Friday, 31 March 2017

காலணியில் புனித வாசகங்கள்!


நமது நாட்டில் நடைபெறுகின்ற சில விஷயங்கள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன! நாம் என்ன முட்டாள்களா என்று நினைக்கத் தோன்றுகிறது!

ஒரு சிறு பிரச்சனையைக் கையாளக்கூட தகுதியள்ளவர்கள் அரசாங்கத்தில் இல்லையோ என்று நமது புருவங்களை உயர்த்த வேண்டி உள்ளது!

காலணிகளில் கடவுளின் படத்தை அச்சிடப்படுவது என்பது நம் நாட்டில் தொடர்ச்சியாக  நடைபெறுகின்ற ஒரு விஷயம். இது பல ஆண்டுகளாக நடைபெறுகின்றது.

அது தவறு என்று சொல்லக்கூடிய தகுதி அரசாங்கத்தில் யாருக்குமே இல்லை! அதற்கு ஒரே காரணம் அது பெரும்பாலும் இந்துமதக் கடவுளாக இருப்பதால் தான்!

நமது நாட்டின் - முதல்  தேசியக் கோட்பாடே -  இறைவனை மீது நம்பிக்கை வைத்தல். அரசாங்கத்தில் பணி புரிவோர் - குறிப்பாகச் சமயம் சார்ந்த இலாக்காக்கள்   -  பணி புரிபவர்கள் நமது தேசியக் கொள்கைகளைப் புரிந்து வைத்திருக்க வேண்டும். இங்குப் பணிபுரிவோர் "இஸ்லாம்" என்று சொல்லும் போது தான் தூக்கத்திலிருந்து விழித்து எழுவது போல் துள்ளி எழுகிறார்கள்!

இந்து மதம், கிறித்துவ மதம், பௌத்த மதம்  - இந்த மதங்களெல்லாம் தீடீரென்ற்று நேற்று முளைத்த மதங்கள் அல்ல. அவைகளுக்கு மட்டும் தான் இந்த மலேசிய மண்ணில்  நீண்ட பாரம்பரியம் உண்டு.

இந்து மதத்தை எத்தனையோ முறை இழிவுபடுத்தி காலணிகளில் இந்து தெய்வ உருவங்கள் வெளி வந்திருக்கின்றன. அப்போது அரசாங்கத் தரப்பிலிருந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனை ஒரு சிலர் கேலிப் பொருளாகத்தான் பார்த்தனர்.  ஆனால் தொடர்ச்சியாக  மக்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்ததினால் ஏதோ "போனால் போகட்டும்" என்று அரசு தரப்பு நடவடிக்கை எடுத்தது.

ஆனாலும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கத்தால் முடியவில்லை. அது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.  தொடர்வதற்குக் காரணம் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை போதுமானதாக இல்லை. ஒரு மேம்போக்கான நடவடிக்கைக்கு யாரும் மதிப்பளிப்பதில்லை!

ஆனால் இப்போது நடப்பது என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்! இப்போது காலணிகளின் மேல் இஸ்லாமிய புனித வாசகங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன!  ஏதொ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது தெரிகிறது. சரியான நடவடிக்கை இல்லையென்றால் இது தொடரத்தான் செய்யும்.

இஸ்லாம் மட்டும் அல்ல. எந்த மதமாக இருந்தாலும் சரி புனித வாசகங்களையோ, கடவுள் படங்களையோ இது போன்று காலணிகளில் வெளிவரும் போது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு பாகுபாடு, ஒரு சட்டம் என்று வரும் போது இது போன்ற செயல்களை நிறுத்திவிட முடியாது.

நமது நாட்டின் தேசிய கோட்பாட்டில் முதல் கோட்பாடே "இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்" என்பதை சம்பந்தப்பட்ட இலாகாவினர் புரிந்து கொள்ள வேண்டும். அது இஸ்லாமிய இறைவன், கிறித்துவ இறைவன், இந்து இறைவன்,பௌத்த இறைவன் என்று சொல்லப்படவில்லை. இறை நம்பிக்கை என்பது தான் தலையாயது.

வருங்காலங்களிலாவது அலட்சியத்தோடு செயல்படுவதை சமய இலாகாவினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இனி இது போன்ற செயல்கள்  நடவாது பார்த்துக் கொள்வது அவர்களின் கடமை!

Tuesday, 28 March 2017

பொன் ஆர் இன உணர்வு அற்றவரா?


சில பிரச்சனைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

மத்திய இந்திய அமைச்சரவையில் இணை அமைச்சராக இருப்பவர் பொன் ராதாகிருஷ்ணன். இவரால் ஒரு சின்ன செயலையாவது செய்யக்கூடிய திறன் உள்ளவரா என்பது நம்மால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

மீனவர்கள் போராட்டம் நடத்திய போது போரட்டத்தைக் கைவிடும்படி அவர்களிடம் காலில் விழாத குறையாக அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி போராட்டத்தை கைவிடும்படி செய்தார்! இதனால் பிரதமர் மோடியிடம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும் என்பதைத் தவிர அதனால் மீனவருக்கு என்ன பயன் விளைந்தது?

போராட்டம் கைவிடப்பட்ட சில நாள்களிலேயே மீண்டும் இலங்கை கடற்படை மீனவர்களைத் தாக்கியது! அத்தோடு அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தது. பொன் ராதாகிருஷ்ணன் இது பற்றி வாய்த் திறக்கவில்லை! தனக்கு ஒன்றுமே தெரியாதது போல் வாய் மூடி மௌனியாக இருக்கிறார்!

நெடுவாசல் போராட்டம். நெடுஞ்சான்கிடையாக அவர்களிடம் போய் விழுந்தார்!  காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று கதறி அழுது அவர்களையும் அவர்களது போரட்டங்களைக் கை விட வைத்தார்!

அவர்களது போராட்டம் கைவிடப்பட்ட அடுத்த நாளே அங்கு டில்லியில் ஹைட்ரோகார்பன் திட்டம் கையெழுத்து ஆகிறது!

தன்னால் இந்த சமுதாயத்திற்கு உதவ முடியாது என்றால் நல்லத்தனமாக விலகிக் கொள்ள வேண்டும். தன்னால் முடிந்த காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும். அடித்தட்டு மக்களை ஏமாற்றுவதும், கீழ்த்தட்டு  மக்களை ஏமாறச் செய்வதும் மிகவும் கீழான ஒரு செயல் என்பதை அறியாதவரா அவர்?

மத்திய அளவில் ஓர் இணை அமைச்சராக இருக்கும் ஒருவர் மக்களை ஏமாற்றித்தான் பிழைக்க வேண்டும் என்னும் நிலைக்கு ஏன் தள்ளப்பட்டார்? நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை!

பொன்.ஆர் அவர்கள் தமிழ் நாட்டை மத்தியில் பிரதிநிதிக்கிறார்  தமிழக மக்களை அவர் பிரதிநிதிக்கிறார். தமிழ் மக்களின் பிரச்சனைகளை மத்திய அரசுக்குக் கொண்டு செல்வது அவர் வேலை. அவர் கடமை. ஒரு தமிழனுக்குத் துன்பம் வருகிறது என்றாலும் அதனைக் கலைவது அவரது வேலை. தாழ்ந்தவனோ உயர்ந்தவனோ, ஏழையோ பணக்காரனோ  தமிழர்களின் பிரச்சனை என்பது அவரின் பிரச்சனை. இதற்குச் சாக்குப்போக்குகள் தேவை இல்லை. ஏற்கனவே உள்ள கட்சிகள் நிறையவே சாக்குப் போக்குகள் சொல்லிவிட்டன.

இனி மேலும் மற்ற கட்சிகளின் மீது குற்றங்கள் கண்டு பிடிக்காமல் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அவர் செய்ய் வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

அவர் தன்னைத் தமிழன் என்கிற உணர்வோடு அரசியல் செய்யுமாறு நாமும் கேட்டுக் கொள்ளுகிறோம்! அரசியல் இல்லை என்றால் ஏதோ ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் பதவி கிடைக்கும் என்கிற நோக்கத்திற்காக செயல் பட வேண்டாம்!

Sunday, 26 March 2017

கோபி சார்! நீயா? நானா?


கோபி சாரின் கடந்த வாரம் (19.3.17)  ஒளிபரப்பேறிய "நீயா நீனா" நிகழ்ச்சியைப் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

பங்குப் பெற்ற பெண்களைப் பற்றிய விவாதங்கள் நின்ற பாடில்லை! சராமாரியான கேள்விக்கணைகள்! சும்மா விளாசு, விளாசு என்று விளாசிக் கொண்டிருக்கின்றனர். இணையத்தளத்தினருக்கு வாய்ப்புக் கிடைத்தால் என்ன செய்வார்கள் என்பதை இப்போது அந்தப் பெண்கள் உணர்ந்திருப்பார்கள்!

ஆனால் இவர்கள் கருத்தில் நான் வித்தியாசப்படுகிறேன்.

முதலில் இந்தப் பெண்கள் முன்னால் அவர்களின் தாயார்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். பங்கேற்றப் பெண்கள் பலர் தங்களின் தாயார்களைச் சீண்டிப் பார்க்க வேண்டும் என்னும்  கருத்துடையவர்களாகவே இருந்தவர்கள். ஏதோ ஒரு வகையில் அவர்களின் தாயார்கள் மேல் அவர்களுக்குக் கோபம் உண்டு. அந்தக் கோபத்தைக் காட்ட இந்தத் தளத்தைப் பயன் படுத்திக் கொண்டார்கள் என்பதாகவே தோன்றுகிறது.!

இவர்கள் தான் பாரதி கண்ட புதுமைப் பெண்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இவர்கள் மிகவும் வித்தியாசமாக சிந்திக்கும் பெண்களாக இருக்கிறார்கள்.

அதற்காகவே அவர்களைப் பாராட்ட வேண்டும். முதலில் மாட்டுவண்டியில் திருமண ஊர்வலம். இப்போது காரில் திருமண ஊர்வலம். ஒரு பெண் வித்தியாசமாகச் சிந்திக்கிறார். அது ஏன் விமான ஊர்வலமாக இருக்கக் கூடாது? நடக்க முடியாத காரியம் அல்ல. அது நடக்கக் கூடிய காரியம் தான். இதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு? அவருடைய ஆசையைச் சொன்னார்.  அவ்வளவு தான்!

இப்போது பெண்கள் படித்தவர்களாக இருக்கிறார்கள். கை நிறைய சம்பாதிக்கிறார்கள். அவருடைய பணத்திலேயே அந்தப் பெண் இதனைச் சாதிக்கலாம். அவர் திருமணம் செய்யப்போகும் அந்த மணமகனும் ஒத்தக் கருத்துடையவராக இருந்தால் இருவரும் சேர்ந்து விமான ஊர்வலம் வரலாம்! எல்லாம் சாத்தியமே!

ஒரு பெண் தனது ஆசையைச் சொல்ல முடியாத ஒரு சமுதாயத்திலா நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? தங்களுடைய ஆசைகளை வெளியே சொல்ல - தங்களது தாயார்களை வைத்துக் கொண்டு - அவர்களால் முடியாது என்று தெரிந்தும் - அவர்கள் தங்களது கனவுகளை அங்கே ஒப்புவிக்கிறார்கள்! அவர்களுக்கு அது ஒரு வாய்ப்பு. அப்படித்தான் நாம் அதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர்களுடைய ஆசைகள் அவர்களின் பெற்றோர்களால் தீர்த்து வைக்க முடியாத ஆசைகளாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக ஒரு நாள் அவர்களுடைய ஆசைகள் அவர்களது சொந்தப்  பணத்திலேயே  நிறைவேறும் என்பது மட்டும் உறுதி.

கனவு காணுங்கள்! பெரும் கனவு காணுங்கள்! கனவுகள் நிறை வேற உழையுங்கள்! உங்கள் கனவுகள் நிறைவேற வாழ்த்துகள்!

Saturday, 25 March 2017

பெருமைப் படுங்கள்!


பெருமைப் படுங்கள்!  அனைத்துக்கும் பெருமைப் படுங்கள்!

நண்பன் ஒருவன் வெற்றி பெற்றால் பெருமைப் படுங்கள். பொறாமைப் படாதீர்கள். தேர்வில் வெற்றி பெற்றானா, அவனை பற்றி பெருமைப் படுங்கள். அவனைப் பெருமைப் படுத்துங்கள். பொறாமைப் படாதீர்கள்.

தமிழன் ஒருவன் வியாபாரத்தில் வெற்றி பெற்றனா? பெருமை படுங்கள். அவன் வெற்றி பெற்று விட்டானே, என்னால் வெற்றி பெற முடியவில்லையே என்று பொறாமை படாதீர்கள்.

எந்தத் துறையாயினும் ஒரு தமிழன் வெற்றி பெற்றால் அவனைப் பற்றி பெருமை படுங்கள்,  பொறாமை படாதீர்கள்.

பிறர் வெற்றியடையும் போது நீங்கள் அவர்களைப் பற்றி பெருமை அடைந்தால் நீங்களும் பெருமை அடைவீர்கள். அதற்குப் பதிலாக பொறாமைப் பட்டால் நீங்கள் அழிவை நோக்கிச் செல்லுகிறீர்கள் என்பது பொருள்.

மற்றவர்களின் வெற்றியில் நாம் பெருமைப் படும் போது நமக்கும் அவர்களின் வெற்றி ஒட்டிக் கொள்ளும். பொறாமைப் படும் போது வெற்றியை நம்மிடமிருந்து நாமே விரட்டியடிக்கிறோம்!

நமக்குத் தெரிந்த நண்பன் நாலு பேர் மெச்ச ஒரு நல்ல காரியம் செய்தால் அவனைப் பற்றி பெருமை படுங்கள். முடிந்தால் அவனை நேரடியாகவே பாராட்டுங்கள். அப்படியே அவனைப் பாராட்ட மனம் வரவில்லை என்றால் உங்கள் மனதிலேயே பராட்டிக் கொள்ளுங்கள். நம்மால் முடியாததை நமது நண்பன் செய்கிறானே அது பெருமைப்படக் கூடிய விஷயம் தானே!

சிலருக்குப் பாராட்டுவது, பெருமைப்படுவது போன்றவை கொஞ்சம் அந்நியமான விஷயங்கள்!  எதை எடுத்தாலும் பொறாமை தான் முன்  நிற்கும்!

பொதுவாக தமிழர்களுக்கு ஒரு விசேஷமான குணம் ஒன்று உண்டு. ஒரு தமிழன் முன்னேறுவதை இன்னொரு தமிழன் விரும்பவதில்லை. சித்தப்பா மகன் முன்னேறுவதை பெரியப்பா மகன் விரும்பமாட்டான்! பெரியப்பா மகள் சிறப்பாக பாடங்களில் தேர்ச்சி பெற்றால் சித்தப்பா மகள் பொறாமைப் படுவாள்! இதற்கெல்லாம் வீட்டிலுள்ள தாய்மார்கள் தான் காரணம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது! குடும்பங்களில் உள்ள சிறு, சிறு பிரச்சனைகளையெல்லாம் பெரிதாக்கி பிள்ளைகளிடையே பொறாமைக் குணத்தை வளர்த்து விடுகிறார்கள் என்பதாகத்தான் நான் நினைக்கிறேன்! இப்போது இதுவே தமிழர்களிடையே ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது!

ஒரு தமிழனின் முன்னேற்றம் நமக்குப் பொறாமையை ஏற்படுத்துகிறதே தவிர அவனின் முன்னேற்றத்தைப் பற்றி நாம் பெருமைப் படுவதில்லை. அவனைப் பாராட்ட வேண்டும் என்னும் மனப்பக்குவம் நமக்கு ஏற்படுவதில்லை!

ஆனால் இப்போது இது மாறிவருகிறது என்பதால் மகிழ்ச்சி அடையலாம். இப்போது நாம் தமிழர் என்கிற உணர்வு மேலோங்குகிறது என்பது உண்மை. இது தொடரும் என நாம் எதிர்பார்க்கலாம்.

ஒரு சகத் தமிழனின் முன்னேற்றத்தைப் பார்த்துப் பெருமைப் படுங்கள். அவனைப் பாராட்டுங்கள். அவனை வாழ்த்துங்கள். அவன் மீது பொறாமைப்பட்டால் நமது பெருமை கீழ் நோக்கிப் போகும். நமது நிலை தாழ்வடையும். நட்டம் நமக்கே!  அதற்குப் பதிலாக நாம் பாராட்டினால் நாம் பாராட்டப்படுவோம்! பெருமைப் படுத்தினால் நாமும் பெருமைப் படுத்தப்படுவோம்!

ஒருவருக்கொருவர் பாராட்டுவோம்! பெருமைப் படுவோம்! சகத் தமிழனின் முன்னேற்றம் நமது இனத்தின் முன்னேற்றம்! தமிழர்களின் முன்னேற்றம்!

வாழ்க தமிழினம்!

Friday, 24 March 2017

எழுபது வயதிலும் கல்வி கற்கலாம்!


கல்வி கற்பது என்பது எந்த வயதிலும் நடக்கலாம். இளமையிற் கல் என்பது முது மொழி. அந்த வாய்ப்பு இல்லாவிட்டால் முதுமையிலும் கல்வி  கற்கலாம்.அவ்வளவு தான்!

இந்தியா, குஜராத் மாநிலத்தில் இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறார் ஒரு மனிதர். அவர் தான் 70 வயது பெரியவரான பார்வட் மக்வானா.



இளமையில் தவறவிட்டக்  கல்வியை இப்போது தொடர்கிறார். பத்தாம் வகுப்புப்  பரிட்சையும் எழுதுகிறார்!

மக்வானாவுக்கு ஏழு பிள்ளைகள்.  அனைவரும் உயர் கல்வி கற்றவர்கள்.நல்ல நிலையில் இருக்கின்றவர்கள்.

கல்வியறிவில்லாத தனது நூறு வயது  தாயார் தான் தனக்கு உந்துசக்தியாக இருந்து இப்போது பரிட்சையும் எழுத வைத்திருக்கிறார் என்கிறார் மக்வானா.

அவரது தாயார் பாராட்டுக்குறியவர். தனது மகனின் கல்வியில் இந்த வயதிலும்  அவர் அக்கறை காட்டியிருக்கிறாரே மிகவும் போற்றுதலுக்குரிய  அன்னை!

இப்போது பரிட்சையில் தேர்ச்சி பெற்று .....என்ன செய்யப் போகிறீர்கள்..? அரசியலில் ஈடுபாடு கொண்டிருக்கும் தனக்கு முறையான கல்வியில் மூலம் இன்னும் சிறப்பான முறையில் தனது கிராம மக்களுக்குச் சேவை செய்ய முடியும் என நம்புகிறார் மக்வானா.

பிச்சை புகினும் கற்கை நன்றே என்று சொன்னார் ஆன்றோர். சேவை செய்யினும் கற்கை நன்றே.என்கிறார் மக்வானா!

வாழ்த்துகள்!

Thursday, 23 March 2017

"நான் தோல்வி அடைந்து விட்டேனோ?"


"நான் தோல்வி அடைந்து விட்டேனோ?"  என்கிற எண்ணம் உங்கள் மனத்தில் தோன்றுகிறதா?

வேண்டாம்! அப்படி ஒரு எண்ணத்தை மனத்தில் வளர்த்துக் கொள்ளாதீர்கள்!

"இனி மேல் செய்வதற்கு என்னிடன் என்ன இருக்கிறது? அனைத்தும் முடிந்து விட்டது!  என்னிடம் இருந்தவை  அனைத்தும் என்னைவிட்டுப் போய்விட்டன! இப்போது அனைத்தையும் இழந்த மனிதனாக நிற்கிறேன்! இனி மேலும் வெற்றிபெற என்ன வாய்ப்பு இருக்கிறது?" என்னும் முணுமுணுப்பு எனக்கும் கேட்கத்தான் செய்கிறது.

எது நடந்தாலும் சரி.  நாம் வெற்றியைத்தான் நமது மனதில் நிரப்பி இருக்க வேண்டும்.  இனிமேல் என்ன இருக்கிறது என்று கேட்பதை விட இனியும் என்னிடம் நிறைய இருக்கிறது; சீக்கிரம் எனது பலத்தை நான் காட்டுவேன் என்னும் எண்ணம் தான் நாம் மீண்டும் எழுந்து நிற்க உதவும்.

ஒன்றுமே இல்லை என்னும் எண்ணமே நம்மை நலிந்து போகச் செய்யும். ஒன்றுமே இல்லை என்றாலும், என்னிடம் நிறையவே இருக்கிறது என்னும் எண்ணமே நம்மை நிமிரச் செய்யும்.

ஒன்று மட்டும் நிச்சயம். நேர்மறை எண்ணங்கள் நம்மை உருவாக்குபவை. எதிர்மறை எண்ணங்கள் நம்மை அழிக்கக் காத்திருப்பவை!

எதுவுமே இல்லை ஆனாலும் எல்லாமே உண்டு என்னும் உங்களின் நேர்மறை எண்ணம் உங்களுக்கு என்ன தேவையோ உங்களை அங்குக் கொண்டு போய்ச் சேர்க்கும். அல்லது உங்களை அது தேடி வரும். இது தான் நமது எண்ணங்களின் சக்தி.

சில ஆண்டுகளுக்கு முன் வட இந்திய மாநிலத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம். ஒரு விவசாயி தான் விவசாயம் செய்யும்  டிராக்டரை தனது வீட்ட்டின் அருகே கொண்டு வர முடியாமல்  வீட்டில் முன்னால் உள்ள ஒரு  மலை இடையூறாக இருந்தது. அவர் பலரிடம் முறையிட்டும் யாரும் அவரைக் கண்டு கொள்ளவில்லை.

கடைசியாக தன் கையே தனக்கு உதவி என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தார். தனது வீட்டுப் பகுதியிலிருந்து  மலையடிவாரத்தின்  அடிப்பகுதியைலிருந்து  நோண்ட ஆரம்பித்தார்.  அது ஒரு நீண்ட தூரம்.  பார்த்தவர்கள் சிரித்தார்கள். அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. கருமமே கண்ணானார். பல ஆண்டுகள் பிடித்தன. அவருடைய பிடிவாதத்தையும், போர்க்குணத்தையும் பார்த்து மற்றவர்களும் உதவிக்கு வந்தனர். எல்லாம் ஒருவகையாக முடிவுக்கு வந்தன. இப்போது அவர் வீட்டின் அருகிலேயே அவருடைய டிராக்டர் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது!

பல ஆண்டுகள் என்னும் போது அது ஒரு நீண்ட காலப் போராட்டம். அது பற்றி கவலை இல்லை. வெற்றி பெற வேண்டும். அது தான் அவரது நோக்கம். அந்தப் பிடிவாதம், அந்த வெறி மற்றவர்களையும் அவர் பால் ஈர்த்தது.

நம்மிடையே அசைக்க முடியாத மன உறுதி இருந்தால் அனைத்தும் நம் வசமாகும். தோல்வி என்பதற்கே இடமில்லை!

Tuesday, 21 March 2017

தமிழக ஊடகங்களே பொறுப்பு!


இன்றைய நிலையில் தமிழகத்தில் நடைபெறுகின்ற பல அநியாயங்களையும், அக்கப்போர்களையும் பார்க்கின்ற போது நமது குற்றச்சாட்டுகள் எல்லாம் தமிழக ஊடகங்கள் மீது தான் சொல்ல வேண்டி வரும்!

வெட்கக்கேடான விஷயம் தான்! என்ன செய்வது? நிச்சயமாக அவர்கள் தான் குற்றவாளிகள்!

தமிழக பத்திரிக்கைகளையோ மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையோ தமிழகத்தோடு சம்பந்தமில்லாத ஒருவர் பார்த்தால் அங்கு நடப்பதெல்லாம் உலகிலேயே மிகவும் எடுத்துக்காட்டான ஒர் அற்புத ஆட்சி நடப்பதாகவே நினைக்க வேண்டி வரும்! அந்த அளவுக்கு ஒன்றுமே தெரியாத அப்பாவிகள் போல் இந்த ஊடகங்கள்  நடந்து கொள்ளுகின்றன!

தமிழகத்தில் எத்தனை பிரச்சனைகள்? ஆனாலும் ஒன்றுமே நடவாது மாதிரி ஊடகங்கள் நடந்து கொள்ளுகின்றன!  எல்லாம் அரசியல்வாதிகளின் அடிமைகளாகவே செயல்படுகின்றன! ஏதோ  எங்களுக்கும் மக்களின் பிரச்சனைகளுக்கும் சம்பந்தமே இல்லாதது போல மக்களுக்குத் துரோகங்கள் இழைக்கின்றன!

ஏழை மீனவர்களின்  பிரச்சனை, ஏழை விவசாயிகளின் பிரச்சனை, நெடுவாசலில் நீளுகின்ற போராட்டம், காவேரி பிரச்சனை, முல்லையாறு பிரச்சனை, ஆந்திராவில் தமிழர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் வன்முறை - இப்படி ஒவ்வொரு நாளும் தமிழர்கள் பிரச்சனையை எதிர் நோக்குகின்றனர்.

ஆனால் நமது ஊடகங்களுக்கு இதெல்லாம் பிரச்சனையாகவே தோன்றவில்லை! அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் அமெரிக்கா பக்கம் ஓடிப்போனால் போதும் என்னும் மன நிலையிலேயே செயல்படுவதாகவே தோன்றுகிறது!

பிள்ளைகள்  ஓடிப் போகலாம் ஆனால் பெற்றோர்கள் இங்கு தானே இருக்க வேண்டி வரும். அவர்கள் குடிப்பதற்கு தண்ணீராவது வேண்டும் அல்லவா! சாப்பாடு போடுவதற்கு விவசாயம் வேண்டும் அல்லவா! தமிழன் தமிழ் நாட்டிலேயே உதை வாங்காமல் இருக்க வேண்டும் அல்லவா! அதற்கு நாட்டை ஆள- தமிழ் மாநிலத்தை ஆள - நல்ல அரசியல் தேவை அல்லவா! 

நமது ஊடகங்கள் இதையெல்லாம் மறந்துவிட்டார்களோ என்று தான் நாம் நினைக்கத் தோன்றுகிறது. ஒரு பிரச்சனையுமே இல்லாதது போல ஆட்டம்  பாட்டம் என்னும் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

ஒரு சினிமா படத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் சாகிற விவசாயிற்குக் கொடுப்பதில்லை. தமிழக மீனவன் எத்தனை பேர் சாகிறான் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.தமிழகத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதாகத்தான் "ஷோ" காட்டுகிறார்களே தவிர உண்மைகளை வெளிக்கொணர எந்த முயற்சியும் எடுப்பதில்லை!

மீனவர் சுட்டுக்கொலைச் செய்யப்படுகின்றார்கள் என்றால் - ஒரு மாதத்திற்காவது அந்தப் பிரச்சனையை - முக்கிய செய்தியாக ஊடகங்கள் பெரிது படுத்தினால் மத்திய அரசு சும்மா வாயைப் பொத்திக் கொண்டா இருப்பார்கள்? கேரளா தான் செய்ய முடியும் தமிழ் நாடு செய்ய முடியாதா?

எந்தப் பிரச்சனையும் இல்லாத ஒரு மாநிலமாக நமது ஊடகங்கள் தமிழ் நாட்டை வெளி உலகிற்குக் காண்பித்துக் கொண்டிருக்கின்றன. இது  துரோகம் மட்டும் அல்ல. ஒரு மாநிலத்தைச் சாகடிக்கின்ற முயற்சி! இதற்குப் படித்தவர்கள் துணை போகிறார்கள். இதை விடக் கேவலமாக எப்படி ஒரு மனிதன் வாழ முடியும்?

தமிழ் நாட்டின் இன்றைய நிலைக்கு நமது ஊடகங்களே பொறுப்பு ஏற்க வேண்டும்! ஊடகங்களே பொறுப்பு!

Saturday, 18 March 2017

இந்திய மாணவர்களுக்கு நமது வாழ்த்துகள்!


எஸ்.பி.எம். தேர்வு எழுதிய இந்திய மாணவர்களில் பலர் சிறப்பான தேர்ச்சிகளைப் பெற்றிருக்கின்றனர். ஒரு சில மாணவர்கள் எல்லாப் பாடங்களிலும் 'ஏ' எடுத்து வியப்பை  ஏற்படுத்தியிருக்கின்றனர்!

அனைவருக்கும் வாழ்த்துகள்!  இனி அடுத்த கட்டம் ஆரம்பம். பலவிதமான போராட்டங்கள். அதிலும் சிறப்பானத் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தது போல எதுவும் அவர்களைத் தேடி வருவதில்லை! சிறப்பானத் தேர்ச்சிப் பெற்றவர்களை உயர் கல்விக் கூடங்கள் - உண்மையைச் சொன்னால் -  கண்டு கொள்வதில்லை! "உன்னை யார் இவ்வளவு புள்ளிகள் எடுக்கச் சொன்னார்கள்" என்பதாகத்தான் அவர்களின் நினைக்கிறார்கள்!  எவ்வளவு மட்டம் தட்டினாலும் மீண்டும் மீண்டும் எழுந்து வந்து விடுகிறார்களே! அது தான் இந்திய இனம்! கல்வி என்று வரும் போது நாம் முன் நிற்கிறோம்!

ஆனாலும் அரசாங்க உயர்கல்விக் கூடங்கள் கொடுக்கின்ற வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள் என்பதே நமது ஆலோசனை. வாய்ப்புக்கள் கொடுக்கப்படுகின்றன. குறைச் சொல்லிக் கொண்டிருப்பதை விட கிடைக்கின்ற வாய்ப்பைத் தவற விடாதீர்கள்.

இன்றைய நிலையில் ஒவ்வொரு இந்திய மாணவனும் பட்டம் பெறுவதையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். பட்டம் பெற்றவர்களுக்கே வேலை வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கின்றன.

இந்த நிலையில் கிடைக்கின்ற வாய்ப்புக்களையும் - கல்லூரி வெகு தூரம், வேறு மாநிலம், வீட்டுக்கு வருவதே சிரமம் - போன்ற உப்புச்சப்பில்லாத காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்!  இப்போது பெண் பிள்ளைகள் கூட வெளி மாநிலங்களுக்குச் சென்று படிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆண் பிள்ளைகளுக்கு என்ன பயம்?

கல்லூரி தூரம் என்று காரணம் சொல்லி, ஏதோ அருகிலுள்ள ஒரு அரசியவாதியால் நடத்தப்படும் கொஞசங் கூட பொருத்தமில்லாத கல்லூரிகளில் சேர்ந்து, எதற்கும் உதவாத கல்வியைக் கற்று. பின்னர் கல்லூரியிலிருந்து வெளியாகும் போது, ஒரு கடன்காரனகத்தான் வெளி வர வேண்டி வரும்! அதனை மறவாதீர்கள்.

அரசாங்கக் கல்லூரிகள் உங்களுக்குக் குறைவானச் செலவில் தரமானக் கல்வியைக் கொடுக்கின்றன.  அதனைப் பயன் படுத்துங்கள். ஒரே பிரச்சனை. பலமுறை அவர்கள் கதவைத் தட்ட வேண்டும்! பல முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்! மீண்டும் மீண்டும் தட்ட வேண்டும்! அதனாலென்ன? கதவு  திறக்கும் வரை பகுதி நேரமாக வேலைச் செய்யுங்கள். இப்படித்தான் பல மாணவர்களை நான் பார்க்கிறேன். கிடைக்கின்ற சம்பளத்தை அவர்கள் கல்லூரிகள் போகும் போது பயன்படுத்தி பெற்றோர்களின் சுமையைக் குறைக்கின்றனர்..

பட்டதாரி ஆக வேண்டும் என்னும் நோக்கம் மட்டும் நம்மிடம் இருந்தால் அனைத்தும் சாத்தியமே!

வெற்றி பெற வாழ்த்துகள்!

Wednesday, 15 March 2017

பழங்களின் அரசன் MUSANG KING!


பழங்களின் அரசன் என்றால் யாராக இருக்க முடியும், நம்ம ஊர் டுரியானைத் தவிர?

தமிழிலே அதனை முள்நாறிப் பழம் என்பதாக சொல்லியிருக்கிறார்கள். அதுவும் சரி தான். வெளியே முள். அதன் வாசமோ புதிதாகப் பார்ப்போருக்கு ஒரு வித நாற்றம் போலத் தோன்றும். ஆனால் பழகிபோன நமக்கு அதன் வாசமே நம்மை 'வா! வா!' என்று அழைக்கும்! அதனை நாற்றமாக நாம் என்றுமே பர்த்ததில்லை!

டுரியான் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை தான் அதன் பருவகாலம். ஆனால் இவ்வாண்டு மார்ச் மாதமே அதன் அறுவடை காலம் தொடங்கி, டுரியான் பிரியர்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது!

இப்போதைக்கு அதனை ருசி பார்க்க வேண்டும் என நினப்போர் நமது பகாங் மாநிலம் ரவூப் பக்கம் போக வேண்டும். வெகு சீக்கிரத்தில் மற்ற மாநிலங்களிலும் எதிர்பார்க்கலாம்.



ஆனாலும் இந்த அரசனுக்கு அரசன் பழத்தை நாம் அனைவருமே சுவைப்போம் என்று சொல்லுவதற்கில்லை! காரணம் அதன் விலை அப்படி!  ஒரு கிலோ 50 வெள்ளியிலிருந்து 60 வெள்ளி வரை விற்கப்படுகிறது. ஆனால் பாதகமில்லை. ஏதோ ஆசைக்கு வேண்டுமானால் ஒன்றோ இரண்டோ வாங்கிச் சாப்பிடலாம்.   அதே சமயத்தில் இந்த வகைப் பழங்களும் எல்லா இடங்களிலும் விற்கப்படுவதுமில்லை! அதன் சந்தை குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் தான்.

ஆனால் மற்ற வகை டுரியான்கள் எல்லா மூலை முடுக்குகளிலும்  கிடைக்கும். நமது உள்ளூர் பழங்களோடு தாய்லாந்து பழங்களும் சேர்ந்து கொள்ளுகின்றன! விலைகள் ஏற்றுக் கொள்ளலாம் ரகம்!..

நமது ஊர் டுரியான் பழங்களுக்குச் சிங்கப்புர், புருணை போன்ற நாடுகளில் ஏகப்பட்ட கிராக்கி! அதனால் ஏற்றுமதியும் பிரகாசமாக இருக்கிறது.

ஒரு முறை நான்  தமிழ் நாடு, ஊட்டிக்குச் சென்றிருந்தபோது இந்த டுரியான் பழத்தை  அங்குப் பார்த்து ஆச்சரியமடைந்தேன். நமக்குத் தெரியாத சில ரகசியங்களை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மகப்பேறு இல்லாதவர்கள் இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் மகப்பேறு உண்டாகும்  என்பதாக அவர்கள் நம்புகிறார்கள்!  நம்பிக்கை தானே வாழ்க்கை, இருக்கட்டும்!

பழங்களின் அரசன் தான்! ஆனால் இனிப்பு நீருக்கும் அரசன் என்பதையும் மறந்து விடாதீர்கள்!

பழங்களின் அரசன் MUSANG KING!





Saturday, 11 March 2017

தொட்டால் துலங்கும்..!

தொட்டது துலங்கும்; நட்டது தழைக்கும்; ஒன்று நூறாகும்!
தொட்டால் பூ மலரும்! தொட்ட இடம் பூ மணக்கும்!

இப்போது சொல்லுங்கள். நீங்கள் தொட்டது துலங்குமா? நட்டது தழைக்குமா? ஒன்று நூறாகுமா? தொட்டதும்  பூ மலருமா? தொட்ட இடம் பூ மணக்குமா?

இவை அனைத்தும் உங்களிடமிருந்தால் நீங்கள் தான் அந்தத் தொட்டால் துலங்கும் என்று சொல்லப்படுகின்ற அந்த மனிதர். தொட்டால் துலங்கும் என்பது எங்கோ இல்லை. இதோ! இந்த நிமிடம்  அது உங்கள் கையில் தான் இருக்கிறது. எங்கோ தேடிப் போக வேண்டியதில்லை!

ஆனாலும்,  'நான் தொட்டது எங்கே துலங்குகிறது?' என்று சொல்ல வருகிறீர்களா? இருக்கலாம்! இல்லாமலும் இருக்கலாம்! ஆனால் இருக்க வேண்டும். அது தான் இங்கே நாம் சொல்ல வருவது.

ஒருவரைப் பார்த்து நாம் கைராசிக்காரர் என்கிறோம். இன்னொருவரைப் பார்த்து ராசியே இல்லாத ஜென்மம் என்கிறோம்!

கைராசிக்காரர் என்றால் அவர் தொட்டது துலங்கும் என்பது தான் அர்த்தம்.

கைராசி என்பது, தொட்டது துலங்கும் என்பது தான். நாம் தொட்டது ஏன் துலங்கவில்லை? ஒன்றுமில்லை, நாம் ராசியில்லாதவன் என்று அழுத்தமாக  நம் மனதில் நாம்  விதைத்து விட்டோம்! விதை எங்கிருந்து வந்தது? நமது பெற்றோரிடமிருந்து வந்திருக்கலாம். தாத்தா, பாட்டியிடமிருந்து வந்திருக்கலம். சுற்றுப்புறங்களிலிருந்து வந்திருக்கலாம்.    

நாலு பேர் சேர்ந்து நீங்கள் ராசி  உள்ளவன் என்றால்   நீங்கள் ராசி உள்ளவர்.தான். இல்லை என்றால் இல்லை!  உள்ளது என்றால் உள்ளது தான்!

இந்த ராசி இல்லாதவன் என்னும் பெயர் எங்கிருந்து வருகிறது? பெரும்பாலும் நமது குடும்பங்களிலிருந்து வருவது தான். ஒரு நண்பரைத் தெரியும். தனக்கு ராசி இல்லையென்று தனது மகனிடன்  நான்கு நம்பர் லாட்டரி வாங்கி  வரச்  சொல்லுவார்.   நம்பர் அடிக்கவில்ல் என்றால் 'சே! தரித்திரம் பிடித்தவனே!' என்று அவனைத் திட்டுவார்!  சும்மா இருந்தவனை நம்பர் வாங்கச் சொல்லி பிறகு அவனுக்குத் தரித்திரம் பிடித்தவன் என்று அவனுக்குப் பட்டம்! குழந்தை பிறந்த போது அம்மா இறந்து போனால் உடனே ராசி இல்லாத குழந்தை என்று முத்திரைக் குத்தப்படும்.  அம்மா  நல்லவள். அதனால் சீக்கிரம் போய்ச் சேர்ந்தார் என்று எடுத்துக் கொள்ள நாம் பழக வேண்டும். குழந்தை மீது பழி போடக்கூடாது.    

ராசி இல்லாதவன், இவன் தொட்டால் துலாங்காது என்பன போன்ற வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும். இது போன்ற வார்த்தைகள் அந்த மனிதன் சாகும் வரை அவனோடு ஒட்டிக் கொள்ளும்.

இதனைப் போக்குவது எப்படி? பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. "நாம் தொட்டால் துலங்கும்" என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளுவது தான். நாம் எதனைச் செய்தாலும் "நான் ராசிக்காரன், நான் தொட்டால் துலங்கும்" என்று மனதில் நினைத்துக் கொண்டே நமது செயல்களைச் செய்ய வேண்டியது தான்! அது தான் சரியான வழி! நீங்கள் தொடர்ந்து இப்படி மந்திரம் போல சொல்லிக் கொண்டு வந்தால் பிறரும் உங்களை ராசிக்காரன் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்!  ஆழமாகப் பதிந்துவிட்ட 'துலங்காது!' என்பதை 'துலங்கும்!' என்று சொல்லிச் சொல்லி அந்த துலங்காது என்பதை தகர்த்தெறிய வேண்டும்! இது முடிகின்ற காரியம் தான். முடியும்!

நாம் தொட்டது துலங்கும்!

Wednesday, 8 March 2017

கிறிஸ்துவ மறை போதகர் கடத்தப்பட்டார்!


சமீபத்தில் சவுதி அரேபிய மன்னர் தனது குடும்பத்தினருடன் நமது நாட்டிற்கு வருகை புரிந்திருந்தார். நாம் அனைவரும் அறிந்த செய்தி தான்.

ஆனால் அவரும் அவர் குடும்பத்தினரும் இங்கிருந்த போது ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல்  நடத்த திட்டம் தீட்டியிருந்தாக நாம் எதிர்பார்க்காத - அதிர்ச்சிகரமான - செய்தியை வெளியிட்டிருக்கிறார் போலிஸ் படைத் தலைவர், டான்ஸ்ரீ காலிட் அபுபக்கர். எனினும் காவல்துறையினர்  அவர்களின் திட்டத்தை முறியடித்திருக்கின்றனர். இதன் தொடர்பில் காவல்துறையினரால் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அந்த ஏழு பேரில் நால்வர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள், இருவர் இந்தோனேசியர்கள், ஒருவர் மலேசியர்.

உள்ளூரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த அளவுக்கு ஒரு தாக்குதலை நடத்த தீட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்பதை நாம் சாதாரணமாக விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இந்த நேரத்தில் கிறிஸ்துவ மத போதகர் ஒருவர்கடத்தப்பட்டிருப்பதானது ஐ.எஸ். தீவிரவாதிகள் மேல் நமக்கும் ஒரு சந்தேகத்தை ஏற்படத்தத்தான் செய்யும்.

மிகவும் சரியாகத் திட்டமிட்டு இந்த கடத்தல் நாடகம் அரங்கேறியிருக்கிறது. அதுவும் பகல் நேரத்தில் மிகவும் நெருக்கடியான போக்குவரத்து உள்ள நெரிசல்  சாலையில்.இந்தக் கடத்தல் சம்பவம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அவர் காரில் பயணம் செய்த போது ஏழு வாகனங்கள், இரண்டு மோட்டார் வண்டிகள் அவரைப் பின் தொடர்ந்திருக்கின்றன. முன் சென்ற மூன்று வாகனங்கள் அவரது காரை வழிமறித்து ஏறக்குறைய ஒரு நாற்பது வினாடிகளில் இந்தக் கடத்தல் நாடகத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து பறந்துவிட்டன! மிகவும் துல்லியமாக - ஒரு இராணுவ  நடவடிக்கை போன்று - இந்தக் கடத்தல் சம்பவம் இருப்பதாக அதன் காணொளியைப் பார்த்தவர்கள் சொல்லுகிறார்கள்.

இப்போது ஒரு மாதம்  ஆகிவிட்ட நிலையில் ஒரு கிறிஸ்துவ சபையைச் சேர்ந்த மதபோதகரான ரேமன் கோ என்ன ஆனார், எங்கு இருக்கிறார் என்று ஒன்றும் அறியாத நிலையில் அவரின் மனைவி, பிள்ளைகள் அவரது சபையைச் சார்ந்தவர்கள் கிறிஸ்துவ திருச்சபையினர் அனைவரும் அவரின் பாதுகாப்புக்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.

ரேமன் கோ-வைப் பற்றிப் பேசும் போது அவர் மிக நல்ல மனிதர், பரமச் சாது என்பதாகத்தான் சொல்லப்படுகிறது. அவரைக் கடத்துவதற்கு இந்த அளவு கெடுபிடிகளோடு - ஒரு இராணுவ நடவடிக்கை - போன்று செயல்பட்டது மிகவும் அநாகரீகம் என்றே தோன்றுகிறது!

ஆனாலும் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் நாகரீகம், அநாகரீகம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. மனிதமும் கிடையாது மனிதாபிமானமும் கிடையாது!  சொன்னதைச் செய்கின்ற கிளிப்பிள்ளைகள்! மற்றபடி அறிவைப் பயன்படுத்தும் கூட்டம் அல்ல.

இதனை ஏன் நாம் ஐ.எஸ். ஸைக் குற்றம் சொல்லுகின்றோம் என்றால் அவர்களின் ஊடுருவல் நாட்டில் அதிகரித்துக் கொண்டே வ்ருகிறது என்பதை காவல்துறைத் தலைவரின் அறிக்கைச் சுட்டிக் காட்டுகிறது,

ரேமன் கோ நலனே திரும்ப இறைவனைப் பிரார்த்திப்போம்.

Tuesday, 7 March 2017

செத்தா, ஐந்து இலட்சம்...!


மீனவன் கொல்லப்பட்டால் அவனுக்கு ரூபாய் ஐந்து இலட்சம் நிவாரணம். அதே மீனவன் சுடப்பட்டு காயமடைந்தால் ருபாய் ஒரு இலட்சம் நிவாரணம்.

ஆமாம், தமிழக அரசாங்கம் என்ன சொல்ல வருகிறது?

 இலங்கை கடற்படையினர் சுட்டால் சுடட்டும். சுட்டுப் பழகுவதற்கு அவர்களுக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை. இந்த மீனவர்களை விட்டால் அவர்கள் எங்கு தான் போவார்கள்? சிங்களவர்களைச்  சுட முடியாது. சுட்டால் அந்த நாடே கிளர்ந்து எழும். அதனால் தமிழக மீனவர்களைச் சுடுவது மிகவும் பாதுகாப்பானது. அதனால் ராஜாக்களா நீங்க சுடுங்கப்பா! எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை! அவனுக்குக் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து நாங்க சரி பண்ணி விடுகிறோம்! அவன் ஒரு இலட்சத்தை எந்தக் காலத்திலும் பார்த்ததில்ல! அதனால நீங்க எப்போதும் போல செய்யிறத செய்யுங்க! நாங்க கண்டுக்க மாட்டோம்! நாங்க ஒப்புக்கு மத்திய அரசாங்கத்துக்கு ஒரு கடிதம் போடுவோம்!  அவன்களும் கண்டுக்க மாட்டன்க!

இப்படித்தான் இந்தப் பிரச்சனையைக் கையாள்கிறது தமிழக அரசு. இந்திய அரசாங்கமோ இது இந்தியர் பிரச்சனை இல்லை, தமிழ் நாட்டு பிரச்சனை; அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று நினைக்கிறது!


நீண்ட நாள் பிரச்சனை. ஆண்டுக் கணக்கில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சனையைக் கையாளத் தெரியாத ஒரு கையாளாகாத அரசாங்கம். ஒன்றா, இரண்டா? திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து இது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் அவர்களால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லை!

கலைஞர் தமிழ்ப்பண்டிதர். அவரால் தீர்க்க முடியவில்லை. ஜெயலலிதா இந்திய அரசியலில் ஆங்கிலத்தில் கலக்கியவர். ஊகூம்..! இவர்களின் படிப்பு தமிழ் நாட்டுக்கு உதவவில்லை!  இப்போது உள்ளவர்கள்...?  இவர்கள் இரண்டும் கெட்டான்கள்! நினைத்த நேரத்தில் 'தொப்' பென்று காலில் விழக்கூடியவர்கள்! சிங்களவன் பணம் கொடுத்தால் அவன் காலிலும்  சரண்!

ஒ! தமிழா! உன் நிலை இப்படியா ஆக வேண்டும்?  தகுதியே இல்லாதவனுக்கெல்லாம் வாக்களித்து வாழ வைத்தாய். இன்று  அவன் நீ குடித்து அழித்த சாராயாக்காசையே எடுத்து ஒரு இலட்சம், ஐந்து இலட்சம் என்று கொடுத்துக் கொண்டிருக்கிறான்! உன் வாழ்க்கையை மட்டும் அல்ல, மொத்த தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கையையே வாட வைத்துவிட்டான் வாடகைக்கு வந்தவன்!

வரும்! வாழ்க்கை வரும்! வளருவான் தமிழன்! வாழ்வாங்கு வாழ்வான் தமிழன்! நிச்சயம் தலை நிமிர்வான்!

Sunday, 5 March 2017

காமிக்ஸ் புத்தகங்கள்.......?


பொதுவாக தமிழில் காமிக்ஸ் புத்தங்கள் எந்தக் காலத்திலும் தமிழ்ச் சமூகத்தில் பெரிய வரவேற்புப் பெற்றதில்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் நாட்டில் மட்டும் அல்ல மலேசிய நாட்டிலும் அதே நிலை தான்.

காமிக்ஸ் என்பது சிறுவர்களுக்கான புத்தகம் என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அதனை அவசியம் படிக்க வேண்டிய புத்தகமாக தமிழுலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன்? சிறுவர் இலக்கியம் பற்றியே பெரிதாக ஒன்றும் சொல்லுவதற்கில்லையே!

ஆனால் எனக்குத் தெரிந்தவரை சீன மாணவர்கள் தான் இந்த காமிக்ஸ் புத்தகங்களை - சும்மா விரும்பி என்று சொல்லக் கூடாது - ஒரு வெறித்தனமான ஆர்வத்துடன் படிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்! எனது பள்ளிக் காலத்தில் நான் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் இந்தப் புத்தகங்கள் ஆங்கில மொழியில் - வார இதழாக - வந்து கொண்டிருந்தன. எனக்குத் தெரிந்தவரை TARZAN கதைகள் தான் மிகவும் பிரபலம். இந்த இதழின் வாசகர் வட்டம் என்றால் அது சீன மாணவர்கள் தான்! இப்பொழுதும் இந்த காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பவர்கள் சீன மாணவர்கள் தான்! இப்போது சீன மொழியில் நிறைய காமிக்ஸ் வார இதழ்கள் வருகின்றன. ஆங்கில இதழ்களுக்கான வரவேற்பு குறைந்துவிட்டது!

 
           
         
ஆனால் தமிழில்.?  தமிழர்களிடையே அவ்வளவாகக்  காமிக்ஸ்கள் வரவேற்புப் பெற வில்லை? பொருளாதரமும் ஒரு காரணியாக இருக்க வேண்டும் என்பதும் உண்மையே. சான்றுக்கு என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். நான் எனது பள்ளிக்காலத்தில் ஒரு TARZAN இதழைக் கூட வாங்கியதில்லை!  ஆனால் சீன நண்பர்களிடம் வாங்கிப் படித்திருக்கிறேன். பள்ளிக்காலத்தில் எனக்குக்  கொடுக்கப்படும் பணத்தில் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் அளவுக்கு சக்தியில்லை! அப்போதும் அதன் விலை அதிகம் தான்! சீன மாணவர்களுக்குப் பொருளாதார சக்தி உண்டு என்பதால் அவர்களால் வாங்க முடிந்தது.  இந்திய,  மாணவர்களால் வாங்க முடியவில்லை. இது முற்றிலும் பொருளாதாரக் காரணங்கள்  தான் என்பதாகவே நான் நினைக்கிறேன்.

   தமிழகத்தின் நிலை வேறாக இருக்கலாம். பெற்றோர்கள் காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கிக்கொடுத்துப் பிள்ளைகளைப் படிக்கத் தூண்டவில்லை. சிறுவர் இதழ்களையே படிக்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்!  குறிப்பாக அம்புலிமாமா, கண்ணன், கல்கண்டு போன்ற சிறுவர் பத்திரிக்கைகளே அவர்கள் வீடுகளில் வலம் வந்தன. ஒரு வேளை அம்புலிமாமா  அந்தக்காலத்தில் காமிக்ஸ் பாணியில் இதழ்களை வெளியிட ஆரம்பித்திருந்தால் இந்தத் துறை வெற்றிகரமானத் துறையாக அமைந்திருக்க்கலாம்.

இனி மேலும் இந்தத் துறை வளருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் வளரக்கூடிய சாத்தியங்கள் உண்டு. வளரும் என எதிர்பார்ப்போம்.

குறிப்பு: மேலே உள்ள காமிக்ஸ் ஜெயமோகன் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது, நன்றி!

Saturday, 4 March 2017

தமிழகத்தில் சொத்து வாங்குகிறீர்களா?


தமிழ் நாட்டில் சொத்து வாங்குவது - குறிப்பாக வீடுகள் வாங்குவது - பற்றியான செய்திகள் அடிக்கடி வருகின்றன.

பண வசதி உள்ளவர்கள் எந்த நாட்டிலும் சொத்துகள் வாங்கலாம். அதில் தடை ஏதும் இல்லை.

நமது நாட்டில் கூட சிங்கப்பூரியர்கள் கடைகள், வீடுகள் என்று ஓரளவு ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றனர். நமது நாட்டின் பண வீக்கம் சிங்கப்பூரியர்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

ஆனால் தமிழ் நாட்டில் வீடுகள் வாங்குவது என்பது மிகவும் - ஒருமுறை அல்ல, பலமுறை - யோசிக்க வேண்டிய விஷயம்.

தமிழக விற்பனையாளர்கள் இங்கு வந்து உங்களிடம் 'ஆகா! ஓகோ!'  என்று பேசிவிட்டுப் போய்விடுவார்கள்! விற்பனை என்பது அவர்களது தொழில். அவ்வளவு தான். விற்றால் அவர்களுக்கு கணிசமான வருமானம்.  மற்றபடி அவர்கள் சொல்லுவது எல்லாம் வேத வாக்கு என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. வீடுகளை விற்கும் தொழில் நிறுவனங்களும் அப்படி ஒன்றும் நம்பத்தகுந்தவைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

பெரும்பாலும் இது போன்ற தொழில்களில் உள்ளவர்கள் அரசியல்  தொடர்பு உடையவர்கள்.அவர்களிடம் எல்லா வசதிகளும் உண்டு. ஏமாற்றுவதில் வல்லவர்கள்! உள்ளுர் சட்ட திட்டங்கள் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. அப்படியே ஏதேனும் சட்டதிட்டங்கள் இல்லையென்றாலும் அவர்களே உருவாக்கிவிடுவார்கள்! பலே கில்லாடிகள்! நீங்கள் வாங்கிய சொத்து வேறொருவர் பெயரில் பதியப்பட்டிருக்கும்! உங்கள்  சொத்து என்று நீங்கள் பணம் கட்டிக் கொண்டிருப்பீர்கள்! கடைசியில் உங்களை ஏமாந்த சோணகிரியாக்கி விடுவார்கள்!

தெரிந்தவர்களையும் நம்ப வேண்டாம்! தெரியாதவர்களையும் நம்ப வேண்டாம்! சொந்தங்களையும் நம்ப வேண்டாம்! பந்தங்களையும் நம்ப வேண்டாம்!

எனது நண்பர் வங்கி ஒன்றில் பணம் வைப்புத் தொகையாக வைத்திருந்தார். கடிதப் போக்குவரத்துக்கு தனது நண்பரின் முகவரியைக் கொடுத்திருந்தார். அந்த நண்பரோ அந்த வைப்புத் தொகையை அவருடைய பெயரில் மாற்றிக் கொண்டார்!  இன்னொரு நண்பர் தவணை முறை மூலம் வீடு  வாங்கியிருந்தார். அங்குள்ள அவருடைய நண்பர் அனைத்தையும் கவனித்துக் கொண்டார். பணம் கட்டி முடித்ததும் நண்பர் இங்கிருந்து அங்கு பயணம் ஆனார். ஆனால் அவரால் அவருடைய வீட்டிக்குச் செல்ல முடியவில்லை!  அடிதடியோடு அவரை நன்றாகக் 'கவனித்து' விட்டு திரும்பவும் இங்கு அனுப்பிவிட்டார்கள்! இதெல்லாம் அங்கு சர்வ சாதாரண விஷயம்! பணத்துக்காக அரசியல்வாதிகளின் காலில் விழுபவர்கள் எதையும் செய்வார்கள்! இதெல்லாம் சில எடுத்துக் காட்டுக்கள்!

என்னைக் கேட்டால் - உங்களிடம் பணம் இருந்தால் - ரொக்கமாகப் பணத்தைக் கொடுத்து வீடு வாங்கி அங்குக் குடியேறுங்கள். அது தான் உங்களுக்கு நல்லது.

பணம் உங்களுடையது. நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

Friday, 3 March 2017

மழையே....வா! வா!


மழை காலத்தில் மழை தொடர்ச்சியாக வருவதை யாரும் விரும்புவதில்லை.

மழை இல்லாத காலத்தில்.....?  மழை இல்லாத காலத்தில் நாம் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாகிறோம். கொஞ்சமா, நஞ்சமா! அவ்வளவு சிரமங்கள். முதலில் உஷ்ணம் தாங்க முடிவதில்லை. தொடர்ச்சியாக மழை பெய்தாலும் குளிர்ச்சி தாங்க முடியவில்லை!

நமது நாட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது வெப்பம் அதிகமாகவே தெரிகிறது. இன்றைய நிலையில் மின்விசிறிகளும், குளிர்சாதனப் பெட்டிகளும் பல வீடுகளில் அத்தியாவசியப் பொருளாகி விட்டன. குறைந்தபட்சம் ஒரு மின்விசிறியாவது ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்கும். அந்த அளவுக்கு வெப்பத்தின் தாக்கம்.இப்போது நம்மால் உணர முடிகிறது.

இந்த நேரத்தில் ஒரு செய்தி எனது ஞாபகத்திற்கு வருகிறது. தமிழகத்தின் பிரபல பேச்சாளர் பேராசிரியை பர்வின் சுல்தனா சொன்ன ஒரு தகவல்.

வீட்டிற்கு வெளியே துணிகள் காய்ந்து கொண்டிருக்கின்றன. மழை வருவதற்கான அறிகுறி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. துணிகள் நினைந்து விட்டால்...?  உடனே துணிகளை எடுக்க வேண்டும். ஆனால் அவர்களின் தாயார், துணிகளை எடுக்க வேண்டாம் என்று தடை போடுகிறார். ஏன்?  துணிகளை எடுத்தால் மழை நின்று விடுமாம்! துணிகள் நினைந்தால் பரவாயில்லை. மழை வர வேண்டும். மழை தான் வேண்டும்.

அவர் சொல்வதில் சரியா! தவறா! என்று நான் பேசப்போவதில்லை. ஆனால் அப்படி சொல்வதில் அவருடைய பெருந்தன்மை தெரிகிறது. வெறும் பெருந்தன்மை என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது!  தான் என்னும் சுயநலம் இல்லை.  மழையோ அடிக்கடி பெய்வதில்லை. மழை பெய்கின்ற போது அதனை நிறுத்துவது பாவம். மழை பெய்யட்டும். மழை பெய்வதால் தான்  மட்டும் அல்ல இந்த ஊரே  பயன் அடைகிறது.

தன்னைப் பற்றி நினைக்காமல் தங்கள் ஊரைப்பற்றி நினைக்கிறார்களே அவர்கள் போற்றப்பட  வேண்டியவர்கள். இன்றைய நிலையில் சுயநலவாதிகளைத் தான் எங்கும் பார்க்கிறோம். பொது நலம் என்பதே கேலிக்குறிய பொருளாகிவிட்டது! தனக்கு மட்டும், தனக்கு மட்டும் என்கிற சுயநலப் போக்கு அதிகமாகி விட்டது. தான், தனது குடும்பம், தனது பிழைப்பு, தனது செல்வம் - இப்படித்தான் ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றியே சிந்திக்கிறான். ஆனால் எந்த மனிதனும் தனித்து வாழ முடியாது! பிறர் உதவியின்றி வாழ முடியாது!

கொஞ்சமாவது பொதுநலத்தோடு வாழ முயற்சி செய்யுங்கள். மழை பொதுவானது. அந்த மழையைக் கூட - அளவுக்கு அதிகமானால் - அதனை எப்படி சேமிப்பது அல்லது பயன் உள்ள முறையில் பயன்படுத்துவது என்று யோசியுங்கள். எல்லாவற்றுக்கும் ஒரு வழி உண்டு.

மழையை வா! வா! என வரவேற்போம்!