Friday 15 October 2021

நடவடிக்கையில் தயக்கம் ஏன்?


 ஏற்கனவே நடந்த ஒன்று தான். முதன் முறை, யாரும் எதிர்பார்க்கவில்லை- என்று எப்படியோ நமக்குள் சமாதானம் செய்து கொண்டோம்!

மலேசியரிடையே தவறான பழக்க வழக்கங்கள் உண்டு. தவறு செய்பவன் பெரிய வீட்டுப் பிள்ளையாக இருந்தால் அந்த செய்தியை முற்றிலுமாக முடக்கி விடுகின்றோம். நீதி என்பது பெரிய வீட்டுப் பிள்ளைகளின் பக்கம்!

இயங்கலை வகுப்பு நடந்து கொண்டிருந்த  போது முதல்முறையாக ஆபாச விடியோ  இடையில் நுழைந்ததாக செய்திகள் வெளியாயின.  அது ஒரு விபத்து. இரண்டாவது முறையாக இப்போது அரங்கேறியிருக்கிறது அதே விபத்து! இதனை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது நமது கையாலாகத்தனம்! விபத்து அல்ல!

முதல் முறை ஏற்பட்டபோது நாம் என்ன தண்டனையை அவர்களுக்குக் கொடுத்தோம்? கொடுத்தோமா, மன்னித்தோமா? எதுவும் தெரியவில்லை! கொடுத்த தண்டனை என்னவென்பது யாருக்கும் தெரியவில்லை என்றால் அந்தத் தண்டனைக் கொடுக்கப்படவில்லை என்பது தான் பொருள்!

சரி,  மீண்டும் ஒரு நாடகம் அரங்கேறிவிட்டது! இப்போது மலேசியர்களின் நிலை என்ன? "விடுங்கப்பா! ஏதோ சின்ன பசங்க! தெரியாம செய்திட்டாங்க! அதைப் பெரிசு படுத்தாதீங்க!" என்று சொல்லப் போகிறோமா? அப்படியும் சொல்ல யாரும் முன்வரப் போவதில்லை!

நம் வீட்டுப் பிள்ளையாக இருந்தால் கண்டிக்கலாம்! ஊரான் வீட்டுப் பிள்ளை! அவனைக் கண்டித்தால் அப்பன் சண்டைக்கு வருவான்! இது ஒரு சிக்கலான பிரச்சனை!

இன்றைய தலைமுறையினர் இணையத்தைப் பொறுத்தவரை பலவற்றைத் தெரிந்து வைத்திருக்கின்றனர். நல்லதைக் கற்கும் ஆர்வம் குறைந்து அல்லாததைக் கற்கும் ஆர்வம் அதிகம்!  படித்துக் கொடுக்க யாரும் ஆசிரியர்கள் தேவையில்லை! அவர்களாகவே  கற்றுக் கொள்கின்றனர்!

ஆனால் எது நடந்தாலும் சரி. இது போன்ற செயல்களை மன்னிக்க முடியாது. அவர்கள் செய்கின்ற இந்த செயல்  ஆயிரக்கணக்கான மாணவர்களைப் போய் சேரும் என்பதை அவர்களுக்குத் தெரியும். தெரிந்தும் அவர்கள் செய்கிறார்கள் என்றால் அவர்கள் அரசியல்வாதிகள் வீட்டுப் பிள்ளைகள் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களின் பிள்ளைகள்! இவர்களால் தான் இது போன்ற செயல்களில் ஈடுபட முடியும்.

முதல்முறை செய்தி வந்த போது ஒரு நடவடிக்கையும் இல்லை! இந்த முறை மட்டும் அப்படி என்ன பெரிசா வந்துவிடப் போகிறது? பார்ப்போம்! 

No comments:

Post a Comment