Wednesday, 31 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (17)

  கூட்டத்தோடு கும்மாளம் வேண்டாம்!

யாரோ ஒருவர் ஒரு தொழிலைச் செய்கிறார். அவருடைய நல்ல நேரம் உயர்ந்த நிலைக்கு வந்து விட்டார். அது அவருடைய நேரம் என்று சும்மா தள்ளி  விட முடியாது. அவருடைய உழைப்பு அதில் போடப்பட்டிருக்கிறது.  அவர் வகுத்த செயல்திட்டங்கள் அவர் உயர உறுதுணையாக இருந்திருக்கின்றன. இப்படிப் பல காரணங்கள்.

ஆனால் அதைப் பார்த்து ஒருவர் நாமும் அந்த தொழிலுக்குப் போய் பணத்தை அள்ளலாம் என்று போட்டி போட்டால் என்ன ஆகும்? கையில் இருப்பதெல்லாம் ஆகும்! புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொணட கதை எல்லாம் நமக்கு வேண்டாம்!

ஒருவர் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்கும் போது அவர் ஏன் தெர்ந்தெடுத்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதற்கு ஒரு காரணம் இருக்கும்.  அந்த தொழில் அவருக்கு ஏற்றத்தைக் கொடுக்கும் என்பது அவருக்குத் தெரியும். ஏதோ ஒன்று அவருக்கு அப்படிச் சொல்லுகிறது.

பலர் பலவிதமான ஆலோசனைகள் கொடுக்கலாம். நல்லெண்ணமாகவும் இருக்கலாம் அல்லது கெட்ட எண்ணத்துடனும் கொடுக்க வாய்ப்புண்டு.  யாரைத் தான் நம்புவதோ என்கிற புலம்பல் வேண்டாம். யாரையும் நம்ப வேண்டாம்.  தக்கவர்களிடம் சென்று அறிவுரைக் கேளுங்கள். ஆலோசனை கேளுங்கள். தீர விசாரியுங்கள். ஆனால் முடிவு என்பது உங்களுடையதாக இருக்கட்டும்.

ஒருவர் தொழிலைத் தேர்ந்தெடுப்பதில்  பல காரணங்கள் உண்டு. பொருளாதாரம் கூட காரணமாக  இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட தொகைக்குள் தொழிலைச் செய்ய கட்டாயம் இருக்கலாம். அதனால் எந்த காரணமாக இருந்தாலும் சரி நீங்களே முடிவு செய்யுங்கள். தொழிலில் எது நேர்ந்தாலும் சரி யாரையும் குற்றம் சாட்ட முயலாதீர்கள்.

ஒரு தொழிலில் பணம் கொட்டுகிறது என்றால்  அந்த தொழிலையே இன்னொருவர் செய்யும் போது பணம் கொட்டாமல் போகலாம்! அதைத்தான் நாம் சொல்லுகிறோம்.  வெறும் பணம் என்பது நோக்கமாக இருக்கக் கூடாது.

ஒருவர் செய்கின்ற தொழிலில் ஆர்வம், அக்கறை இருக்க வேண்டும். அக்கறை இல்லாத தொழில் நம்மவிட்டு அக்கரைக்குச் சென்று விடும்!

அதைத்தான் உளவியளாளர்கள் உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள் என்கிறார்கள். பிடித்ததைச் செய்யும் போது நேரங்காலம் தெரிவதில்லை. எல்லாம் கூடி வரும்.

அதனால்,  அவன் செய்து பணம் சம்பாதித்தான் நாமும் அதையே செய்வோம் என்கிற உங்கள் கிறுக்குத்தனத்தைத் தொழிலில் காட்ட வேண்டாம்! அவரவர் பாதையை அவரவர் தேர்ந்தெடுக்க வேண்டும்!

கும்மாளம் அடிப்பது எளிது! கூத்தும் வேண்டாம்! கும்மாளமும் வேண்டும்! கூடி வாழ்வோம்! கோட்டையைப் பிடிப்போம்!

Monday, 29 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.............(16)

 தொழில் உங்களைத் தனித்துக் காட்டும்

   

                                         ஆச்சி மசாலா நிறுவனர் - பத்மசிங் ஐசக்   

 நாம் வேலை செய்வதையே தொழிலாகக் கொண்டு விட்டோம்!

நம்மிடையே ஒரு நாட்டு  வழக்கு உண்டு. கோழி மேய்த்தாலும் கும்பனியில் மேய்க்க வேண்டும் என்பார்கள்! அதாவது அரசாங்கத்து வேலைக்கு ஈடு இணையில்லை என்பது அதன் பொருள். இதற்கு ஒரு விளக்கம் சொல்லுவார்கள். அதைக் கேட்பதற்கு ஒரு கூட்டம்! இப்படியே நம் மீது ஒரு கருத்தைத் திணித்து நம்மை  அதற்கு அடிமையாக்கி விட்டார்கள்.

ஒரு காலக் கட்டத்தில் வெளி நாடுகளுக்குப் போய் தங்களது தொழிலை கடல் வழியாக  அறிமுகப்படுத்தியவர்கள்  தமிழர்கள். அந்த அளவுக்கு தமிழர்களின் வாணிபம் கொடிகட்டிப் பறந்தது. 

இப்போது வெளி நாடுகளுக்குப் போய் தான் நமது பொருள்களை  அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற நிலையெல்லாம் இல்லை. கணினியை வைத்துக் கொண்டே பல காரியங்களைச் சாதித்து விடலாம்.

தமிழ் நாட்டிலிருந்து என்னன்னவோ பொருள்கள் இங்கு வந்து குவிகின்றன. அதே போல நமது நாட்டிலும் உள்ளூரில் தயாராகும் பொருள்களும் ஏராளம். ஒரு சில பொருள்கள் பிற இனத்தவரிடமும் பிரபலமாக விளங்குகின்றன.

இது விளம்பர உலகம்.  வாய் வழி மூலம் என்பதும் உண்டு. அது தரத்தில் உயர்தரமானவை என்றால் மட்டுமே எடுபடும். விளம்பரம் என்பது மிக விரைவில் மக்களிடம் போய் சேருகின்றன.  வாய்மொழியோ அல்லது விளம்பரமோ எல்லாமே தரத்தின் அடிப்படையில் தான் விற்பனை ஆகின்றன.

எது எப்படியிருந்தாலும் இது வணிக உலகம். மேலே நாம் பார்க்கும் மசாலா "கிங்" என்று போற்றப்படும் பத்மசிங் ஐசக் ஏதோ பணக்கார வம்சத்தில் இருந்து வந்தவர் என்று நாம் நினைத்தால் மிக மிகத் தவறு! சாதாரண ஏழைக் குடும்பம் தான். அடித்துப் பிடித்து தனது வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டார். எல்லாம் கடின உழைப்பு தான். சும்மா எதுவும் வருவதில்லை. உழைக்க தயாராய் இருந்தால் உலகமே நமது கைக்கு வரும்! இன்று பத்மசிங்  தொழில் உலகில் தமிழகத்தின் அசைக்க முடியாத மனிதராக வலம் வருகிறார். 

எது அவரைத் தனித்துக் காட்டுகிறது? தொழில் உலகம் தான். இன்று அவருடைய பொருள்கள் இந்தியாவில்  மட்டும் அல்ல உலக அளவில் உள்ள இந்தியர்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.  அவருடைய பொருள்களைத் தெரியாதவர்கள் இல்லை என்கிற அளவுக்குப் பிரபலமாக இருக்கின்றன!

அவர் வெறும் பணத்திற்காகவா மதிக்கப்படுகிறார்? இல்லை! அவருடைய சாதனைகளுக்காக போற்றப்படுகிறார்! ஆமாம்! அது சாதனை தான். குறிப்பிட்ட சில பொருள்களை வைத்துக் கொண்டு அவைகளை இலட்சக்கணக்கில் உலகெங்கும் வினியோகம் செய்வது சாதனை தானே!

யாரால் இந்த சாதனைகளைச் செய்ய முடியும்? ஒரு தொழிலதிபரால் தான் செய்ய முடியும்!

தொழிலில் உங்கள் சாதனைகளைக் காட்டுங்கள்! தனித்து நில்லுங்கள்!


Sunday, 28 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (15)

 எல்லாவற்றையும் அனுபவமாக எடுத்துக் கொள்ளுங்கள்

நமது இளைஞர்கள் பலர் தொழில் பயிற்சிக் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் போது "ப்ரேக்டிகல்" பயிற்சிக்காக பல நிறுவனங்களுக்கு வந்து சேருகின்றனர். இதில் ஒரு சில இளைஞர்கள் திறமைசாலிகளாக இருக்கின்றனர். பல இளைஞர்கள் ஏதோ பொழுதை போக்குவதற்காக வருபவர்கள்.

நமது இளைஞர்கள் பலர் திறமைசாலிகள்  என்பதில் ஐயமில்லை. ஒரு சிலர் தான் அக்கறையற்றவர்களாக இருக்கின்றனர்,

நமது இந்திய மாணவர்கள்,  உண்மையைச் சொன்னால்,  பன்முகத் திறமைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஒரே வருத்தம் அவர்களது திறமையை வைத்து அவர்களால் தங்களது வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள தவறுகின்றனர்.

பயிற்சி பெற எந்த நிறுவனத்திற்குச் சென்றாலும் சரி மாணவர்கள் பயிற்சியில் முழுமனதோடு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பயிற்சி என்பது சாதாரண விஷயம் அல்ல. பயிற்சி உங்களுக்கு நல்லதொரு அனுபவத்தைக் கொடுக்கிறது. வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதை உங்களுக்கு உணர்த்துகிறது. என்ன தான் கல்லூரிகளில் படித்தாலும் அது அனுபவத்தைக் கொண்டு வராது. அதற்கு நீங்கள் நிறுவனங்களுக்குச் சென்று தான் பயிற்சி பெற வேண்டும். பயிற்சிகளின் மூலம் தான்  ஒரு சில அனுபவங்களைப் பெற முடியும்.

நாம் மாணவர்களுக்குச் சொல்ல வருவதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும் பயிற்சிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.  நீங்க ஒரு வேலையில் சேரும் போது அந்த பயிற்சி உங்களுக்குக்  கை கொடுக்கும். பொதுவாக எங்கள் நிறுவனத்தில் எங்களிடம் பயிற்சி பெற்றவர்களையே நாங்கள் வேலைக்கு எடுக்கும் பழக்கம் உண்டு. ஒரு மாணவர் பயிற்சி பெறும் போது  அப்பொழுதே அவருடைய  குணாதிசயங்களைப் படித்து விட முடியும்.

புதிதாக ஒருவரைத் தங்கள் நிறுவனத்தில் எடுப்பதை விட தங்களிடம் பயிற்சி பெற்ற ஒருவரையே நிறுவனங்கள் விரும்புகின்றன. காரணம் அவர்களுக்கு ஏறக்குறைய  அந்த நிறுவனங்களைப் பற்றிய தேவைகளைத்  தெரிந்திருக்கும்.

ஒன்றைக் குறிப்பிட வேண்டும். பயிற்சிக்கு வரும் சீன மாணவர்கள் நூறு விழுக்காடு தங்களது ஒத்துழைப்பைக் கொடுக்கின்றனர். இந்திய மாணவர்களும் சரி, மலாய் மாணவர்களும் சரி ஐம்பது விழுக்காட்டினர் தான் நூறு விழுக்காடு ஒத்துழைப்பைக் கொடுக்கின்றனர்.

எல்லாமே  அனுபவம் தான். அனுபவம் இல்லதவர்களை  நிறுவனங்கள்  ஏற்பதில்லை.  அதனால் நிறுவனங்களில் கிடைக்கின்ற பயிற்சியைச் சரிவர பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அனுபவத்தை விட சரியான ஆசான் யாருமில்லை!