Friday, 28 July 2017

இந்தியர்களை ஓரங்கட்டியவர் மகாதிர்!


சமீபத்தில் ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ், எதிர்கட்சி எம்.பி. யான குலசேகரனுக்கு  பதிலளிக்கும் வகையில் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

"இந்நாட்டில் இந்தியர்கள் ஒரங்கட்டப்பட்டது துன் மகாதிரினால் தான் என்பது மறுக்க முடியாத உண்மை!"  என்பதாக அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

துன் மகாதிர் தான் குற்றவாளியே தவிர இன்றைய பிரதமர் நஜிப் அல்ல என்பது தான் அவருடைய வாதம். அப்படியே இருக்கட்டும். துன் மகாதிர் பிரதமராக இருந்த போது அப்போதே அவரும் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். "இந்தியர்களின் தேவைகளைப் பற்றி ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ சாமிவேலு எதனையும் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை" என்பதாக!

ஆக, குற்றம் என்பது முன்னாள் பிரதமர் மகாதிர் மீது  மட்டும் அல்ல ம.இ.கா.வின் மீதும் சேர்த்துத் தான்!  இப்போதும் அதே குற்றச் சாட்டுக்கள்  உண்டு. இப்போதாவது இந்தியர்களின் பிரச்சனைகள் அமைச்சரைவையில் பேசப்படுகிறதா என்றால் இப்போதும் அதே "பேசப்படுவதில்லை" என்பது தான்!

பேசப்படுகிறது என்றால் தமிழ்க்கல்வி பிரச்சனையை ஏன் ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை? கேட்கோ பிரச்சனையை ஏன் ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை?  ஏன் இந்தியர்கள் அராசாங்கத்தில் வேலை வாய்ப்புக்களைப் பெற முடியவில்லை? எந்தப் பிரச்சனையானாலும் அந்தப் பிரச்சனையை அமைச்சரவையில் கொண்டு போக முடியாததினால் தானே  இப்போது மாபெரும் வியூகத்திட்டம்  என்பதாகச் சொல்லி இப்போது தான் தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தது போல தேர்தலுக்கு முன்பாக "அசத்திக்" கொண்டிருக்கிறீர்கள்? சரி, வியூகத்திட்டம் இருக்கட்டும். கடந்த எட்டு ஆண்டுகளில் பிரதமர் நஜீப் - இந்தியர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கிய சாதனைகள் என்ன என்பதை பட்டியிலிட்டுக் காட்டுங்களேன். யார் வேண்டாமென்றார்! பொது மக்களும் பார்த்து பரவசமடையட்டுமே!

இந்தியர்களை ம.இ.கா. ஏமாற்றுகிறது என்பதால் தானே மக்கள்,  நீங்கள் எந்த ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அது "நிறைவேறாது"  என்று மனத்தளவில் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்!  வியூகத் திட்டம் வந்த பிறகு செடிக் அலுவலகத்தில் 50 பேர் வேலை செய்கிறார்கள் என்பது என்ன சாதனையா? அதில் 48 மலாய்க்காரர்களும், 2 இந்தியர்கள் இருப்பார்கள்! அவர்களால் ஆகப்போவது என்ன?

இந்தியர்களின் தகவல்கள் அனைத்தும் உங்களிடம் உள்ளன. எந்த ஒரு வியூகத்திட்டமும் இல்லாமலே, இந்தியர்களின் பிரச்சனையை - மனம் வைத்தால், மனம் வைத்தால் மட்டுமே - உங்களால் தீர்க்க முடியும். இல்லாவிட்டால் அடியோ, உதையோ வாங்கி, நீங்களும் இந்தியர்களை ஓரங்கட்டி விடுங்கள்! இந்தியர்கள் தாங்களாகவே தங்களைப் பார்த்துக் கொள்ளுவார்கள்!

சுமை தாங்கி


சுமை தாங்கி என்கின்ற ஒரு தமிழ்த்திரைப் படம், ஜெமினி கணேசன் நடித்து,  ஸ்ரீதர்  இயக்கி,  1962-ம் ஆண்டு வெளியான ஒரு படம் என்பதை அந்தக் காலத்து சினிமா ரசிகர்களுக்குத் தெரியும். அதில் தான் "மயக்கமா.. கலக்கமா..!"  என்கிற, ஸ்ரீநிவாஸ் பாடிய பாடல் மிகவும் பிரபலம். ஏன், இப்போதும் பிரபலம் தான். இந்தப் படத்தின் கரு என்பது குடும்பச் சுமையைச் சுமக்கின்ற கதாநாயகன்  தான் அந்தச் சுமை தாங்கி.

இந்தச் "சுமை தாங்கி" என்கிற சொல் என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது என்பதை சமீபகாலம் வரை  நான் அறிந்திருக்க வில்லை. சைக்கள்களின் பின் பகுதியில் சுமைகளை ஏற்றிச் செல்லும் அதனையும் சுமைதாங்கி எனச் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

ஆனால் தீடீரென இந்தச் சுமைதாங்கியைப் பற்றி இரண்டு வாரங்களில் மூன்று முறை என் கவனத்திற்கு வந்தது. ஒரு சொற்பொழிவில் இந்த சுமைதாங்கி கற்கள் சிவகங்கையில் உள்ளதாக ஒருவர் கூறினார். இரண்டாவது சிவகங்கையில் உள்ள ஒருவர் வருகை தந்திருந்தார். மூன்றாவது சிவகங்கையில் உள்ள    சுமைதாங்கி கற்களைப் பற்றிய ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. மூன்றும் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக வந்ததால், சரி, நாமும் கொஞ்சம் சொல்லி வைப்போம் என்பதற்குத்தான் இந்தக் கட்டுரை.



பொதுவாக இந்தச் சுமைதாங்கி கற்கள் சிவகங்கை மாவட்டத்தில் தான் அதிகம் காணப்படுகிறது; பேசப்படுகிறது. போக்குவரத்து அதிகம் இல்லாத காலக்கட்டத்தில் இது போன்ற சுமைதாங்கிகள் தாம் மக்களுக்கு இளைப்பாறவும், சுமந்து வந்த சுமைகளை இறக்கி வைக்கவும், ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் உதவியாக இருந்தன. சுமைகளைச் சுமந்து செல்லும் மக்கள் யாருடைய உதவியும் இல்லாத நேரத்தில் அவர்களது சுமைகளை இந்த சுமைதாங்கிகளின் மேல் வைத்துவிட்டு அவர்களே மீண்டும் அந்தச் சுமைகளை  யாருடைய உதிவியும் இன்றி தூக்கிக்கொள்ள உதவும் கற்கள் தான் இந்தச் சுமைதாங்கிகள்.  பெரும்பாலான இந்தச் சுமைதாங்கிகள் ஆற்றோரங்களிலும், சாலை ஓர மரத்தடிகளிலும் தாம்  அமைக்கப்பட்டன. தாகம் தீர்க்கவும்,அமர்ந்து இளைப்பாறவும் பயணிகளுக்காக இந்த வசதிகள். 

இறந்த போர் வீரர்களுக்காகவும், அரசர்களின் நினைவாகவும், இறப்பு, பிறப்பு போன்ற ஞாபகச்சின்னங்களாகவும் இது போன்ற சுமைதாங்கிகள் அக்கலாத்தில் உருவாயின. அரசர்களின் உதவியோடும், அக்காலத்தில் வாழ்ந்த மனிதநேய மிக்க குடிகளாலும் சுமைதாங்கிகள் ஏற்படுத்தப்பட்டன. 

பிற்காலத்தில்,  போக்குவரத்து வசதிகள் அதிகரித்த பின்னர், சுமைதாங்கிகளின் பயன்பாடு குறைந்துவிட்ட நிலையில், அவைகள் மக்கள் மறக்கும் நிலைக்கு வந்துவிட்டன. அரசிடமிருந்தும் புதிய சுமைதாங்கிகள் கட்டுவதற்கான அனுமதியும்     கிடைக்கவில்லை.  ஒரு சில சுமைதாங்கிகள் இப்போது வழிபாடு செய்யும் இடங்களாக மாறிவிட்டன.




தமிழகம் முழுவதும் இது போன்ற சுமைதாங்கிகள் கட்டப்பட்டனவா என்று தெரியவில்லை.  ஆனால் தமிழகத்தில் பல  இடங்களில் இவைகள் இருந்ததற்கான அடையாளங்கள் இப்போதும்  இருப்பதாகக் கூறப்படுகின்றது. சிவகங்கை தவிர்த்து, சேலம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, வாழப்பாடி போன்ற இடங்களிலும், திருவாருரில் ஒரு சில இடங்களிலும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

போக்குவரத்து குறைந்த காலத்தில், மாட்டு வண்டிகளைப் பயன்படுத்த முடியாத ஏழைகளுக்கு இது போன்ற, பல கல் தூரம் தலையில் பாரங்களைச் சுமந்து செல்லும் ஏழை மக்களுக்கு இந்தச் சுமைதாங்கிகள் மிகவும் பயன் உடையவைகளாக இருந்திருக்கின்றன. 

அக்காலத்திய அரசுகளும், வசதிப்படைத்த பெரியவர்களும் ஏழைகளின் மேல் பற்றும் பாசமும் உடையவர்களாகவும் இருந்திருக்கின்றனர் என அறியும் போது நமக்கும் பெருமையாக இருக்கிறது.


நல்லதொரு நோக்கத்துக்காக இந்தச் சுமைதாங்கிகள் ஏற்படுத்தப்பட்டன.  அவைகள் மக்களுக்குப் பயன் உடையவைகளாகவும் இருந்திருக்கின்றன. 

சுமைதாங்கிகளே! சுமையை மட்டுமா தாங்கினீர்கள்? எங்கள் சுகத்தையும், சோகத்தையும் அனைத்தயும்  அல்லவா தாங்கினீர்கள்!

Monday, 24 July 2017

கேள்வி - பதில் (55)


கேள்வி

"சர்வதேச சட்டப்படியே மீனவர்களை இலங்கை கடற்படை  கைது செய்கிறது" என்று தமிழிசை சவுந்தரராஜனின் கருத்து சரியானாதா?

பதில்

அவரது கருத்தாக அதனை அவர் சொன்னாலும் அது பா.ஜ.க. வின் கருத்தாகத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இது மிகவும்  ஆபத்தான கருத்து.  தமிழிசை பா.ஜ.க. வின் தமிழக மாநிலத் தலைவர். அவர் சொல்லுகின்ற கருத்து எதுவாக இருந்தாலும் அவர் பிரதமர் மோடியின் கருத்தைத் தான் பிரதிபலிக்கிறார் என்பது தான் பொருள்.  பிரதமரின் கருத்தை தமிழகத்தில் மெல்லத் திணிக்கிறார் என்பதாகத்தான் நாம் பார்க்க வேண்டும். 

பிரதமர் சொல்லுவது சரி என்றால் தமிழக மீனவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதையும் தமிழிசை பார்க்க வேண்டும். மீனவர்கள் சொல்லுவதெல்லாம் தாங்கள் இந்திய எல்லையில் மட்டுமே மீன் பிடிப்பதாகச் சொல்லுகிறார்கள். இதனை அவர்கள் பல முறை சொல்லியிருக்கிறார்கள். இலங்கை கடற்படையினரே அத்துமீறி இந்திய எல்லையில் நுழைந்து தங்களைத் தாக்குவதும், சுடுவதும் எல்லாக் காலங்களிலும் தொடர்கதையாகவே நடைபெறுவதாக மீனவர்கள் கூறி வருகின்றனர். தமிழிசை,  மோடி சொல்லுவதை மட்டும் கேட்காமல் மீனவர்களும் என்ன சொல்லுகிறார்கள் என்பதையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.    

தொடர்ந்து நடைபெறுகின்ற இந்த வன்முறையை  நிறுத்துவதற்கு என்ன செய்யலாம் என்பதைத் தான் தமிழிசை யோசிக்க வேண்டும்; பிரதமரிடம் சிபாரிசு செய்ய வேண்டும்.  தமிழர்களின் நலனை பிரதமர் மோடி அலட்சியம் செய்கிறார் என்பது தமிழர்களிடையே உள்ள பொதுவான கருத்து. அதனை உறுதி படுத்துவது போலத் தான் தமிழிசையும் பேசுகிறார்.    

தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பா.ஜ.க. வின் மாநிலத் தலைவர். மற்ற மாநிலத் தலைவர்கள் தங்களது மாநிலத்திற்காக பேசும் போது இவர் மட்டும் தமிழ் நாட்டை புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது நமக்குப் புரியவில்லை.  அவர் அநியாயத்திற்குத் துணை போக வேண்டாம். குறைந்த பட்சம் நியாயத்திற்காக குரல் கொடுக்க வேண்டும்.

ஏழை மீனவர்களுக்காக அவர் குரல் கொடுப்பார் என நம்புவோம்! தீர்வை நோக்கி அவர் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்ப்போம்!