Tuesday, 26 September 2017

74% இந்திய இளைஞர்கள் புறக்கணிப்பு..!


வேலை வாய்ப்புக்களில் 74% இந்திய இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். ஆம்,  இப்படித்தான் மேர்டேகா ஆய்வு மையம் தனது கருத்துக் கணிப்பில் கூறுகிறது. நமது நாட்டில் நிறுவனங்கள் ஆள் பார்த்து, இனம் பார்த்து செயல்படுகின்றன என்பதற்கு இது சான்று.

ஒரு பக்கம் அரசாங்கத்துறைகளில் நாம் புறக்கணிக்கப் படுகிறோம். அங்கும் அரசாங்கம் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இன்னொரு பக்கம் தனியார் துறை. இங்கும் நாம் புறக்கணிக்கப் படுகிறோம். இது தான் இன்றைய இந்திய இளைஞர்களின் நிலை!

முன்பு ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்றார்கள். அந்தக் கதை இன்னும் தொடர்கிறது. ஆனால் அரசாங்கம் ஆங்கிலப் பயிற்சிகளுக்காக நிறையவே செலவு செய்கிறது. எப்படி? யாருக்கு  ஆங்கிலம் பேச வரவில்லை  என்கிறோமோ அவர்களை வைத்தே ஆங்கிலம் பேச வைக்கிறார்கள்! ஆக, இங்கும் ஒரு அரசியல் நாடகம்! ஆனாலும் உயர்கல்வி கற்கும் நமது இந்திய மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது ஒன்று ஒதுக்கிவிட முடியாது. 100% விழுக்காடு என்று சொல்ல முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் 70% அவர்களால் பேச முடியும். அது போதுமே! ஜப்பான், கொரியா, சீனா போன்ற நிறுவனங்கள்  அதைவிட பெரிதாக அவர்கள் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. 

நமது இளைஞர்களுக்குத் திறன் உண்டு. ஆங்கிலம் பேசும் திறமை உண்டு. சிறந்த கல்வியும் அவர்களிடம் உண்டு. 

இப்போது நாம் என்ன சொல்ல வருகிறோம்? ஆம், மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் முன்மொழிவது போல நாமும் அதே கருத்தை வழிமொழிகிறோம். இன அடிப்படையில் வேலை வாய்ப்புக்கள் கொடுக்கப்படுகின்றன வென்றால்  இனி நாம் இனவிகிதாச்சார (கோட்டா) முறையை அமலக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே சரியான வழியாய் இருக்கும். வேறு வழியில்லை! அரசாங்கம் வெறுமனே பார்த்து ரசித்துக் கொண்டிருக்க முடியாது. இந்தியர்களை அரசாங்கத்தில் பிரதிநிதிப்பவர்கள் சும்மா இருக்கலாம். அது அவர்களுக்குப் பதவியைக் கொண்டு வரும். ஆனால் பொது மக்கள் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மலேசியாவின் மூன்றாவது பெரிய இனம் வேலை வாய்ப்பு இல்லாமல் சுற்றித் திரிவதும், தவறானப் பாதைகளில் செல்லுவதும் அரசாங்கத்திற்கு நல்லதல்ல.

இதுவும் நாட்டிற்கு முக்கிய பிரச்சனை என்பதால், அவசரமான பிரச்சனையும் என்பதால், அரசாங்கம் தலையிட்டு ஒரு முடிவு காண வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். வாழ்க தமிழினம்! வாழ்க மலேசியா!

Saturday, 23 September 2017

மலாய்ப் பெயர் தானே? என்ன குழப்பம்?


இப்போது பெயர்களிலே பல குழப்பங்கள்! இதனை வைத்து இஸ்லாமிய இலாக்கா கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

சமீபத்தில் ஒரு மனிதர் இறந்து போனார். அவர் மலாக்கா பாபா  நோன்யா வம்சாவளியைச் சேர்ந்தவர்.  நாம் பெரும்பாலும் அவர்களைச் சீனர் என்போம். அவரின் மனைவியோ ஓர் தமிழ் இந்துப் பெண்மணி. இவர்களின் வழிபாடு என்பது  ஆதிமுதல்     பௌத்தம், இந்து சமயத்தைச் சார்ந்தவை.

இங்கு ஏற்பட்ட குழப்பம் அவர்களின் பெயர்கள். இறந்தவரின் தந்தையார், இறந்தவர்,  இப்போது அவரின் பிள்ளைகள் - இவர்கள் அனைவரின் பெயர்களும் இஸ்லாமியப் பெயர்கள். ஆனால் அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல. அது தான் இங்கு உள்ள பிரச்சனை. அவர்கள் இந்து சமயத்தை வழிபடுகின்றனர். இப்போது அவரின் பிள்ளைகளும் இஸ்லாமியப் பெயரோடு இந்து சமயத்தை வழிபடுகின்றனர்.

ஒரு காலக்கட்டத்தில் இவர்களுடைய தாத்தா - அதாவது இறந்தவரின் தந்தையார் - சீனப்பெயரைக் கொண்டிருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகள் சீனர்களைக் கொன்றொழிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள - இந்த நோன்யா பாபாக்கள் - தங்களுடைய பெயர்களை மலாய்ப் பெயர்களாக மாற்றிக் கொண்டார்கள்.  இது தங்களைத் தற்காத்துக் கொள்ள மட்டுமே. மற்றபடி அவர்கள் இஸ்லாமியராக மதம் மாறவில்லை. இதுவே இப்போது இவர்களுக்குக் கலாச்சாரமாகவே மாறிவிட்டது. இவர்களைப் பொறுத்தவரை இது மலாய்ப் பெயர் மட்டுமே, அவ்வளவு தான்!

 இவைகளெல்லாம் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகள் தான்.  இப்போதும் கூட பல கிறித்துவ பெயர்கள், இந்து பெயர்கள் முஸ்லிம் பெயர்களாக மாற்றம் கண்டுள்ளன. பல சமயத்தினர் வாழ்கின்ற நாட்டில் பெயர்கள் மாற்றம் காணத்தான் செய்யும்.  ஒருவரின் சமயத்தை அடையாளம் காண்பதற்கு அவரின் பின்னணியைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதனை விட்டு குறுக்கு வழியை நாடுவது சமயத்திற்கு எதிரான செயல். அதைத்தான் இஸ்லாமியத் துறை செய்கிறது! ஒரு இந்துவை, அவர் இறந்த பிறகு, ஒரு இஸ்லாமியராக மாற்றி, அவரை இஸ்லாமிய முறைப்படி  அவரை மையத்துக் கொல்லையில் அடக்கம்  செய்வது - ஒரு பயங்கரவாத செயலுக்குச் சமம்! இறந்த பிறகு ஒரு மனிதரை சமய சாயம் பூசி அவரின் இறப்பிற்குப் பின்னரும் அவருக்கும் அவரின் குடும்பத்துக்கும் நிம்மதியை இழக்க வைப்பது மிகவும் வருந்தத்தக்க செயல்.

ஆமாம்,இறந்தவரின் பெயர் தான் என்ன? மகாட் சுலைமான். (மலாய்ப் பெயர்)  மனைவின் பெயர் பார்வதி சுப்பையா. (இந்துப் பெயர்) மகாட் சுலைமானின் குடும்பத்தினர் தாங்கள் பௌத்த - இந்து சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் என்று விளக்கம் கொடுத்து விட்ட பிறகும் கூட - அவர் இஸ்லாமியர் - என்று படிப்பற்றவர் சொல்லலாம். ஆனால் இவர்கள் சொல்லலாமா?


வருத்தமே!

ஏழு சந்தேகப்பேர்வழிகள் கைது...!


சமீபத்தில் டத்தோ கிராமாட்,  சமயப்பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் 23 பேர் மாண்டனர்.  அவர்களில்  21 மாணவர்களும், 2 வார்டன்களும் அடங்குவர்.

இதன் தொடர்பில் ஏழு மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அனைவரும் 11 வயதிலிருந்து 18 வயது வரை உள்ள மாணவர்கள். குறைந்த வயதினராய் இருப்பதால் இவர்களுக்குத் தூக்குத் தண்டனை என்பது சாத்தியமில்லை என்பதாக பிரதமர்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்லினா ஓஸ்மான் கூறியிருக்கிறார்.

ஒன்றை நாம் கவனிக்கிறோம். தீ விபத்து நடந்ததிலிருந்து தீ வைத்தது யார் என்பதில் போலீசார் கவனம் செலுத்தினர். உடனடியாகவும் அதில் வெற்றியும் கண்டனர். 

ஆனால் வேறு ஒரு கோணத்தையும் நாம் பார்க்கிறோம். முதலில் இந்தப்பள்ளியை நடத்துவதற்கு அரசு அனுமதி இல்லை. காரணம் போதுமான பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பு இல்லாத பள்ளியை நடத்துவதற்கு பள்ளி நிர்வாகத்திற்கு யார் அனுமதி தந்தது? அனுமதி எழுத்தில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயமாக அது வாய்மொழி வழியாக இருக்க வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் இந்தப்பள்ளி கடந்த இரண்டு ஆண்டுகளாக எப்படி இயங்க முடியும்? போதுமான பாதுகாப்பு இல்லாமல் ஒரு பள்ளி நடத்த முடியும் என்றால் ..... அங்குக் கையூட்டும்... ஒரு காரணமாகத்தானே இருக்க வேண்டும்!

காவல்துறை வெகு சீக்கிரத்தில் நடவடிக்கை எடுத்து மாணவர்களைக் கைது செய்திருக்கிறது. பாராட்டுகிறோம். ஆனால் முக்கிய குற்றவாளிகளை இன்னும் வெளியே விட்டு வைத்திருக்கிறது என்பது நமக்கு வருத்தத்தை அளிக்கிறது. இந்த மாணவர்களை விட முதல் பெரிய குற்றவாளிகள் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் சட்டத்தை மதிக்காத அமலாக்க அதிகாரிகள் தான்.  மாணவர்களைக் கைது செய்யலாம் காரணம் அவர்களது குடும்பத்தினர் ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர்.  ஆனால் தெரிந்தும் தவறு செய்திருக்கிறார்களே அவர்களை ஏன் வெளியே விட்டு வைக்க வேண்டும்? தவறு செய்தவர்கள் யார்?  சமயக்கல்வியைக் கற்றுக் கொடுப்பவர்கள். ஒழுக்க நெறிகளைப் போதிப்பவர்கள்! இவர்களே கையூட்டை வளர்ப்பவர்கள் என்றால் இந்த வருங்கால மாணவர்கள் எப்படிப் பட்டவர்களாக இருப்பார்கள்? அப்படியென்றால் சமயமே கையூட்டை வளர்க்கிறது என்று தானே மாணவர்கள் நினைப்பார்கள்?

ஏழு சந்தேகப்பேர்வழிகள் கைது சரி. மற்றவர்களை இன்னும் வெளியே விட்டு வைத்திருப்பது சரியல்ல!