வணிக சமூகம் என்னும் நிலையை மாற்றி அமைக்கின்றனர்.

அனைத்துத் தமிழர்களும் வணிகம் செய்ய வேண்டும்.நாம் வணிக சமுகமாக மாற வேண்டும். தடைகளைத் தகர்த்தெறிய வேண்டும். ஆயிரம் தடைகள் வரத்தான் செய்யும்.தடைகள் ஆயிரத்தையும் நொறுக்கித்தள்ள வேண்டும்.

தமிழர்கள் உயர்குடியைச் சேர்ந்தவர்கள். வரலாறு படைத்தவர்கள்.அடிமை வாழ்க்கை வாழ்ந்தவர்கள் அல்ல.

தாழ்ந்துவிட்டோம் என்னும் ஓலத்தை மாற்றியமைக்க வேண்டும். அது நம்மால் முடியும்; இன்றைய தலைமுறையினரால் முடியும்.

பொருளாதாரம் நமது கையில்! எப்போதுமே நமது கையில்!

மீண்டும் நமது ஆதிக்கத்தை மலர வைப்போம்! வெற்றி பெறுவோம்!









No comments:

Post a Comment