Monday, 30 November 2020

தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியங்கள் தொடர வேண்டும்!

 முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கைப் பற்றி நமக்குப் பலவித அபிப்பிராயங்கள் உண்டு.

அவரின் மிகப் பெரிய பலவீனம் ஊழல் தான்! அது அவரது மனைவியின் ரூபத்தில் வந்து அவருக்கு மிகப் பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி விட்டது.

அவரது முன்னாள் பெருமைகளை எடுத்துச் சொல்ல மேடை அமைத்துக் கொடுப்பதில்,  மக்கள் சக்தி இயக்கத் தலவர்  டத்தோஸ்ரீ தனேந்திரனும்  ஒருவர்.  அது அவரின் எஜமான விசுவாசத்தைக் காட்டுகிறது. நமக்கு அதில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை.

முன்னா பிரதமர் நஜிப் அவர்களைப் பற்றி நல்லவிதமான செய்திகள் வருகின்றன. "நான் தான் தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகமாக உதவியிருக்கிறேன்"  என்று அவர் தொடர்ந்து சொல்லி வருகிறார். அதே போல இந்தியர்களின் முன்னேற்றத்திற்கும் அவர் அதிகமாக உதவி செய்திருப்பதாக அவரே சொல்லுகிறார்.

இந்தியர்களின் நலனுக்காக நிறுவப்பட்ட "செடிக்" அமைப்பைப்பற்றித் தான் அவர் இந்தியர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக தான் உதவியதாகக் கூறுகிறார் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்

.செடிக் அமைப்பைப் பற்றி நமக்கு ஏற்கனவே ஓரளவு தெரியும். பெரும்பாலான செடிக் நிதி உதவி ம.இ.கா.வினருக்குத் தான் சேர்ந்தது என்கிற குற்றச்சாட்டும் உண்டு. அந்தப் பணம் இந்தியர்களுக்கு முழுமையாகப் போய்ச்  சேராமல்,  அந்த நிதி மீண்டும் அரசாங்கத்திற்கே ஒப்படைக்கப்பட்டதாக சொல்வதும் உண்டு.  அதாவாது நிதி உதவி பெற இந்தியர்களில் யாரும் தகுதி பெறவில்லை என்பதால் அந்தப் பணம் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அதாவது அந்த நிதி  பிரதமரின் சொந்த பயனுக்காக ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டது!

அதனால் இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சி என்பது ம.இ.கா. அடுத்து பிரதமர் என்பதோடு அது முடக்கப்பட்டு விட்டது! அது இந்தியர்களின் வளர்ச்சி அல்ல!

அதனை விடுவோம். தமிழ்ப்பள்ளிகளுக்கு அவர் உதவி இருக்கிறார் என்பதை நாமும் ஒப்புக் கொள்ளுகிறோம். அதற்காக அவரைப் பாராட்டுகிறோம். அவர் காலத்தில் புதிய தமிழ்ப்பள்ளிகளும் திறக்கப்பட்டிருக்கின்றன. குறைவான எண்ணிக்கையாக இருந்தாலும் அது மனநிறைவானது என்பதில் ஐயமில்லை.

இன்னொன்றையும் நாம் ஞாபகப்படுத்துகிறோம். அவர் காலத்தில் மெட் ரிகுலேஷன் கல்வி,  போலிடெக்னிக் (தொழிற்கல்வி) போன்ற கல்விக்கூடங்களிலும் இந்திய மாணவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டன; இன்றும் நடைமுறையில் இருக்கின்றது. அதற்காக நிறைய முயற்சிகள் எடுத்த முன்னாள் ம.இ.கா. தாலைவர் டத்தோஸ்ரீ  G.பழனிவேல் அவர்களையும் நினைவு கூறுகிறோம்.

ஆக, நாம் முன்னாள் பிரதமர் நஜிப் அவர்களை முற்றிலுமாக ஒதுக்கிவிடவில்லை. தமிழ்ப்பள்ளிகளுக்கான அவரது சேவை மறந்து விடவில்லை. அதனை நாம் பாராட்டுகிறோம். ஆனால் அவரது ஊழலைத் தான் நாம் வெறுக்கிறோம்.

இப்போது நமது கேள்வியெல்லாம்: இப்போதும் அதே ம.இ.கா. இப்போதும்  அதே அவர்களின் ஆட்சி.  ஏன் இப்போது இந்த  தேக்க நிலை? குறிப்பாக கெடா மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரிகிறது. மலாக்காவில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரிகிறது. மத்தியில் என்ன நடக்கிறது என்பதும் நமக்குத் தெரிகிறது.

ஆனால் நஜிப் அவர்களது தலைமையில் இனி ஆட்சி அமையும் என்பதை ஏற்பதற்கில்லை. அது நடவாத காரியம்.  இனி அவரது அளுங்கட்சி அவரது பணியைத் தொடர வேண்டும். தொடருமா என்பது தான் கேளவி.

அது தொடராத வரை நஜிப் அவர்களின் புகழைப் பாடலாம்!


Sunday, 29 November 2020

தடுப்பு மருந்து உறுதிச் செய்யப்பட வேண்டும்!

 வெகு விரைவில் கோவிட்-19 தொற்றுநோய்க்கான மருந்துகள் நமது ஊர் எல்லைகளை அலங்கரிக்கும் என்னும் செய்திகள் நமக்கு ஆறுதலாக இருக்கின்றன.

என்ன செய்வது? உலகமே தொற்று நோயினால் துவண்டு போய்க் கொண்டிருக்கிறதே  தவிர இதுவரை எந்த ஒரு பயனான கண்டுபிடிப்புக்களும் வெளியாகவில்லை. 

இந்த நேரத்தில் சீனா தனது கண்டுபிடிப்பை நமது நாட்டில் அறிமுகப்படுத்தப் போகிறது. அதாவது நாம் அந்த மருந்தை வாங்கிப் பயன்படுத்தப் போகிறோம்.  அது  நல்ல  செய்திதான்.

நிச்சயமாக அந்த மருந்தை நமது நாட்டு ஆய்வகங்களில் ஆய்வு செய்த பின்னரே அந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என நம்பலாம்.

ஆனால் சீனாவின்  பொருள்கள் என்றாலே நமக்கு இயற்கையாகவே கொஞ்சம்  அச்சம் எழத்தான் செய்கிறது. தரமற்ற பொருள்களுக்குப் பெயர் போனவர்கள் சீனர்கள். அதுவும் இலஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகளை நாம் கொண்டிருந்தால் சொல்லவே வேண்டாம்.  தரமற்ற மருந்துகளைத் தான் நாம் வாங்க வேண்டி வரும்!  அதனைத்தான் நாம் பயன்படுத்தப்பட வேண்டி வரும். பிறகு தரமில்லை என்று சொல்லி கோடிக்கணக்கான பணம் வீணடிக்கப்படும்!  இதெல்லாம் நடக்காது என்று சொல்ல முடியாது. ஒரு சில நாடுகளில் அது நடந்திருக்கிறது. 

சீனர்கள் எதுபற்றியும் கவலைப்படுவதில்லை. யாராக இருந்தாலும் அவர்களைத் தங்களது வலைக்குள் சிக்க வைத்து விடுவார்கள்! அது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இங்கேயும் நடக்கும்.

நமக்கு வேண்டியதெல்லாம் தரமான மருந்துகள். அவ்வளவு தான்.  ஆனால் நமது அரசியல்வாதிகளுக்கு அப்படி ஒரு தேவை இருக்காது. அவர்களுக்கென்று தனி மருத்துவமனை, தனி சிகிச்சை அனைத்தும் தனி தனி! ஆனால் பொது மக்களுக்கோ அப்படி ஒரு நிலை இல்லை. அனைத்தும் அரசாங்கத்தைச் சார்ந்தே இருக்கின்றன; இருக்கும்.

அதனால் அரசாங்கம் தனது ஆய்வுகளை ஒளிவு மறைவு இன்றி செய்ய வேண்டும். அது மக்களுக்கும் வெளிச்சத்துக்கு வரவேண்டும்.  பொது மக்களுக்கு நல்ல சிகைச்சைகள் கிடைக்க வேண்டும். 

அது தான் நமது நோக்கம். தடுப்பு மருந்து தடுப்பு மருந்தாகவே இருக்க வேண்டும்.  ஏதோ தட்டுமுட்டு சாமான்களைப் போல வாங்கிப் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

நல்லதே நடக்கும் என நம்புவோம்!

Friday, 27 November 2020

நாட்டுக்கு அந்நியரா!

 ஒரு சில செய்திகள் நம்மை சிரிக்க வைக்கின்றன!

கெடா மந்திரி பெசார், முகமட் சனுசி முகமட் நோர்,   நாட்டுக்குப் புதியவரா  அல்லது இப்போது தான் எங்கிருந்தோ விடுதலையாகி வந்திருக்கிறாரா என்று கேட்கத் தோன்றுகிறது!

இந்து கோயில்களை உடைக்கும் உடைக்கிற வேலைகளை அவருக்கு யாரும் கொடுக்கவில்லை. அவராக எடுத்துக் கொண்டிருக்கிறார். அதே போல இந்து கோயில்களுக்கு மானியங்கள் கிடையாது என்பதாக கையை விரைத்திருக்கிறார்.  இதுவும் அவராக எடுத்த முடிவு. அவருக்கு அந்த அதிகாரங்களை யாரும் கொடுக்கவில்லை. கொடுக்கவும் மாட்டார்கள். அவராகவும் எடுத்துக் கொள்ள முடியாது.

வழிபாட்டுத் தலங்களுக்கு அவர் பூசாரி அல்ல.  எது நல்லது எது  கெட்டது என்று தீர்மானிக்கும் உரிமையை யாரும் அவருக்குக் கொடுக்கவில்லை.

முகமட் சனுசி நாட்டுக்குப் புதியவரல்ல. ஆனால் புதியவர் போல பாவ்லா காட்டுகிறார்! ஏன் பிறந்ததிலிருந்து இந்நாள் வரை இந்து கோவில்களை அவர்  பார்த்ததே இல்லையா? இப்போது தான் அவர் கோவிலகளைப் பார்க்கிறாரா? 

மந்திரி பெசார்,  ஒரு வேளை கோவில்களை இப்போது தான் புதிதாகப்  பார்ப்பவராக இருக்கலாம். ஆனால் கோவில்கள் இந்நாட்டுக்குப் புதிதல்ல என்பதை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் அவர் கொஞ்சம் சரித்திரத்தைப் பின் நோக்கிப் பார்க்க வேண்டும். இவர் பிறப்பதற்கு முன்னரே இங்குக்  கோவில்கள் இருக்கின்றன.அவர் தந்தையார் பிறப்பதற்கு முன்னரே இங்குக்  கோவில்கள் இருக்கின்றன. அவர் பாட்டனார் பிறப்பதற்கு முன்ன்ரே இங்குக் கோவில்கள் இருக்கின்றன.  

அதைவிட இன்னும் பின் நோக்கிப் போனால் இன்னும் பெரிதாக சரித்திர  சான்றுகள் வரும். அது தான் பூஜாங் பள்ளத்தாக்கு.  சரித்திரங்கள் பொய் சொல்லாது. கொஞ்சம் மெனக்கட்டு, ஆள் வைத்து, அதனையும் அவர் ஆராய்ந்து பார்க்கலாம். 

ஆக  மந்திரி பெசாருக்கு எதுவும் புதிது இல்லை. இன்று நேற்று புதிதாக அறிமுகமாகவும் இல்லை. 

இவருக்கு முன்னாள் இருந்த மந்திரி பெசார்களை விட தன்னை ஒரு படி மேல் என்று நினைக்கவும் வாய்ப்பில்லை.  அவர்கள் எல்லாம் முட்டாள்களும் இல்லை.   அவர்களை அப்படி இவர் நினைப்பதாகவே தொன்றுகிறது.

மந்திரி பெசார் என்பவருக்கு மிக முக்கியமான கடமைகள் உண்டு. ஏதோ ஓர் இனத்தைப் பிரதிநிதிப்பவர் அல்ல அவர் என்பதை முதலில்  புரிந்து கொள்ள வேண்டும். அவர் மாநிலம்,  ஏதோ ஓரினத்தைச் சார்ந்து உள்ளதாக அவர் நினைப்பதைக்  கைவிட வேண்டும். மூன்று இனங்கள் உள்ளது தான் ஒரு மாநிலம். எல்லா மாநிலங்களின் நிலைமையும் அப்படித்தான் உள்ளன.

கெடா மந்திரி பெசார், கெடா மாநிலத்தின் உள்ள அத்தனை குடிமக்களுக்கும் பொறுப்பானவர். மாநிலத்தின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தான் அவருக்கு அந்த பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. பொறுப்பே பொறுப்பற்று நடந்தால் எப்படிப்  பொறுப்பது?

மந்திரி பெசார் தனது பொறுப்பை உணர்ந்து நடப்பார் என நம்புவோம்.