Saturday 15 April 2017

கையில் பணமில்லையே..!


தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு முதல் தகுதி கையில் பணம் இருக்க வேண்டும்.

வெறும் கையில் முழம் போடுபவர்கள் நம்மிடையே அதிகம். எல்லாத் தகுதிகளும் உண்டு ஆனால் பணம் தான் இல்லை என்று சொல்லுபவர்கள் நம் இனத்தவர்களில்  நிறையவே உண்டு.

இன்று நமக்கு வங்கிகள் கடன் கொடுக்கவில்லை, அரசாங்கத்தில் உள்ள நிறுவனங்கள் கடன் தர மறுக்கின்றன, பெரிய நிறுவனங்களுக்கே கடன் தருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டுக்கள் எல்லாம் உண்டு.

பெரிய நிறுவனங்களுக்கு,  வெற்றி பெற்ற நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பதற்கு  வங்கிகளுக்குப் பயம் இல்லை. அவைகளெல்லாம் தங்களது திறமையை மெய்ப்பித்து விட்டன. அதனால் வங்கிகள் தாராளமாக அள்ளி அள்ளிக் கொடுக்கும்.

ஆனால் வளர்கின்ற நிறுவனங்கள் நிலைமை வேறு. இந்த நிறுவனங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.   வளர்ந்து கொண்டிருப்பதற்கான ஆதாரங்கள் அவர்களுக்குத் தேவை. நமது நிறுவனம் வளர்கின்றதா  என்பதற்கான ஆதாரம் நமக்கும் தேவை தானே? இல்லாவிட்டால் நாம் வளர்கின்றோமா, தேய்கின்றோமா என்பதை எப்படி நாம் அறிவோம்? நாம் வளரவில்லை என்பதாக நமது ஆதாரங்கள் காட்டினால் - வளராத ஒரு நிறுவனத்திற்கு யார் கடன் கொடுப்பார்?

அதனால் சிறு நிறுவனங்கள் தங்களது தொழிலை படிப்படியாக முன்னேற்றத்தை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். நாம் முன்னேறுகிறோம் என்பதற்கான ஆதாரத்தையும் கொண்டிருக்க வேண்டும். நமது வியாபாரம் சம்பந்தமான ஆவணங்கள், வங்கிக் கணக்குகள் நம்மிடம் இருக்க வேண்டும். குறிப்பாக கணக்கு வழக்குகள் என்பது சிலர் நினைப்பது போல் வீண் விரயம் அல்ல. நமது கணக்கு வழக்குகளைச் சரியானபடி கண்காணிக்க வேண்டும். அதனை எப்படி வைத்திருக்க வேண்டும் என்று நாம் அறிந்திராவிட்டால், தெரிந்தவர்களை  வேலைக்கு வைத்திருக்க வேண்டும்,. சிறு நிறுவனங்களுக்குத் தான் கணக்கு வழக்குகள் மிகவும் தேவை. அது தான் நமது வளர்ச்சியை- தளர்ச்சியைக் காட்டும் கண்ணாடி!. பெரும்பாலான நமது முன்னேற்றம் தடைபடுவது  கணக்குவழக்குகள் சரியாக நாம் வைத்துக் கொள்ளாதது தான்.    

நம்மிடையே இன்னொரு சாரார் உண்டு. அது தான் வெறும் கையில் முழம் போடுபவர்கள். வாய் வீச்சு வீரர்கள்! தொழில் செய்ய வேண்டுமென்று பெரிய போராட்ட வீர்ர்கள் போல் பேசுபவர்கள். வங்கி கடன் கொடுக்கவில்லை என்பார்கள்.அரசாங்கம் கடன் கொடுக்கவில்லை என்பார்கள்! எல்லாரையும் திட்டுவார்கள்! ஆனால் எந்த ஒரு தொழிலும் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்! அவர்களிடம் பணம் இருந்தாலும் தங்களது பணத்தை வெளியே எடுக்க மாட்டார்கள்! அவர்களுக்கு யாராவது ஓசியில் கொடுக்க வேண்டும். மற்றவர்களின் பணத்தில் தொழில் செய்ய வேண்டுமென்று மனக்கோட்டைக் கட்டுவார்கள்! இவர்களால் எந்தக் காலத்திலும் தொழில் செய்ய முடியாது!  செய்தாலும் வெற்றி பெற முடியாது!

தொழில் செய்ய விரும்புபவர்கள் முதலில் தங்களின் பணத்தைப்  போட்டுத் தான் தொழில் தொடங்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. நிறுவனம் வளர்ச்சி பாதையை நோக்கிப் போகும் போது தான் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக வங்கிகளை நாட  வேண்டும்.

அதுவரை நமது பணமே மூலதனம்!
                                                                             

No comments:

Post a Comment