Wednesday, 4 January 2023

தமிழையும் பாதுகாப்போம்!

 


புத்தாண்டில் இது போன்ற செய்திகளைப் படிக்கின்ற போது நமக்கு அது மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றது.

காரணம், நமது கலைகள் குறிப்பாக தமிழர்களின் கலைகள்,  நமது நாட்டில் இன்னும் தொய்வில்லாமல் கற்றுக்கொடுக்கப் படுகின்றனவே  என்பது நல்ல செய்தி தான்.

ஆனால் சிறு நெருடல்.  இது எனது முகநூலில் வந்த அறிவிப்பாக எடுத்துக் கொள்ளலாம். விளம்பரம் அல்ல. 

தமிழர் சம்பந்தப்பட்ட இந்த கலைகளெல்லாம் ஏனோ, யாருக்கோ படித்துக் கொடுக்கின்ற கலையாக மாறிவிட்டனவோ என்று தான் தோன்றுகிறது. மேலே இந்த அறிவிப்பை தமிழில் வெளியிட்டால் யாருக்கும் புரியாதோ என்கிற நிலைமைக்கு நாம் வந்துவிட்டோமோ என்று தான்  நினைக்கத் தூண்டுகிறது!

கலைகள் நம்முடையவை. ஆனால் படித்துக் கொடுப்பவர்கள் தமிழை அறியாதவர்கள். எல்லாரும் அல்ல,  ஒரு சிலர்!  ஆங்கிலத்தில் படித்துக் கொடுப்பவர்கள்! அதை நாம் தவறு சொல்லவில்லை. ஆனால் தமிழ் தெரிந்த பிள்ளைகளைக் கூட ஆங்கிலத்திற்கு  அவர்களை மாற்றி விடுவதில் வல்லவர்கள்!

தமிழர்கள் வாழுகின்ற ஒரு சில நாடுகளில் தமிழ் மொழியைப் படிக்க  வாய்ப்பில்லாதவர்கள் ஆங்கிலத்திலோ அல்லது அந்நாட்டு மொழியிலோ அதனைத் தங்களுக்கு ஏற்றவாறு மொழிமாற்றம் செய்து  நமது கலைகளை வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை நாம் பாராட்டுகிறோம். ஆனால் நமது நாட்டில் தமிழ் மொழி படிக்கின்ற வாய்ப்பு இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் இங்கே தமிழ் மொழியே இல்லை என்கிற நினைப்பில் செயல்படுவதும் நமது கலைகளை எல்லாம் ஆங்கில மயமாக்குவதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல.

நாம் சொல்ல வருவதெல்லாம் நமது கலைகளில் எப்படி ஆர்வத்தைக் காட்டுகிறோமோ  அது போல நமது மொழியிலும் நாம் ஆர்வத்தைக் காட்ட வேண்டும் என்பது தான்.

இது போன்ற அறிவிப்புகளை நாம் வெளியிடும் போது அதைக் கொஞ்சம் தமிழிலும் அறிவிக்கலாம். ஏதோ ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே இந்தக் கலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது போல செயல்படுவது மனதுக்கு நெருடலை ஏற்படுத்துகிறது.

நமது மனங்களைக் கொஞ்சம் விசாலப்படுத்துவோம்!


Tuesday, 3 January 2023

இது வெற்றியா?

 


நான்கு இலக்க சூதாட்டம் கெடா மாநிலத்திலும் தடை செய்யப்பட்டுவிட்டது. பாஸ் கட்சியின் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் இந்த சூதாட்டம் ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ளன.

சூதாட்டம் தடைசெய்யப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.   சூதாட்டத்தினால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன. அன்றும் சரி இன்றும் சரி அது ஒரு தொடர்கதையே. 

சரி, இந்தத் தடையினால் சூதாட்டம் முற்றிலுமாக துடைத்து ஒழித்து விடமுடியுமா?  அதுவும் கெடா மாநிலம் ஓராண்டு காலத்திற்கு முன்னரே சூதாட்டம் தடை செய்யப்படும்  என்று அறிவித்துவிட்டது!  ஓராண்டு காலம் என்பது போதுமான காலம்.  சூதாட்ட மையங்களின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை எல்லாம் முன்கூட்டியே திட்டமிட போதுமான அவகாசம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது!

சட்டத்தைக் கொண்டு வரும் முன்னரே சூதாட்ட நிறுவனங்களும் பல மாற்று வேலைகளைச் செய்து கொண்டு, தயார் நிலையில் உள்ளனர்.  இத்தனை ஆண்டுகள் கடைகளை வைத்து அதிகாரபூர்வமாக சூதாட்டத்தை நடத்தியவர்கள் இனி மறைமுகமாக செய்வார்கள். அவ்வளவு தான். எந்த வித்தியாசமும் இல்லை!  அவர்கள் எங்கெங்கு செய்வார்கள்  என்பதெல்லாம் வாடிக்கையாளர்களுக்கு அத்துப்படியான விஷயம்! வாடிக்கையாளர்களுக்கு எதுவும் புதிதல்ல!

சூதாட்டத்தை நடத்தி வந்த கடைக்காரர்களும்  சும்மா கையை வீசிக்கொண்டிருக்கப் போவதில்லை. கடைகள் இருக்காதே தவிர அவர்கள் வழக்கம் போல இயங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். சூதாட்ட நிறுவனங்களும் தங்களது செயல்பாட்டை நிறுத்தப் போவதில்லை.  அது எப்படி எப்படியோ, ஏதோ ஒரு வழியில் அது செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கும்!

சூதாட்டத்தை ஒழிப்பது நல்ல காரியம்.  ஆனால் அப்படியெல்லாம் அதனை அவ்வளவு  எளிதில் ஒழித்துவிட முடியாது.   நமது நாட்டைப் பொறுத்தவரை  சூதாட்டம் என்பது நீண்ட நாள் நிலைத்துவிட்ட ஒன்று. எனது சிறு வயது  காலத்திலிருந்தே, எனது பள்ளிப்பருவ காலத்திலிருந்தே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இப்போது இந்தத் தடை அல்லது 'ஒழித்துவிட்டோம்' என்று சொன்னாலும் சரி அப்படியெல்லாம் ஒழித்துவிட முடியும் என்று  நான் நம்பவில்லை. இதனை வைத்து அரசியல் செய்யலாம்; கொஞ்சம் ஆட்டம் காட்டலாம்! 

இன்றைய அரசாங்கம் இதற்குத் தடை விதித்தாலும்  நாளைய அரசாங்கம் அதனை மீண்டும் கொண்டு வரலாம்! அது தான் மலேசியா! பல்லினங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் ஒரு சில விஷ்யங்களை அவ்வளவு எளிதில் ஒழித்துவிட முடியாது!

இதனை ஒரு தற்காலிக வெற்றி என்று சொல்லலாம்!

Monday, 2 January 2023

தவறான நடவடிக்கை!

 

மிகவும் தவறான ஒரு நடவடிக்கை!  மலாக்காவில் நடந்து நிகழ்வு.

கைப்பந்து (வாலிபால்) விளையாட்டில்,  பதினான்கு வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகளின் போட்டி ஒன்றில்,  போட்டியில் குறைவான புள்ளிகளை எடுத்தனர் என்பதற்காக அதன் பயிற்றுவிற்பாளர்  இரண்டு மாணவிகளைக்  கன்னத்தில்  அறைந்த சம்பவம்   இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.   பெற்றோர்களுக்கு இது மாபெரும் அதிர்ச்சி என்பது தான் உண்மை.

அடித்து வேலை வாங்குவது எல்லாம் பயிற்றுநரின்  பாட்டனார்  காலத்தில் நடந்திருக்கிலாம். இப்போது அதெல்லாம் நடக்கின்ற காரியமா?  இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் மீது கை வைப்பதே குற்றம் என்கிற சூழல்  நிலவுகிறது.

பள்ளிக் குழந்தைகளாக இருந்தாலும் சரி, வேலை செய்கின்ற  பெரியவர்களாக ஒருந்தாலும் சரி இப்போதெல்லாம் யாரிடமும் அதிகாரம்  பண்ணுகின்றவர்களை  யாருக்கும் பிடிப்பதில்லை.  அதிகாரம் பண்ணி இப்போதெல்லாம் யாரிடமும் வேலை  வாங்க முடியாது!

பள்ளிப்பிள்ளைகளா?  இன்னும்  தொட்டா சிணுங்கிகள்! இப்போதெல்லாம் நமக்குத் தெரிந்த ஒரே வழி அவர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது தான்.

அந்தப் பயிற்றுநர், பாராட்டுவதன் வழி அந்த மாணவிகளை நல்ல விளையாட்டாளர்களாக உருவாக்கியிருக்கலாம். பாராட்டுதல்களுக்கு  மயங்காதார் யார்? நல்ல வார்த்தைகளைச் சொல்லி அவர்களை இன்னும் நல்ல விளையாட்டாளர்களாக மாற்றி அமைத்திருக்கலாம். 

ஆனால் நடந்தது என்ன?  இப்போது அந்த மாணவிகள் தொடர்ந்து விளையாட அந்த மாணவிகளின் பெற்றோர்கள் அனுமதிப்பார்களா என்பதே கேள்விக்குறி! அந்த மாணவிகளுக்கும் கைப்பந்தில் இருந்த ஆர்வமும் குன்றிப் போயிருக்கும்.

பயிற்றுநர் ஓர் ஆசிரியர். அவருக்கு நாம் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. குழந்தைகளோடு எப்படி பழகுவது என்பதை அறிந்தவர். ஆனால் என்ன செய்வது? சுழி சரியில்லையே!