Sunday, 27 December 2020

இனிமேலும் அப்படித்தானா!

மனிதன் என்றால்  என்றும் மாறிக் கொண்டிருப்பவன். அப்போது தான் அவன் மனிதன். 

குறிப்பாகச் சொன்னால் கருத்துகள் மாறும் போது நம்மை நாமே மாற்றிக் கொள்ளுகிறோம். தவறான கருத்துகளை அப்படியே இழுத்து வைத்துக் கொண்டிருப்பதில்லை. .நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு பத்துமலையில் தைப்பூசத் திருவிழா நடக்குமா என்பது கேள்விக்குறி என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இப்போதே இந்து  சங்கம் "வேண்டாம்!" என்கிறது என்பதாக ஒரு வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது! நம்மால் இதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை! 

நமது நாட்டில் இந்து சங்கம் மட்டும் தான் இந்துக்களைப் பிரதிநிதிக்கும் ஓர் அதிகாரப்பூர்வமான சங்கம் என்பதை  நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். குறைபாடுகள் இருக்கலாம். குறைபாடுகள் இல்லை என்றால் கூட இருக்கிறது என்று அடித்துச் சொல்ல நம்மில் பலர் தயாராக இருக்கிறோம்! என்ன செய்வது? நாம் அப்படியே வளர்ந்துவிட்டோம்!

திருவிழா நடக்குமா, நடக்காதா என்பது சுகாதார அமைச்சு என்ன சொல்லுகிறதோ அது தான் நடக்கும். முதலில் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். பத்துமலை என்பது இலட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்ற ஒரு புண்ணிய தலம்.

இப்போது கொரோனா தொற்று குறைவதாகவும் தெரியவில்லை. அதனால் பத்துமலையில் எந்த அளவை வைத்து பக்தர்கள் வரலாம் போகலாம் என்று கணக்கிடுவது பெரும் சிரமம். மூன்றில் ஒரு பகுதி என்றாலும் சாதாரண விஷயமல்ல.

ஒவ்வொருவரையும் காய்ச்சல் இருக்கிறதா என்று சோதனை செய்து அனுப்ப வேண்டும். இவர்களும் உண்மையைச் சொல்லப் போவதில்லை. தொற்று பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

இப்படி ஒரு சூழலில் தைப்பூசத் திருவிழாவுக்கு இந்து சங்கம் தான் தடையாக இருக்கிறது என்று குற்றம் சாட்டுவது சுத்த அபத்தம். அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பது நமக்குப் புரிகிறது.

ஓர் இயக்கத்தை அவதுறு பேசுவது மிக எளிது.  ஆனாலும் அவர்களை நாம் நம்ப வேண்டும்.  யாரையாவது நம்பித்தான் ஆக வேண்டும். ஒவ்வொருவரையும் குற்றம் சொல்லிக் கொண்டும், குறை கண்டு கொண்டும் இருந்தால் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.  ஆனால் அதன் முடிவு தான் என்ன?

நாம், நமது தலைவர்களை நம்ப வேண்டும்.  சொல்லுவதை  ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி காலாகாலமும் நம்பாமலே போய்க் கொண்டிருக்க முடியாது.

நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது! திருந்துவோம்! இனிமேலாவது திருந்துவோம்!

Friday, 25 December 2020

நன்றி உஸ்தாஸ்!

 மனிதம் இன்னும் வாழ்கிறது என்பதற்கு உஸ்தாஸ் எபிட் லூ ஒர் உதாரணம். வாழ்த்துகள் உஸ்தாஸ்!

Thanks: FMT News

ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் கணேஷ் சௌந்தரராஜா-பரமேஸ்வரி தம்பதியினரைப் பற்றியான செய்தியை FMT வெளியிட்டிருந்தது.

அவர்கள் வீடு எரிந்த பின்னர் தங்குவதற்கு வீடு இல்லை.வாடகை வீட்டில் வாடகைக் கொடுக்க கணவரின் சம்பளம் போதுமானதாக இல்லை. அவர் செய்வது பாதுகாவலர் வேலை. 

அதனால், வேறு வழி இல்லாமல், அவர் தனது காரிலேயே தனது மனைவி மூன்று பிள்ளைகளுடன் வாழ வேண்டிய கட்டாயம். 


இப்படித்தான் கடந்த எட்டு மாதங்களாக தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.அவர்களது கடைசி  மகள் கீர்த்தனா தேவி, எட்டு மாதங்களுக்கு முன்னர் பிறந்தவள், காரைத் தவிர வேறு உலகத்தைப் பார்த்ததில்லை.  அவர்கள் தண்ணீர் பிரச்சனையத் தீர்த்துக் கொள்ள அருகிலுள்ள பொது கழிப்பறைகள் பயன்படுத்தினர். பசியைத் தீர்த்துக் கொள்ள ஏதோ அவ்வப்போது - சொல்லும்படியாக ஒன்றுமில்லை.

நமது இயக்கங்கள் பிரச்சனை வந்த போது, வந்தார்கள்! பார்த்தார்கள்! அரிசி பருப்புகளைக் கொடுத்தார்கள்! படம் எடுத்தார்கள்! அதற்கு அப்புறம் அனைவரும் மறந்து போனார்கள்! அவர்கள்  தங்குவதற்கு எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை! ஒரு குடும்பத்திற்கு என்ன முக்கியம் என்பதைக் கூடத் தெரியாத தலைவர்கள் எல்லாம் தொண்டு செய்ய வந்துவிட்டார்கள்!

மனிதர்கள் கைவிட்டாலும் கடவுள் கைவிடமாட்டார் என்பார்கள். செய்தியைப் படித்துவிட்டு உஸ்தாஸ் எபிட் லூ,  ஜோகூரிலிருந்து பினாங்கிற்கு ஓடோடி வந்தார். ஒரு வீடு பார்த்துக் கொடுத்தார். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்  கொடுத்தார்.  தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனைப் பெட்டி இன்னும் பல எலெக்டிரிக் பொருள்களை வாங்கிக் கொடுத்தார். போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு வாங்கிக் குவித்திருக்கிறார்! அரசாங்கத்திலிருந்து எந்த நேரத்திலும் அவருக்கும் வீடு கிடைக்கலாம். அது வரை வீட்டுக்கான வாடைகையும் அவர் கொடுக்க உறுதி அளித்திருக்கிறார்.

இதைத்தான் நாம் மனிதம் என்கிறோம். இதற்கு முன்  எந்த ஒரு உஸ்தாஸும் இப்படி களத்தில் இறங்கி வேலை செய்ததாக ஞாபகமில்லை. உஸ்தாஸ் அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுக்க பிரார்த்திக்கிறோம்.

இனி கணேஷ் சௌந்தரராஜா தனது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்ள வேண்டும்.  பலத்த அடியிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அவர் சொந்தமாக காய்கறி வியாபாரம் செய்ய வேண்டும் என்கிற ஆசையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அது நடக்கும் என நம்பலாம். பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் மறக்கமாட்டார் எனவும் நாம் நம்பலாம்.

நண்பரை நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். இவ்வளவு இக்கட்டான் நிலையிலும் தனது குடும்பத்தைக் காப்பாற்ற அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது.

நன்றி உஸ்தாஸ்! சொல்ல வார்த்தை இல்லை!

Wednesday, 23 December 2020

கோவிட் 19 தடுப்பூசி போடும் முதல் நபர்!

 கோவிட்-19 தடுப்பூசி போடும் முதல் நபர் யார் என்று நாம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை!

அந்த பொறுப்பை நமது பிரதமர் டான்ஸ்ரீ முகம்மது யாசின் எடுத்துக் கொண்டார். அதாவது இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்று அதன் மூலம் அவர் உறுதிப்படுத்துகின்றார்.

இந்த தடுப்பூசியை அவ்வளவு சீக்கிரத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உண்மை தான். அந்த அளவுக்கு அவநம்பிக்கை மக்களிடையே உள்ளது. ஆனால் விஞ்ஞானிகளால் கண்டுபடிக்கப்பட்டுள்ள இந்த மருந்தை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை!

அதனால் தான் பிரதமரே முதல் தடுப்பூசியைப் போட்டு "பயப்படாதீர்கள்!" என்று மக்களுக்கு அறிவுறுத்துகிறார்!

இந்த நேரத்தில் நாமும் சில நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

பெரிதாக ஒன்றுமில்லை. பிரதமருக்குப் பிறகு அவருடைய அமைச்சரவையில் உள்ள அனைவரும் தடுப்பூசிகளைப் போட வேண்டும். அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வது நல்லது.

இதன் மூலம் மக்களைப் பிரதிநிதிக்கும் பிரதிநிதிகள் தடுப்பூசிகளைப் போட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.

இதற்குக் காரணம் இவர்கள் தான் மக்களை ஏமாற்றுபவர்கள் என்று பெயர் எடுத்தவர்கள். இவர்கள் இங்குத் தடுப்பூசி போடாமல் நேரடியாக இங்கிலாந்துக்கோ, அமெரிக்காவுக்கோ, ஆஸ்திரேலியாவுக்கோ போய் தங்களது திமிரைக்  காட்டுபவர்கள்.

அதனால் பிரதமரின் முதல் குறி  இவர்களாகத்தான் இருக்க வேண்டும். இவர்கள் தான் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இவர்கள் இங்கு எதைச் செய்தாலும் அதில் தரமில்லை என்று சொல்லி மேற்கு நாடுகளைப் பார்ப்பவர்கள். அங்கு நோக்கி ஓடுபவர்கள்!

சாதாரணப் பிரச்சனைகளுக்குக் கூட வெளி நாடுகளுக்கு ஓடிப்போய் சிகிச்சை பெறுபவர்கள்.  இவர்கள் எல்லாம் அரசியலில் கொள்ளையடிப்பவர்கள்; கொள்ளையடித்தவர்கள்!

நாம் பிரதமருக்கு சொல்ல வேண்டிய ஆலோசனை என்பது முதலில் நாட்டை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு முதல் மரியாதையாக இருக்கட்டும்! அங்கு ஏதும் ஆபத்து இல்லையென்றால் அத பின்னர் பொது மக்களுக்கு வரட்டும். 

இந்த நேரத்தில் நாம் பிரதமரைப் பாராட்டுவோம்! அத்தோடு அவர்கள் குடும்பத்தையும் பாராட்டுவோம்! அவர்கள் தான் நாட்டுக்கு நல்லதை எண்ணுபவர்கள்!

பிரதமரை வாழ்த்துகிறோம்!