Friday, 15 October 2021

நடவடிக்கையில் தயக்கம் ஏன்?


 ஏற்கனவே நடந்த ஒன்று தான். முதன் முறை, யாரும் எதிர்பார்க்கவில்லை- என்று எப்படியோ நமக்குள் சமாதானம் செய்து கொண்டோம்!

மலேசியரிடையே தவறான பழக்க வழக்கங்கள் உண்டு. தவறு செய்பவன் பெரிய வீட்டுப் பிள்ளையாக இருந்தால் அந்த செய்தியை முற்றிலுமாக முடக்கி விடுகின்றோம். நீதி என்பது பெரிய வீட்டுப் பிள்ளைகளின் பக்கம்!

இயங்கலை வகுப்பு நடந்து கொண்டிருந்த  போது முதல்முறையாக ஆபாச விடியோ  இடையில் நுழைந்ததாக செய்திகள் வெளியாயின.  அது ஒரு விபத்து. இரண்டாவது முறையாக இப்போது அரங்கேறியிருக்கிறது அதே விபத்து! இதனை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது நமது கையாலாகத்தனம்! விபத்து அல்ல!

முதல் முறை ஏற்பட்டபோது நாம் என்ன தண்டனையை அவர்களுக்குக் கொடுத்தோம்? கொடுத்தோமா, மன்னித்தோமா? எதுவும் தெரியவில்லை! கொடுத்த தண்டனை என்னவென்பது யாருக்கும் தெரியவில்லை என்றால் அந்தத் தண்டனைக் கொடுக்கப்படவில்லை என்பது தான் பொருள்!

சரி,  மீண்டும் ஒரு நாடகம் அரங்கேறிவிட்டது! இப்போது மலேசியர்களின் நிலை என்ன? "விடுங்கப்பா! ஏதோ சின்ன பசங்க! தெரியாம செய்திட்டாங்க! அதைப் பெரிசு படுத்தாதீங்க!" என்று சொல்லப் போகிறோமா? அப்படியும் சொல்ல யாரும் முன்வரப் போவதில்லை!

நம் வீட்டுப் பிள்ளையாக இருந்தால் கண்டிக்கலாம்! ஊரான் வீட்டுப் பிள்ளை! அவனைக் கண்டித்தால் அப்பன் சண்டைக்கு வருவான்! இது ஒரு சிக்கலான பிரச்சனை!

இன்றைய தலைமுறையினர் இணையத்தைப் பொறுத்தவரை பலவற்றைத் தெரிந்து வைத்திருக்கின்றனர். நல்லதைக் கற்கும் ஆர்வம் குறைந்து அல்லாததைக் கற்கும் ஆர்வம் அதிகம்!  படித்துக் கொடுக்க யாரும் ஆசிரியர்கள் தேவையில்லை! அவர்களாகவே  கற்றுக் கொள்கின்றனர்!

ஆனால் எது நடந்தாலும் சரி. இது போன்ற செயல்களை மன்னிக்க முடியாது. அவர்கள் செய்கின்ற இந்த செயல்  ஆயிரக்கணக்கான மாணவர்களைப் போய் சேரும் என்பதை அவர்களுக்குத் தெரியும். தெரிந்தும் அவர்கள் செய்கிறார்கள் என்றால் அவர்கள் அரசியல்வாதிகள் வீட்டுப் பிள்ளைகள் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களின் பிள்ளைகள்! இவர்களால் தான் இது போன்ற செயல்களில் ஈடுபட முடியும்.

முதல்முறை செய்தி வந்த போது ஒரு நடவடிக்கையும் இல்லை! இந்த முறை மட்டும் அப்படி என்ன பெரிசா வந்துவிடப் போகிறது? பார்ப்போம்! 

மலிவு வீடுகள் என்ன ஆயிற்று?

 

சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் மலிவு வீடுகள் என்பது மிகவும் பேசப்பட்ட ஒரு விஷயமாக இருந்தது எனலாம்.

உழைக்கும் ஏழை  மக்களுக்கு மலிவான விலையில் கட்டப்பட்ட வீடுகள் அவை. ஆனால் பெரும்பாலான வீடுகள் ஏழை மக்களை விட ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் என்று பலர் பங்குப் போட்டுக் கொண்டனர்! இவர்களில் பலர் அவர்களது வீடுகளை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்தனர்! ஆனாலும் அது நடந்து கொண்டு தான் இருக்கும். அதற்காக இந்த வீடுகள் தேவையில்லை என்று ஒதுக்கிவிட முடியாது.

இன்றைய நிலையில் வீடு என்பது பணக்காரர்கள் அல்லது மேல்தர நடுத்தர குடும்பத்தினரின் தான் வாங்க முடியும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. வருங்காலத்தில் வீடுகள் வாங்குபவர்கள் பணக்காரர்கள் அல்லது மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினர். அப்படியென்றால் ஏழைகள் வீடு பற்றி கனவில் கூட நினைக்க முடியாத அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

அதற்காக ஏழைகளுக்கு வீடு  வேண்டாம் என்று அவர்களை ஒதுக்கிவிட முடியாது.  மனிதன்  தங்குவதற்கு "தலைக்கு  மேல் ஒரு கூரை தேவை" என்பது நமது நம்பிக்கை. மனிதனின் முக்கியத் தேவைகளில் வீடும் ஒன்று.

நமக்குச் சொந்த நிலம் இருந்தால் அங்கே நம் வசதிக்கேற்ப எப்படியோ நாம் விரும்பியபடி ஒரு வீட்டைக்கட்டிக்  கொள்ளலாம். அதற்கும் நமக்குக் கொடுப்பனை இல்லை. ஒரு சிலருக்கு இருக்கலாம். இருந்தால் அவர்கள் வீட்டுக்காக அலைய வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வாழத் தெரிந்தவர்கள்.

மலிவு  விலை வீடுகளை அரசாங்கம் நிராகரிக்கக் கூடாது என்பது தான் நமது கோரிக்கை. ஏழைகளாக இருந்தாலும் எல்லாக் காலங்களிலும் அவர்கள் வாடகை வீட்டில் தான் வசிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.  குடும்பத்தைக் காப்பாற்ற வேலை வேண்டும் அதே போல அந்தக் குடும்பம் தங்கிக் கொள்ள ஒரு வீடு வேண்டும்.

அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனங்களோ மலிவு விலை வீடுகள் கட்ட அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே வீடு என்றால் அந்த பணம் படைத்தவர்கள் வாழ உழைப்பவர்கள் ஏழைகள் தான். பணக்காரர்கள் வாழ்க்கையில் உயர ஏழைகள் தான் உழைக்கின்றனர். உழைக்கும் அந்த ஏழைகள் வாழ, தங்க அவர்களுக்கு வீடு என்பது தேவையான ஒன்று. 

மலிவு விலை வீடுகள் என்பது அரசாங்கத்தின் பொறுப்பு. அதனை அரசாங்கம் தட்டிக்கழிக்கக் கூடாது என்பதே அரசாங்கத்திற்கு நமது கோரிக்கை!

Thursday, 14 October 2021

சிறப்பு விசாரணை

திருமதி இந்திராகாந்தியின் வழக்கை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்கிறோம்.

சுமார் 12 ஆண்டுகளாக தனது மகளுக்காக காத்துக்கிடக்கும் தாய் அவர். இது நாள் வரை அவரது மகள் பிரசன்னாவை அவரால் பார்க்க முடியவில்லை.  மகளைக் கடத்திக் கொண்டு போனவர் அவரது தந்தை பின்னர் இஸ்லாத்திற்கு மாறியவர்.

பிரசன்னாவின் தந்தையை  கைது செய்ய நீதிமன்ற உத்தரவிட்டும் ஒன்றும் ஆகவில்லை!  காவல்துறையினர் தந்தையையும் மகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கைவிரித்து விட்டனர்!

தாய் இந்திராகாந்தி எத்தனையோ முயற்சிகள் எடுத்தும்  அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

இப்போது அவருக்கு இருக்கும் இன்னொரு வழி:   அவரது பிரச்சனையை விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக்  குழுவை அமைக்க வேண்டும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரியை   அவர் இப்போது வலியுறுத்தி வருகின்றார்.  இதன் மூலம் காவல்துறையின் செயலற்ற தன்மைக்கும் இயலாமைக்கும்  என்ன காரணம் என்பது தெரிய வரும்.

ஒரு காலக் கட்டத்தில் "இதோ மகள் வந்துவிடுவார்! கொஞ்சம் பொறுத்திருங்கள்!" என்றெல்லாம் ஆசை காட்டினர். நம்பிக்கையான வார்த்தைகளால் உறுதி அளித்தனர். ஆனால் அத்தனையும் வெற்று வாக்குறுதிகள்  என்பது பின்னர் தெரியவந்தது! இந்த செய்திகள் அனைத்தும் பத்திரிக்கைகளில் வெளிவந்து அமர்க்களப்பட்டன!

ஒரு தாயை ஏமாற்றுவதற்கு என்ன என்ன வழிகளையெல்லாம் காவல்துறை பின்பற்றியது என்பதை இந்த நாடே அறியும்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய கட்டிடத்திலிருந்து  மர்மமான முறையில் இறந்து போன தியோ பெங் ஹாக் மரணமும் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இதுவும் 12 ஆண்டுகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கிற தீர்க்கப்படாத ஒரு வழக்கு.

தீயணைப்பு வீரர் முகமது அடிப் முகமது காசிம்  முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தாமஸ் போன்றவர்களின் வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது போல இந்திராகாந்தியின் வழக்கையும் விசாரிக்க விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையே.

நீண்ட காலம் தீர்க்கப்படாமல் இருக்கும் வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அவைகளுக்கும்  ஒரு தீர்வைக் காண முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.

இந்திராகாந்தி பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஏற்பட இன்றைய அரசாங்கம் பிரச்சனையைக்  கையில் எடுக்க வேண்டும் என நாமும் வேண்டுகோள் விடுக்கிறோம்.