Wednesday 4 January 2023

தமிழையும் பாதுகாப்போம்!

 


புத்தாண்டில் இது போன்ற செய்திகளைப் படிக்கின்ற போது நமக்கு அது மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றது.

காரணம், நமது கலைகள் குறிப்பாக தமிழர்களின் கலைகள்,  நமது நாட்டில் இன்னும் தொய்வில்லாமல் கற்றுக்கொடுக்கப் படுகின்றனவே  என்பது நல்ல செய்தி தான்.

ஆனால் சிறு நெருடல்.  இது எனது முகநூலில் வந்த அறிவிப்பாக எடுத்துக் கொள்ளலாம். விளம்பரம் அல்ல. 

தமிழர் சம்பந்தப்பட்ட இந்த கலைகளெல்லாம் ஏனோ, யாருக்கோ படித்துக் கொடுக்கின்ற கலையாக மாறிவிட்டனவோ என்று தான் தோன்றுகிறது. மேலே இந்த அறிவிப்பை தமிழில் வெளியிட்டால் யாருக்கும் புரியாதோ என்கிற நிலைமைக்கு நாம் வந்துவிட்டோமோ என்று தான்  நினைக்கத் தூண்டுகிறது!

கலைகள் நம்முடையவை. ஆனால் படித்துக் கொடுப்பவர்கள் தமிழை அறியாதவர்கள். எல்லாரும் அல்ல,  ஒரு சிலர்!  ஆங்கிலத்தில் படித்துக் கொடுப்பவர்கள்! அதை நாம் தவறு சொல்லவில்லை. ஆனால் தமிழ் தெரிந்த பிள்ளைகளைக் கூட ஆங்கிலத்திற்கு  அவர்களை மாற்றி விடுவதில் வல்லவர்கள்!

தமிழர்கள் வாழுகின்ற ஒரு சில நாடுகளில் தமிழ் மொழியைப் படிக்க  வாய்ப்பில்லாதவர்கள் ஆங்கிலத்திலோ அல்லது அந்நாட்டு மொழியிலோ அதனைத் தங்களுக்கு ஏற்றவாறு மொழிமாற்றம் செய்து  நமது கலைகளை வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை நாம் பாராட்டுகிறோம். ஆனால் நமது நாட்டில் தமிழ் மொழி படிக்கின்ற வாய்ப்பு இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் இங்கே தமிழ் மொழியே இல்லை என்கிற நினைப்பில் செயல்படுவதும் நமது கலைகளை எல்லாம் ஆங்கில மயமாக்குவதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல.

நாம் சொல்ல வருவதெல்லாம் நமது கலைகளில் எப்படி ஆர்வத்தைக் காட்டுகிறோமோ  அது போல நமது மொழியிலும் நாம் ஆர்வத்தைக் காட்ட வேண்டும் என்பது தான்.

இது போன்ற அறிவிப்புகளை நாம் வெளியிடும் போது அதைக் கொஞ்சம் தமிழிலும் அறிவிக்கலாம். ஏதோ ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே இந்தக் கலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது போல செயல்படுவது மனதுக்கு நெருடலை ஏற்படுத்துகிறது.

நமது மனங்களைக் கொஞ்சம் விசாலப்படுத்துவோம்!


No comments:

Post a Comment