Thursday 24 March 2016

ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழணும்...!

திருமணம் புரியும் புதிய மணமக்களுக்கு பெரியவர்கள் சொல்லுகின்ற அனுபவ மொழி "ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழணும். அப்போது தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்."

    விட்டுக்கொடுப்பது என்பது தம்பதிகளுக்கு மட்டும் அல்ல. அனைவருக்குமே பொருந்தும். நாம் வெளியே போகிறோம். நாலு பேரோடு பழகுகிறோம். நாம் விட்டே கொடுக்க மாட்டோம் என்று நாம் முரண்டு பிடித்தால் நாலு பேரோடு சேர்ந்து நம்மால் வாழ முடியாது. சண்டை சச்சரவோடு தான் வாழ வேண்டி வரும். அதற்கு அடிதடி எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான், இந்த அடிதடிகளெல்லாம் நமக்கு அசிங்கம் என்று தெரிந்து தான் நாம் பல காரியங்களில் நாம் விட்டுக்கொடுத்துப் போகிறோம்.

   ஆனால் கணவன் மனைவி என்று வரும் போது இது 'நானா, நீயா' போட்டி மாதிரி! இதில் ஆணவம் இருக்கிறது; அகங்காரம் இருக்கிறது. யார் பெரியவர் என்னும் திமிர் இருக்கிறது. அதனால் தான் பெரியவர்கள், அனுபவம் உள்ளவர்கள் கணவன்-மனைவியர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்று காலாகாலமும் சொல்லி வருகின்றனர்.

  காலாகாலமும் என்று சொல்லும் போதே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வழி இல்லை என்பது தெளிவு. சரி, அதையும் விடுவோம்.

 இப்போது இந்த கணவன்-மனைவியர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்பதில் ஏதேனும் விகிதாச்சாரம் இருக்கிறதா? ஏதாவது ஒரு கணக்கு இருக்க வேண்டும் அல்லவா? எனது ஆய்வின்படி(!) ஒரு விகிதாச்சாரத்தைச் சொல்லியிருக்கிறேன். அது சரியோ தவறோ, நீங்களோ ஒரு முடிவுக்கு வாருங்கள். கணவன்-மனைவியரைப் பொறுத்தவரை 90 விழுக்காடு, கணவன் மனைவிக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்; மனைவியர் 10 விழுக்காடு விட்டுக்கொடுத்தால் போதும். மிகவும் தன்னடக்கத்தோடு இதனை நான் சொல்லியிருக்கிறேன்! 

   இது சராசரியான குடும்பங்களுக்கான விகிதாச்சாரம். இதுவே குடிகாரக்கணவன் - அடிதடி கணவன் - ரௌடி கணவன் - இது போன்ற குடும்பங்கள் என்றால் அந்த விகிதாச்சாரத்தை அப்படியே திருப்பிப் போட்டுக் கொள்ளுங்கள். இங்கு மனைவிக்கு எந்தவித சுதந்திரமும் இல்லை!  

   இங்குச் சொல்லப்படுகின்ற சராசரி குடும்பங்கள் என்றால்..? நடுத்தர குடும்பங்கள். கண்ணியமான குடும்பங்கள், மரியாதைக்குரிய குடும்பங்கள், யோக்கியமான குடும்பங்கள் என்று இப்படி சொல்லிக்கொண்டே பொகலாம்!

விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்பது பெரும்பாலும் இந்தக் குடும்பங்களுக்குத் தான் பொருந்தும்: தேவையும் கூட. இந்தக் குடும்பங்களுக்குத் தான் விட்டுக்கொடுத்து வாழ வேண்டிய கட்டாயம்.

விட்டுக்கொடுத்து வாழ்வது என்பது நல்ல பண்பு.எல்லாக் காலத்திலும், எல்லா மனிதர்களுடனும் நாம் விட்டுக்கொடுத்து தான் நமது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தையும் காட்டு என்பது கூட விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்னும் கருத்தைத் தான் வலியுறுத்துகின்றது. பொறுத்தவர் பூமி ஆள்வார் என்பார்கள். இதுவும் விட்டுக்கொடுத்து வாழ்வது தான்.

ஆக, விட்டுக்கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை. அதனை மனைவியிடம் கொஞ்சம் அதிகமாகவே விட்டுக்கொடுக்கலாமே. யார் யாருக்கோ விட்டுகொடுக்கும் போது, ந்ம்மோடு கூட வாழ்கின்ற மனைவிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம்.

 ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வோம்!

No comments:

Post a Comment