Wednesday 9 March 2016

விற்பனையாளர் ஜோ கிரார்ட் (JOE GIRAARD)

ஜோ கிரார்ட் என்னும் பெயரைக்  கேள்விபட்டிருக்கிறீரகளா? அநேகமாக  கார் விற்பனைத் துறையில் உள்ளவர்கள் கேள்விப் பட்டிருக்கலாம். அப்படி கார் விற்பனைத் துறையில் உள்ளவர்கள் கேள்விப் படவில்லை என்றால் அவர்கள் தோல்வியாளர்களே!

காரணம் தங்கள் துறையைச் சார்ந்த ஒருவரைபற்றி அவர்கள் தெரிந்து கொள்ளவில்ல என்றால் அவர் வெற்றியாளர் என்று எப்படி நாம் ஏற்றுக் கொள்ளுவது?

இருந்தாலும்,  தெரியாமலே இருப்பதைவிட இப்போதாவது தெரிந்து கொள்ள முயற்சி செய்தீர்களே, மிக்க நன்றி!

ஜோ கிரார்ட், கார் விற்பனைத் துறையில் ஒரு மாபெரும் புரட்சி செய்தவர்.. அவர் கார் விற்பனைத் துறையில் 15 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இந்த ஒய்வு என்பது கூட டாக்டரின் கட்டாயத்தினால் ஏற்பட்ட ஒன்று. ஆனாலும் அவருடைய 15 ஆண்டுகள் கடுமையான உழைப்பினால்  அவருடைய கை, கால்கள் எல்லாம் தளர்ந்து போய், தடுமாறும் நிலைமை அவருக்கு ஏற்பட்டு விட்டது. அதனால் டாக்டரின் ஆலோசனைப்படி விற்பனைத் துறையை அவரின் மகனிடம் ஒப்படைத்துவிட்டு இப்போது தன்முனைப்பு, கருத்தருங்கு  என்று பாதையை மாற்றிக்கொண்டார். இந்த 15ஆண்டுகளில் 13,001 கார்களை விற்பனைச் செய்தவர்.  ஒவ்வொரு மாதமும் சுமார் 160 கார்கள் வரை அவர் விற்பனைச் செய்திருக்கிறார்.. அவருடைய மிகச் சிறந்த ஆண்டு விற்பனை என்பது 1425 கார்கள் விற்பனைச் செய்தது தான்!  ஒரே நாளில் 18 கார்களை விற்பனை செய்தது தான்  அவருடைய இன்னொரு மிகப்பெரிய சாதனை!அவருடைய இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியிருக்கிறது. அவருடைய இந்தச் சாதனையை இதுவரை யாராலும் முறியடிக்கப் படவில்லை என்பதும் இன்னொரு சாதனை!

ஜோ கிரார்ட்  சேரிப்பகுதி ஒன்றில்   மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். இத்தாலி வம்சாவளி அமரிக்கர். பொதுவாக அமரிக்கர்கள் இத்தாலியினரை மதிப்பதில்லை. அவர்கள் திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள்.என்பன போன்ற அபிப்பிராயம் அவர்களிடம் உண்டு.

சிறு வயதிலேயே தந்தையின் மிகக் கடுமையானக் கண்டிப்பினால் அவருக்குப் பேசும் திறன் பாதித்து விட்டது.. திக்கித்திக்கிப் பேசுவார். அத்தோடு கல்வியில் நாட்டமில்லை.

அவர் செய்யாத வேலைகள்  இல்லை. இருபதுக்கும் மேற்பட்ட வேலைகள்!அத்தனையும் செய்து பார்த்து விட்டார்.அதில் திருட்டுத் தொழிலும் ஒன்று!  வீடுகள் கட்டி விற்பனை செய்தார். அங்கும் ஏமாற்றப் பட்டார். பணத்தை இழந்தார்.

கடைசியாக ஒன்றுக்கும் வழியில்லை. மனைவி, பிள்ளைகளுக்குச் சாப்பாடு இல்லை. அடுப்பில் பூனை படுத்துவிட்டது!

பேரூந்து ஒன்று வந்தது. அதில் ஏறினார். அது நின்ற இடத்தில் இறங்கினார். எதிரே ஒரு கார் விற்பனை நிலையம் ஒன்று கண்களுக்குத் தெரிந்தது. அங்குப் போய் தனக்கு வேலைக் கொடுக்கும் படி கெஞ்சினார். சாப்பாட்டுக்கு வழியில்லை என்று கெஞ்சினார். "சரி, செய். மற்ற விற்பனயாளர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்." என்று அங்கிருந்த மேலாளர் வாய்ப்புக் கொடுத்தார்.  இரவு நேரம் நெருங்கியதும் மற்ற விற்பனையாளர்கள் வீட்டுக்குப் போக கிளம்பி விட்டார்கள். அந்நேரம் பார்த்து தீடீரென  ஒருவர் வாகனம் ஒன்றை வாங்க வந்தார். அதனை வெற்றிகரமாக விற்பனைச் செய்தார் ஜோ.  அதுவே அவரின் முதல் விற்பனை! உடனேயே மேலாளரிடம் கொஞ்சம் சில்லறைகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சாப்பாடு வாங்கக் கிளம்பிவிட்டார் ஜோ.

இது தான் ஜோ கிரார்ட் என்னும் மாபெரும்  கார் விற்பனையாளன் தொடங்கியக் கதை. அதன் பின்னர் நடந்தது எல்லாம் வெற்றி! வெற்றி வெற்றி! அதன் பின்னே அவர் போட்ட உழைப்பு! உழைப்பு! உழைப்பு! உழைப்புக்கு மிஞ்சியது எதுவுமில்லை.

ஆமாம்! அவருடைய மிகப்பெரிய சாதனை என்ன? அவர் சொல்லுகிறார்: "நான் சேரியிலிருந்து வந்தவன். அதுவும் ஏழை. இப்போது நான் இருக்கும் எனது வீடு கார் உற்பத்திச் செய்யும்  உலகின் மிகப்பெரிய பணக்காரரான FORD நிறுவனத்தின் தலைவர் இருக்கும் வீட்டின் அருகே இருக்கிறது. கார் விற்பனையாளனின்  வீடும், கார் முதலாளியின் வீடும் அருகே அருகே இருப்பது என்பது எனது பெரிய சாதனை தானே!" என்கிறார் ஜோ கிரார்ட்.

அது சாதனை தான்! ஒரு விற்பனையாளன் மனம் வைத்தால் எதையும் சாதிக்கலாம்!


No comments:

Post a Comment