Friday, 8 March 2019

......குல நாசம்!

பத்துமலை தேவஸ்தானத்தின் தலைவர், டான்ஸ்ரீ நடராஜாவைப் பற்றியான சமீபத்திய செய்திகள் கவலையைத் தருகின்றன.

நீண்ட காலமாக அந்த ஆலயத்தை வழி நடத்தி வருபவர். இதற்கு முன்னர் அவரைப் பற்றி பல குறைபாடுகள் நம் முன்னே எழுந்திருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம்  எந்த வித ஆதாரமும் இல்லை  என்பதாகச் சட்டம்  அவருக்குத் துணையாக இருந்தது. ஆனால் அதே சட்டம் அவருக்கு இப்போது எதிராக நிற்கிறது! இதைத்தான்  காலத்தின் கோலம் என்பதோ!

ஆனாலும் ஒரு சில விஷயங்களில் நான் இன்னும் தெளிவு பெறாதவனாகவே இருக்கிறேன். "கோவில் சொத்து குல நாசம்" என சொல்லுவதுண்டு. இதனை அறியாமலா இத்தனை ஆண்டுகள்  அவர்  இந்துக்களின் முதல் நிலை கோயிலான பத்துமலையை வழி நடத்தி வந்திருக்கிறார் என்னும் கேள்வி  எழத்தான் செய்கிறது.

ஒரு நிகழ்ச்சி இன்னும் எனது நினைவில் அப்படியே நிற்கிறது. ஒரு சிறிய கோவிலுக்குத்  தலைவராக இருந்த மனிதர் ஒருவர் பணம் கையாடுவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.  குற்றம் முணு முணுக்கப்பட்டதே தவிர  அவரை எதிர்த்துப் பேச  யாருக்கும் தைரியம் இல்லை. அவர் இருக்கும் வரை அவர் தான் தலைவர். பின்னர் கால மாற்றத்தில் அவரும் ஓய்வு பெற்றார். மக்களும் அவரை மறந்து போனார்கள்.  

ஒரு சில ஆண்டுகளுக்குப்  பின்னர்  நான் அவரை  சந்தித்த போது  அவர் போவோர் வருவோரிடம்  பிச்சை எடுத்துக்  கொண்டிருந்தார். அப்போது நான் பள்ளி மாணவன். என்னை அவர் அறியவில்லை.  இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை என்னால் இன்னும்   மறக்க முடியவில்லை.   வேலையில்  இருந்த போது ஓரு கம்பீரமான மனிதராக வலம் வந்தவர். கடைசி காலத்தில் அவர் அந்த நிலைமைக்கு ஆளானார். இதில் இன்னொரு வருத்தமான செய்தி.   அவரது மகனும் அதே பிச்சை எடுக்கும் நிலைமைக்குப் பின்னர் ஆளானார் என்பது தான்.

ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டதோ என்னவோ தெரியவில்லை. ஒரு வேளை தெய்வம் நின்று தான் கொல்லுமோ?  கோவில் சொத்தை அனுபவிப்பவன் தலை நிமிர்ந்து நடக்கிறான்!  கேட்பாரில்லை! நாலு அரசியல்வாதிகளைக் கையில்  போட்டுக் கொள்ளுகிறான்.  இனி தனக்கு அழிவில்லை! பாதுகாப்பு கொடுக்க ஆள் இருக்கிறார்கள்  என்று மம்மதையோடு  நடந்து கொள்ளுகிறான்! பட்டம், பதவிக்கெல்லாம் சிபாரிசு செய்ய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்!   இது  தான்  நம்  கண் முன்னே நடக்கின்ற அன்றாட நிகழ்வுகள்!

டான்ஸ்ரீ நடராஜா ஒன்றுமே அறியாதவர் அல்லர். கோவில் சொத்து குல நாசம் என்பதை அறியாதவர் அல்லர். மலேசிய நாட்டின் இந்துக்களின் தலையாய கோவிலை நிர்வாகம் செய்பவர். 

இருந்தாலும்  நம்மால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. சட்டம்  தனது  கடமையைச்  செய்யட்டும்.  தப்பு செய்தவன் உப்பைத் தின்று தான்  ஆக வேண்டும். இதில் பெரியவன் சிறியவன் என்று யாருமில்லை. சட்டத்தின் முன்னே யாவரும் சமம்.

ஆனாலும் இன்னும் சொல்லுகிறேன்: கோவில் சொத்து குல நாசம்!

Tuesday, 5 March 2019

பாரிசான் வெற்றி...!

செமினி இடைத் தேர்தலில் பாரிசான் வெற்றி பெற்றது! இது நல்ல செய்தியா, கெட்ட செய்தியா? 

இந்த இடைத் தேர்தலில் ஒரு சிறிய வித்தியாசத்தில் பக்காத்தான் வெற்றி பெறலாம்  என நான் நினைத்தேன்.  காரணம் அம்னோவும், பாஸ் கட்சியின் கூட்டும் பலமானவை என்பது தெரியும்.  அவர்கள் வெற்றி பெற்றார்கள், வாழ்த்துகள்! 

பாரிசான் அறுபது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஒரு கட்சி. பாஸ் ஏறக்குறைய மாநிலக் கட்சி என சொல்லலாம். ஆனால் பாஸ் கட்சி மத்திய அரசாங்கத்தை அமைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இல்லாத ஒரு கட்சி. மற்ற கட்சிகளுடன்  கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைக்க முற்பட்டாலும் அது எந்தக் காலத்திலும் நடக்கவில்லை!

பாஸ் இதறகு முன்பும் பல தடவை  அம்னோவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முற்பட்டாலும்  அது நடக்கவில்லை! காரணம் அம்னோ பாஸ் கட்சியை பல தடவை முதுகில் குத்தியக் கட்சி என்பது அதன் முன்னாள் தலைவர்களுக்குத்  தெரியும்!

இரு கட்சிகளுக்குமே பெரிய வித்தியாசம் உண்டு. பாஸ் இஸ்லாம், மலாய் உரிமைகள் என்பதைத் தவிர வேறு எதனையும் அதன் கவனத்தில் கொள்ளுவதில்லை. அவர்கள் அடிக்கடி அதனைத் தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருப்பவர்கள்! அம்னோவின் போக்கு வேறு. அவர்களுக்கு ஊழல் தான் முதலிடம்! ஊழல் மேல் கைவைத்தால் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது! ஊழலிலேயே ஊறியவர்கள்!

சமீப காலங்களில் பாஸ் கட்சியையும் அம்னோ தங்கள் வசம் இழுத்துக் கொண்டது.  அதன் எதிரொலி தான் சமீபத்தில் பாஸ் கட்சியின் மேல் உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள்!

இப்போது அம்னோ எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது! அதனால் இது நாள் வரை பாஸ் என்ன பேசி வந்ததோ அதையே அம்னோவும் பேசும் நிலை ஏற்பட்டுவிட்டது! அது தான் செமினி இடைத் தேர்தலில் ஏற்பட்டது.

ஆம்! முன்னாள் அம்னோ அமைச்சர் பேசிய பேச்சு. உண்மையில் அது தேச நிந்தனை சட்டத்தின் கீழ் வர வேண்டியது. சட்டத்துறை தலைவர் குர்ரானில் சத்தியம் செய்யவில்ல என்றால் அவர் எப்படி நேர்மையளராக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பியிருந்தார்! சட்டம் தெரிந்த ஓர் அமைச்சர் இப்படி பேசியிருப்பதை நம்மால் நம்ப முடியவில்லை தான்! ஆனால் என்ன செய்வது? இப்படிப் பேசினால் தான் தன்னை மக்கள் ஆதரிப்பார்கள் என்னும் நிலைக்கு அம்னோ தள்ளப்பட்டு விட்டது! 

இனி இவர்கள் இப்படித் தான் பேசி பிழப்பை நடத்த வேண்டும்! தேர்தல் ஆணையம் கண்காணிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Saturday, 2 March 2019

நம்ம மைக்கா தான்..!

சந்தேகமே இல்லை, நம்ம மைக்கா ஹோல்டிங்ஸ் தான்! 

ஆகா,  நம்ம மைக்காவைப் பற்றி பேசும் போதெல்லாம் என்ன சந்தோஷம்! என்ன மகிழ்ச்சி! நம்ம வீராதி வீரர்கள் எல்லாம் இதோ நம் கண் முன்னே நிற்கிறார்களே!

வேறு எது பற்றிப் பேசினாலும் கிடைக்காத 'கிக்' இந்த மைக்கா பற்றி பேசும் போது மட்டும் அந்த 'கிக்' கிடைத்து விடுகிறதே! அட! யார் யாரோ நம் கண் முன் வந்து விடுகிறார்கள்!

இன்னும் எத்தனை  ஆண்டுகள் போனாலும் இந்த மைக்காவுக்கு முடிவு காலமே இராது போல அல்லவா தோன்றுகிறது!  மைக்காவிற்கு என்றும் பதினாறு தானோ! 

இப்போது இந்தப் பிரச்சனையை "சரவா ரிப்போட்" இணயத்தளம் கையில் எடுத்திருக்கிறது! இத்தனை ஆண்டு காலம் நமக்குக் கிடைக்காத தகவல்கள் எல்லாம் இப்போது கிடைத்துக் கொண்டிருக்கின்றன!  இன்னும் நிறைய வரும் என எதிர்பார்க்கலாம்!

நான் மேலே சொன்னது போல மைக்கா என்றாலே நிறைய சந்தோஷம், நிறைய தமாஷ்கள் எல்லாம் வரும் என்று சொன்னேன், அதில் பெரிய தமாஷ்! மைக்காவின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான எஸ் வேள்பாரி தனது  செல்லப்பிள்ளையான மைக்காவைப் பற்றி குறிப்பிடும் போது "அந்த நிறுவனம்  நஷ்டத்தில் நடந்து கொண்டிருந்த  போது அந்த நிறுவனத்திற்கு நான் தான் பணம் கொடுத்து உதவினேன்" என்கிற அதிர்ச்சித் தகவல்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார்! இதுவே நமக்குப் புதிய தகவல் தானே!  இத்தனை ஆண்டுகள் வராத தகவல் இப்போது வெளியாகியிருக்கிறதே!  இருந்தாலும் அவரது கடமையுணர்ச்சியைப் பாராட்டுவோம்!

மைக்கா ஹோல்டிங்ஸ் என்பது முடிந்து போன ஒரு பிரச்சனை என்பதாக வேள்பாரி சமீபகாலமாக கூறி வந்திருக்கிறார்,  அது எப்படி? என்னைப் போன்றவர்கள் எல்லாம் அப்படியே தானே வைத்துக் கொண்டிருக்கிறோம்! கொடுக்க வேண்டியதைக் கொடுத்திருந்தால் நாங்கள் ஏன்  இது பற்றி பேசிக் கொண்டிருக்கப்  போகிறோம்!

நான் இன்னும் காத்துக் கொண்டு தான் இருக்கிறேன். கிடைக்குமா, கிடைக்காதா என்று. கிடைத்தால் மகிழ்ச்சி! கிடைக்காவிட்டால் அதைவிட மகிழ்ச்சி! காரணம் ஒரு சராசிரியிடம் ஒரு கோடிசுவரன் கடன் வைத்திருந்தால் அது எனக்குக் கேவலம் அல்ல!

இது இப்போது முடிவடையாது என்று தெரிகிறது! பின்ன சும்மாவா! பணம் அல்லவா!