Wednesday 31 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (17)

  கூட்டத்தோடு கும்மாளம் வேண்டாம்!

யாரோ ஒருவர் ஒரு தொழிலைச் செய்கிறார். அவருடைய நல்ல நேரம் உயர்ந்த நிலைக்கு வந்து விட்டார். அது அவருடைய நேரம் என்று சும்மா தள்ளி  விட முடியாது. அவருடைய உழைப்பு அதில் போடப்பட்டிருக்கிறது.  அவர் வகுத்த செயல்திட்டங்கள் அவர் உயர உறுதுணையாக இருந்திருக்கின்றன. இப்படிப் பல காரணங்கள்.

ஆனால் அதைப் பார்த்து ஒருவர் நாமும் அந்த தொழிலுக்குப் போய் பணத்தை அள்ளலாம் என்று போட்டி போட்டால் என்ன ஆகும்? கையில் இருப்பதெல்லாம் ஆகும்! புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொணட கதை எல்லாம் நமக்கு வேண்டாம்!

ஒருவர் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்கும் போது அவர் ஏன் தெர்ந்தெடுத்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதற்கு ஒரு காரணம் இருக்கும்.  அந்த தொழில் அவருக்கு ஏற்றத்தைக் கொடுக்கும் என்பது அவருக்குத் தெரியும். ஏதோ ஒன்று அவருக்கு அப்படிச் சொல்லுகிறது.

பலர் பலவிதமான ஆலோசனைகள் கொடுக்கலாம். நல்லெண்ணமாகவும் இருக்கலாம் அல்லது கெட்ட எண்ணத்துடனும் கொடுக்க வாய்ப்புண்டு.  யாரைத் தான் நம்புவதோ என்கிற புலம்பல் வேண்டாம். யாரையும் நம்ப வேண்டாம்.  தக்கவர்களிடம் சென்று அறிவுரைக் கேளுங்கள். ஆலோசனை கேளுங்கள். தீர விசாரியுங்கள். ஆனால் முடிவு என்பது உங்களுடையதாக இருக்கட்டும்.

ஒருவர் தொழிலைத் தேர்ந்தெடுப்பதில்  பல காரணங்கள் உண்டு. பொருளாதாரம் கூட காரணமாக  இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட தொகைக்குள் தொழிலைச் செய்ய கட்டாயம் இருக்கலாம். அதனால் எந்த காரணமாக இருந்தாலும் சரி நீங்களே முடிவு செய்யுங்கள். தொழிலில் எது நேர்ந்தாலும் சரி யாரையும் குற்றம் சாட்ட முயலாதீர்கள்.

ஒரு தொழிலில் பணம் கொட்டுகிறது என்றால்  அந்த தொழிலையே இன்னொருவர் செய்யும் போது பணம் கொட்டாமல் போகலாம்! அதைத்தான் நாம் சொல்லுகிறோம்.  வெறும் பணம் என்பது நோக்கமாக இருக்கக் கூடாது.

ஒருவர் செய்கின்ற தொழிலில் ஆர்வம், அக்கறை இருக்க வேண்டும். அக்கறை இல்லாத தொழில் நம்மவிட்டு அக்கரைக்குச் சென்று விடும்!

அதைத்தான் உளவியளாளர்கள் உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள் என்கிறார்கள். பிடித்ததைச் செய்யும் போது நேரங்காலம் தெரிவதில்லை. எல்லாம் கூடி வரும்.

அதனால்,  அவன் செய்து பணம் சம்பாதித்தான் நாமும் அதையே செய்வோம் என்கிற உங்கள் கிறுக்குத்தனத்தைத் தொழிலில் காட்ட வேண்டாம்! அவரவர் பாதையை அவரவர் தேர்ந்தெடுக்க வேண்டும்!

கும்மாளம் அடிப்பது எளிது! கூத்தும் வேண்டாம்! கும்மாளமும் வேண்டும்! கூடி வாழ்வோம்! கோட்டையைப் பிடிப்போம்!

No comments:

Post a Comment