Thursday, 30 May 2019

சமய நெறிகள் போதிக்கப்பட வேண்டும்

நம் நாட்டில் எந்த ஒரு மதமும் புதிதாக வந்தது அல்ல. எல்லாம் நீண்ட காலமாக இங்கு நடப்பில் உள்ள மதங்கள் தான். 

இஸ்லாம், கிறிஸ்துவம், பௌத்தம், பாஹாய், இந்து மதம் - இவைகளெல்லாம் காலங்காலமாக நம்மிடையே உள்ளே மதங்கள் தான். ஒன்றுமே புதிதல்ல. ஒரு வேளை ஒவ்வொரு மதத்தினரும் பிற மதங்களைப் பற்றி அறியாதவர்களாக இருக்கலாம். அது தேவை இல்லை என்று நினைத்திருக்கலாம்.  ஆனால் பள்ளிவாசல்கள் நமக்குத் தெரியும். இந்துக் கோவில்கள் நமக்குத் தெரியும். கிறிஸ்துவ தேவாலயங்கள் நமக்குத் தெரியும். பௌத்தக் கோவில்கள் நமக்குத்  தெரியும்.  இவைகளெல்லாம் வழிப்பாட்டுத் தலங்கள் என்பதை மாணவப் பருவத்திலிருந்தே நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். காரணம் பள்ளி செல்லுகின்ற போதும் சரி, வருகின்ற போதும் சரி ஏதோ ஒர் இடத்தில் ஏதோ ஒன்று நமது கண்களுக்கு அகப்படாமல் போகாது. வழிப்பாட்டுத் தலங்கள் வணக்கத்துக்கு உரியவை,  புனிதம் கொண்டவை என்கிற ஒரு புரிதல் நமக்கு உண்டு. அதனால் தான் அதற்குரிய மரியாதையை நாம் கொடுத்து வருகிறோம். 

வெறும் வழிப்பாட்டுத் தலங்கள் தான் என்றாலும் அவைகள் மீது நமக்குள்ள மரியாதை குறையவில்லை. கட்டடங்களுக்கே நாம் மரியாதைக் கொடுக்கிறோம் என்றால் அங்கு வழிபடும் பக்தர்கள் மீது நமக்கு என்ன பிரச்சனை?  அவர்களையும் நாம் மதிக்கிறோம்.  அதனால் தான் இந்நாட்டில் மதம் என்பது என்றுமே ஒரு பிரச்சனையாகவோ,  தடையாகவோ இருந்ததில்லை. எந்த ஒரு மதமும் உயர்ந்தது, தாழ்ந்தது என்கிற எண்ணமே நமக்கு வந்ததில்லை 

ஆனால் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதனை அரசியல்வாதிகள் கையில் எடுத்தால் அது அனர்த்தமாகி விடும் என்பதை நாம் பார்க்கிறோம்.  ஒன்றுமே இல்லாத பிரச்சனையை ஊதி பெரிதாக்கி அதனை தங்களது இலாபத்திற்குப் பயன்படுத்துபவர்கள் தான் அரசியல்வாதிகள். அவர்களுக்கு அது தான் வாக்குச் சீட்டை கொண்டு வரும் துருப்புச் சீட்டு. 

எது எப்படி இருந்தாலும் நமது இளம் தலைமுறையினர் ஒவ்வொரு வரும் தங்களது மதம் மட்டும் அல்ல பிற மதங்களில் உள்ள நெறிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு மதமும் அநியாங்களையும், அக்கிமரங்களையும், அடிதடிகளையும் பின் பற்றச் சொல்லவில்லை.  மதங்கள் நல்ல பாதைகளைக் காட்டுகின்றன.  நல்ல போதனைகளைக் கொடுக்கின்றன. நல்ல நெறிகளுக்கு வழி  காட்டுகின்றன. 

சமய நெறிகள் என்பது அனைவருக்குமே! அனைத்துச் சமய நெறிகளும் அனைவரும் கற்றுத் தெளிய வேண்டும்!

எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

எச்சரிக்கை! எச்சரிக்கை!  எச்சரிக்கை!  இவ்வளவு தான் நாம் சொல்ல முடியும். 

பெருநாள் காலம் அல்லவா.  ஒவ்வொரு பெருநாள் காலங்களிலும் இன்று எத்தனை சாலை விபத்துகள் என்று தான் நாம் கணக்கிடுகிறோம்! எல்லா பெருநாள் காலங்களிலும் - தீபாவளியோ, சீனப் புத்தாண்டோ, ஹரி ராயாவோ - எதுவாக இருந்தாலும்  - சாலை விபத்துக்களுக்குக் குறைச்சல் இல்லை.  ஒன்றா இரண்டா சாலை விபத்துகள்?  சாலை மரணங்கள்?

நாம் சொல்ல வருவதெல்லாம் சாலை விபத்துகளைக் குறையுங்கள். நம் அனைவருக்குமே அதில் பங்குண்டு என்பதை மறவாதீர்கள். சாலை விதி முறைகளைப் பின் பற்றுங்கள். 

அலட்சியமாகக் கார்களை ஓட்டாதீர்கள்.  அப்பா வீட்டுக்குப் போகிறோம், அம்மா வீட்டுக்குப் போகிறோம் - எல்லாமே மகிழ்ச்சி தான். அந்த மகிழ்ச்சி வீடு போய் சேரும் வரை இருக்க வேண்டும்.  மகிழ்ச்சியோடு வீடு திரும்பும் வரை இருக்க வேண்டும். கொஞ்சம் அலட்சியம் காட்டினால் அனைத்தும் தவிடு பொடியாகி விடும்!

சாலைகளில் ஒரு சிறிய அலட்சியம் காட்டினால் கூட அடுத்த  நிமிடமே  நாம் நாமாக இருக்க மாட்டோம். கார்களில் பாதுகாப்பாக  பயணம் செய்வோம். கொஞ்ச நேரம் பிடித்தாலும் பரவாயில்லை.  பொறுமையாகப்  பயணம் செய்வோம்.  

பெருநாள்  காலங்களில்  நாம்  அனைவருமே  பெற்றோர்களின்  வீடுகளுக்குப்  போய் வருவது  என்பது மிகவும்  பிடித்தமான  ஒரு விஷயம். பெற்றோர்களைப்  பிரிந்து  எங்கெங்கோ வேலை  செய்து  கொண்டிருக்கிறோம்.  இது  போன்ற  பெருநாள்  காலங்களில்  தான்  பெற்றோர்களைப்  போய் பார்த்து விட்டு வர முடியும். நமது பயணங்கள் மகிழ்ச்சியாக  அமைய  வேண்டும். 

தனி ஆளாக  இருந்தால்  பொது  போக்குவரத்துகளைப்  பயன் படுத்துவது  புத்திசாலித் தனம். அங்கும்  நெருக்கடி  தான்.  என்ன செய்வது?   கார்களில் பயணம் செய்யும் போதும் நெருக்கடி தான்.   ஓர் ஐந்து நிமிடப் பயணத்தை  இரண்டு மணி நேர பயணமாக  பெருநாள்  காலங்கள்  மாற்றி விடும்! இதெல்லாம்  நமக்குத்  தெரியாமலா  இருக்கிறோம்? 

அதனால் தான்  இளைஞர்கள் பலர் மோட்டார் சைக்கள்களைப்  பயன் படுத்துகின்றனர். தவறு இல்லை.   ஆனால் சாலைகளில் அலட்சியம்  காட்ட வேண்டாம் என்பதே நமது  வேண்டுகோள்.  காரணம் சாலை  விபத்துக்களில் பெரும்பாலும் அடிபடுபவர்கள் மோட்டார் சைக்கள்  ஓட்டிகளே.  அதிகமாக மரணத்தை தழுபவர்களும் அவர்களே.

கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். சாலைகளைச்  சாலைகளாகப் பயன்படுத்துங்கள்.  சர்க்கஸ்  வேலைகளை அங்குக் காட்ட வேண்டாம்.  மகிழ்ச்சியாக பெருநாளைக் கொண்டாடுங்கள். 

எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

Wednesday, 29 May 2019

மீண்டும் ம.இ.கா. ஏற்றுக்கொள்ளப்படுமா?

மீண்டும் ம.இ.கா. இந்தியர்களால் வரவேற்கப்படுமா?  அதாவது வெளியே இருக்கும் சிலரை உள்ளே இழுப்பதன் மூலம் ம.இ.கா. இந்தியர்களிடையே செல்வாக்கைப் பெற முடியுமா?

முடியாது என்றே நான் நினைக்கிறேன்.  இது சரியாகவும் இருக்கலாம், சரியில்லாமலும் இருக்கலாம்.  இன்றைய நிலையில் ம.இ.கா.வால் எந்த செல்வாக்கையும் இந்தியர்களிடையே பெற முடியாது. ஒரு வேளை இன்னும் அறுபது ஆண்டுகள் போனால் அது நடக்கலாம்!

சரி, அப்படியே உடனடியாக நடக்க வேண்டும் என்றால் ம.இ.கா. என்ன செய்ய வேண்டும்? 

என்னுடைய  ஆலோசனைகளை இதோ கூறுகிறேன்:

இப்போதும் நம் கண்  முன்னே நிற்பது  மைக்கா ஹோல்டிங்ஸ் தான்.  மைக்கா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இப்போது வரை அதன் அங்கத்தினர்களுக்குச் சேர வேண்டிய  நியாயமான, சட்டப்படி கிடைக்க வேண்டிய இலாபத்தை அவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். இறந்து போனவர்களுக்கு அவர்களின் வாரிசுகளுக்குக் கொடுக்கலாம் 

ம.இ.கா. வினரின் மூலம் பல நிலங்களை இந்திய சமுதாயம் இழந்திருக்கிறது. அது கேபிஜே வும் சேர்த்துத் தான் அத்தோடு கடைசியாக பேரா மாநிலத்தின் 2000 ஏக்கர்  தமிழ்ப்பள்ளிகளுக்கான நிலம் உட்பட. 

இன்னும் பல தில்லுமுல்லுகள் உண்டு.  உதாரணத்திற்கு செடிக். ஏம்ஸ்ட் போன்ற கல்லுரிகள்.   இவைகளைத் திரும்ப இந்திய சமுதாயத்திற்குக் கொடுத்துவிட்டாலே போதும்.  வேறு  தேவை இல்லை. ம.இ.கா. வுக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை தானாகக் கிடைத்துவிடும். 

ம.இ.கா. கட்சி என்பது சாதாரணம்அல்ல. அது கற்பாறையின் மேல் கட்டப்பட்ட ஒரு கோட்டை.   ஆனால் சாமிவேலு போகும்போது அதனை வெடி வைத்து சிதறடித்து விட்டுப் போய்விட்டார்!  அது தரைமட்டமாகிவிட்டது!

இனி இருப்பவர்களோ அல்லது இனி வரப்போகிறவர்களோ அதனை அப்படியெல்லாம் கட்டி எழுப்பிவிட முடியாது! யார் இருந்தாலும், யார் வந்தாலும் ம.இ.கா.வின் சொத்துக்களின் மீது தான் அவர்கள் கண் இருக்குமே தவிர வேறு நோக்கங்கள் இருக்க முடியாது!  இருப்பவர்களோ, வருபவர்களோ அவர்களின் பின்னணியைப் பார்த்தாலே போதும் கட்சியை வைத்துத் தான் அவர்கள் பிழைப்பு நடத்துவார்களே தவிர இந்தியர்களின் பக்கம் அவர்கள் வரவே மாட்டார்கள்!

ம.இ.கா.வை இந்தியர்கள் ஏற்றுக்கொள்ள வலுவான காரணங்கள்  எதுவும் இல்லை. பக்கத்தான் அரசில் உள்ள இந்தியத் தலைவர்கள் இப்போது தான் பதவி ஏற்றவர்கள்.  ஓர் ஆண்டில் அவர்களை மதிப்பிட முடியாது.  அவர்களுக்குப் போதுமான நேரம் கொடுக்கப்பட வேண்டும். நிச்சயமாக  இங்கும் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள்.  நல்லது செய்வார்கள். அப்படி அவர்கள் செய்யாவிட்டாலும்  அவர்களை  செய்ய வைக்க இப்போதைய தலைமுறையால்  முடியும். 

ம.இ.கா...?  இந்திய சமுதாயம்  ஏற்றுக்கொள்ளாது...!