Monday, 31 March 2025

அடையாளக்கார்டுகள் எப்படி?! (23)


ஆரம்பகால  அடையாளக்கார்டுகள்  எப்படி இருந்திருக்கும்? மேலே உள்ள படத்தில் உள்ளது போல்  இருந்திருக்குமோ?  என்னால் உறுதிபடுத்த முடியவில்லை.  இது சரியாகத்தான் இருக்கும் என நம்புகிறேன். காரணம் ஒரு புகைப்படம் மற்றும் நமது விபரங்கள். அடங்கிய ஓர்  அட்டை. அவ்வளவுதான்.  சரியாக இருக்கும் என நம்புகிறேன்.  என்னுடைய அடையாளக்கார்டும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.  அதை நான் நான்காக மடித்து வைத்திருந்ததால்  கொஞம் தடுமாற்றம்.

நான் முன்பே குறிப்பிட்டது போல பதிவு இலாக்காவில் வேலை செய்து கொண்டிருந்த அந்தோணி என்கிற  அண்ணன் அவரே எனக்கு  அடையாளக்கார்டு எடுத்துக் கொடுத்தவர். அவரும் அந்தத் தோட்டத்தில் பெற்றோர்களுடன் தங்கியிருந்தார். நான் அவரின் அலுவலகத்திற்குப்  போனதில்லை. போகாமலே அனைத்தும் நடந்தது!

இதைவிட வேறொரு அதிசயத்தையும் சொல்ல வேண்டும். குடியுரிமையைப்பற்றி  நான் எதனையும் அறிந்திருக்கவில்லை. அப்படி ஒன்று உண்டு என்கிற விஷயம் கூட தெரியாது. அப்போது பரிட்சை முடிந்த நேரம். வகுப்பில் வெறும் அரட்டையைத் தவிர வேறொன்றுமில்லை.

என்னுடைய நண்பர் இராமன் என்னைவிட ஓரிருவயது மூத்தவர். கொஞ்சம் விபரமானவர். இன்னொரு நண்பர் குணசேகரன். அப்போது இராமன் "வாங்கடா!போய் பிரஜாவுரிமை எடுப்போம்" என்று எங்களைக் கூப்பிட்டார்.  பிரஜாவுரிமை என்றால் என்னவென்று தெரியாது! சரி என்ன தான் நடக்கும் பார்ப்போமே என்று நாங்கள் முன்று பேருமே அந்த அலுவலகத்திற்குப் போனோம். அங்கு ஒரு சட்டைக்காரர் உட்கார்த்திருந்தார். பெயர் Especkerman.  அந்தப் பெயர் இன்னும் ஞாபகத்தில் உள்ளது!  மூன்று பேர்களுக்கும்  மூன்று பேப்பர்களைக் கொடுத்தார்.  வலது கையைத் தூக்கிக் கொண்டு  படிக்கச் சொன்னார்.  மூன்று பேரும் சேர்ந்து படித்தோம். மலாய் மொழியாகத்தான்  இருந்திருக்க வேண்டும். அது சத்தியபிரமாணம் என்று நினைக்கிறேன். அங்குள்ள ஒரு பெஞ்சில் உட்காரச் சொன்னார். ஒரு பத்து நிமிடம்  கழித்துக் கூப்பிட்டார்.  எங்கள் மூன்று பேர் கையிலும் பிராஜாவுரிமை! அவ்வளவுதான். முடிந்தது! அதன் மகிமை அப்போது தெரியவில்லை. இப்போது நினைத்துப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது!

என் தந்தையார் ஒரு நெகிரி செம்பிலான் பிரஜை.  அவரும் பிரஜாவுரிமைக்காக எங்கும் அலையவில்லை.  முன்னாள் ம.இ.கா தலைவர் துன் சம்பந்தன்  அவர்களின் ஏற்பாட்டில் எல்லாத் தோட்டங்களிலும் தோட்ட அலுவலகத்திலேயே  பிரஜாவுரிமை கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டார்.  எங்கள் குடும்பத்தில் யாரும் பிரஜாவுரிமைக்காக  எந்த சிரமத்தையும் அனுபவிக்கவில்லை.







அறிவோம்:   இப்போதெல்லாம் புத்தகங்கள் படிப்பவர் குறைவு.  விபரம் தெரிந்தவர்கள் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார்கள். வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை   எப்படியாவது  உயர்த்திக் கொள்வார்கள். புத்தகங்களில் கிடைக்கப்பெறுகின்ற சிந்தனைகள், அறிவுரைகள் அனைத்தும் அவர்களின் உயர்வுக்கு வழிகாட்டுகின்றன. நமது நாட்டில், அதுவும் குறிப்பாக பெண்கள் வாசிக்கின்ற பழக்கத்தை  மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.



Sunday, 23 March 2025

என்ன தான் குறிக்கோள்? (22)

சிறு வயதிலிருந்தே எனக்கோர் குறிக்கோள் இருந்தது.  ஒரு வேளை அது என் தந்தையாரிடமிருந்து வந்ததா என்று எனக்குத் தெரியவில்லை.

நான் படிக்கும் போதே,   நான் பெரிய ஆளாக வரவேண்டும்  என்று என் தந்தையார்  கனவு கண்டார்.  அவர் படிக்காதவர்.  அப்படி என்ன பெரிய ஆள்? அது அவருக்கே தெரியாது!  அவருடைய உலகம் எல்லாம் தோட்டம் மட்டும் தான். அவருக்குத் தெரிந்த ஆள் தோட்டங்களில் வேலை செய்யும் கிராணிமார்கள் தான் பெரிய ஆள். அதனால் தான் நான் என் தாயாருக்கு உதவி செய்யக் கூட அவர் அனுமதிப்பதில்லை. அப்படிப் போனால்  தோட்டத்தில் பால்மரம் சீவுகின்ற ஆர்வம்   வந்துவிடும் என்று நினைத்தவர் அவர்.

ஆனால்  நான் என்றுமே அப்படி நினைத்ததில்லை. எனக்கு அலுவலக வேலை தான்  இலக்கு.  அதற்கு ஆங்கிலம் அவசியத் தேவை  என்பதை  நான் அறிந்திருந்தேன். அதனால் கல்வியில் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்தது  ஆங்கில மொழிக்குத்தான்.நான் தோட்டத்தில் வேலை செய்தாலும் அது அலுவலகம் மட்டுமே தவிர வேறு வேலைகளில் ஈடுபாடு இல்லை.

எனக்குக் கேரள மலையாளிகள் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு.  ஒரே பிரச்சனை. கொஞ்ச தலைக்கனம் அதிகம்! அரைகுறை ஆங்கில அறிவை வைத்துக்கொண்டு பெரிய அளவில் அவர்கள் முன்னேறி விட்டார்கள் என்றால் அந்தத் துணிச்சலை நாம் பாராட்ட வேண்டும். அவர்களிடம் இருந்த ஒற்றுமையினால் அவர்கள் முன்னேறினார்கள் என்று கூறலாம்.

அவர்களுடன்  நான் முதல் பதின்மூன்று அண்டுகள்  வேலை செய்திருக்கிறேன். அது எளிதான காரியம் அல்ல! என் நண்பர் ஒருவர் சொன்னார்: "நீ அவர்களுக்குக் கிழே இருந்தால்  உன்னைப் பிழிந்து எடுத்து விடுவார்கள்! அவர்கள் உனக்குக் கீழே இருந்தால்  தாங்குத் தாங்கு என்று தாங்குவார்கள்!" உண்மை தான். அவர்களின் குணம் அப்படித்தான்!

எனக்கு அரசாங்க வேலையும் கிடைத்தது.  மலாக்காவில் ஒரு வங்கியிலும் வேலை கிடைத்தது.  என் தாயார் 'ரொம்ப தூரம்" என்று சொல்லி  அனுமதிக்கவில்லை. அதனால் தோட்ட அலுவலகத்திலேயே  ஒட்டிக்கொண்டேன்!


:

 அறிவோம்:போனால் வராது என்பது நேரத்திற்கு மட்டுமே பொருந்தும். இதோ இந்த வினாடி இக்கட்டுரையைப் படிக்கிறீர்கள். ஓர் ஐந்து வினாடிகள் ஆகியிருக்கும். போன இந்த வினாடிகள்  மீண்டும் கிடைத்துவிடுமா? போனது போனது தான்! அதனால் தான் வினாடி, நிமிடம் பார்த்து வேலைகளைச் செய்யுங்கள் என்கிறார்கள் வாழ்க்கையில் முன்னேறியவர்கள். நேரத்தைக் கவனிக்கவில்லை என்றால்  குப்பைத்தொட்டி தான் நமக்கு அடைக்கலம்!

Thursday, 20 March 2025

இது தான் 'என்' தோட்டம்! (21)


பிறந்து வளர்ந்த தோட்டங்களை 'நம்' தோட்டம் என்று சொந்தம் கொண்டாடுவதை   நான் விரும்புவதில்லை!

ஆனால் என்ன செய்ய? அப்படி ஒரு சொந்தம் நமக்கு ஏற்பட்டுவிட்டது. நான் வளர்ந்த தோட்டம் என்றாலும் இப்போது அந்தத் தோட்டமே இல்லை. செனவாங் தோட்டமே  இப்போது  பல வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு நிறுவனங்கள் செயல்படும் பெரும் தொழில்  நகரமாக,  பெரும்  தொழிற்பேட்டையாக மாறிவிட்டது.

நாங்கள் சுற்றித்திரிந்த இடங்கள், என் தாயாருக்காக உதவிக்குப் போன இடங்கள், கோயில்கள், அந்த செட்டியார் கடை, சோங்பாங் சீனர்கடை, தோட்ட வீடுகள், தோட்ட சிப்பந்திகளின் வீடுகள்,  வெள்ளைக்கார தோட்ட நிர்வாகிகளின்  வீடுகள் ஒன்றையுமே காணோம். இருந்ததற்கான அடையாளமே இல்லை!  என் காலத்திலிருந்த  அந்த  இளம் பட்டாளம் ஒருவருமே இல்லை!

எனக்குப் பொது அறிவைக் கொடுத்த அந்த இளம் பட்டாளம்  காணாமற் போயிற்று! பெரும்பாலும் குடித்துச் செத்தவன் தான் அதிகம்.  தோட்டத்தின் அடையாளமே 'சம்சு'  தானே. குடி இல்லாமல் மறத்தமிழனால்  வாழ முடியுமா? எப்படியோ எங்களுக்குப் பின் வந்த சமுதாயம்  ஓரளவு விழிப்புப் பெற்றதே  என்பதில் மகிழ்ச்சி  தான்.



அறிவோம்:  காலம் ஓடுகிறது, நாம் நடக்கிறோம்.  அதனால் தான்,  நம்மால் முன்னுக்கு வர முடியவில்லை.

தமிழ்வாணன்


Monday, 17 March 2025

சினிமா தியேட்டர்கள் என்ன ஆயின?(20)

அன்று: சபையார் தியேட்டர்  இன்று: துணிக்கடை

நான் படித்த காலத்தில் இருந்த சினிமா தியேட்டர்கள்  இன்று ஒன்றுகூட  இல்லை.

அன்று மிகப்பிரபலமாக விளங்கிய அல்லது  தமிழ்ப்படங்களின் காவலன் என்றால்   அது இந்த சபையார் தியேட்டர்  தான். முன் வரிசை என்றால் 40 காசு டிக்கெட். அதற்குத்தான் முதலிடம், அடிபிடி சண்டை எல்லாம்!

தோட்டப்புறங்களில் பெண்கள்யாரும் படம் பார்க்கப் போனால் என் தாயார்  கலந்துகொள்வார். நானும் சேர்ந்து  கொள்வேன்! என் தந்தையார் படம் பார்த்ததாகச் சரித்திரம் இல்லை.

இந்த நேரத்தில் ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது.பக்கத்து வீட்டில் சின்னையா என்கிற பெரியவர் இருந்தார். இவர் வேலை முடிந்ததும்  சிரம்பானுக்குச்   சைக்கிளில் கிளம்பிவிடுவார். ஒன்று கள் குடிக்க இன்னொன்று படம் பார்க்க! இவர் பார்க்காத படங்களே இல்லை என்று சொல்லிவிடலாம்.  அத்தோடு  வரப்போகும் படங்களுக்கான  விளம்பரம் அதனையும்  கையோடு எடுத்துக் கொண்டு வந்துவிடுவார். தான் பார்த்த படங்களின் பெயரையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில்  எழுதிவிடுவார்!  அந்த பட விளம்பரங்களை ஒரு சாக்குப்பையில்  போட்டு வைத்திருந்தார்!  ஒரு நாள், அவர் பார்த்த படங்கள் அந்த விளம்பரங்கள் அனைத்தையும் என்னிடம்   காட்டினார்!  அன்று தொலைகாட்சி, வானொலி  இல்லாத காலங்களில்  நம் மக்கள் எப்படியெல்லாம் பொழுதைப் போக்கியிருக்கிறார்கள்  பார்த்தீர்களா?  இப்போதும் இருக்கலாம் யார் கண்டார்?

நான் எல்லாகாலங்களிலும்  விரும்பிப் பார்க்கும் படங்கள் என்றால் அது ஜெமினி கணேசன் நடித்த  படங்கள் தான். அந்தக் காலத்தில் அவர் நடித்த படங்கள்  அனைத்தையும் பார்த்திருக்கிறேன். அவர் நடித்த "மனம்  போல  மாங்கல்யம்"  படத்தைப் பார்த்திலிருந்து  நான் அவரது இரசிகன்! ஆனால் ஒன்று,  பார்ப்பதோடு சரி!  அதற்கு மேல் இல்லை!






அறிவோம்:  நோன்பு என்பது எல்லா மதங்களிலும் உள்ளதுதான். இஸ்லாமியர்களின் நோன்பு என்பது காலை மணி ஏழு மணியிலிருந்து  மாலை ஏழு மணி வரை. மாலை ஏழு மணியிலிருந்து காலை ஏழு மணி வரை சாப்பிட தடையேதுமில்லை.மலேசிய இஸ்லாமியரிடையே இந்த நோன்பு காலத்தில் தான் அதிகமான உணவுகள் வீணடிக்கப்படுகின்றன என்று  குப்பைகள் அள்ளும் நிறுவனமான "இண்டா வாட்டர்" கூறுகிறது. கிறிஸ்துவ மதத்திலும் 40 நாள்கள் நோன்பு அனுசரிக்கப்படுகிறது. முக்கியமாகச் சொல்லப்படுவது புலால் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது தான். காலை மாலை நோன்பு  உண்டு. வெள்ளிக்கிழமைகளில் நிச்சயமாக புலால் உணவுகள் வேண்டாம். இந்து மதத்தில் தான் மிகக் கடுமையான நோன்பு முறை உண்டு. காலையிலிருந்து  அடுத்த நாள் காலை வரை  பட்டினி போட வேண்டும். இதைவிட இன்னும் கடுமையான  விரதங்கள்  எல்லாம் உண்டு.  நமது நோன்பு பிரபலமடையவில்லை என்றால்  அரசாங்கத் தலையீடு இல்லை!

     

Thursday, 13 March 2025

காணாமற் போன பள்ளிகள்! (19)

 

                 சீக்கியர்களின் கோயிலானா, குருத்துவாரா, சிரம்பான் (2024)

சிரம்பான் பட்டணத்தில்  நுழையும் போதே  பள்ளிக்கூடங்களாகவே இருக்கும்.

நான் படித்த செயின்போல் பள்ளி அதற்கு மேல் குருத்துவாராவில் பஞ்சாப் மொழி பள்ளிக்கூடம்,  ஜாவா லேன் தமிழ்ப்பள்ளிக்கூடம் இந்தப் பக்கம்  கிறிஸ்துவ கன்னியர்களால் நடத்தப்பட்ட கான்வெண்ட் ஆங்கிலப்பள்ளி, தமிழ்ப்பள்ளி, கொஞசம் தள்ளிப்போனால் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி,  இன்னும் கொஞ்சம் தள்ளி ஆங்கிலோ சைனீஸ் ஆங்கிலப்பள்ளி (ACS)  - இப்படி பள்ளிகளாகவே இருந்தன.

இன்றைய நிலை என்ன? நான் படித்த பள்ளியை இடித்துவிட்டு  Wisma Punca Mas  என்கிற மாபெரும் கட்டிடத்தைக்கட்டி இப்போது அது  பாழடைந்து கிடக்கிறது! குருத்துவாராவில் பஞ்சாப் பள்ளிக்கூடம் போதுமான ஆதரவு இல்லாமல்  அப்போதே  மூடப்பட்டு விட்டது. கான்வென் பள்ளி  இப்போது  மரண குளமாக  மாறிவிட்டது! விவேகானந்தா தமிழ்ப்பள்ளி இலங்கைத் தமிழர்களின்  வெறுப்புக்கு ஆளாகி  அவர்கள் கல்யாண மண்டபமாக  மாற்றி விட்டனர்! இங்கு மட்டும அல்ல மலேசியாவில் அவர்கள் நடத்திய அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளையும் மூடிவிட்டனர்! என்ன வெறுப்போ?

சிரம்பான் பட்டணத்திற்குள்  நுழையும் போதே KGV பள்ளிக்கூடமும்  ரயில்வே ஸ்டேஷனும்  தவிர்க்க முடியாதவை. அன்றைய ரயில்வே  ஸ்டேஷனில் மணிக்கூண்டும் இருக்கும். சிரம்பான் பட்டணத்தில்  நேரத்தைப் பார்க்க  அது ஒன்று தான் அடையாளம்.  காலை நேரத்தில் பள்ளிக்கூடம் போவதற்கு முன்  நேரம் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது. அப்போது கைக்கடிகாரம் எந்த மாணவனிடமும்  இருப்பதற்கான வாய்ப்பில்லை. இப்போது மணிக்கூண்டு இருந்ததற்கான  அடையாளமே இல்லை. காரணம் கைக்கடிகாரம் கட்டாத கைகளே இப்போது இல்லை!



அறிவோம்: "உன்னால் முடியாது என்று சொல்வதை வேறுயாரோ ஒருவர் செய்து கொண்டுதான் இருக்கிறார். உன்னால் முடியாது என்றால் வேறு யாராலும் முடியாது.  வேறு யாராலும் முடியாது என்றால் உன்னால் மட்டுமே முடியும்."

பேராசிரியை பர்வீன் சுல்தானா


Monday, 10 March 2025

Satu Makan Dua Mahu! (18)

செயிண்ட்போல் பள்ளியில் நான்  படித்த காலத்தில்,  காலை ஓய்வு   நேரத்தில்,   ஒரு பெரியவர் கரிபாப் வியாபாரம் செய்ய வருவார்.  அவர் பயன்படுத்திய  வக்குளின்  (கூடை)  மாதிரி தான் மேலே கொடுக்கப்பட்டவை. பெரிய வக்குளில் கரிபாப்புகளைத்   தோளில் சுமந்து கொண்டு வருவார். 

எனக்குக் கிடைப்பதோ ஒரு நாளைக்குப் .  பத்து காசு. அதில் ஐந்து காசு கரிபாப்,  ஐந்து காசு ஐஸ் தண்ணீர். அவ்வளவு தான்.  வீடு போய் சேரும்வரை அது தாங்கும். அப்போது சாப்பிட்ட அந்த கரிபாப் இப்போது ஒரு  வெள்ளி விற்கிறது!  விலை தான் கூடுதலே தவிர சுவையில் ஏமாற்றம்.

பள்ளியில் விற்ற பின்னர் சிரம்பான் பேருந்து நிலையத்தில் "கரிபாப், சத்து மாக்கான் டுவா மௌ!" என்று முழங்கிக் கொண்டிருப்பார்!  எப்போதுமே அவருக்கு நல்ல வியாபாரம் இருக்கும்.

ஒரு காலத்தில் நம் தமிழர்கள் செய்து வந்த வியாபாரங்கள்  பின்னர்  சீனர்களின் கைகளுக்குக் கைமாறியது எப்படி  என்பது புரியாத புதிர். இப்போது மெல்ல மெல்ல நம்மவர்களும் மீண்டும்  நமது வியாபாரங்களைப் பழைய நிலைக்குக் கொண்டு வருகின்றனர்  என்பது நல்ல செய்தி.  எல்லாகாலங்களிலும் வாங்கிச் சாப்பிடும் சமுகமாகவே  இருப்பது போல் விற்கும் சமூகமாகவும் மாறும் காலம்  தொடங்கிவிட்டதே என்பதில் மகிழ்ச்சி.



அறிவோம்:  வலுவற்ற ஒரு சமூகம் அல்லது ஏழ்மையில் உழலும் ஒரு சமூகம்  அடுத்த வலுவான நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்ள  ஒரே வழி கல்வி மட்டும் தான். ஏழ்மையிலிருந்து  விடுபட கல்வியே சிறந்த ஆயுதம். கல்வி எப்போதும் நம்முடன் இருக்கும். மற்றவை எதுவும் நிரந்தரமில்லை.

Friday, 7 March 2025

முதன் முதல் பயன்படுத்திய பேனா! (17)

பள்ளியில் நாங்கள் பேனாக்களைப் பயன்படுத்த ஆரம்பித்த போது மையைப் பேனாக்களில் தொட்டுத்தொட்டு  எழுத வேண்டும். இது தான் ஆரம்பம். அடுத்த கட்டம் தான்  மை நிரப்பிய பேனாக்கள். (Fountain Pen)  இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் எப்படியாவது  சட்டையில் மை கொட்டிவிடும்.

அதன் பின்னர்   பலவித பேனாக்கள்.  அப்போது பேனாக்களில்  நமது பெயரைப் பொறிப்பது ஓர் அற்ப சந்தோஷம். அதாவது  நான் பைலட் (Pilot) பேனா வைத்திருந்தேன். உடனே என்னுடைய பெயரை அதில் பொறிப்பது!  அப்போதைய  மாணவரிடேயே  இருந்த வழக்கம்.  எவனும் திருடப்போவதில்லை. என்ன செய்ய, கூட்டத்தோடு  கோவிந்தா! அவ்வளவு தான்!  சீனர்களின் வியாபார யுக்தியே யுக்தி!


                                                       

பெரும்பாலும் முதலாம் படிவம் வந்துவிட்டாலே சாதாரண புத்தகப் பைகளைப் (தோளில் தொங்கும்) பயன்படுத்த முடியாது.  புத்தகங்கள் அதிகரிக்கும் போது இந்த வகையான  ரோத்தான் பைகள்தான் தேவைப்படும்.  எல்லா மாணவர்களும்  இந்தப்பைகளைப் பயன்படுத்தித் தான்  புத்தகங்களைக் கொண்டு போக வேண்டும். நீங்கள் இடைநிலைப்பள்ளிகளில் பயில்கிறீர்கள் என்பதற்கு இது தான் அடையாளம்! நீண்ட சிலுவார் அணிவதும் இப்போது தான். மழை காலத்திற்கெல்லாம்  புத்தகங்கள் நனையாமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு.



அறிவோம்:    உலகை மாற்ற  நீங்கள் பயன்படுத்தக் கூடிய மிக சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி.

நெல்சன் மண்டேலா

Thursday, 6 March 2025

கண்டதைக் கற்பவன் பண்டிதன் ஆவான்! (16)


தமிழிலே இப்படி ஒரு அனுபவமொழி  உண்டு. கண் கண்டதைப் படிப்பவன்  பண்டிதன் ஆவான்  என்று சொல்லுவார்கள்.

அப்படி என்றால் புரிந்து கொள்ளுங்கள். எனது நாட்டம் துப்பறியும் கதைகள், சினிமா இதழ்கள், தமிழ் நேசன், தமிழ் முரசு, தமிழ் மலர்,  புதிது புதிதாக  வரும் மாத இதழ்கள், ஆனந்த விகடன், குமுதம்,கல்கண்டு என்று அனைத்தையும் படிப்பேன். தமிழ் முரசு நாளிதழில் வெளியான  இராதா மணாளனின்  "பாண்டியன் திருமேனி" தொடர், குமுதம் வார இதழிலில் வெளியான சாண்டியனின் "கடல் புறா:",  இந்தியன் மூவிஸ் நியுஸ் மாத இதழில் வெளியான, தமிழ்வாணனின் "மணிமொழி என்னை மறந்துவிடு"  -உள்ளூர் வார மாத இதழ்கள். இப்படி பரவலான வாசிப்பு ஏற்பட்டுவிட்டது.

இப்படி நான் படித்த பத்திரிக்கைகளில்  நானே காசு போட்டு வாங்கிய பத்திரிக்கை என்றால் அது தமிழ்வாணனின் வார இதழான கல்கண்டு மட்டுமே! அதன் விலை அப்போது 15 காசு என்று நினைக்கிறேன். எனது பட்ஜெட்டில் அதற்குமேல்  இடமில்லை! சினிமா இதழ்களை  இதுவரை நான் காசு போட்டு வாங்கியதில்லை. அது போலத்தான் துப்பறியும் கதைகளும்! 

தமிழ் நேசன் நாளிதழை பத்து வயதில்  படிக்க ஆரம்பித்து சுமார் ஐம்பது வருடங்கள் மேல் படித்திருக்கிறேன்.  தமிழ் வாணனின் "கல்கண்டு" வார இதழை பதினாறு வயதில் படிக்க ஆரம்பித்து சுமார் முப்பது ஆண்டுகள் தொடர்ந்து படித்திருக்கிறேன்.

இப்படியெல்லாம் நான் படித்தாலும் பள்ளி பாடங்களை நான் மறக்கவில்லை. அப்போது அஞ்சலில் படிக்கும் வசதிகள் இருந்தன. அப்போது சிங்கப்பூரில் இருந்த Stamford College  மிகவும் பிரபலம். அங்கிருந்து நான்  பல  பாடங்களை எடுத்திருக்கிறேன். என்ன பயன்? ஓர் ஆசிரியரின் துணை இல்லாமல் படிப்பது அனைத்தும் வீண்! ஆங்கிலம் எனக்கு முக்கியத் தேவையாக இருந்ததால்  அதன் தொடர்பில் நிறைய அஞ்சல் வழி மூலம் கற்றுக் கொண்டேன்.

எனக்கு வெளிநாடுகளில் பேனா நண்பர்கள் அதிகம். நிறைய கடிதங்கள் எழுதியிருக்கிறேன். ஒரே காரணம் தான். ஆங்கிலத்தை தவறவிடக் கூடாது என்பது தான்.


அறிவோம்:   அறிஞர் அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை நடந்த நேரம். அடுத்த நாள் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது அண்ணா நூல் ஒன்றினைப் படித்துக் கொண்டிருந்தார். அண்ணா மருத்தவரை அழைத்து  தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை முடித்த பின்னர்,  அறுவை சிகிச்சையை ஒத்திப்போடச் சொன்னாராம்.  அதன் பின்னர் தான் அறுவை சிகிச்சை நடந்ததாம்.


Tuesday, 4 March 2025

செனவாங் தோட்டம் (15)



மூனாங் கட்டையில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவது அவசியம். வானொலியில் நேயர் விருப்பம் என்பது அந்தக் காலகட்டத்திலும் இருக்கத்தான் செய்தது.  எனது  நண்பரின் தந்தையார்  எம்.கே.தியாகராஜபாகவதரின் தீவிர இரசிகர்.  அவர் பாகதவர் பாடிய "பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்"  பாடலை  கேட்க ஆசை.  அவர் ஓரு கடுதாசியை எடுத்துக்கொண்டு, வீடு வீடாகச் சென்று "இந்தப் பாடல் உங்களுக்கு விருப்பமா?" என்று கேட்டுக் கொண்டு வந்தார்! பாவம் அப்பாவி மனிதர்! பின்னர் அவர் எத்தனை நேயர்கள் கேட்டார்கள் என்கிற பட்டியலை அனுப்பி வைத்ததாக அவரின் மகன் என்னிடம் சொன்னார்! அப்போது எங்களிடம் வானோலி பெட்டி இல்லை. அதனால்  அவரின்  ஆசை நிறைவேறியதா என்பது தெரியவில்லை.

ஏறக்குறைய எனதுபதினைந்தாவது வயதில்  எனது குடும்பம் செனவாங் தோட்டத்திற்கு மாறியது. எல்லாம் எனது கல்வியின் பொருட்டு தான்.  இது பள்ளி போக வசதியான இடம்.  எனது வயது ஒத்த நண்பர்களும்  இருந்தனர். 

இது ஒரு வேறொரு உலகம்.  கல்விக்கு யாரும் பயன்படவில்லை. சினிமா பத்திரிக்கைகள், துப்பறியும் கதைகள் - இவைகள் தான் முதலிடம். அத்தனை சினிமா இத்ழ்களையும், துப்பறியும் கதைகளையும் படித்திருக்கிறேன்.  அத்தோடு திராவிட இதழ்கள்.  கவனச் சிதறல்கள் அதிகம். 

என் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் யாரும் இல்லை.  கல்வியில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் இந்த தோட்டாமே என் கண்ணைத் திறந்தது என்று சொல்லலாம். கொஞ்சம் பொது அறிவு கிடைத்தது. என்னிடம் எனது கம்போங்  எது என்று கேட்டால் அது செனவாங் தோட்டம் என்று தான் சொல்லுவேன். அது தான் இன்றளவும் வேரூன்றி விட்டது.


அறிவோம்:  நமது உடம்பில் உடைக்கமுடியாத  எலும்பு எதுவென்று தெரியுமா? எது எதுவோ ஞாபகத்திற்கு வரும். ஆனால் அந்த எலும்பு மட்டும் ஞாபகத்திற்கு வராது.   அது தான் நமது தாடை எலும்பு. நமது உடலில் உடைக்க முடியாத மிக உறுதியான  எலும்புகளில் அதுவும் ஒன்று என்று சொல்லப்படுகிறது.