Thursday, 5 November 2020

நல்லது நடக்கும் என நம்புங்கள்! (6)

 நல்லது நடக்கும் என நம்புங்கள். நம்பிக்கை தான் வாழ்க்கை என்பார்கள். நம்பிக்கை இல்லாத வரை எல்லாமே வெறுமையாகத்தான் இருக்கும். அனைத்தும் பூஜ்யத்தில் தான் முடியும்.

கொஞ்சம் முயற்சி எடுத்தால் போதும். தீராத பிரச்சனையும் தீர்ந்துவிடும்.

சமீபத்தில் படித்த ஒரு செய்தி. மேரி என்று அழைக்கப்படும் ஒரு பெண்மணி கொரோனா தொற்று நோய் காரணமாக தனது வேலையை  இழந்தார். அவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போனார்.

வேலை இழந்த அவருக்கு பொறுப்புக்கள் நிறைய இருந்தன. தனது மூன்று பிள்ளைகளுக்கும் உணவு, கல்வி இவை அனைத்தும் தேவை. வயதான தாயாரைக் கவனிக்க வேண்டும்.  வாழ்ந்த வீடு வாடகை வீடு என்பதால் வாடகைக் கட்ட வேண்டும். இன்னும் பிற சராசரி குடும்பங்கள் எதிர்நோக்கம் பிரச்சனைகள் அவருக்கும் உண்டு.

வேலை போனதால் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருக்கவா  முடியும்? அவருக்குத் தெரிந்த ஒரு சிறிய தொழிலைத் தொடங்கினார். அது ஒன்றும் பிரமாணட தொழில் என்று சொல்லுவதற்கில்லை. வெறும் நாசிலெமாக், மீகூன் - இது தான் அவருக்குத் தெரிந்த தொழில். அதனை வைத்து தொழிலை ஆரம்பித்தார். காலைப் பசியாறல் மட்டும் தான்.

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு. துணிச்சலாக அவர் ஆரம்பித்த அந்த தொழிலுக்கு நல்ல வரவேற்பு  கிடைத்தது. மக்களின்  ஆதரவு  நன்றாக இருந்தது. பல வாடிக்கையாளர்கள் வீடுகளிலிருந்தே நாசிலெமாக் ஆர்டெர் செய்தனர். நிறைய உதவிகள் தேடி வர ஆரம்பித்தன. தனது வீட்டு மாத வாடகையான 700 வெள்ளியை மாதா மாதம் கொடுத்து உதவுவதாக ஒருவர் உறுதி அளித்திருக்கிறார்.

அவரின் தொகுதியான, செபூத்தே,   நாடாளுமன்ற உறுப்பினர், தெரேசா கோக், சமையல் எண்ணைய், முட்டை, சீனி போன்ற நாசிலேமாக் செய்வதற்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அத்தோடு ஒரு மாதத்திற்கு அவரது அலுவலகத்திற்கு முப்பது நாசிலேமாக்  பொட்டலங்களை ஒரு மாதத்திற்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். 

கோலாலம்பூர் இந்திய வர்த்தக சபையும் அவருடைய தொழில் வளர்ச்சி அடைந்து வருவதால் அவர்களது  பங்காக பெரிய ரைஸ் சூக்கர் ஒன்றை  வாங்கிக் கொடுத்திருக்கின்றனர்.

இப்போது அவரது தொழில் உரிமம் பெற்று முறையாகச் செய்யவும் அவருக்குப் பொருத்தமான தொழில் செய்ய அதற்கான இடம் கிடைக்கவும் துணை அமைச்சர் எட்மண் சந்தாராவும் ஆதரவு கரம் நீட்டியிருக்கின்றார்.

இந்த பெண்மணியிடமிருந்து  என்ன தான் நாம் கற்றுக் கொண்டோம்? வேலை போனதும் வீட்டில் முடங்கிக் கிடக்கவில்லை. முதலடி அவர் எடுத்து வைத்தார். அந்த முயற்சி அவருடையது. அதன் பின்னர் என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தது. அது அப்படித்தான் நடக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எந்த நிலையில் இன்று நாம் இருந்தாலும் நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த முயற்சி தான்.  சோர்ந்து போகாமல், சோர்வடைந்து போகாமல் எடுத்து வைப்போம் முதல் அடியை. அதன் பின்னர் பாருங்கள் உங்களது திருவடியை!

வளர்வோம்! வளர்ச்சி அடைவோம்

காலத்தால் செய்த உதவி....!

 காலத்தால் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் தக்க நேரத்தில் செய்த உதவியாயிற்றே - அதற்கு  ஈடு இணையில்லை! 

தீ விபத்தில் ஒரு வீடு எரிந்து போனது. அது ஒரு துயரச் சம்பவம்.

வசதி மிக்க ஒருவரின் வீடு என்றால் அது பற்றி நாம் கவலையடைய வேண்டாம். ஆனால் அதுவே ஒரு சராசாரி மனிதர், ஏழை என்றே வைத்துக் கொள்ளுவோம். அவர்களுக்கு அது பேரிடி. பெரும் துயரம்.

இப்போதெல்லாம் பலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன் வருகின்றனர். அவர்களை நாம் வாழ்த்துகிறோம்.

அரசியல் கட்சிகள் அதனை வைத்து விளம்பரம் தேட முயல்கின்றனர். அதுவும் சரி தான். அரசியல் சார்பற்ற நிறுவனங்கள் பலர் பல வகைகளில் உதவுகின்றனர். அந்த ஆபத்து நேரத்தில் உதவுகிறார்களே அதுவே பெரிய காரியம். 

அரசியல் சார்பற்ற நிறுவனங்கள் அந்த குடும்பத்திற்கு அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக உணவு பொருட்களை வழங்குகின்றனர். ஆனால் அதனையே அரசியல் கட்சிகளும் செய்வது தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

குறிப்பாக அரசியல் கட்சிகள் அரசாங்கத்தின் மூலம் பெரிய அளவில் மானியங்கள் பெறுகின்றனர். ஓர் ஏழையின் வீடு முற்றிலுமாக எரிந்து சாம்பலாகி விட்டால் முடிந்தவரை அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முன் வர வேண்டும்.

இதனை சமீபத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் செய்து காட்டியிருக்கிறார். அவர் பாராட்டுக்குரியவர். தனிப்பட்ட முறையில் எங்களது கிளையின் சார்பில் உதவுகிறோம் என்கிற பெயரில் சும்மா அரிசி, பருப்பு வாங்கிக் கொடுத்துவிட்டு அவர்களுக்கு உதவுகிறோம் என்று விளம்பரம் தேடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அதற்குப் பதிலாக கிளை, சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் அரசாங்க உதவி பெற்று  வீடு கட்டிக் கொடுத்தால் அந்த குடும்பத்தினருக்குப் பெரும் உதவியாக இருக்கும். வாழ்நாள் பூராவும் இந்தியர்கள் ஐந்துக்கும் பத்துக்கும் கை  ஏந்துபவர்கள் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொண்டே போவது இந்த அரசியல் கட்சிகள் தாம்.  அதனைத்  தவிர்க்க முனைய வேண்டும். 

செய்யும் உதவி திருப்திகரமாக அமைய வேண்டும் என்பது தான் நமது  நோக்கம். 

தக்க நேரத்தில் செய்கின்ற உதவி பெரிய உதவி தான். அதனை நாம் மறுக்கவில்லை.  

அதுவே அவர்களுக்கு நீண்ட காலம் பயனுடைய உதவியாக இருக்க வேண்டும் என்பது தான் நாம் சொல்ல வருவது.

செய்யுங்கள். ஆபத்து அவசரத்துக்குக் கை கொடுங்கள். ஆனால் ஓர் அரசியல் கட்சியாக, பொது இயக்கமாக செய்யும் போது வலிமைமிக்க அரசியல்வாதிகளையும் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.  அப்போது தான் உங்கள் உதவி சம்பந்தப்பட்டோருக்கு பெரும் உதவியாக அமையும்.

இது காலத்தால் செய்த உதவி.  தக்க காலத்தில் செய்த உதவி, பாராட்டுக்குரியது!

Wednesday, 4 November 2020

iஇது சரியா? தெரியவில்லை!

"உங்களுக்குக் கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி உடனடியாக வேண்டுமென்றால் எங்கள் சீன நாட்டு மீனவர்கள் அத்துமீறி கடலுக்குள் நுழைந்ததாக கைது செய்யப்பட்டவர்களை  விடுதலை செய்யுங்கள்!" என்பதாக சீன வெளியுறவு அமைச்சு கூறியிருக்கிறது!

இதற்கு முன்னர் வேறு ஏதேனும் நாடுகள் இது போன்ற கோரிக்கைகள் வைத்ததுண்டா என்பது எனக்குத் தெரியவில்லை. 

இது கோரிக்கை என்பதை விட பயமுறுத்தல் என்பதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். 

இதனை நமது நாடு ஏற்றுக் கொண்டால் பிற நாடுகளுக்கு  நாம் ஒரு புதிய பாதையைக் காட்டுவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். 

மேலும் ஒன்று.  எல்லாவற்றுக்கும் சீனாவையே நம்பியிருக்கும் நாடுகளுக்கு இது போன்ற கோரிக்கைகள் புதியதோர் மிரட்டல்.  சான்றுக்கு பாக்கிஸ்தான்,  ஸ்ரீலங்கா இன்னும் ஒரு சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்த அனுபவம் ஏற்கனவே ஏற்பட்டிருக்கலாம்.  வேறு வழியில்லை! அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 

மேற்கத்திய நாடுகள் என்றால் ஏதோ நீதி நியாயம், சட்டம் என்று வாய் கிழியப் பேசுவார்கள்!  ஆனால் சீனர்கள் எதனையுமே மதியாதவர்கள். மிரட்டல் ஒன்று தான் அவர்களின் பலம்! அதனை எப்படிக் கையாள்வது என்பது அவர்களுக்குத் தெரியும். 

இந்த நேரத்தில் டாக்டர் மகாதிர் போன்றவர்கள் பிரதமராக இருந்தால் இப்படி ஒரு கோரிக்கையே வந்திருக்காது.  அது டாக்டர் மகாதிரின் பலம்.
ஆனால் இன்றைய நமது அரசாங்கமோ இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளது. இது ஒர் இழுபறி அரசாங்கம்! எந்நேரத்திலும் கவிழலாம் என்கிற நிலையில் இருக்கும் அரசாங்கம்! இவர்கள் தங்களது பதவியில் நீடிப்பதற்கு நாட்டிற்கு எந்த துரோகத்தையும் செய்யத் தயாராய் இருக்கும் அரசாங்கம்! இந்த நேரத்தில் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறது சீன அரசாங்கம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை!

இன்று பல நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறது சீன அரசாங்கம்.  தனது பொருளாதார பலத்தை வைத்து மற்ற நாடுகளை தனது வலைக்குள் சிக்க வைக்கிறது என்பது தான் உண்மை.

அது மட்டும் அல்லாமல் மற்ற நாடுகளில் வியாபாரம் என்னும் பெயரில் ஒரு சில இடங்களையே தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது. சான்றுக்கு பக்காத்தான் அரசாங்கம் இடையிலே ஆட்சிக்கு வராதிருந்தால் பகாங், குவந்தான் நகரத்தில் ஒரு பகுதி சீனாவுக்குச் சொந்தமாகியிருக்கும்! அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த பகுதியில் வேலை செய்தவர்கள் அனைவரும் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள்! உள்ளூரில் உள்ள  அரசாங்க அதிகாரிகள் கூட உள்ளே புக முடியாத அளவுக்குத் தங்களது கட்டுப்பாட்டில் அந்தப் பகுதியை வைத்திருந்தார்கள்! இது நஜிப் பிரதமராக இருந்த போது நடந்தது!

சீனா மற்ற நாடுகளின் உரிமைகளை மதிப்பதில்லை. முடிந்த வரை தங்களது பொருளாதார வலிமையை வைத்து  இலஞ்சம் தலைவிரித்தாடுகிற நாடுகளில் உள்ளே புகுந்து விடுகின்றனர். 

அந்த மனநிலையில் தான் இப்போது நமது நாட்டிலும் சீனா நடந்து கொண்டிருக்கிறது. தனது வலிமையைக் காட்டி பயமுறுத்தலில் ஈடுபடுவதாகவே எடுத்துக் கொள்ளலாம். 

சீன மீனவர்களை விடுவிப்பது சரியா என்பது தெரியவில்லை! சரியில்லை என்பது தான் சரியாக இருக்கும் என நம்புகிறேன்!