Thursday, 30 November 2017

வாய்த் தவறினேன்!! மன்னியுங்கள்!


கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ துங்கு அட்னான் துங்கு மன்சூர் எல்லாருக்கும் தெரியும் படியாக "என்னை மன்னியுங்கள்! சமயங்களில் நான் "லூசுத்தனமாக" பேசிவிடுவேன்! பெரிது படுத்தாதீர்கள்!" என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்!

பொதுவாக அவர் மன்னிப்பு கேட்கும் நபர் அல்ல. ஆனால் இந்த சமயம் அவர் மலாய்க்காரர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார்! அதனால் மன்னிப்புக் கேட்கும் அவசியம் அவருக்கு     ஏற்பட்டுவிட்டது! தேர்தல் வருகிறது என்றாலே இப்படி எல்லாம் நடக்கத்தான் செய்யும். 

ஆனால் உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை! உண்மையைத்தான் பேசினார். அதற்குத் தான் இந்த மன்னிப்பு! 

மாரா கல்லூரி ஆரம்பிக்கபட்டதின் நோக்கம், நிச்சயமாக, ஓர் உயர்வான நோக்கம் தான். அதில் ஏதும் ஐயம் இல்லை. கல்வித் துறையில் மிகவும் பின் தங்கிய சமூகமாக இருந்த மலாய்க்காரர்களுக்கு அன்றைய நிலையில் அரசாங்கத்தின்  உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டது என்பது உண்மை. அதனைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. எப்படியோ, ஏதோ ஒரு வழியில் அவர்கள் அரசாங்கத்தின் அனைத்து காலி இடங்களையும் நிரப்பும் பணியை இந்த மாரா கல்லுரிகளை வைத்து  நிரப்பட்டது.  தகுதியின் அடிப்படையில் அல்ல, தகுதியே இல்லாத நிலையில் தான் நிரப்பட்டது!  அது ஒரு காலம். அதன் பலாபலனை அப்போதிருந்தே மலேசியர்கள் அனுபவத்திக் கொண்டிருக்கிறர்கள் என்பதும் உண்மை!

ஆனால் இப்போது இந்த மாரா கல்லுரிகளின் நிலை என்ன? இப்போது அதன் கல்வித்தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. எல்லா உயர் கல்வி நிறுவனங்களைப் போல நல்ல சிறப்பான தரமான     கல்வியை இந்தக் கல்லூரிகள் கொடுக்கின்றன. இங்கு  சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டு இந்த மாணவர்களால் அந்தக் கல்வியின் தரத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பது தான். அதாவது வேறு தரமான கல்லூரிகளில் படிக்க 'இலாயக்கு' இல்லாத மாணவர்கள்  அனைவரும் இந்தக் கல்லுரிகளில் கொண்டு வந்து குப்பைகளைக் கொட்டுவது போல் கொட்டப்படுகிறார்கள்! கெட்டிக்கார மலாய் மாணவர்கள் வெளி நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். அல்லது உள்ளுரிலேயே தரமான கல்விக்கூடங்களுக்கு அனுப்பப்ப்படுகிறார்கள்.. ஆனால் எதற்குமே தகுதி இல்லாதவர்கள் மாரா கல்லுரிகளை நிரப்புகிறார்கள்.! அதற்குக் காரணம் வழக்கம் போல அரசாங்க பதவிகளை நிரப்ப இவர்கள் தேவைப்படுகிறார்கள். அதனால் அரசாங்க ஊழியர்களின் தரம் எப்போது மாறும் என்று நம்மால் கணிக்கப்பட் முடியவில்லை!

இந்த மாரா கல்லுரிகளின் குப்பைகளைத் தான் துங்கு அட்னான் "மந்தமான மாணவர்கள்" என்று ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்! குப்பைகளைக் கிளரினால் என்ன நடக்கும் என்பதை துங்கு இந்நேரம் புரிந்திருப்பார்! அதனால் தான்  வாய்த் தவறினேன்! மன்னியுங்கள்! என்று மன்னிப்புக் கேட்க வேண்டியதாகிவிட்டது!

நாமும் மன்னிப்போம்!


Tuesday, 28 November 2017

பள்ளிக்கால நண்பர்...!


ஓரிரு நாள்களுக்கு முன்னர் எனது பள்ளிக்கால நண்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சந்தித்து நீ.....ண்....ட  காலம் ஆயிற்று. அதிகம் பேச முடியவில்லை. நான் வேலையில் மூழ்கி இருந்தேன். ஆனாலும் ஏதோ முடிந்த வரையில் இருவரும் பழைய ஞாபங்களைப் பகிர்ந்து கொண்டோம்.

அவரை எனது பள்ளிகால நண்பர் என்று சொன்னேன். என்னோடு அவர் பள்ளியில் படிக்கவில்லை. அப்போது அவர் அச்சகம் ஒன்றில் அச்சுக்கோப்பாளராக வேலை செய்து கொண்டிருந்தார்.  என்னோடு படித்தவர்களும் அவருக்கு  நண்பர்கள் தான்.  ஆனால் இதில் என்ன எனக்கொரு ஆச்சரியம் என்றால் அவரோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாத என்னோடு படித்த மற்றவர்களைப் பற்றியும்  அவர் தெரிந்து வைத்திருந்தார்! அது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. எங்களுடைய தலைமை ஆசிரியரின் பெயரைத் தெரிந்து வைத்திருந்தார். என்னோடு படித்த சில பெண்களின் பெயரைத் தெரிந்து வைத்திருந்தார்! இதெல்லாம் "எப்படி?" என்று எனக்குப் புரியவில்லை! ஆனாலும் இந்தச் செய்திகள் எல்லாம் எங்கள் பக்கம் இருந்து தான் அவருக்குப் போயிருக்க வேண்டும்! இல்லாவிட்டால் எப்படி? இப்போது எனக்கு ஞாபத்திற்குக் கொண்டு வர முடியவில்லை. 

நான் இன்னும் முக்கிய செய்திக்கு வரவில்லை.  ஆமாம்!    எங்களைப் போன்ற மாணவர்களுக்கு வெளியே அச்சகத்தில் வேலை செய்யும் ஒருவருடன் எப்படி தொடர்பு எப்படி ஏற்பட்டது? அந்தக் காலக்கட்டத்தில் சிங்கப்பூர் வானொலியும், மலாக்கா வானொலியும் "நேயர் விருப்பம்" நிகழ்ச்சிக்கு மிகவும் பிரபலமானவை. (சிங்கப்புர் என்றால் கோலலம்பூர் என்று நினைத்துக் கொள்ளுங்கள்),  அப்போது மலாக்கா நேயர் விருப்பம் தெரசா அவர்களால் நடத்தப்பட்டது. சிங்கப்பூர் நிகழ்ச்சி கமலாதுரை, செசிலியா போன்றவர்களால் நடத்தப்பட்டது. இந்த நேயர் விருப்ப நிகழ்ச்சியில் எங்களோடு படித்த குப்புசாமி என்னும் மாணவரின் பெயர் மிகவும் பிரபலம். எல்லா நேயர்விருப்ப நிகழ்ச்சியிலும் அவர் பெயர் ஒலிக்கும்! அப்படியென்றால் நாடுபூராவும் அவர் பெயர் நேயர்விருப்ப நிகழ்ச்சியில் ஒலிக்கும். ஆகா! அது ஏதோ சினிமா நடிகர் மாதிரி ஒரு கர்வம்!  இதில் எங்களுக்கும் பங்கு உண்டு!  

இந்த நண்பர் மூலம் தான் இந்த அச்சக நண்பர் அறிமுகமானர். அப்போது அவருடைய அச்சகத்தில் புதிதாக நேயர்விருப்ப கார்டுகள் அறிமுகப் படுத்தியிருந்தார்கள். அதனை எங்களுக்கெல்லாம் காட்டி, அதில் கொஞ்சம் சிக்கனம் இருப்பாதாகக் கூறி, எங்களையெல்லாம் வாங்க வைத்தார்! இப்படித்தான் அந்த அச்சக நண்பர் அறிமுகமானார். இப்படித்தான் அவருடைய அறிமுகம் ஏற்பட்டது!

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவரைச் சந்தித்ததில் என்ன மாற்றத்தைக் கண்டேன்? இப்போது அவர் பேசுகின்ற தமிழ் ஏதோ தமிழ்ப் பண்டிதர் பேசுவது போல் இருந்தது. அழுத்தம், திருத்தமாக தமிழைப் பேசுகிறார். தமிழாசிரியர்கள் கூட இப்படிப் பேசுவதை நான் பார்த்ததில்லை! அப்படி ஒரு தூய தமிழில் பேசுகிறார். வார்த்தைகள் தெளிவாக வந்து விழுந்தன. அழுத்தமாக இருந்தன. 

இன்றைய நிலையில் இப்படித் தமிழ் பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் கேலி செய்ய ஒன்றுமில்லை. அந்தத் தமிழ்ப்பற்று, இனப்பற்று அவரிடமிருந்தது. அன்றைய இளைஞர்களிடையே இருந்த அந்த மொழிப்பற்று இன்னும் அவரிடம் அப்படியே இருக்கிறது.

ஒரு வேளை நாங்கள் தான் மாறிவிட்டோமோ!


Monday, 27 November 2017

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்!


உலக அளவில் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இதில் கருத்து வேறு பாடுகள்  யாருக்கும் இருக்க முடியாது.

கடைசியாக எகிப்து, அல்ரவ்டா  பள்ளிவாசல் மேல் தொடுக்கப்பட்ட கொடூரத் தாக்குதல் மிகவும் மனிதாபிமான மற்ற தாக்குதல் என்று நாம் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறோம் ஆனால் அதனைக் கேட்கத்தான் ஆளில்லை.

எல்லா மதங்களிலும் பிரிவினைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் பிரிவினைகளை இந்த அளவுக்கு -  பள்ளிவாசல்களை குண்டு வைத்துத் தகர்க்கும் அளவுக்கு , மக்களைக் கொல்லும் அளவுக்கு  - வெறுப்பது - என்பது மிகவும் கொடூரம். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் 305 மேற்பட்ட மக்கள் பள்ளிவாசலின் தொழுகையின் போது கொல்லப்பட்டிருக்கின்றனர். அதில் 27 பேர் சிறுவர்கள். இன்னும் 128 பேர் காயமடைந்து இருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் முப்பதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சம்பந்தப் பட்டிருக்கின்றனர் என்பதாகச்   செய்திகள் கூறுகின்றன.

இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் ஒரு புறம் இருக்க சம்பந்தப்பட்ட குடும்பங்களில் பாதிப்புக்கள் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. தந்தைகளை இழந்த குடும்பங்கள், மகன்களை இழந்த பெற்றோர்கள், கணவர்களை இழந்த பெண்கள் -  இந்தக் குடும்பங்கள் எப்படித் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள போகின்றனர்? பிரச்சனைகள் இல்லாதக் குடும்பங்களே இல்லை. அதிலும் குறிப்பாக பொருளாதாரச் சிக்கல்கள் இல்லாதக் குடும்பங்களை எங்கே பார்ப்பது? இந்த நிலையில் அந்தக் குடும்பங்களின் நிலை என்ன? யார் அவர்களைக் காப்பாற்றுவார்?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைப்பது சிரமம். பயங்கரவாதிகளை யார் யோசிக்க வைப்பது? அவர்களும் ஏழ்மை நிலையில் இருந்து பணத்துக்காக பயங்கரவாதிகளாக மாறியவர்கள். இங்கு ச்மயம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. பணத்துக்காகத் தான் இந்த வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். இதனைத் தொடர விடக் கூடாது என்பது தான் அனைவரின் பிரார்த்தனையும். ஒழிக்கப்படும் நாள் விரைவில் வரும் என நம்புவோம்!


Saturday, 25 November 2017

கேள்வி - பதில் (67)


கேள்வி

தமிழகத்தை ஆளும் அண்ணா தி.மு.கா,  ஈ பி எஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததனால் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது?

பதில்

இரட்டை இலைச் சின்னம் ஈ பி எஸ் அணியினருக்குத் தான் கிடைக்கும் என்பது ஏறக்குறைய நாம்  அறிந்தது  தான்.  இன்றைய நிலையில் அவர்கள் தான் தமிழகத்தின் ஆளுகின்ற கட்சி. பா.ஜ.க.வின் ஆதரவு  அவர்களுக்குத் தான். மற்ற அணியினரிடம் இரட்டை இலை போயிருந்தால் தமிழகத்தின் ஆட்சி கவிழ்ந்து விடும்! தாக்குப் பிடிக்காது. ஆளுங்கட்சியில் இருப்பவர்கள்  ஆளுக்காள் பிய்த்துக் கொண்டு போய்விடுவார்கள். அதனால் பா.ஜ.க. வுக்கு ஆளுங்கட்சியின் தயவு தான் தேவை.

இது முற்றிலுமாக பா.ஜ.க. வின் அரசியல்! ஈ.பி.எஸ். அணி இருக்கும் வரை பாஜ.க. வின் அரசியல் தான் நடந்து கொண்டிருக்கும்.  தமிழகத்தின் மேல் இன்னும் என்னென்ன நெருக்கதல்கள் ஏற்படுத்த முடியுமோ, என்னென்ன புதிய புதிய சட்டங்களைக் கொண்டு வந்து தமிழகத்தை வீழ்த்த முடியுமோ, அத்தனையையும் மத்திய அரசு செயல்படுத்துவதற்கு ஈ.பி.எஸ். அணி அவர்களுக்குத் தேவை. ஏன்? ஜல்லிக்கட்டுப் பிரச்சனையைக் கூட மத்திய அரசு செயல்படுத்துவதற்கு இவர்களின் உதவி அவர்களுக்குத் தேவை.  அதையும் விட்டுக் கொடுக்க இவர்கள் தயார். இவர்கள் நோக்கமெல்லாம் பணம் மட்டுமே! பணத்திற்காக எதனையும் இழக்க அ.தி.மு.கா.வினர் தயார். அது  நாடாக இருந்தாலும் சரி, தங்களது பிள்ளைக்குட்டிகளாக இருந்தாலும் சரி! அனைத்தையும் இழக்கத் தாயார். அதனால் தான் தங்கள் பிள்ளைக்குட்டிகளை எல்லாம் அமரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என்று அங்கு அனுப்பி விடுகின்றனர் அல்லது  அங்கு  சொத்துக்களை வாங்கிக் குவிக்கின்றனர். இவர்களுக்கு நாட்டுப்பற்றோ, இனப்பற்றோ மொழிப்பற்றோ இல்லாத ஒருவித ஜந்துக்கள் இவர்கள்!

என்ன செய்வது? கடந்த ஐம்பது  ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு அனுபவித்தவர்கள். நாட்டைக் கொள்ளையடித்தவர்கள். அவர்களிடம் போய் "உனக்கு ஏன் தமிழன் என்னும் பற்று இல்லை! உனக்கு ஏன் தமிழ் மொழி மீது பற்று இல்லை! உனக்கு ஏன் நமது கலாச்சாரத்தின் மீது பற்று இல்லை" என்றெல்லாம் கேள்விகள் கேட்பது கோமாளித்தனம்!

இந்த இரட்டை இலை வருகையினால் பெரிய மாற்றம் எதுவும் தமிழகத்திற்கு வரப்போவதில்லை. ஏறக்குறைய இவர்கள் அவர்களின் அம்மாவுக்கு என்ன கதி ஏற்பட்டதோ அது தான் இவர்களின் கட்சிக்கும் நடக்கும்!

அடுத்து இவர்களுக்கு புதை குழி தான்!




நான் ஒரு முட்டாளுங்க...!


"நான் ஒரு முட்டாளுங்க!" என்னும்  பாடல்  ஒரு காலக்கட்டத்தில் மிகவும் பிரபலம். அந்தப் பாடலைப் பாடியவர் பிரபலப் பாடகர், நடிகர் ஜே.பி.சந்திரபாபு. அந்தப் பாடல் கேட்பதற்கு இனிமையாகவும் சிலக் கருத்துக்களைச் சொல்லும் பாடலாகவும் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். அந்தக் காலக் கட்டத்தில்  சந்திரபாபு நகைச்சுவை நடிகராகவும் பாடகராகவும்  மிகவும் பிரபலம்.

ஆனால் இந்தப் பாடல் பட்டித்தொட்டிகளிலெல்லாம் ஒலிக்க ஆரம்பித்த போது வேறு ஒரு தாக்கத்தையும் இந்தப்பாடல் ஏற்படுத்தியது. பொதுவாக அவரது ரசிகர்கள்  அவரை ஒரு முட்டாளாகவே நினைத்தனர்! காரணம் சொந்த வாழ்க்கையில், அந்த நேரத்தில் வெற்றிகரமாக நடிகராக இருந்தும் கூட, அவர் பல  தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அதனால் அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். முற்றிலுமாகக் குடிபோதையில் தன்னையே அழித்துக் கொண்டார். தான் ஒரு முட்டாள் என்பதாகவே அவரும் நினைக்க ஆரம்பித்து விட்டார். அப்படியே ஒரு முட்டாளாகவே அவரது கடைசி காலம் அமைந்து விட்டது.

அதனால் தான் நாம் எந்தக் காலத்திலும் எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். 

நம்மைப் பற்றி நமக்கு உயர்ந்த அபிப்பிராயம் இருக்க வேண்டும். நான் ஒரு முட்டாள், நான் ஒரு மடையன், நான் கையாளாகதவன் என்றெல்லாம் நம் மனதிலே ஒரு எண்ணத்தை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்துவிட்டுப் போகட்டும். நாம் அப்படியொரு எண்ணத்தை வளர்த்துக் கொள்ளக்கூடாது. நான் கெட்டிக்காரன், நான் திறமைசாலி என்பதாகத்தான் நமது எண்ணங்கள் இருக்க வேண்டும். மிக முக்கியம். நான் வெற்றியாளன் என்னும் எண்ணம் மிக ஆழமாக மனத்தில் பதிய வைக்க வேண்டும். கையில் பணம் இல்லாவிட்டாலும் 'அது தற்காலிகம்' என்று சொல்லிவிட்டு மீண்டும் நமது எண்ணங்களை வெற்றியை நோக்கிய பயணமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

ஜே.பி. சந்திரபாபு ஒரு முட்டாள் அல்ல.  ஆனால் அப்படி ஒரு  எண்ணத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டார். அவரைச் சுற்றி இருந்தவர்களும் அதனை வளர்த்து விட்டனர்.  நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மை முட்டாள் என்று சொன்னாலும், மடையன் என்று சொன்னாலும் எந்த எதிர்மறை வாசகங்களை நம் மீது திணித்தாலும் - நாம் மட்டும் - அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அது தான் - அந்த ஒன்று தான் - வாழ்க்கையில் நம்மை உயர்த்தும். மனத்தைப் பாறையாக்கிக் கொள்ள வேண்டும். நாம்  நம்மைப் பற்றி என்ன நினைக்கிறோமோ அது தான் நாம்.  மற்றவர்கள் நம்மைப் பற்றி நினைப்பவை அது  அவர்களுடைய பார்வை. அதற்கு நாம் பொறுப்பு அல்ல.

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும், என்ன எண்ணம் கொண்டிருந்தாலும், நம்மைப் பற்றிய நமது உயர்வான எண்ணத்தை எக்காரணத்தைக் கொண்டும் நாம் தாழ்த்திக் கொள்ளக் கூடாது!

நம்மை நாம் உயர்த்துவோம்! மற்றவரையும் நாம் உயர்த்துவோம்!! 

Wednesday, 22 November 2017

கேள்வி - பதில் (66)


கேள்வி

நடிகர் கமல்ஹாசன் கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்தாரே அதனால் என்ன பயன்?

பதில்

கமல் அரசியலுக்குப் புதியவர் என்பதால், அரசியல் அனுபவம் பெற்ற பினராயி விஜயிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்  என்பதாக செய்திகள்வெளியாயின. அது மட்டும் அல்ல  மேற்கு வங்க மாநிலத்தைச்  சேர்ந்த  மம்தா  பானர்ஜீ  என்னும் ஒரு முதலைமைச்சரையும் அவர் சந்தித்திருக்கிறார்.

இது ஒரு நல்ல  முயற்சி  தான்.  தனக்குத்  தெரியாத  ஒரு  புதியத்  துறையைத் தேர்ந்தெடுக்கும்  போது  சில  அனுபவங்களைப்  பெறவாவது  இது  போன்ற பேச்சு  வார்த்தைகள்  தேவை  தான். அதனை அவர் செய்திருக்கிறார்.  நமக்கும்  அது  பொருந்தும்.

கமல்,  கேரள முதல்வரைச் சந்தித்து  என்ன  பேசினார்  என்பது  தெரியாவிட்டாலும்  தமிழ்  நாட்டைப்  பாதித்த/பாதிக்கிற ஒரு  சில  விஷயங்களையாவது  அவர்  பேசியிருந்தால்  மனதுக்குக்  கொஞ்சம்  நிறைவாக  இருந்திருக்கும்.  கமல்  தமிழக  முதல்வர்  அல்ல.  அவர்  பேசுவதால்  எந்தப்பயனும்  இல்லை  என்பது  நமக்கும்  தெரியும்.   

எது  எப்படியோ,  ஒரு  விஷயம்  மனதைக்  குடைந்து  கொண்டே  இருக்கிறது.  கேரளாவில்  ஒரு  விபத்தில்  பாதிப்படைந்த  ஒரு  தமிழருக்கு எந்த  ஒரு  கேரள  மருத்துவமனையும்  அவருக்குச்  சிகிச்சை  அளிக்க ஏற்றுக்கொள்ளவில்லை.  அதன்  பின்னர்  இன்னும்  இரண்டு  தமிழர்களுக்கும்  அதே  கதி  தான்.  மருத்துவமனைகள்  கை விரித்து விட்டன.  

இது  ஏன்  என்று  நமக்குப்  புரியவில்லை. சாகும்  நிலையில்  இருந்தும்  கூட  அவர்கள்   உதவத்   தயாராக இல்லை. ஆனாலும்  தமிழ் நாட்டில்  அவர்கள்  என்னவொரு  நிம்மதியான  வாழ்க்கை வாழுகிறார்கள் என்பதை நான் சொல்லித் தெரிய  வேண்டியதில்லை. ஊடகத் துறையில்  அவர்களின்  செல்வாக்கு  அதிகம். சினிமா, சின்னத்திரை என்று  எடுத்துக்  கொண்டாலும் அவர்கள்  தான்  முன்னணியில்  நிற்கிறார்கள்.  ஏன்?  இன்றைய நிலையில்  சென்னை  நகரில்  மலையாளிகளின் ஆதிக்கம்  அதிகம். இதனையே  நாம்  கேரளாவில் பார்க்க  முடியுமா?  தமிழர்களைக்  கேரளாவில் பார்த்தாலே அவர்களை  விரட்டி அடிக்கிறார்களாம் மலையாளிகள். இதனை நான் சொல்லவில்லை. ஒரு  மலையாளியே இதனைச் சொல்லுகிறார்!  அவரே சொல்லுகிறார்:  நான் தமிழ்  நாட்டுக்கு அடிக்கடி வந்து  கொண்டிருக்கிறேன்.  யாரும்  என்னை  முறைத்துக் கூடப்  பார்த்ததில்லை  என்கிறார். 

அது  தான்  தமிழன்  செய்கின்ற  தவறோ?  அனைவரையும்  வரவேற்பதே  தமிழனுக்குக்  கொள்ளி  வைக்கிறதோ?  நமது  கொள்கையை  நாம் மாற்றிக்கொள்ள வேண்டுமோ?

அது  சரியோ, தவறோ  தெரியவில்லை!  ஆனால்  கமல்ஹாசன் இது பற்றிப்  பேசியிருந்தால்  நமக்கும்  சந்தோஷமே!  வெறும்  சந்திப்பு  என்பது  யாருக்கும்  பயனில்லை!

Saturday, 18 November 2017

தியாகு, நீர் வெற்றி பெற வேண்டும்..!


தியாகுவின் 350 கிலோ மீட்டர் நடைப்பயணம் வெற்றி பெற வேண்டும். 


தமிழ்ப்பள்ளிகளைக் காக்க 350 கிலோ மீட்டர் நெடும்பயணத்தை மேற்கொள்கிறார், தியாகு. ஜோகூர், துன் அமினா தமிழ்ப்பள்ளியில் தொடங்கி , புத்ரா ஜெயாவை நோக்கி அமைகிறது அவரது பயணம்.  25.11.17 அன்று தொடங்கி 11.12 17 அன்று முடிவடைகிறது.  சுமார் 17 நாட்கள். பயணத்தினூடே ஆங்காங்கே கவன ஈர்ப்புக் கூட்டங்கள் தனது கருத்துக்களைப் பதிவு செய்ய. மக்களுக்கு விழிப்பை ஏற்படுத்த.

அரசாங்கத்தின் இருமொழி திட்டத்தை தவறாகக் கையாண்ட தலமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அவருடைய நோக்கம் என்றாலும் இந்த இரு மொழித் திட்டம் முற்றிலுமாக தமிழ் மொழியை அழிக்க வழி வகுக்கும் ஒரு திட்டம் என்பதை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதும், நோக்கமாகவும் இந்தப் பயணம் அவருக்கு அமைகிறது.

இந்த இரு மொழித் திட்டத்தில்,  தமிழ்ப்பள்ளிகளுக்கான அடையாளமே  இருக்கக் கூடாது என்பது அரசாங்கத்தின் திட்டம். அரசாங்கத்தின் இத்திட்டத்திற்கு முழு ஆதரவு கொடுப்பவர் துணைக்கல்வி அமைச்சர் கமலநாதன். அத்தோடு ஒரு சில தமிழ்ப்பள்ளி தலமை ஆசிரியர்களையும் அவருடன் சேர்த்துக் கொண்டு தமிழ்ப்பள்ளிகளை அழிப்பதற்கான வேலைகளில் அவர் முழு மூச்சாக இறங்கியிருக்கிறார்.  தமிழ்ப்பள்ளிகளின் மேல் கை வைக்கும் இவர்கள் சீனப்பள்ளிகள் மேல் கை வைக்க முடியவில்லை. கை வைக்கவும் முடியாது. சீனர்களின் பலம் அங்கு இருக்கிறது.  இங்கு நாம் பிரிந்திருக்கா விட்டாலும், பிரித்து வைப்பதற்கு அரசாங்கம் உள்ளுற பல வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது! வலுக்கட்டாயமாக நாம் பிரித்து வைக்கப்படுகிறோம். அதனால் தான் ஒரு சில தலமை ஆசிரியர்களின்  இருமொழி திட்டத்திற்கான ஆதரவு!

இந்த அநீதிகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே தியாகு அவர்கள் இந்த 350 கிலோ மீட்டர் நெடும் பயணத்தை துவக்குகிறார். 27 வயதான தியாகு, ஓர் மருந்தியல் பட்டதாரி.  அவருடன் கை கோப்பவர்கள் இன்னும் சில தமிழ் ஆர்வலர்கள்.

இந்த நடைப்பயணம் என்பது நமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் பல வழிகளில் இதுவும் ஒன்று. ஆனாலும் நம்மிடையே மெத்தப் படித்தவர்கள் பலர் பெரிய பதவிகளில் உள்ளனர். அவர்களும் தாய் மொழிப்பற்றோடு அரசாங்கத்தை அணுகினால் - பேச்சு வார்த்தை நடத்தினால் - இன்னும் நமக்கு வலு சர்க்கும்.  மற்றைய இயக்கங்களும், குறிப்பாக வர்த்தக இயக்கங்களும், ஒதுங்கி இருப்பதை தவிர்க்க வேண்டும். இது நமது பிரச்சனை. நாம் ஒன்றுபட வேண்டும். 

தியாகுவும் அவர் தம் குழுவினரும் இந்த நடைப்பயணத்தை வெற்றிகரமாக முடிக்க -  உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துகள்!

நன்றி: செம்பருத்தி


Friday, 17 November 2017

எதிர்கட்சி ஆதரவாளரா தலமையாசிரியை?





துடிப்பு மிக்க தலமையாசிரியை ஒருவர், பள்ளிக்கு மாற்றலாகி ஓர் ஆண்டு காலம்  கூட  ஆகாத  நிலையில், திடுதிப் என மாற்றப்பட்டிருக்கிறார். 

பட்டர்வொர்த், மாக்மாண்டின் தமிழ்ப்பள்ளியின் தலமை ஆசிரியை, திருமதி தமிழ்ச்செல்வி தான் அந்த மாற்றத்திற்கு உரியவர். இந்தத் தீடீர் மற்றம் ஏன்?  மாக்மாண்டின் தமிழ்ப்பள்ளியின் விரிவாக்கதிற்கு 1,00,000 ஒரு இலட்சம் வெள்ளியும், பள்ளியின் பாலர் பள்ளியின் வளர்ச்சிக்கு  10,000 பத்தாயிரம் வெள்ளியும் அவருக்குத் தேவைப்பட்டது.  துணைக்கல்வி அமைச்சர் பி.கமலநாதனின் அமுதசுரபியான எந்த ஒரு சாராய ஆலைகளாலும்  அதனைக் கொடுக்க இயலாத நிலையில், தலமை ஆசிரியை மாநிலத்தை ஆட்சி  செய்யும் எதிர்கட்சி அரசாங்கத்திடம் உதவியை  நாடியிருக்கிறார். மாநில  முதல்வர், துணை முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பள்ளிக்கு வருகை தந்து பள்ளிக்குத் தேவையான நன்கொடையை அளித்திருக்கின்றார்கள். மத்திய அரசாங்கம் தேவையான நன்கொடையை அளிக்க முடியாத நிலையில்  மாநில அசாங்கம் பள்ளிக்குக் கை கொடுத்தது மத்திய அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படி? எப்படி? எப்படி? என்று மேலும், கீழும் குதித்துவிட்டு கடைசியில் "எங்களிடமா உன் வில்லத்தனம்?"  என்று அந்தத் தலமை ஆசிரியரை  பிறை தமிழ்ப்பள்ளிக்கு மாற்றி விட்டார்கள்!

ஏன் மாற்றினோம் என்பதற்கு ஒரு நொண்டிச்சாக்கையும் கூறியிருக்கிறார்கள்! இவர் மட்டும் அல்ல இன்னும் ஏழு தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த தலமை ஆசிரியர்களும் மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதாக! ஆனால் இங்குக் கேட்கப் படுகின்ற கேள்வி: நன்கொடை கொடுப்பதற்கு முன்னதாக ஏன் இந்த மாற்றம் வரவில்லை? என்பது தான்!

கமலநாதன் சார்! நீங்கள் நீடூழி காலம்  வாழ்ந்து 'அம்னோ'வுக்குச் சேவை செய்து பல பட்டங்களையும் பதவிகளையும் பெற வாழ்த்துகிறேன்!

மீன் பிடிக்க இனி இந்தி தெரிந்திருக்க வேண்டும்..!


தமிழக மீனவர்கள் இது நாள் வரை சிங்களக் கடல்படையினரின் அனைத்து  அராஜகத்திற்கும் பொறுமை காத்தனர். இன்னும் காத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். மீனவர்கள் சுடப்பட்டனர்.  மீனவர்களின்  படகுகள் வலுக்கட்டயமாக அபகரிக்கப்பட்டன. மீனவர்கள்  சிறைவைக்கப்பட்டனர். ஒரு பக்கம் கைது செய்வதும்,  இன்னொரு பக்கம் ஓரிருவரை விடுதலை  செய்து நல்ல  பெயர்  வாங்க  நினைப்பதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தத்  தொடர் நடவடிக்கைக்கு தமிழக  அரசும் இந்திய  அரசும் துணைப் போவதும்  பொதுவாக நாம் அறிந்த செய்தி தான். 

ஆனல்  சிங்களக் கடல்படையினர்  தமிழக  மீனவர்களை  "உங்களுக்கு ஏன்  சிங்களம்  தெரியவில்லை"  என்னும்  கேள்வியை மட்டும்  அவர்கள்  இது நாள் வரை கேட்கவில்லை!  இனி  அதையும்  கேட்கும் நிலை  வந்துவிட்டதாகத்  தோன்றுகிறது!  ஆமாம்!  அவர்கள்  எல்லையில்  மீன் பிடிப்பதாகத்தான்  சிங்களப் படையினரின் குற்றச்சாட்டு.  அவர்கள்  எல்லையில்  திருட்டுத்தனமாக மீன்  பிடிப்பதற்கும்  சிங்களம் தெரிந்திருக்க  வேண்டும்  என்று  இனி  மீனவர்கள்  குற்றம்  சாட்டப்படலாம்!  தெரியாவிட்டால்  அவர்களுக்கு  ஓரிரு  மாதங்கள் சிறைதண்டனை அதிகரிக்கப்படலாம்!  ஒரு  கோமளித்தனமான  அரசு  என்றால்  எதுவும்  நடக்கும்.  நீதி,  நியாயம்  பற்றியெல்லாம்  அவர்களிடம்  எதிர்பார்ப்பது  என்பது  கோமாளித்தனம்!

இனி  இது போன்ற  பிரச்சனைகள்  வரலாம்  என்று  ஏன் எதிர்பார்க்கிறோம்? எல்லாம்  இந்திய  கடலோரக்  காவல்படையினர்  செய்த  அடாவடித்தனம். சொந்த  நாட்டு  மீனவர்களைச்  சுட்டுத்தள்ளியிருக்கின்றனர். ஒருவேளை இவர்கள்  சிங்கள  மீனவர்கள் என்று  அவர்கள்  சுடப்பட்டிருக்கலாம்!  காரணம்  இவர்கள்  காவல் காக்கும்  பணியில்  உள்ளவர்கள்.  அவர்களுக்கு யார் அத்து மீறினாலும் அவர்கள்  சுடப்பட  வேண்டும்  என்பது  அவர்களுக்குக்  கொடுக்கப்பட்ட  கட்டளை. இந்த  மீனவர்கள்  இந்திய கடலோரப் பகுதிகளில்  அத்து  மீறி  இருக்கலாம்! அந்தப்பக்கம்  போனால்  சிங்களம் இராணுவம் அத்து  மீறல் என்கிறது!  இந்தப்பக்கம் வந்தால்  இந்திய  இராணுவம்  அத்து மீறல்  என்கிறது! இது  தான்  தமிழக  மீனவனின்  நிலை.  அப்படியென்றால்  அவன்  எங்கு தான்  மீன்  பிடிப்பது?  அதிலும்  இந்திய  இராணுவம் "உனக்கு ஏன்  ஆங்கிலம்  தெரியவில்லை! உனக்கு  ஏன்  இந்தி  தெரியவில்லை?"  என்பது  போன்ற  கேள்விகள்  வேறு!  அவன்  மேல்  தாக்குதல் நடத்திவிட்டு மேலும் இதுபோன்ற  கேள்விகள்!

தமிழக  மீனவனாக இருந்தாலும்  அவனுக்கு  இந்தி  தெரியவேண்டும்,   என்பது  மத்திய  அரசாங்கத்தின்  கொள்கையாக  இருக்க  வேண்டும்!  அவர்களின்  கொள்கையை  இப்போது  இராணுவத்தின்  மூலம்  நிறைவேற்ற  முயற்சி  செய்கிறார்கள்  என்றே  தோன்றுகிறது!

இப்போது  மத்திய  அரசாங்கம்  தெளிவாக  இருக்கிறது. கடலில்  மீன்  பிடிக்கும் மீனவனாக  இருந்தாலும் சரி அவனுக்கு இந்தி  தெரிந்திருக்க  வேண்டும் என்பது  தான்! இந்த  மீனவர்களை இப்படியே  விட்டால் அவன் இந்தக்  கடல் பகுதியையே  தமிழ்  மயமாக்கி விடுவான் என்கிற ஒரு  பயம்! இது  ஒன்றும்  புதிது  இல்லையே. இது தமிழர் சார்ந்த  பகுதி.  அனைத்தும்  தமிழ்  தானே! இங்குள்ள  மீனும் தமிழ்  மீன்கள்  தானே! அவைகளும்  தமிழ் தானே  பேசுகின்றன!

பயம்  வேண்டாம்!  ஆளப்போகிறான்  தமிழன் என்பது விரைவில் தெரியும்!


Thursday, 16 November 2017

கேள்வி - பதில் (65)


கேள்வி

கமல்ஹாசனின் முதலமைச்சர் கனவு நிறைவேறுமா?

பதில்

நிறைவேறுமா, நிறைவேறாதா  என்று இப்போதைய நிலையில் சொல்ல முடியவில்லை. தமிழக மக்களின் மன நிலை எப்படிப் போகும் என்று கணிப்பது மிகவும் கடினம்.

அவர் பேசும்  போது  நல்ல  அறிவுஜீவியாகவே  தோன்றுகிறார்.  நல்ல  வாதங்களை  எடுத்து  வைக்கிறார். நல்ல  திறமைசாலியாகவே நமக்குத்  தோன்றுகிறது.

ஆனாலும்  ஒரு  சினிமா  நடிகர்  என்னும் போது  கொஞ்சம் சந்தேகக் கண் கொண்டு தான் பார்க்க வேண்டியிருக்கிறது.  ஏற்கனவே  ஒரு சினிமா வசனகர்த்தாவான  கருணாநிதியை அவ்வளவு  சீக்கிரத்தில  நாம்  மறந்துவிட  முடியாது.  "பராசக்தி" படம்  வெளிவந்த  காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.  அடாடா!  தமிழகத்துக்கு விடிவு  காலம்  பிறந்து விட்டது. தமிழன்  தலை  நிமிர்ந்து  விடுவான்  என்னும்  எதிர்பார்ப்பு எத்திசையையும்  ஒங்கி  ஒலித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. தமிழர் நடுவே இப்படி ஒரு தமிழனா  என்று வியந்து  அவரை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது.  இப்போது  பார்க்கும்  போது  நம்  அனைவரையுமே  ஒரு  தெலுங்கர்   முட்டாளாக்கி  விட்டரே  என்று நொந்து  கொள்ள  வேண்டியிருக்கிறது!  கருணாநிதி  ஒரு  தெலுங்கர்  என்பதே ஓரிரு  ஆண்டுகளுக்கு  முன்பு  தான்  எனக்கே  தெரிய வந்தது! அந்த  அளவுக்கு  அவர்  தமிழர்  வேஷம் போட்டுக் கொண்டிருந்தார். அவர் தெலுங்கர்  என்பதற்காக  அவரை  நான்  வெறுக்கவில்லை. ஆனால் தமிழனைக்  குடிகார  இனமாக  மாற்றியமைத்தாரே  அதுவே  போதும்  அவர்  ஒரு  தமிழர்  துரோகி என்று!

கமல்ஹாசன்  தமிழன்  தான்.  வரவேற்கலாம்  தான். அவர்  என்ன தான் தன்னைப்  பிராமண  எதிர்ப்பாளன் என்று  சொல்லிக்  கொண்டாலும்  இன்றைய  நிலையில்  அப்படியெல்லாம்  ஏமாந்து விடக்கூடாது என்பதும் கவனத்தில்  கொள்ள  வேண்டியுள்ளது.  பிராமணன்,   பிராமணனாகத்தான் இருப்பான். மத்தியில் பிராமணர்கள் ஆட்சி. தமிழகத்திலும்  அவர்களின்  ஆட்சி  தான்!  கமல்ஹாசன் எப்படி  ஒரு  தமிழனாக  இயங்க  முடியும்?  அவர்  சுதந்திரமாக இயங்க  விடுவார்களா பிராமணர்கள்?  எதிர்க்க முடியாத நிலையில்  அவரும்  அவர்களோடு  இணைந்து  கொண்டால்...?

எதனையும் உறுதிப்படுத்த முடியவில்லை.  அவரின் அறிவுக்கும்  ஆற்றலுக்கும் அவர்  முதலமைச்சராக வரலாம்!

நல்லது நடக்கும்  என  எதிர்பார்ப்போம்!


Tuesday, 14 November 2017

எந்த வயதிலும் அம்மா, அம்மா தான்!




அம்மா அடா கீட்டிங்,  வயது 98; மகன் டாம் கீட்டிங்,  வயது 80. மகன் தள்ளாத வயதில் 'கூட மாட உதவ ஆள் இல்லாததால்,     ஹூட்டன், லிவர்பூலில்    உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் 2016 -ம் ஆண்டு முதல் வசித்து வருகிறார். மகனுக்கு தீர்க்க முடியாத ஒரு பிரச்சனை. காலை நேரத்தில் அவருக்கு "காலை வணக்கம்" சொல்ல ஒருவருமில்லை; படுக்கப் போகும் போது 'இரவு வணக்கம்' சொல்ல ஒருவருமில்லை. சாப்பாட்டு நேரத்தில் மணி அடித்தால் அவரைக் கூப்பிட ஆளில்லை.

மகனின் கஷ்டத்தை  உணர்ந்த தாய் அவரும் மகனுக்கு உதவியாக அந்த முதியோர் இல்லத்தில் வந்து சேர்ந்து கொண்டார். தாயார் ஒரு முன்னாள் நர்ஸாக இருந்தவர். அதனால் மகனுக்கு உதவியாகவும்,  இல்லத்தில் உள்ள வயதானவர்களையும் 'பேசியே'  கவனித்துக் கொள்ளுகிறார்! 

அந்த அம்மாவுக்கு டாம் மூத்த மகன். மகன் திருமணம் செய்து கொள்ளவில்லை. எல்லாக் காலங்களிலும் அம்மாவோடேயே கூட இருந்து பழகிவிட்டவர். அம்மாவுடைய உதவி இல்லாமல் அவர் தனித்து இருந்ததில்லை. அதனால் மகன் சிரமப்படக் கூடாது என்பதால் முதியோர் இல்லத்திலும் வந்து தங்கிக் கொண்டு மகனுக்கு உதவியாக இருக்கிறார்.

அம்மா என்ன சொல்லுகிறார்? "அம்மா என்றால் எப்போதும் அம்மா தான்! அந்தக் கடமை எப்போதும் இருக்கிறது!"  என்கிறார்.

எப்படிப் பொழுது போகிறது?  இருவரும்  தொலைக்காட்சி பார்க்கின்றனர்.  காற்பந்து பார்ப்பதில் ஆர்வம் அதிகம். 

அடாவுக்கு டாமை தவிர்த்து இன்னும் மூன்று பிள்ளைகள். அவர்களின் வழி பேரப்பிள்ளைகள் இருக்கின்றனர். பேரப்பிள்ளைகள் அடிக்கடி வந்து பார்த்துவிட்டுப் போகின்றனர். பேரப்பிள்ளைகளுக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி.  அம்மாவும் மகனும் எல்லாக்காலங்களிலும் ஒன்றாகவே இருந்திருக்கின்றனர். கடைசிக்காலத்திலும் அவர்கள் ஒன்றாகவே இருப்பது மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறுகின்றனர்.

முதியோர் இல்லத்தின் நிர்வாகி என்ன சொல்லுகிறார்? "இப்படித் தாயும் மகனும் இங்கு தங்கியிருப்பது ஓர் அரிதான நிகழ்ச்சி. பெரும்பாலும் இப்படி இருப்பதில்லை. இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அனைத்தும் நாங்கள் செய்கிறோம்" என்கிறார்.

டாமுக்கும் இல்லத்தில் இருப்பது பிடித்திருக்கிறது. "எல்லாரும் நல்லபடியாகக் கவனித்துக் கொள்ளுகிறார்கள். அம்மாவும் என் கூட இருப்பது இன்னும் மகிழ்ச்சி.  ஆனால் அம்மா இடையிடையே "டேய் ஒழுங்காயிரு!" என்று கண்டிப்பாக இருப்பார்.

இன்னும் நீண்ட நாள் வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்!






Sunday, 12 November 2017

ஏன் தமிழன் ஆள வேண்டும்..?


தமிழன் தான் தமிழ் நாட்டை ஆள வேண்டுமா என்று கேட்டால் "ஆமாம்! தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள் வேண்டும்!" என்று சத்தம் போட்டுச் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. அது தமிழர்களின் உரிமை. எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களே தான் முதலமைச்சராக இருக்கிறார்கள். அதனால் தமிழன் தான் தமிழ் நாட்டை  ஆள வேண்டும் என்று நாம் சொல்லுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தமிழர் அல்லாதார் கேள்வி எழுப்புவதும் சரியில்லை.

இத்தனை ஆண்டுகள் எழாத கேள்வி இப்போது ஏன் எழுகிறது? கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு யாருக்குக் கிடைத்தது? கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா - இவர்கள் அனைவருமே தமிழர் அல்லாதார். இடையிடையே அவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் தமிழர்கள் அல்ல.  அதுவல்ல நாம் எழுப்பும் கேள்வி.  இந்தத் தமிழர் அல்லாதார் மூலம் தமிழ் மக்கள் அடைந்த பயன் என்ன?  அவர்கள் செய்த துரோகங்கள் தான் அதிகம். நல்லவைகளை விட கொடுமைகளே அதிகம்.

குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். சாராயக்கடைகளை அரசாங்கமே ஏற்று நடத்துகிறது! யாருடைய நிறுவனங்கள் அவை? கருணாநிதி, ஜெயலலிதா குடும்ப நிறுவனங்கள்!  எம்.  .ஜி.ஆர். சினிமாப் படங்களில் குடிப்பதில்லை. ஆனால் அவர் ஆண்ட காலத்திலும் சாராயக்கடைகளை அதிகரித்தாரே தவிர குறைப்பதற்கான  எந்த  முயற்சிகளும் எடுக்கவில்லை! அவர் நல்லவராக இருந்து என்ன பயன்? தமிழக மக்களைக் குடிகாரர்களாக ஆக்கிய அவரை  எப்படித்  தமிழர்கள் நல்லவர்  என்று சொல்ல முடியும்? 

தமிழ் நாட்டில் தமிழ் மொழியின் நிலை என்ன?  கருணாநிதியைத் தமிழறிஞர் என்கிறோம். அவர் காலத்தில் தானே ஆங்கிலத் தனியார்  பள்ளிகள் அதிகமாகின  உருவாகின? அரசுப்  பள்ளிகளை "கார்ப்பரேஷன்"  பள்ளிகள்  என்று கேவலாமாகப் பேசப்பட்டன.  அவர் அதனை ரசித்தாரே தவிர அரசுப் பள்ளிகளை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே!  ஓரு தமிழறிஞர் தமிழின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கவில்லையே! அவர் குழி தோண்டி அல்லவா புதைத்தார்!

தமிழர் வரலாறு மாணவர்களுக்குத் தெரியவில்லையே! யார் குற்றம்? மீனவர்கள் பிரச்சனை ஓயவில்லையே, யார் குற்றம்? ஈழத் தமிழர்களை  கொத்து கொத்தாகக் கொன்று குவித்தனரே அதனைக் கண்டும் காணதவாறு இருந்தது யார் குற்றம்? அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் யார்? தமிழர் அல்லாதவர்கள் தானே?இந்த அளவு தமிழர்களைக் கேவலமாக ஆட்சி செய்த இந்த தமிழர் அல்லாதார் ஆட்சியைத் தொடர வேண்டுமா, என்ன?

இவர்களின் ஆட்சியில் தமிழர்களுக்கு நல்லது நடந்திருந்தால் நாங்கள் ஏன் "தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும்" என்னும் கோஷத்தை எழுப்புகிறோம்? அதற்குத் தேவையே இருந்திருக்காதே! நடந்தது காட்டுமிராண்டி ஆட்சி! அது ஏன் தோடர வேண்டும்?

ஆக, இனி தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்னும் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்! வாழ்க தமிழினம்!


தொடர்ந்து குரல் கொடுப்போம்! இழந்தவைகளை மீட்போம்!

Friday, 10 November 2017

கேள்வி - பதில் (64)


கேள்வி

தமிழக அரசியலில் கமல்ஹாசனின் நிலை என்ன?

பதில்

இன்னும் எதனையும் அவர் உறுதியாகச் சொல்லவில்லை.  "இதோ வந்து விட்டேன்" என்கிறார்! "இன்னுமா உங்களால் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை?"  என்று கேள்வி கேட்கிறார்! "மக்களைக் கேட்டுவிட்டு சொல்லுகிறேன்" என்கிறார்!  ஆனாலும் "நான் வருகிறேன்" என்று இதுவரை உறுதிப் படுத்தவில்லை.  வழக்கம் போல எல்லாரையும் குழப்புகிறார். 

ஆனாலும் அவரை நாம் குற்றம் சொல்ல முடியாது. அவர் சினிமாத்துறையைச் சார்ந்தவர். பல கோடிகள் புரளும் ஒரு மாபெரும் துறை அது. லாபம் நஷ்டம் என்று பலவற்றைப் பார்த்துவிட்டார். வெற்றிகள் பலவற்றைக் கண்டவர். தோல்விகளையும் சந்தித்தவர்,  வெற்றி, தோல்வி என்பதைவிட அந்தத் துறையை மிகவும் நேசித்தவர். தான் நினைத்ததைச் சொல்ல சினிமாவைப் பயன்படுத்தியவர். 

தான் நேசித்த ஒரு தொழிலை சும்மா அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து விட முடியாது. அரசியல் களம் என்பது வேறு. சும்மா டுவிட் பண்ணலாம். குறைகள் சொல்லலாம். களத்தில் இறங்குவது என்பது வேறு. அரசியலில் நாகரிகமற்றவர்கள் குடும்பப் பிரச்சனைகளை எல்லாம் எழுப்புவர். அதனையெல்லாம்  அவர் எதிர்நோக்க வேண்டும். ஆனால் இதனையெல்லாம் ஏற்கனவே அவர் அனுபவித்து விட்டவர்.  தோலும் தடித்து விட்டது. அதனால் எதுவும் உறைக்காது!

ஆனால் நம்மைப் பொறுத்தவரை அவரால் தமிழகத்திற்கு என்ன லாபம் என்று தான் சராசரியான தமிழர்களின் கேள்வி. வெள்ளம்  ஏறுதல், குப்பைக் குவியல்கள் என்பதெல்லாம் ஒரு பக்கம்.  அது மட்டும் தாம் பிரச்சனைகள் என்பதல்ல. விவசாயம் உயிர் பெற வேண்டும். மீனவர்கள் பிரச்சனை.  கலாச்சாரம், தமிழ் மொழி மீதான பிரச்சனைகள் - இவைகளெல்லாம் சரி செய்யப்பட வேண்டும். இந்தப் பிரச்சனைகள் மீது அவர் இன்னும் வாய்த் திறக்கவில்லை!

ஒன்று மட்டும் தெளிவு. அவர் முதலைமச்சர் ஆக வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். அவரின் தன்னம்பிக்கை எனக்குப் பிடித்திருக்கிறது. அது முடியுமா, முடியாதா என்பது   பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முடிந்தால், நமது வாழ்த்துகள்!


காந்திய வழியில் குமரி ஆனந்தன்...?


 

குமரி ஆனந்தன் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். வயது 86. சமீபத்தில் நல்ல நோக்கத்திற்காக பாதயாத்திரை சென்றவர். ஆனாலும் அவரால் 380 கிலோமீட்டருக்கு மேல் செல்ல முடியாமல்,  இடையிலேயே பாதயாத்திரையைக் கைவிட்டவர். அத்தோடு உண்ணாவிரதம் வேறு. இப்போது  சோர்வு, உடல் தளர்ச்சி, வயது மூப்பின் காரணமாக ராயப்பேட்டை அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வருகிறார்.

குமரி ஆனந்தன் அவர்கள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் முறையில்  மாதம் ரூபாய் 32,000 ஓய்வுதியமாகப் பெறுகிறார்.  அரசாங்க வாடகை வீட்டில் ருபாய் 4,000  வாடகைக் கொடுத்து  வசித்து வருகிறார்.

இவர் அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதில் அப்படி என்ன விசேஷம்? இவர் மகள் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன். அவர் ஒரு டாக்டர். தமிழிசையின் கணவர் சௌந்திரராஜன் ஒரு டாக்டர். குமரி ஆனந்தனின் பேரப்பிள்ளைகள் அனைவரும் டாகடர்கள். அத்தோடு இவரின்  சகோதரர் வசந்த் & கோ நிறுவனத்தின் வசந்தகுமார் தமிழ் நாட்டின் கோடிஸ்வரர்களில் ஒருவர்.

ஆக இத்தனை வசதிகளும் வாய்ப்புக்களும் இருந்தும் அவர் ஒரு தனி ஆளாக வாடகை வீட்டில்  வசித்து வருவது என்பது ஆச்சரியம் தானே!  அதற்கு  அவர் சொல்லும் காரணம்  அவரவர் அவர்கள்  வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் எனது வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  எந்த இடைஞ்சலும் இல்லை என்கிறார்.

அவருடைய சூழலில் அரசாங்க மருத்துவமனை என்பது .......எப்படி?  என்று கேட்டால்:  சிறப்பாகவே இயங்குகிறது. நன்றாகக் கவனித்துக் கொள்ளுகிறார்கள். பொது மக்கள் தொடர்ந்து  அரசு மருத்துவமனைகளுக்கு  ஆதரவு கொடுக்க வேண்டும் என்கிறார். எந்த அரசியல்வாதியும் அவருடைய  அலோசனையைக் கேட்கமாட்டார்கள் என்பது அவருக்கு மட்டும் அல்ல, நமக்கும் தெரியும்! அத்தோடு பொது மக்களை அரசு மருத்துவமனைகள் நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டுமென்றால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தமிழிசை இருக்க வேண்டும் அல்லது வசந்தகுமார் இருக்க வேண்டும்!

எப்படி இருப்பினும் காந்தீய வழியில் அவர் அரசு மருத்துவமனையைத் தேர்ந்து எடுத்ததற்காக வாழ்த்துகிறேன். குறைந்தபட்சம் அவர் அந்த மருத்துவமனையில் இருக்கும் வரை மற்ற நோயாளிகளும் பயன் பெறுவார்கள் என்பதும் உண்மை! அரசு மருத்துவமனையை அவரைப் போன்ற அரசியல்வாதிகள் தேர்ந்து எடுப்பது மகிழ்ச்சியான செய்தி.  மற்ற அரசியல்வாதிகளும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்பதே நமது அவா!


Tuesday, 7 November 2017

தாளடி பணிந்தேன், டாக்டர்!



இந்தியா, ஓடிஷா மாநிலத்தில் ஓர் அபூர்வாமான சம்பவம். மனிதம் செத்துவிட்டது என்று சொல்லும் இந்தக் காலக்கட்டத்தில் "அப்படியெல்லாம் இல்லை, அது  இன்னும் உயிர்  வாழ்கிறது"  என்று சொல்லும்படியான  ஒரு சம்பவம்.


எந்த மருத்துவ வசதியும் இல்லாத ஒரு கிராமம், சாரிகேத்தா. ஒரளவு வசதிகள் உள்ள  மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றால் பத்து கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். ஆனால் பாதைகள் இல்லை.  சேறும், சகதியும், ஆறுகளையும் கடந்து செல்ல வேண்டும்.  டாக்டர் ஓம்கார் ஹோட்டா சமீபத்தில் தான் மாவட்ட சுகாதார மையத்தின் பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டிருந்தார்.  அன்று காலை வழக்கம் போல வேலைக்குப் போன போது அவருக்கு தொலைப்பேசி அழைப்பு காத்துக் கொண்டிருந்தது.  மலைப் பிரதேச கிராமம் ஒன்றில் வசிக்கும்,  சுபம் மார்சே, என்னும் பெண் பிரசவத்திற்குப் பின்னர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். இரத்தப்போக்கு  நின்றபாடில்லை.       

செய்தியை அறிந்த டாக்டர் ஓம்கார் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு, தனது உதவியாளருடன், அந்தக் கிராமத்திற்கு  விரைந்தார்.  ஆனால் அவரால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. மருத்துவமனைக்கு உடனடியாகச் செல்ல வேண்டிய நிலையில் அந்தத் தாய் இருந்தார்.   ஆனால் ஆம்பலன்ஸோ வேறு எந்த வாகன வசதிகளோ அங்கு இல்லை. கிராம மக்களும் ஒத்துழைக்காத சூழ்நிலையில் அவரும் அந்தப் பெண்ணின் கணவரும் அந்தப் பெண்ணை ஒரு கட்டிலில் கிடத்தி இருவரும் சேர்ந்து மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.  சேறும் சகதியும் நிறைந்த 10 கிலோமீட்டர் தூரம். மூன்று மணி நேரப் பயணம் கட்டிலைத் தூக்கிக் கொண்டு!    

உயிருக்குப் போராடிய அந்தப் பெண்ணுக்கு 18 மணி நேர தீவிர சிகிச்சை கொடுத்த பின்னர் இப்போது தாயும் சேயும் அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டனர். 

இப்படியும் ஒரு டாக்டரா என்று நாமும் அதிசயிக்கிறோம்.  பணத்தை மட்டுமே குறியாகக் கொண்டு இயங்கும் இந்த நவ நாகரிகக் காலத்தில் இவரின் காலில் விழுந்து நானும் வணங்குகிறேன். இது ஒரு சாதாரண விஷயமாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. இவர் நீண்ட காலம் வாழ்ந்து மக்களுக்குத் தனது சேவைகளைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.    

உமது தாளடி பணிந்தேன், டாக்டர்!                                                                           




Monday, 6 November 2017

புழுவைத் தின்னக் கொடுத்த வேலைக்காரி!

இன்று பல வீடுகளில் வேலைக்காரப் பெண்கள் தான் குழந்தைகளுக்கு அம்மாவாகவும், அப்பாவாகவும், தாத்தாவாகவும் பாட்டியாகவும் - இப்படிப் பல அவதாரங்களை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்!  இன்றைய   நிலையில் வேலைக்காரிகள் இல்லை என்றால் பாவம்! குழந்தைகளைக் கவனிக்க ஆளில்லை! அது ஒரு குற்றமாகவும் இளந்ததலைமுறைப் பெற்றோர்கள் எடுத்துக் கொள்வதில்லை. காரணம் பணம்!  பணத்தைத் தூக்கி வீசினால் பத்து பேர் வரிசையில் வந்து நிற்பார்கள்! உண்மையே!  பத்து பேர் நிற்கலாம்! ஆனால் பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் அரவணைப்பு அந்தக் குழந்தைக்குக் கிடைக்குமா என்பது தான் கேள்விக் குறி. ஏதோ ஒன்றிண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் அரவணைப்பை விட பலவித ஆபத்துக்களையே இந்தக் குழந்தைகள் எதிர் நோக்குகின்றனர்.

சமீபத்தில் முகநூலில் பார்த்த ஒரு காட்சி மனதை விட்டு அகலவில்லை. ஓரிரு இரவுகள் அதே நினைவு. எப்படி இவர்களால் இப்படியெல்லாம் செய்ய முடிகிறது? குழந்தைக்கு எதனையோ சாப்பிடக் கொடுக்கிறாள் அந்த வேலைக்காரப் பெண். அந்தப்பெண் காட்டப்படவில்லை. அந்தக் குழந்தை இன்னும் பேசப்பழகவில்லை.  ஏறக்குறைய இரண்டு வயது இருக்கலாம். அதன்  முன்னால் ஒரு தட்டில் மீ போன்று கறுப்பு நிறத்தில் ஏதோ வைக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பதற்கு ஏதோ கறுப்பு நிற மீகூன் போல் இருக்கிறது.  அதனை எடுத்து குழந்தைக்கு ஊட்டுகிறாள். அவள் அதனைச் சாதாரணமாக கையில் எடுத்து ஊட்டுவது போல் அல்லாமல் ஒன்று ஒன்றாக எடுத்து ஊட்டுகிறாள். அவள் ஏன் அப்படிச் செய்கிறாள் என்பது எனக்குப் புரியவில்லை. ஒன்றே ஒன்று அந்தக் குழந்தையின் வாயில் போகிறது.  அது ஒரு புழுவைப் போல - நாக்குப்பூச்சி என்போமே - அப்படி நெளிந்து நெளிந்து அவன் வாயினுள்ளே போகிறது.  உண்மையில் என்னால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது எப்படி? அது எப்படி? அந்த வேலைக்காரப் பெண் சிரிக்கும் சத்தம் கேட்கிறது. அந்தக் குழந்தையிடம் எந்தச் சலனுமும் இல்லை. கீழே வைக்கப்பட்டிருக்கும் அந்தத் தட்டைப் பார்த்துக் கொண்டே இருக்கிறதே தவிர இப்படி அப்படி திரும்பவில்லை. சிரிக்கவில்லை. அந்தக் குழந்தைக்கு ஏதோ தவறு நடக்கிறது என்று தெரிகிறது. ஆனால் சொல்ல முடியவில்லை.  அழகானக் குழந்தை. வசதியானக் குழந்தையாகவும் தெரிகிறது. ஆனால் என்ன செய்வது? பெற்றோர்கள் வந்த பிறகு அவர்களிடம் சொல்லவா முடியும்? பேசத் தெரிந்த குழந்தையாக இருந்தால் அந்த வேலைக்காரப் பெண்ணும் அப்படிச் செய்திருக்க மாட்டாள்.

நான் சொல்லுவதெல்லாம் ஒன்று தான். இப்போது பெரும்பாலும் இந்தோனேசியப் பெண்களே வீடுகளில் வேலை செய்கின்றனர். இவர்கள் பின்னணி நமக்குத் தெரியாது. பெரும்பாலும் ஏழைகள்.  நல்ல குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும்  இருக்கலாம். கொலைகாரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் பின்னணி நமக்குத் தெரிந்தால்,  நம்பக்கூடியவர்களை நாம்  நம்பலாம். இல்லாவிட்டால், அந்தக் குழந்தைகளின் தலைவிதி எப்படியோ அப்படித்தான் நடக்கும். அதற்காக இந்தியாவில் இருந்து வருகின்ற பணிப்பெண்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. அவர்களும் அப்படித்தான்.

இவைகள் அனைத்தையும் விட  வீட்டில் வயதானவர்கள்  இருந்தால் அவர்கள் இன்னும் பொறுப்போடு கவனித்துக் கொள்ளுவார்கள்.  நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.      உங்கள் குழந்தைகளின் வருங்காலம் உங்கள் கையில்! அந்தப் பொறுப்பை வீட்டு வேலைக்காரப் பெண்ணிடம் ஒப்படைக்காதீர்கள்!

Friday, 3 November 2017

மக்கள் சக்தி கட்சியினருக்கு, நன்றி!

 
மக்கள் சக்தி கட்சியினருக்கு ஒரு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்.

பினாங்கு, பட்டர்வொர்த் நகரத்தில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தை அந்தக் கட்சியினர் தத்து எடுத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். வெறும் மேகி மீ சாப்பிட்டே காலத்தைக் கழித்தவர்களுக்கு நல்லதொரு எதிர்காலத்திற்கு வழி வகுத்திருக்கிறார்கள்.

ஏழு மாதத்திற்கு முன்னர் ஏற்பட்ட ஒரு விபத்தில், 42 வயதான அந்தக் குடும்பத்தின் தலைவர், உடல் செயல் இழந்து படுத்த படுக்கையானார். அவருடைய மகள்கள் இருவர். ஒருவர் 4-ம் படிவத்திலும், மற்றொருவர் 3-ம் படிவத்திலும் படிக்கின்றனர். வீட்டில் மின்சாரம், தண்ணீர் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன. வீட்டில் வறுமை.  அந்தக் குடும்பத்தின் தலைவியால் தனது குடும்பத்திற்கு உணவாகக் கொடுக்க  முடிந்ததெல்லாம் வெறும் மேகி மீ மட்டும் தான். தீபாவளித் திருநாளும் வெறும் மேகி மீயோடு கழிந்து போனது.

இந்தக் குடும்பச் சூழல்,  மக்கள் சக்தி கட்சியினரின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் தலைவர் டத்தோஸ்ரீ  தனேந்திரன் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அக்குடும்பத்திற்கு முதலில் ஒரு மாதத்திற்கான உணவு பொருட்களும் ரொக்கமாக 500 வெள்ளியும் கொடுக்கப்பட்டது. இனி ஒவ்வொரு மாதமும் 200 வெள்ளிப் பெருமான உணவு பொருட்கள் தொடர்ந்து  ஓர் ஆண்டுக்குக் கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருக்கின்றது.  கல்வி கற்கும் இரு பிள்ளைகளுக்கும் அடுத்த ஆண்டுக்கான கல்விச் செலவுகளை கட்சி ஏற்றுக் கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டிருகின்றது. அதே சமயத்தில்  அவர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கு அரசாங்கத்தின் பி.பி.ஆர்.டி. வீடு ஒன்று கிடைக்கவும் முயற்சிகள்  மேற்கொள்ளப்படும் எனவும் டத்தோஸ்ரீ  தனேந்திரன் அறிவித்தார். 

ஓர் ஏழைத்தாய் என்னதான்  உழைத்தாலும்  அவ்வளவு  பெரிய  குடும்பச் சுமையை சுமப்பது  என்பது சாதாரணமான காரியம்  அல்ல. தக்க நேரத்தில் செய்கின்ற உதவி  கடவுளுக்குச்  சமம். ஒரு குடும்பத்திற்கு என்ன  தேவையோ அத்தனையும்  அக்கட்சியினர்  செய்கின்றனர். 

இது  ஒரு  நல்ல  எடுத்துக்காட்டு. இன்னும்  நாடு பூராவும்  இப்படிப்  பல பேர்  ஏழ்மையில்  வாழ்ந்து  கொண்டு    இருக்கின்றனர். நம்மிடையே  அரசியல்கட்சியில்  ஏராளம்.  மன்றங்கள்,  இயக்கங்கள்  என்று  நிறையவே  இருக்கின்றன. கொஞ்சம்  சுயநலன்களை  மறந்து  இப்படி  வறுமையில்  சுழல்வோருக்கு  உதவ  முன்  வரவேண்டும். இதுவே  நமது  வேண்டுகோள்.   மக்கள் சக்தி  கட்சியினருக்கு நமது  வாழ்த்துகள்!

நன்றி: மக்கள் ஓசை

Thursday, 2 November 2017

பாலிவூட் உஸ்தாஸுக்குத் தடை!



மலேசிய இஸ்லாமியப் போதகர் உஸ்தாஸ் பாலிவூட் என்று அழைக்கப்படும் ஹாஸ்லிம் பகாரிம்,  ஜொகூர் மாநிலத்தில் இஸ்லாமியப் பிராச்சாரத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான ஆணையை ஜொகூர் சுல்தான் நேற்று வெளியிட்டார்.

ஹாஸ்லிமின் பேச்சுக்கள் இனங்களுக்கிடையே கருத்து வேற்றுமைகளை  உருவாக்குவதோடு மட்டும் அல்லாமல் மனக்கசப்பினையும் ஏற்படுத்தக் கூடியவை. அவருடைய மதப் பிரச்சாரங்கள் அனைத்தும் மத நல்லிணக்கத்தை தகர்க்கக்கூடியவை. அவருடைய முன்னைய பிரச்சாரங்களை வைத்துப் பார்க்கும் போது அந்தப் பிராச்சாரங்கள் மக்களுக்கு ஏற்றதாக இல்லை என சுல்தான் அறிவித்தார்.

மாநில இஸ்லாமிய இலாக்கவின்  தலைவர் அப்துல் முத்தாலிப்   இது பற்றி கருத்து தெரிவித்த போது ஜொகூர் மாநிலத்தில் இஸ்லாமியப் போதர்களின் பிராச்சாரங்களைக் கண்காணித்து வருகிறோம்.  பிரச்சாரங்கள் இனங்களுக்கிடையே அல்லது மதங்களுக்கிடையே பிரிவினை ஏற்படுத்துவதை  சுல்தான் விரும்பவில்லை என்றார்.

உஸ்தாஸ் பாலிவூட்டோடு,  ஜிம்பாப்வேயைச் சேர்ந்த முப்தி இஸ்மாயில் மென்க் என்பவரும் ஜொகூரில் இஸ்லாமியப் பிரச்சாரங்களுக்குத் தடைவிதிக்கப் பட்டிருக்கின்றார்.

அதே போல, சிங்கப்பூர் உள்துறை அமைச்சும் இந்த இரு இஸ்லாமியப் போதகர்களை சிங்கப்பூரில் நுழைய தடை செய்திருக்கிறது.  இவர்களால் சிங்கப்புரில்  முஸ்லிம் - முஸ்லிம் அல்லாதவரிடையே ஒற்றுமைக்குக் கேடு விளையும் என அது விளக்கம் அளித்திருக்கிறது.

மலேசியத் துணைப்  பிரதமரும், உள்துறை அமைச்சருமான      டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமிடி  இந்த இரு போதகர்களும் நாட்டில் இருக்க, போதிக்க எந்தத் தடையும் இல்லை என அறிவித்திருக்கிறார். அவர்களால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அவர்கள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல் படுகிறார்கள் அதனால் அவர்களைத் தடை செய்ய வேண்டும் என்பதற்கான அவசியம் இல்லை எனக் கூறுகின்றார்!


Wednesday, 1 November 2017

தீக்குளிப்பது சரியா...?


சமீபத்தில் இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தேசியச்  செயலாளர் எச்,ராஜா நிருபர்களிடம் பேசும் போது  தீக்குளிப்புச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் திராவிடக்கட்சிகள் தான் என்று குற்றம் சாட்டியிருந்தார். அது சரியா, தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அக்குற்றச்சாட்டு பொய் என்று அப்படியே ஒதுக்கி விட முடியாது.

மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழ் நாட்டில் மட்டும் ஏன் அதிகமான தீக்குளிப்புச் சம்பவங்கள்? ஒரு சில சம்பவங்கள் மிகவும் இக்கட்டான, கடன் தொல்லைகளால், குடும்பப் பிரச்சனைகளால் ஏற்படுகின்றன என்பது உண்மையாக இருந்தாலும் அது ஏன் தீக்குளிப்பாக இருக்க வேண்டும்?

தி.மு.க. காலத்தில் தீக்குளிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பது உண்மை தான். ஆனால் அ.தி.மு.க. காலத்தில் தான் மிக அதிகமாக நிகழ்ந்திருக்கின்றன. அது எப்படி?

தீக்குளிப்புக் கலாச்சாரத்தை வளர்த்தவர்கள் என்றால் அது அ.தி.மு.க. வினராகத்தான் இருக்க வேண்டும். இவர்கள் காலத்தில் தான் மிக அதிகமாகத்  தீக்குளிப்புச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 

ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனைக் கிடைத்தால் உடனே அவரின் தொண்டர்கள் தீக்குளிக்கிறார்கள்! ஜெயலலிதா மருத்துவமனைக்குப் போனால் உடனே தொண்டர்கள் தீக்குளிக்கிறார்கள்! கட்சிக்காக அல்ல! ஜெயலலிதாவுக்காக!  ஜெயலலிதாவின் மேல் தொண்டர்களுக்கு அப்படி என்ன பாசம்? இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது தீக்குளித்தவரின் குடும்பத்திற்கு உடனடியாக  நிவாரணத் தொகையாக ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் என்று அள்ளிக் கொடுப்பது தான்! தீக்குளித்தால் பணம் கிடைக்கும் என்னும் ஒரு கலாச்சாரத்தை வளர்த்து விட்டவர்கள் அ.தி.மு.க. வினர்! வளர்த்து விட்டது மட்டும் அல்ல தீக்குளிக்க ஊக்கமளித்தவர்களும் அவர்கள் தான்! ஒரு ஏழைத் தொண்டன். வேலை வெட்டி இல்லாதவன். காலங்காலமாக கட்சிக்காக பாடுபட்டவன். தெண்டச் சோறு என்று பெயர் எடுத்தவன் என்ன நினைப்பான்? தீக்குளித்தால் தான் தனது  குடும்பத்திற்கு ஏதாவது பண உதவி கிடைக்கும் என்று தான் நினைப்பான்! அது தான் இயல்பு!  இப்படித்தான் இந்தத் தீக்குளிப்பு ஒரு தொடர்கதையாக போய்க் கொண்டிருக்கிறது.  இதன் பின்னணியில் சட்டமன்ற உறுப்பினர்களின்  பங்கும் இருக்கிறது என்றும் நம்பலாம். அவர்களுக்குத்  தனது தொகுதியில் இருந்து ஒருவன் அம்மாவுக்காக தீக்குளித்தான் என்பது பெருமைக்குரிய விஷயம்! இவர்களே ஒரு வகையான தூண்டுதலை ஏற்படுத்தி தொண்டர்களைத் தீக்குளிக்க வைக்கிறார்கள் என்பது தான் உண்மை!

இப்போது அம்மா இல்லை. இனி தீக்குளிப்புக்கள் தொடராது என நம்பலாம். சமீபத்தில் நெல்லையில்  நடந்த தீக்குளிப்பு என்பது கட்சி சார்புடையது அல்ல!  கந்து வட்டியால் மனம் உடைந்து  போன சம்பவம்.  ஆனாலும் இவர்களுக்கு உதாரணம் திராவிடக் கட்சிகள் தான்.

இந்த நேரத்தில் ஒன்றை நினைவு கூற வேண்டும். எச் ராஜா மிகவும் சாதாரணமாக இந்தச் சம்பவங்களுக்கெல்லாம்       பெரியார் ஈ.வே.ரா.  தான் காரணம் என்று சொல்லி விட்டார். ஒன்றை அவர் சொல்லத் துணியவில்லை. ஜெயலலிதா காலத்தில் தான் அதிகமான தீக்குளிப்பு சம்பவங்கள் நடந்தன! அவர் ஒரு பிராமணப் பெண் என்பதால் கண்முன்னே நடந்தவைகளை விட்டுவிட்டு பெரியார் காலத்திற்கு அவர் போய்விட்டார். யார் செய்தாலும் தவறு தவறு தான் என்பதை ராஜா  உணர வேண்டும்!

உணவகங்கள் என்றால் அலட்சியமா..!


இன்றைய நிலையில் நமது இந்திய உணவகங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகள் நமக்குத் தெரியாமல் இல்லை. குறிப்பாக உணவகங்கள் ஆள் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றன. உள்ளூர் மக்கள் உணவுகங்களில் வேலை செய்வதை  விரும்புவதில்லை. விரும்பக் கூடாது என்று நினைத்தே பல உணவகங்கள் செயல் படுகின்றன! தமிழ் நாட்டுக்காரன் இளிச்சவாயன் - சம்பளம் ஏதும் கொடுக்காமலேயே - வேலை வாங்கலாம் என்று இன்று பல உணவக "முதாலாளிகள்" நினைக்கின்றனர்! உண்மையில் அவர்கள்  உணவகத்  தொழிலைச்  சேர்ந்தவர்கள்  அல்ல. பணம் பறிக்கும் பறக்கும் கும்பல்கள்!

வேலைச் செய்யும் தொழிலாளர்களுக்கும் போதுமான சம்பளம் கொடுப்பதில்லை. முக்கிக்கொண்டும், முனகிக்கொண்டும் வேலை செய்பவனிடம் தரமான வேலை வாங்க முடியாது.  இப்படித்தான் பல உணவகங்கள் செயல்படுகின்றன. இது போன்று செயல்படுகின்ற உணவகங்கள் தான் சுகாதார இலாக்கவினால் அடிக்கடி தொந்திரவுக்கு உள்ளாகின்றன. இரண்டு வாரம் மூன்று வாரங்கள்  சுத்தமில்லை என்று இழுத்து மூடப்படுகின்றன. உணவகங்கள் மூடப்பட்டால் நமக்கும் வருத்தமே. காரணம் ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒருவரின்  வருமானம் பாதிக்கப்படுகின்றது.  ஆனால் உணவகங்கள் சுத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. பணத்தையும் கொடுத்து, நோயையும் வாங்கிக்கொள்ள  யாரும் தயாராக இல்லை. 

ஏன் இவ்வளவு பீடிகை? சமீபத்தில் ஓர் இந்திய உணவகம், சுகாதார அதிகாரிகளால் மூன்று வாரங்களுக்கு இழுத்து மூடப்பட்டது. எத்தனையோ ஆண்டுகளாக நடைபெறும் ஓர் உணவகம் அது. இத்தனைக்கும் சுகாதார அதிகாரிகளும் சாப்பிடுகின்ற உணவகம்! அதனாலோ என்னவோ முதாலாளியார் ரொம்பவும் நம்பிக்கையுடன் இருந்துவிட்டார்! ஆனால் மற்றவர்களுக்கு என்ன வந்தது? ஒருவர் வாட்ஸ்ஸப்பில் படங்களைப் போட்டு நாறடித்து விட்டார்! காப்பியில் பூச்சி ஒன்று கிடந்ததை படம் பிடித்து அத்தோடு சமயலறை அசிங்கங்களையும் வெளியுலக்குக் கொண்டு வந்து விட்டார்! வாட்ஸ்ஸப்பில் வந்த பிறகு சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம்! அதனால் தான் உணவகத்திற்கு மூன்று வார விடுமுறை!

சமீபத்தில் நான் குளுவாங் நகர் சென்றிருந்த போது அங்கிருந்த ஒர் உணவகத்தைப் பார்த்த போது - இதெல்லாம் நமது தரத்திற்கு ஏற்றதல்ல - என்னும் எண்ணம் தான் வந்தது. சுத்தம் என்பது சாப்பிடுகின்ற இடம் மட்டும் அல்ல. சமயலறை, கழிவறை அனைத்தும் சுத்தமாகத்தான் இருக்க வேண்டும். இதிலெல்லாம் நாம் எந்த இணக்கப்போக்கையும் கொண்டிருக்க முடியாது.

"எங்களுக்கு ஆள் பற்றாக்குறை, எங்களையெல்லாம் சுத்தமாக வைத்துக் கொள்ள சொல்வது சரியல்ல" என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது! ஆள் பற்றாக்குறை என்பதெல்லாம் சும்மா மக்களை ஏமாற்றும் வேலை! சம்பளம் ஒழுங்காகக் கொடுத்தால் உள்நாட்டுக்காரன் கூட வேலை செய்வான். 

நமக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ உணவகத்திற்குச் சுத்தமே முதலிடம். சுத்தமில்லாத உண்வகங்கள் நிரந்தரமாக இழுத்து மூடப்பட வேண்டும் என்பதே நமது அவா!