Thursday 29 June 2017

இதுவும் பயங்கரவாதம் தானே!

செபராங் பிறை, போலிடெக்னிக்கில்  உள்ள உணவகம் மூடப்பட்டதற்கு இனவாதம் காரணம் அல்ல என்று கல்வி  துணை அமைச்சர் ப.கமலாநாதன் சமீபத்தில் கூறி இருந்தார். அதனால் அவர் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இருந்தார். இப்போது பிரச்சனை "அதுவல்ல இது வேறு" என்பது தெரியவந்திருக்கிறது. இப்போது துணை அமைச்சர் நடவடிக்கையில் இறங்குவார் என நம்பலாம்.

என்ன தான் நடந்தது? உணவகத்தின் உரிமையாளர் கோபி கிருஷ்ணன் கோபால்,  பினாங்கில் நடந்த  செய்தியாளர் சந்திப்பில் தனது வேதனையைக் கொட்டியிருக்கிறார். தானும் தனது மனைவியும் கல்லூரியின் நிர்வாகத்தினால்   இஸ்லாத்திற்கு மாறும்படி பணிக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார்; அதாவது வற்புறுத்ப்பட்டிருக்கிறார்.

நமது கேள்வி இது தான்: ஒரு கல்லூரி நிர்வாகம், தனது கட்டுப்பாட்டில்  இருக்கும் ஒரு உணவகத்தின் உரிமையாளரையும் அவரது மனவியையும் அத்தோடு அவரது குடும்பத்தையும் "மதம் மாறுங்கள்" என்று கூறூவதற்கு அதிகாரம் உண்டா? என்பதே நமக்கு எழும் ஐயம். மதம் மாற்றுகின்ற வேலையைச் செய்ய வேறு வெவ்வேறு நிறுவனங்கள் அரசாங்கத்தில் இயங்குகின்றன. அதன் முழு வேலையே பிற சமயத்தினரை மதம் மாற்றுவது மட்டுமே. ஆனால் கல்வி நிலையங்களுக்கும் மதம் மாறுவதற்கும் என்ன சம்பந்தம் என்று நமக்குப் புரியவில்லை! இது துணை அமைச்சர் கமலநாதனின்  எல்லைக்குள் வருவதால் அவர் தான் அதற்கானப் பதிலைச் சொல்ல வேண்டும்.

இந்தச் சம்பவத்திற்கும்   பயங்கரவாதத் தன்மைக்கும் ஏதேனும் தொடர்புகள்  இருக்கிறதோ என எண்ணவும் தோன்றுகிறது.  இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ன சொல்லுகிறார்கள்? "மதம் மாறு இல்லாவிட்டால் சுட்டு விடுவோம்"  என்கிறார்கள்.  நமது கல்வியாளர்களும் அதையே தான் கொஞ்சம் வித்தியாசமாக "மதம் மாறு இல்லாவிட்டால் உணவகமே நடத்த விட மாட்டோம்" என்கிறார்கள்! தொனி ஏறக்குறைய ஒன்று தான்! அந்த அதிகாரம் தான்!

இது போன்ற தொனிகள், இது போன்ற அதிகாரங்கள் சமீபகாலமாக கொஞ்சம் அதிகமாகவே போய்க் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதுவும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஸாகிர் நாயக் போன்றவர்கள் நாட்டில் தங்குதடையின்றி நடமாடிக் கொண்டிருப்பது எந்த வகையிலும் சரியானதாக நமக்குத் தோன்றவில்லை.

எப்படி இருப்பினும் நாட்டில் பயங்கரவாதம் துளிர்விடும் முன்பே அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அதுவும் கல்வி நிலையங்களில் அது ஒடுக்கப்பட வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம், நல்லதே நடக்கட்டும்!

No comments:

Post a Comment