Monday 7 March 2016

உணவகங்களின் நிரந்திர வாசகரா நீங்கள்.....?

பொதுவாக இந்திய உணவகங்களில் தங்களது வாடிக்கையாளர்களுக்காக தமிழ், மலாய் பத்திரிக்கைகளைப்  படிப்பதற்காகப் போடுகின்ற பழக்கம் உண்டு.

இதுவும் ஒரு வகையான விளம்பர யுக்தி தான்!

ஆனாலும் வியாபாரம் சூடு  பிடித்தவிட்ட உணவகங்கள் பத்திரிக்கைகளைத் தவிர்க்கவே விரும்புகின்றன. ஒரே காரணம்: வியாபாரம் நடக்கின்ற நேரத்தில் பத்திரிக்கைகளை வைத்துக் கொண்டு 'வெட்டிப்' பேச்சு பேசுபவர்களால் தங்களது வியாபாரம் பாதிக்கும் என்கிற காரணம் தான்!

நான்கு ஐந்து பேர் உட்கார்ந்து உணவு அருந்த கூடிய இடத்தில் ஒர் இரண்டு பேர் பத்திரிக்கையை வைத்துக் கொண்டு அரட்டை அடிப்பதை யார் விரும்புவர்?  1) மற்றவர்களுக்கு உட்கார இடமில்லை. 2) இவர்கள் பேசுவது மற்றவர்களுக்கு இடைஞ்சல்; சத்தம் போட்டுப் பேசுவார்கள்; இந்த உலகமே இவர்கள் கையில் அடக்கம் என்பது போன்று பேசிக் கொண்டிருப்பார்கள். 3) நான்கு நம்பரைப் பார்ப்பதற்காக அந்தப் பக்கத்தையே வைத்துக் கொண்டு மேலிருந்து கீழே வரை ஒவ்வொரு நம்பராகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்! லேசில் விட மாட்டார்கள்!

ஆள் இல்லாத நேரத்தில் நீங்கள் என்ன செய்தாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

உணவகங்களில் பத்திரிக்கைகள்  வைப்பது என்பது ஏதோ முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை ஆற அமர வாசிப்பதற்கு,  அது நூலகம் அல்ல.ஏதோ மேலோட்டமாக பார்த்துவிட்டு, படித்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான். முக்கிய செய்தி என்றால் ஒரு பத்திரிக்கயை சொந்த செலவில் வாங்கி வைத்துக் கொண்டு வீட்டில் சாவகாசமாகப் படிக்கலாமே!

இவர்கள் உணவகங்களிலாவது பத்திரிக்கைப் படிக்கிறார்களே என்பதே ஒரு மகிழ்ச்சியான விஷயம் தான். இல்லாவிட்டால் இவர்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லாமல் போய்விடும்!

ஆனாலும் பொது இடங்களில் கொஞ்சம்  நாகரீகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்  என்னும் பிரக்ஞை இல்லாதவர்களாக இருக்கிறார்களே, அது தான் வருத்தம் அளிக்கக் கூடிய ஒன்று.

வேறு யாரையும் படிக்க விடாமல் தங்களது கையிலேயே பத்திரிக்கையை வைத்துக் கொண்டிருப்பது!  தான் சாப்பிட்டு முடிக்கும் வரை தனது அக்குளில் பத்திரிக்கையை வைத்து திணித்துக் கொண்டிருப்பது!  கையில் பத்திரிக்கையை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே இருப்பது.

சரி! நாம் சாப்பிடுகிறோமே மற்றவர்களாவது படிக்கட்டும் என்னும் கொஞ்சம் கூட பொது நோக்கம் இல்லாமல் செயல்படுவது அநாகரீகம் அல்லவா!

நமக்கு எப்போதுமே பொது நோக்கம் என்று ஒன்று இருக்க வேண்டும். அது எல்லா  இடங்களிலும் இருக்க வேண்டும். அது உணவகங்களாக இருக்கலாம். அல்லது பிற இடங்களாக இருக்கலாம்.  மற்றவர்களுக்கு நாம் இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்னும் எண்ணம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

உணவகத்தின் முன் - அது ஒரு சிறிய சந்து -  அந்த சந்தில் தான் அனைவரும் நடந்து செல்ல வேண்டும். அந்த சந்தில் சவடாலாக ஒரு இளைஞன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஒரு பெண்ணிடம் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். அந்த சந்தில் நடப்பவர்கள் அனைவரும் தங்களது பாதையை மாற்றி செல்ல நேர்ந்தது. அந்த மோட்டார் சைக்கள் மக்கள் நடப்பதற்கு மகா பெரிய இடைஞ்சல். அவனோ அந்தப் பெண்ணோ எதைப் பற்றியும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை!

இப்படிப்பட்ட இளைஞர்களிடம் நாம் என்ன பொதுநலனை எதிர்பார்க்க முடியும்? பத்திரிக்கைகளை எடுத்தால் நாம் யாருக்கும் கொடுக்கப்போவதில்லை என்னும் மனோநிலையில் இருப்பவனிடம் நம்மால் பேச முடியுமா?

உணவகங்களில் பத்திரிக்கைகளை நாம் 'ஓசி' யில் படித்தாலும் அங்கும் ஒரு பொது நலம் இருக்க வேண்டும். அங்கும் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும். நாம் படிக்க முடியாத போது மற்றவர்கள் படிக்கட்டுமே என்கிற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உணவகங்களில் தனது வாடிக்கையாளர்கள் படித்துப் பயன்பெறட்டுமே என்னும் நோக்கில் பத்திரிக்கைகளை வாங்குகிறார்கள். அதனை நல்ல முறையில் பயன்படுத்தி, விட்டுக் கொடுத்து, நல்ல வாசர்களாக தொடருவோமே!

படிக்கும் பழக்கும் நல்ல பழக்கம். வீட்டில் படிக்க முடியாதவர்கள் ஏதோ இப்படி உணவகங்களில் படிக்கிறார்களே என்பது மகிழ்சியளிக்கும் செய்தி.

படியுங்கள்! உணவகங்களும் உங்களுக்கு உதவியாக இருக்கும்!









No comments:

Post a Comment