Friday 4 March 2016

தமிழக தேர்தல் ...... சும்மா ஒரு வேடிக்கை விளையாட்டு!

சமீபகாலமாக தமிழ்ப் பத்திரிக்கைகளின்  செய்திகளைப் படிக்கும் போது தீடீரென ஒர் எண்ணம்  மனதில் தோன்றியது.

வேறொன்றும் இல்லை. தமிழகத்தை ஆட்சி செய்வது என்பது  மிகவும் சிரமமான காரியமா அல்லது  மிக மிக எளிதான காரியமா?

ஏனோ தெரியவில்லை இது ஒரு மிக மிக எளிதான காரியம் என்றே எனக்குத் தோன்றுகிறது!  இப்படி ஒரு முடிவுக்கு நான் வரக் காரணம் வருகின்ற செய்திகளைப் படிக்கின்ற போது வேறு எண்ணங்கள் எதுவும் தோன்றவில்லை!

நான் வேறு இந்திய மாநிலங்களைப் பற்றிப் பேசவில்லை. அவைகளைப் பற்றி ஒன்றும் தெரியாத போது பேசாமல் இருப்பதே நல்லது. தமிழ் நாட்டைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.

தமிழ் நாட்டை ஆளுவதற்கு நீங்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்பதோ அல்லது சமகால தமிழ் இலக்கியங்களில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதோ அவசியமில்லாத ஒன்று.

அதே சமயத்தில் கிறித்துவ பள்ளிகளில் படித்து பெரிய ஆங்கில மேதையாகவோ அல்லது இந்தியாவிலேயே முதல் தர ஆங்கில அரசியல் பேச்சாளராகவோ இருக்க வேண்டும் என்னும் அவசியமுமில்லை!

காரணம் இந்தக் கல்வி தகுதிகள் எல்லாம் தமிழ் மாநிலத்தை ஆளுவதற்கு ஏற்ற தகுதிகள் இல்லை!

வெறும் மத்திய அரசுக்குக் கடிதம் போட்டு , கடிதம் எழுதி அரசாங்கத்தை நடத்துவதற்கு என்ன பெரிய தகுதி வேண்டியிருக்கிறது?  மத்திய அரசாங்கமே எல்லா மாநில முதலமைச்சர்களுக்கும் அவர்களின் கீழ் பணிபுரிய இவர்களை விட இன்னும் பெரிய படிப்பாளிகளை உதவியாளர்களாக வைத்திருக்கிறார்களே!

உண்மையில் இப்போதைய நிலையில் தமிழக முதலமைச்சர்களின் வேலை என்ன? ஏறக்குறைய அலுவலகங்களில் பணி புரியும் ஒரு அலுவலகப்பையனின் வேலை என்னவோ அதைத்தான் இவர்களும் செய்கிறார்கள்!  சான்றுக்குச் சில:

1) தமிழக மீனவர்கள் இலங்கைப்படையினரால் சுடப்பட்டார்கள்!
  நடவடிக்கை:  பிரதமர் மோடிக்குக் கண்டனக் கடிதம் முதலமைச்சர்       அனுப்பியிருக்கிறர்.

2) தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது     செய்யப்பட்டார்கள்!
  நடவடிக்கை: தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் அவசரக் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

3) தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கைப் படையினரால் கைப்பற்றப்பட்டன!
  நடவடிக்கை: இலங்கப்படையினரின் இந்த அத்துமீறல்களைக் கண்டித்து முதலமைச்சர் பிரதமர் மோடியின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார்.

4) சென்னையில் வரலாறு காணாத வெள்ளம்.
   நடவடிக்கை: பிரதமர் கொடுக்கும் 500 கோடி ருபாய் போதாது. பாதிப்பு அதிகம்.    1000 கோடி நிதி உதவிக்காக பிரதமர் மோடிக்குக் கடிதம்      அனுப்பியிருக்கிறோம்.

5) வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் அப்படியே இருக்கிறது. நாங்கள் இன்னும் வெள்ளத்திலேயே மிதந்து கொண்டிருக்கிறோம். எங்களையும் கொஞ்சம் கவனியுங்கள்!
நடவடிக்கை:  வெள்ளத்தினால் பெரும் பாதிப்பு ஒன்றுமில்லை! சென்னை  சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டது!  சென்னையை சீர் செய்ய - நிதி உதவிக்காக - பிரதமர் மோடிக்கு மீண்டும் நினைவுறுத்திக் கடிதம் அனுப்பியிருக்கிறோம்!

6) காரைக்குடி கார் விபத்தில் இருவர் பலி!
நடவடிக்கை: முதலைமச்சர் நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் அவர்கள் குடும்பத்திற்குக் கொடுக்கப்படும்.

பொதுவாக தமிழகத்தில் இப்போதைய மிகக் கடுமையான பிரச்சனை என்றால் அது தமிழக மக்களின் தாகத்தை தீர்க்க கோட்டையிலிருந்து கொண்டே கோலாகலமாக ஆங்காங்கே முதல்தர சாராயக்கடைகளைத் திறந்து வைப்பது தான்!

இந்த ஒரு பணி தான் தாளம் தவறாமல் தமிழகத்தில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது! கள்ளுக்கடைகளைத் திறப்பதற்கு எங்கும் அலைய வேண்டியதில்லை. மக்கள் எங்குக் கூடுகிறார்களோ அங்குக் கள்ளுக்கடைகளைத் திறக்கலாம். உதாரணத்திற்கு: பள்ளிக்கூடம், கல்லூரிகள், கோவில்கள் போன்ற இடங்கள் விற்பனைக்கு ஏற்ற இடங்கள்.

தமிழகத்தை மிக எளிமையான முறையில் ஆட்சி செய்ய மேலே சொன்னவைகளைத் தெரிந்து வைத்திருந்தால் போதும்!

வருகின்ற தேர்தலில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். அப்படி ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இப்போது என்ன நடக்கிறதோ அது தான் மீண்டும் நடக்கும். தமிழகத்தை இந்தியாவின் முண்ணனி மாநிலமாகக் கொண்டு வர யாருக்கும் அக்கறை இல்லை. அது அவர்களுக்குத் தேவையும் இல்லை!

ஒரு வேளை தமிழ் நாட்டில் தமிழர் ஆட்சி ஏற்பட்டால் மாற்றங்கள் வரலாம்! வர வேண்டும் என்பதே நமது அவா!

இத்தனை ஆண்டுகள் தமிழர் ஆட்சியைப் பற்றி நாம் பேசியதில்லை. இப்போது தான் நாம் ஆரம்பித்திருக்கிறோம். இது தொடர வேண்டும். தமிழர் ஆட்சி மலர வேண்டும்! தமிழர் உயர வேண்டும்!







No comments:

Post a Comment