Saturday, 3 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி...........! (20)

 ஒரு சில படிப்பினைகள்

 
வெற்றி பெற்ற ஒரு  சிலரை நான் பார்த்திருக்கிறேன்.  அவர்களிட அசாத்தியமான சில பண்புகள் இருக்கின்றன.  எங்கு கற்றார்கள், எங்கிருந்து அதனைப் பெற்றார்கள், அதன் மூலம் என்ன என்பதெல்லாம் நமக்குப் புரியாத புதிர்.

எனக்குத் தெரிந்த உறவு முறைகளில் ஒருவரிடம் இந்த அசாத்தியமான குணம் இருப்பதைக் கண்டு அயர்ந்து போனேன்! அவர் பல பேருந்துகள், லோரிகள், உணவகங்களுக்குச் சொந்தக்காரர். அவருடைய ஆரம்பம் என்பது காரில் பின்னால் கய்கறிகளை வைத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று வியாபாரம் செய்தவர். அவருடைய வளர்ச்சி என்பது பெருமைப்படத்தக்கது. அந்த வளர்ச்சி  சும்மா வந்துவிடவில்லை.  கடும் உழைப்பு. உழைக்க அஞ்சாதவர். 

இவரிடம் ஒரு பழக்கம். இவர் தனது வாடிக்கையாளர்களிடம் ஜப்பானியரைப் போல குனிந்து வணங்குவார்!  இயற்கையாகவே அவரிடம் அந்த பழக்கம் இருந்தது. ஒரு வேளை ஜப்பானியரைப் பார்த்து அவருக்கு அந்த பழக்கம் வந்ததா தெரியவில்லை! அந்த பணிவை மக்கள் விரும்பினர் என்பது மட்டும் உண்மை. அவ்ருக்கு உயர்வைத் தந்தது என்பதும் உண்மை.

எனது நண்பர் ஒருவர் பல லோரி டேங்கர்களை வைத்திருப்பவர். அவருடைய அந்த டேங்கர்கள் தினசரி ரப்பர் பால் ஏற்றிக் கொண்டு துறைமுகம் செல்ல வேண்டும்.  சமயங்களில் அவருடைய ஓட்டுனர்கள் தீடீரென்று வேலைக்கு வராமல் போய் விடுவர். நண்பர் களத்தில் இறங்கிவிடுவார். அவரே ஓட்டுனராக மாறிவிடுவார்.  இது ஒன்றும் அதிசயம் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருந்தவர் அவர். அப்படி செய்வது அதிசயம் தானே!

எனது சீக்கிய நண்பர்  ஒருவர் தோட்டத்தில் மருத்துவ உதவியாளராக இருந்தவர். அவருடைய தந்தையார்  டெக்சி ஓட்டுனராக இருந்தவர். அவர் தந்தையாரின் மரணத்திற்குப் பின்னர் தனது வேலை முடிந்ததும்  டெக்சி ஓட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார். வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதனையே முழு நேரமாக எடுத்துக் கொண்டார்.

ஒரு சிலருக்கு நாம் எதிர்பார்க்காத சில குணாதிசயங்கள் உண்டு. எதற்கும் அஞ்சுவதில்லை.  எதற்கும் பயப்படுவதில்லை. யார் என்ன சொல்லுவார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஊர் என்ன சொல்லும் ஊர் என்ன பேசும் என்பது பற்றி அவர்களுக்குப் பெரிதாகப் படுவதில்லை.

நமது பாதை சரியாக இருந்தால் எல்லாம் சரியானதே!



 பார்த்திருக்கிறேன். 

Friday, 2 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (19)

சிறிய அளவில் செய்வது பாதுகாப்பாக இருக்கும்!

தொழிலை ஆரம்பிக்கும் காலக்கட்டத்தில்  முடிந்தவரை முதலீடுகளைக் குறைத்துக் கொள்வது பாதுகாப்பாக இருக்கும். அதுவும் முதல் தலைமுறையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இது பணம் சம்பந்தப்பட்டது. இருக்கிறதையெல்லாம் அள்ளிப் போட்டு விட முடியாது. இது அனுபவம் இல்லாதவருக்குக் கொடுக்கின்ற எச்சரிக்கை. அனுபவம் உள்ளவர்கள், தங்கள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் - இவர்களெல்லாம் விதிவிலக்குகள். எது நேர்ந்தாலும் இவர்களால் எதிர் நோக்க முடியும்.

தொழிலைச் செய்து கொண்டே அனுபவத்தைப்  பெறுபவர்களும் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி பயம் இல்லை. அவர்களிடம் எச்சரிக்கை உணர்வு இருக்கும்.

எப்படிப் பார்த்தாலும் முதன் முதலில் தொழிலில் ஈடுபடுபவர்கள்  முதலீடுகளை முடிந்தவரை சுருக்கிக் கொள்ள வேண்டும். அதுவே நலம் பயக்கும்.

இன்னொன்றை  நாம் குறிப்பிட வேண்டும். பணம் உங்கள் கையில் இருப்பில் அல்லது வங்கியில் இருக்கிறது என்கிற ஒரு விஷயமே உங்களை எதுவும் பயமுறுத்தாது.  தொழிலில் மேடு பள்ளம் இருந்தாலும் அந்த இருப்பு உங்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். முடிந்தவரை கையிருப்பில் கை வைக்காமல் வருகின்ற வருமானத்தில் தொழிலை நடத்துவது என்பதே சிறப்பு.

தொழிலில் அனுபவம் கிடைத்துவிட்டது என்கிற நம்பிக்கை வந்துவிட்டால்,  தொழிலை மேலும் வளர்ச்சி பெற செய்ய  வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால், கடன் பெற முயற்சி செய்யுங்கள். வங்கியில் கடன் அல்லது அரசாங்க அமைப்புக்களிலிருந்து கடன் பெறுவது எல்லாம் எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் உங்கள் இருப்பில் உள்ள பணத்தில் மட்டும் கைவைக்காதீர்கள். அது உங்களுக்கு ஒரு பாதுகாப்பு.

ஒரு சீன இளைஞனை எனக்குத் தெரியும்.  கைபேசி தொழிலில் ஈடுபட்டிருந்தான். பணம் பற்றாக்குறை. கடன் அட்டைக்கு விண்ணப்பித்து அதுவும் கிடைத்தது. எவ்வளவு பணம் எடுக்க முடியுமோ அவ்வளவு பணத்தையும் எடுத்து தொழிலில் முதலீடு செய்தான். கடனுக்கான பணத்தையும் வட்டியையும்  கட்டி வந்தான். பிரச்சனையைத் தீர்த்துக் கொண்டான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் சீனர்களுக்குத் தொழில் என்பது பிழைப்பு. இந்தியர்களுக்கு அது இன்னும் முழுமையான பிழைப்பாக கொண்டு வர முடியவில்லை!

கையில் இருப்பு என்பது ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. அதுவும் முதல் தலைமுறையினருக்குப் பாதுகாப்பு உணர்வு தேவை.

வெற்றி பெறுவோம்!



 குறைத்துக்

Thursday, 1 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (18)

சிறு தொழில்கள் செழிக்க வேண்டும்!

                                    இந்திய இளம் தொழில் முனைவர் மாநாடு

தொழில், யார் வேண்டுமானாலும் செய்யலாம். வயது வித்தியாசம் இல்லை. ஏழை பணக்காரர் இல்லை.

யாருக்குத் துணிச்சல் இருக்கிறதோ அவர்கள் தொழில் செய்யலாம். முக்கியத் தேவை என்பது துணிச்சல் தான்.

முதலீடு என்பது தானே முக்கியம் என்று  சொன்னாலும் அதற்கும் துணிச்சல் தான் தேவை. கையில் காசு இல்லை அவர் எப்படி தொழில் செய்ய முடியும்?

அதற்கும் நமக்கு முன்னோடிகள் இருக்கிறார்கள்! இன்றும் அது நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் விசேஷம்! 

காலையில் கடன் வாங்குவார்கள். தேவையான பொருள்களை  வாங்குவார்கள்.  வாங்கிய பொருள்களை விற்பனை செய்வார்கள். அதாவது இலாபத்திற்கு விற்பார்கள். அன்று மாலை வட்டியோடு கடனை அடைப்பார்கள். அடுத்த நாள் காலை மீண்டும் கடன், மாலை கடனடைத்து இலாபத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் அடுத்து நாள் அதே நடைமுறை.

இப்படி வியாபாரம் செய்பவர்கள் ஆயிரக்கணக்கில் நம்மிடையே இருக்கிறார்கள். இப்படியே தொழில் செய்து வெற்றிகரமான  முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கையில் துட்டு வந்ததும் அவர்களே பிறருக்குப் கடன் கொடுப்பார்கள்! வேண்டியதெல்லாம் அசாத்தியமான துணிச்சல்!

சிறு தொழில் செய்பவர்கள் அதுவும் அன்றாடம் வட்டிக்கு வாங்கி வியாபாரம் செய்யும் இவர்களுக்குத் துணிச்சலைத் தவிர வேறு என்ன முதலீடு தேவை.

எப்படியெல்லாம் வியாபாரம் செய்கிறார்கள், எப்படியெல்லாம் முதலீடுகளைப் பெறுகிறார்கள் என்பதை நோக்கினால் நாம் மலைத்துப் போவோம்!

துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை என்பார்கள். வியாபாரம் செய்வதே ஒரு துணிச்சல் தான். அதுவும்  கையில் காசில்லாமல் வட்டிக்குக் கடன் வாங்கி வியாபாரம் செய்கிறார்களே இவர்களின் துணிச்சலை யாருடன் ஒப்பிடுவது?

ஆக, எல்லாவற்றுக்கும் ஒரு வழி இருக்கின்றது. அதையெல்லாம் நமக்கு முன்பே கண்டுபிடித்து விட்டார்கள்! காசும் பார்த்து விட்டார்கள்! பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்!

ஏற்கனவே கவியரசு கண்ணதாசன் பாடிவிட்டுப் போயிருப்பதை ஞாபகப்படுத்துவதா? "வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்!" அது போதுமே!  இன்னும் வேண்டுமென்றால் "துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை!" என்பதையும்  சேர்த்துக் கொள்ளுங்கள்!

ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இன்று சிறு தொழில் செய்பவர்கள் தான் நாளை பெரும் தொழில்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அதற்கான துணிச்சல் அவர்களிடம் உண்டு. பயிற்சி உண்டு. பிரச்சனைகளை எதிர்நோக்கும் ஆற்றல் அவர்களிடம் உண்டு.

சிறு தொழில்கள் செழிக்க வேண்டும். சீனர்கள் ஏன் சிறு தொழில்களைக் கூட விட்டுவைப்பதில்லை? அதிலுள்ள வருமானம் தான். ஓர் அலுவலகத்தில் வேலை செய்பவரின் வருமானத்தையும் ஒரு சிறு தொழில் செய்யும் வியாபாரியின் வருமானத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பது புரியும்.

சிறுசோ பெருசோ வியாபாரத்திற்கு ஈடு இணை இல்லை!