Sunday 18 June 2017

சசிகலாவுக்கு இன்னும் மாளிகை வாசம் தான்!


பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சின்னம்மா சசிகலாவுக்குச்  சிறையில்,  தான் அடைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணராதவாறு அவருக்குச் சிறை அதிகாரிகள் எல்லா வகையிலும்  சலுகைகளை வாரி வாரி வழங்குகிறார்களாம்!

பணம் பாதாளம் மட்டும் பாயும் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் இப்போது தான் சின்னம்மாவிடம் இருக்கும் பணம் எப்படியெல்லாம் - பாதாளம் மேலாளம், சட்டமன்றம் நாடாளுமன்றம், மத்திய காவல்துறை உள்ளூர் காவல்துறை, உள்ளூர் சிறை வெளியூர் சிறை  - என்று  எதனையும் விட்டு வைக்காமல் எங்கும் பணம் பாயும் என்பதை இப்போது  தான் சின்னம்மா மூலம் நமக்கும் தெரிய வருகிறது! பரம்பரை பணக்காரர்கள் செய்யத் துணியாத அளவுக்கு சின்னம்மா செயல்படுவதைப் பார்க்கும் போது தமிழக ஆட்சி அவர் கையில் இருந்து அவ்வளவு சீக்கிரத்தில் விடைபெறும் என்று சொல்ல முடியவில்லை!

ஏதோ ஒரு கோடி, இரண்டு கோடி என்றால் நமக்குப் பெரியாதாகத் தோன்றாது. இவர்கள் பேசுவதெல்லாம் இருபது கோடி, ஐம்பது கோடி, நூறு கோடி - இப்படியே பேசி நம்மை மிரள வைக்கிறார்கள்! எங்கெல்லாம், எப்படியெல்லாம் பணம் என்னும் பயங்கர ஆயுதத்தை பயன்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் சின்னம்மா பயன்படுத்தி நமக்கு மயக்கம் வரச் செய்கிறார்! அவரிடம் இலஞ்சம் வாங்காத அதிகாரிகள் இல்லை என்னும் அளவுக்கு அவரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன!

தமிழ் நாட்டில் மெரினா போராட்டத்திற்குப் பின்னர் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை சின்னம்மாவின் கட்டளையின் பேரில் தான் நடத்தியாக செய்திகள் வெளியாயின. இப்போதும் கூட முதலமைச்சர் எடப்பாடியை விட சின்னம்மாவின் குரலுக்குத்தான் காவல்துறை தயாராக இருக்கிறது! சிறையில் இருந்தாலும் சின்னம்மாவின் குரல் தான் ஒங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது!

இந்தச் சூழலில் பெங்களூரு சிறை மட்டும் என்ன விதி விலக்கா? அவர்களும் தங்களைப் புனிதர்கள் என்று பறைசாற்றிக் கொள்ளவில்லையே! இப்போது சின்னம்மாவிற்கு மற்ற கைதிகள் போல் அல்லாது மிகவும் விஷேசமாகக் கவனிக்கப் படுகிறார். சிறையாக இருந்தாலும் சின்னம்மாவிற்கு அங்கும் மாளிகை வாசம் தான்!

போகிற போக்கில் பிரதமர் மோடியையும் தன் வசம் இழுத்து விடுவார் என்றே தோன்றுகிறது. ஆக மிச்சம் மீதம் உள்ள நான்காண்டுகள் சசிகலாவின் வசமே இருக்கும் என நம்பலாம். அத்தோடு தமிழ் நாட்டில் உள்ள மிச்சம் மீதம் உள்ள அத்தனை வளமும் சசிகலாவின் காலடியில்!


No comments:

Post a Comment