Sunday 28 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (15)

 எல்லாவற்றையும் அனுபவமாக எடுத்துக் கொள்ளுங்கள்

நமது இளைஞர்கள் பலர் தொழில் பயிற்சிக் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் போது "ப்ரேக்டிகல்" பயிற்சிக்காக பல நிறுவனங்களுக்கு வந்து சேருகின்றனர். இதில் ஒரு சில இளைஞர்கள் திறமைசாலிகளாக இருக்கின்றனர். பல இளைஞர்கள் ஏதோ பொழுதை போக்குவதற்காக வருபவர்கள்.

நமது இளைஞர்கள் பலர் திறமைசாலிகள்  என்பதில் ஐயமில்லை. ஒரு சிலர் தான் அக்கறையற்றவர்களாக இருக்கின்றனர்,

நமது இந்திய மாணவர்கள்,  உண்மையைச் சொன்னால்,  பன்முகத் திறமைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஒரே வருத்தம் அவர்களது திறமையை வைத்து அவர்களால் தங்களது வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள தவறுகின்றனர்.

பயிற்சி பெற எந்த நிறுவனத்திற்குச் சென்றாலும் சரி மாணவர்கள் பயிற்சியில் முழுமனதோடு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பயிற்சி என்பது சாதாரண விஷயம் அல்ல. பயிற்சி உங்களுக்கு நல்லதொரு அனுபவத்தைக் கொடுக்கிறது. வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதை உங்களுக்கு உணர்த்துகிறது. என்ன தான் கல்லூரிகளில் படித்தாலும் அது அனுபவத்தைக் கொண்டு வராது. அதற்கு நீங்கள் நிறுவனங்களுக்குச் சென்று தான் பயிற்சி பெற வேண்டும். பயிற்சிகளின் மூலம் தான்  ஒரு சில அனுபவங்களைப் பெற முடியும்.

நாம் மாணவர்களுக்குச் சொல்ல வருவதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும் பயிற்சிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.  நீங்க ஒரு வேலையில் சேரும் போது அந்த பயிற்சி உங்களுக்குக்  கை கொடுக்கும். பொதுவாக எங்கள் நிறுவனத்தில் எங்களிடம் பயிற்சி பெற்றவர்களையே நாங்கள் வேலைக்கு எடுக்கும் பழக்கம் உண்டு. ஒரு மாணவர் பயிற்சி பெறும் போது  அப்பொழுதே அவருடைய  குணாதிசயங்களைப் படித்து விட முடியும்.

புதிதாக ஒருவரைத் தங்கள் நிறுவனத்தில் எடுப்பதை விட தங்களிடம் பயிற்சி பெற்ற ஒருவரையே நிறுவனங்கள் விரும்புகின்றன. காரணம் அவர்களுக்கு ஏறக்குறைய  அந்த நிறுவனங்களைப் பற்றிய தேவைகளைத்  தெரிந்திருக்கும்.

ஒன்றைக் குறிப்பிட வேண்டும். பயிற்சிக்கு வரும் சீன மாணவர்கள் நூறு விழுக்காடு தங்களது ஒத்துழைப்பைக் கொடுக்கின்றனர். இந்திய மாணவர்களும் சரி, மலாய் மாணவர்களும் சரி ஐம்பது விழுக்காட்டினர் தான் நூறு விழுக்காடு ஒத்துழைப்பைக் கொடுக்கின்றனர்.

எல்லாமே  அனுபவம் தான். அனுபவம் இல்லதவர்களை  நிறுவனங்கள்  ஏற்பதில்லை.  அதனால் நிறுவனங்களில் கிடைக்கின்ற பயிற்சியைச் சரிவர பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அனுபவத்தை விட சரியான ஆசான் யாருமில்லை!


No comments:

Post a Comment