மெட் ரிகுலேஷன் கல்வியைப் பற்றி பேசும்போது ஒன்று மட்டும் தெரிகிறது.
கல்வி அமைச்சு வெளிப்படையாக செயல்படுவதில்லை. ஏதோ ஒன்று அவர்களின் கண்களை மறைக்கின்றது. பல்கலைக்கழகங்களில் எத்தனை இந்திய மாணவர்கள் பயில்கின்றனர் என்கிற விபரம் கூட தெரியவில்லை என்கிறார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.
இந்த நிலையில் மெட் ரிகுலேஷன் பயிலும் இந்திய மாணவர்களைப் பற்றி கேள்வி எழுப்பினால் யாரிடமிருந்து பதில் வரும்? சும்மா ஏனோ தானோ பதில் தான் வருமே தவிர உண்மையான விபரம் வரப்போவதில்லை.
இதிலிருந்து என்ன தெரிகிறது? பயம் தெரிகிறது! ஒரு தலைபட்சமாக நடப்பது தெரிகிறது! கல்வி அமைச்சின் திருட்டுத்தனம் தெரிகிறது! கல்வி அமைச்சு நேர்மையற்ற முறையில் நடப்பது தெரிகிறது!
இதற்கெல்லாம் ஒரே தீர்வு தான் உண்டு. மலாய் மாணவரின் எண்ணிக்கை அதிகம் என்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்கள் தகுதியானவர்களா என்பதில் தான் பிரச்சனை. தகுதியை வளர்த்துக்கொள்ள என்ன தான் பிரச்சனை? அவர்கள் எந்த வகையில் தகுதியற்றவர்கள் என்று கல்வி அமைச்சு முடிவுக்கு வருகிறது?
மலேசிய மாணவர்கள் அனைவருக்கும் ஒரேவித கல்வி முறை தான். எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை. முன்பு சொல்லப்பட்ட காரணங்கள் இப்போதும் சொல்லப்பட்டால் கல்வி அமைச்சு தான் அதற்குக் காரணம். இத்தனை ஆண்டுகள் கல்வித் துறையில் எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை! தரமற்ற கல்வியைத் தவிர மலேசிய மாணவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை!
மெட் ரிகுலேஷன் கல்விக்காக போராட்டம் நடத்துகிறோம். என்ன தான் நடத்தினாலும் நமது மாணவர்களின் எண்ணிக்கை நமக்குத் தெரிவதில்லை. அது ஒரு பக்கம் இருக்கட்டும். அப்படியே இடம் கிடைத்தாலும் மாணவர்கள் எதிர்பார்க்கின்ற கல்வி அவர்களுக்குக் கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லப்படுகிறது. மருத்துவம், எஞ்சினியரிங் போன்ற துறைகளில், தகுதி இருந்தும், அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்கின்றனர்.
இப்படி எல்லாவற்றிலும் புறக்கணிக்கப்பட்டால் மெட் ரிகுலேஷன் கல்வி தேவை தானா என்கிற கேள்வி எழுகிறது. கல்வி அமைச்சு நம்மைத் தரமற்ற நிலைக்குத் தள்ளுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
நாம் அறிவற்ற சமூகம் இல்லையே! கல்வியில் நம்மை வீழ்த்துவது என்பது அவ்வளவு சுலபமா என்ன?
No comments:
Post a Comment