Saturday 19 March 2016

முழு அரசாங்கக் கல்வி கடன் உதவி!

SPM பரிட்சை முடிவுகள் வெளியாகிவிட்டன.. STPM பரிட்சை முடிவுகளும் வெளியாகிவிட்டன.

நமது தமிழ்ப் பத்திரிக்கைகளில் கோலாகலமான விளம்பர யுத்தங்கள் ஆரம்பமாகிவிட்டன! தமிழ் இனத்தை எப்படி எல்லாம் ஏமாற்றி பணம் பண்ணலாம் என்று தனியார் கல்லூரிகள் திட்டங்கள் போட ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் இதே விளம்பரங்களைச் சீனப் பத்திரிக்கைகளிலோ, மலாய்ப்பத்திரிக்கைகளிலோ போட இந்தக் கல்லூரிகளுக்குத் துணிவில்லை! காரணம் ஏமாறுவதற்கென்றே பிறந்தவர்கள் தமிழர்கள் என்னும் முடிவிற்கு இவர்கள் வந்துவிட்டனர்.

இவைகளைக்  கல்லூரிகள் என்று சொல்லுவதே வெட்கக்கேடானது!  சும்மா ஒரு கடையை வாடகைக்கு எடுத்துக் கொள்ளுவது. அதனை கொஞ்சம் மாற்றியமைத்து "நாங்கள் கல்லூரி நடத்துகிறோம்" என்று தமிழ்ப் பத்திரிக்கைகளில்  அறிக்கையிட்டு, ஏதோ, தாங்கள் தமிழ்ச் சமுதாயத்தைக் காப்பாற்ற வந்தவர்கள் போல காட்டிக் கொள்ளுகிறார்கள்!

இந்தக் கல்லூரிகளை நடத்துபவர்கள் வேறு யாருமல்ல. நமது அரசியல்வாதிகள் தான்! தமிழ்ச் சமுதாயத்தைக் காப்பாற்ற வந்த நமது அரசியல்வாதிகள் தான்! யாரோ ஒரு போலிக் கல்வியாளரை முன்னிறுத்தி இவர்கள் பின்னாலிருந்து அவர்களை இயக்கிக் கொண்டிருப்பார்கள்!

அந்த அரசியல்வாதிகள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்களுடைய "கூலிப்படைகளை" அனுப்பி இந்திய மாணவர்களைச் சேர்ப்பதில் முழுக்கவனம் செலுத்துவார்கள். அவர்களிடம் எல்லாவிதமான வாக்குறுதிகளை இந்தத் தரகர்கள்  பணத்திற்காக அள்ளி அள்ளீ வழுங்குவார்கள். எல்லாம் வெற்று வாக்குறுதிகள்!

இதில் மிகவும் கவர்ச்சிகரமான விஷயம் என்னவெனில் "உங்கள் பையனுக்கு முழு அரசாங்க கடன் வசதி செய்து தருகிறோம். நீங்கள் உங்கள் கையிலிருந்து ஒரு காசும் போட வேண்டிய தேவையே இல்லை! இதில் உங்களுக்கு என்னா கஷ்டம்?"  இந்த வாக்குறுதியில் தான் பல பெற்றோர்கள் கவிழ்ந்து  விடுகிறார்கள்.

வெளி உலகம் தெரியாத மாணவர்கள். சினிமாவைப்பற்றி தெரிந்த அளவுக்கு தனது எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் அக்கறை இல்லாத  மாணவர்கள். பையன் வெளியே எங்கும் போனால் கெட்டுப்போவான்; இங்கேயே இருந்து படிக்கட்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள். இவைகள் எல்லாம் இந்தத் 'தீடீர் கல்லூரி நடத்துனர்களுக்கு' சாதகமான விஷயங்கள்!

ஒரு மாணவனைத் தங்களது கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ளும் வரை அத்தனை சர்க்கஸ் விளையாட்டுக்களையும் விளையாடிக் காட்டி அவனைச் சேர்த்துக் கொள்ளுவார்கள். அவன் சேர்ந்து,, சேர்ந்ததற்கானப் பாரங்களைப் பூர்த்தி செய்து,  சம்பந்தப்பட்ட அமைச்சுக்குக் கொண்டு சென்று, அந்த மாணவனுக்கானக் கல்வித் தொகை முழுவதுமாக அந்தக் கல்லூரிக்குக் கிடைத்துவிட்டால், ஐயகோ! அத்தோடு முடிந்தது அந்த மாணவனின் எதிர்காலம்! அப்படி என்ன தான் நடக்கும்?

1) அவர்கள் உறுதிமொழி அளித்தது போல பயிற்சிப் பெற்ற         விரிவுரையாளர்கள் அவர்களிடம் இல்லை.அங்குப்படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள்  தான் அவர்களது விரிவுரையாளர்கள்!
2) தரமானக் கல்வி கொடுக்கப்படாததால் மாணவர்களிடம் ஏற்படும் மந்தமானப் போக்கு.
3) கல்லூரி நிர்வாகத்துக்குப் புகார் செய்தால் எந்த அக்கறையும் அவர்கள் காட்டுவதில்லை.
4) மீறீப்பேசினால் 'நீ படித்தால் படி, படிக்காவிட்டால் போகலாம்!"
5) எங்கும் புகார் செய்ய வழியில்லை! அப்படிச் செய்தாலும் அதனைக் காது கொடுத்துக் கேட்க ஆளில்லை!
6) வேறு எங்கும் போய் படிக்க வழியில்லை. கல்விக்கடன் பூதாகரமாய் கண்முன்னே நின்று கொண்டிருக்கும்.
7) சகிப்புத்தனமை உள்ளவன் தன்னுடைய படிப்பு முடியும் வரை தொடருவான். அப்படியே  தனது கல்வியை முடித்தாலும் அரசாங்க சான்றிதழ் கிடைக்கும் என்பதற்கான  எந்த உறுதிமொழியும் இல்லை!
8) இடையே ஒரு மாணவன் 'புட்டுக்கிட்டு' போனாலும் வெளியே போய் தனது சொந்தப்பணத்தில் தான் படிக்க வேண்டும்.
9) ஆனாலும் அவன் எங்குப் போய் படித்தாலும் அவன் கடன்காரன் என்னும் எண்ணத்தை  மனத்திலே இறுத்திக்கொள்ள வேண்டும்.
10) உருப்படியான ஒரு கல்வியைக் கற்காமல் கடைசியில் கடன்காரன் என்னும் பெயர் தான் நிலைத்து நிற்கும்!

கடைசியாக ஒர் ஆலோசனை: முடிந்தவரை அரசாங்கக் கல்லூரிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாய்ப்புக்கள் நிறையவே கொடுக்கப்படுகின்றன.

இணையத்தை  அலசுங்கள்; ஆராயுங்கள். இணயத்தளம் சினிமாவுக்கு மட்டும் அல்ல, கல்விக்கும் பயன்படுத்தலாம்!

வெற்றி நமதே!





No comments:

Post a Comment