Saturday 18 November 2017

தியாகு, நீர் வெற்றி பெற வேண்டும்..!


தியாகுவின் 350 கிலோ மீட்டர் நடைப்பயணம் வெற்றி பெற வேண்டும். 


தமிழ்ப்பள்ளிகளைக் காக்க 350 கிலோ மீட்டர் நெடும்பயணத்தை மேற்கொள்கிறார், தியாகு. ஜோகூர், துன் அமினா தமிழ்ப்பள்ளியில் தொடங்கி , புத்ரா ஜெயாவை நோக்கி அமைகிறது அவரது பயணம்.  25.11.17 அன்று தொடங்கி 11.12 17 அன்று முடிவடைகிறது.  சுமார் 17 நாட்கள். பயணத்தினூடே ஆங்காங்கே கவன ஈர்ப்புக் கூட்டங்கள் தனது கருத்துக்களைப் பதிவு செய்ய. மக்களுக்கு விழிப்பை ஏற்படுத்த.

அரசாங்கத்தின் இருமொழி திட்டத்தை தவறாகக் கையாண்ட தலமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அவருடைய நோக்கம் என்றாலும் இந்த இரு மொழித் திட்டம் முற்றிலுமாக தமிழ் மொழியை அழிக்க வழி வகுக்கும் ஒரு திட்டம் என்பதை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதும், நோக்கமாகவும் இந்தப் பயணம் அவருக்கு அமைகிறது.

இந்த இரு மொழித் திட்டத்தில்,  தமிழ்ப்பள்ளிகளுக்கான அடையாளமே  இருக்கக் கூடாது என்பது அரசாங்கத்தின் திட்டம். அரசாங்கத்தின் இத்திட்டத்திற்கு முழு ஆதரவு கொடுப்பவர் துணைக்கல்வி அமைச்சர் கமலநாதன். அத்தோடு ஒரு சில தமிழ்ப்பள்ளி தலமை ஆசிரியர்களையும் அவருடன் சேர்த்துக் கொண்டு தமிழ்ப்பள்ளிகளை அழிப்பதற்கான வேலைகளில் அவர் முழு மூச்சாக இறங்கியிருக்கிறார்.  தமிழ்ப்பள்ளிகளின் மேல் கை வைக்கும் இவர்கள் சீனப்பள்ளிகள் மேல் கை வைக்க முடியவில்லை. கை வைக்கவும் முடியாது. சீனர்களின் பலம் அங்கு இருக்கிறது.  இங்கு நாம் பிரிந்திருக்கா விட்டாலும், பிரித்து வைப்பதற்கு அரசாங்கம் உள்ளுற பல வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது! வலுக்கட்டாயமாக நாம் பிரித்து வைக்கப்படுகிறோம். அதனால் தான் ஒரு சில தலமை ஆசிரியர்களின்  இருமொழி திட்டத்திற்கான ஆதரவு!

இந்த அநீதிகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே தியாகு அவர்கள் இந்த 350 கிலோ மீட்டர் நெடும் பயணத்தை துவக்குகிறார். 27 வயதான தியாகு, ஓர் மருந்தியல் பட்டதாரி.  அவருடன் கை கோப்பவர்கள் இன்னும் சில தமிழ் ஆர்வலர்கள்.

இந்த நடைப்பயணம் என்பது நமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் பல வழிகளில் இதுவும் ஒன்று. ஆனாலும் நம்மிடையே மெத்தப் படித்தவர்கள் பலர் பெரிய பதவிகளில் உள்ளனர். அவர்களும் தாய் மொழிப்பற்றோடு அரசாங்கத்தை அணுகினால் - பேச்சு வார்த்தை நடத்தினால் - இன்னும் நமக்கு வலு சர்க்கும்.  மற்றைய இயக்கங்களும், குறிப்பாக வர்த்தக இயக்கங்களும், ஒதுங்கி இருப்பதை தவிர்க்க வேண்டும். இது நமது பிரச்சனை. நாம் ஒன்றுபட வேண்டும். 

தியாகுவும் அவர் தம் குழுவினரும் இந்த நடைப்பயணத்தை வெற்றிகரமாக முடிக்க -  உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துகள்!

நன்றி: செம்பருத்தி


No comments:

Post a Comment