Tuesday 3 January 2023

இது வெற்றியா?

 


நான்கு இலக்க சூதாட்டம் கெடா மாநிலத்திலும் தடை செய்யப்பட்டுவிட்டது. பாஸ் கட்சியின் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் இந்த சூதாட்டம் ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ளன.

சூதாட்டம் தடைசெய்யப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.   சூதாட்டத்தினால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன. அன்றும் சரி இன்றும் சரி அது ஒரு தொடர்கதையே. 

சரி, இந்தத் தடையினால் சூதாட்டம் முற்றிலுமாக துடைத்து ஒழித்து விடமுடியுமா?  அதுவும் கெடா மாநிலம் ஓராண்டு காலத்திற்கு முன்னரே சூதாட்டம் தடை செய்யப்படும்  என்று அறிவித்துவிட்டது!  ஓராண்டு காலம் என்பது போதுமான காலம்.  சூதாட்ட மையங்களின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை எல்லாம் முன்கூட்டியே திட்டமிட போதுமான அவகாசம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது!

சட்டத்தைக் கொண்டு வரும் முன்னரே சூதாட்ட நிறுவனங்களும் பல மாற்று வேலைகளைச் செய்து கொண்டு, தயார் நிலையில் உள்ளனர்.  இத்தனை ஆண்டுகள் கடைகளை வைத்து அதிகாரபூர்வமாக சூதாட்டத்தை நடத்தியவர்கள் இனி மறைமுகமாக செய்வார்கள். அவ்வளவு தான். எந்த வித்தியாசமும் இல்லை!  அவர்கள் எங்கெங்கு செய்வார்கள்  என்பதெல்லாம் வாடிக்கையாளர்களுக்கு அத்துப்படியான விஷயம்! வாடிக்கையாளர்களுக்கு எதுவும் புதிதல்ல!

சூதாட்டத்தை நடத்தி வந்த கடைக்காரர்களும்  சும்மா கையை வீசிக்கொண்டிருக்கப் போவதில்லை. கடைகள் இருக்காதே தவிர அவர்கள் வழக்கம் போல இயங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். சூதாட்ட நிறுவனங்களும் தங்களது செயல்பாட்டை நிறுத்தப் போவதில்லை.  அது எப்படி எப்படியோ, ஏதோ ஒரு வழியில் அது செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கும்!

சூதாட்டத்தை ஒழிப்பது நல்ல காரியம்.  ஆனால் அப்படியெல்லாம் அதனை அவ்வளவு  எளிதில் ஒழித்துவிட முடியாது.   நமது நாட்டைப் பொறுத்தவரை  சூதாட்டம் என்பது நீண்ட நாள் நிலைத்துவிட்ட ஒன்று. எனது சிறு வயது  காலத்திலிருந்தே, எனது பள்ளிப்பருவ காலத்திலிருந்தே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இப்போது இந்தத் தடை அல்லது 'ஒழித்துவிட்டோம்' என்று சொன்னாலும் சரி அப்படியெல்லாம் ஒழித்துவிட முடியும் என்று  நான் நம்பவில்லை. இதனை வைத்து அரசியல் செய்யலாம்; கொஞ்சம் ஆட்டம் காட்டலாம்! 

இன்றைய அரசாங்கம் இதற்குத் தடை விதித்தாலும்  நாளைய அரசாங்கம் அதனை மீண்டும் கொண்டு வரலாம்! அது தான் மலேசியா! பல்லினங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் ஒரு சில விஷ்யங்களை அவ்வளவு எளிதில் ஒழித்துவிட முடியாது!

இதனை ஒரு தற்காலிக வெற்றி என்று சொல்லலாம்!

No comments:

Post a Comment