மிகவும் தவறான ஒரு நடவடிக்கை! மலாக்காவில் நடந்து நிகழ்வு.
கைப்பந்து (வாலிபால்) விளையாட்டில், பதினான்கு வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகளின் போட்டி ஒன்றில், போட்டியில் குறைவான புள்ளிகளை எடுத்தனர் என்பதற்காக அதன் பயிற்றுவிற்பாளர் இரண்டு மாணவிகளைக் கன்னத்தில் அறைந்த சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. பெற்றோர்களுக்கு இது மாபெரும் அதிர்ச்சி என்பது தான் உண்மை.
அடித்து வேலை வாங்குவது எல்லாம் பயிற்றுநரின் பாட்டனார் காலத்தில் நடந்திருக்கிலாம். இப்போது அதெல்லாம் நடக்கின்ற காரியமா? இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் மீது கை வைப்பதே குற்றம் என்கிற சூழல் நிலவுகிறது.
பள்ளிக் குழந்தைகளாக இருந்தாலும் சரி, வேலை செய்கின்ற பெரியவர்களாக ஒருந்தாலும் சரி இப்போதெல்லாம் யாரிடமும் அதிகாரம் பண்ணுகின்றவர்களை யாருக்கும் பிடிப்பதில்லை. அதிகாரம் பண்ணி இப்போதெல்லாம் யாரிடமும் வேலை வாங்க முடியாது!
பள்ளிப்பிள்ளைகளா? இன்னும் தொட்டா சிணுங்கிகள்! இப்போதெல்லாம் நமக்குத் தெரிந்த ஒரே வழி அவர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது தான்.
அந்தப் பயிற்றுநர், பாராட்டுவதன் வழி அந்த மாணவிகளை நல்ல விளையாட்டாளர்களாக உருவாக்கியிருக்கலாம். பாராட்டுதல்களுக்கு மயங்காதார் யார்? நல்ல வார்த்தைகளைச் சொல்லி அவர்களை இன்னும் நல்ல விளையாட்டாளர்களாக மாற்றி அமைத்திருக்கலாம்.
ஆனால் நடந்தது என்ன? இப்போது அந்த மாணவிகள் தொடர்ந்து விளையாட அந்த மாணவிகளின் பெற்றோர்கள் அனுமதிப்பார்களா என்பதே கேள்விக்குறி! அந்த மாணவிகளுக்கும் கைப்பந்தில் இருந்த ஆர்வமும் குன்றிப் போயிருக்கும்.
பயிற்றுநர் ஓர் ஆசிரியர். அவருக்கு நாம் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. குழந்தைகளோடு எப்படி பழகுவது என்பதை அறிந்தவர். ஆனால் என்ன செய்வது? சுழி சரியில்லையே!
No comments:
Post a Comment